சனி, 28 நவம்பர், 2009

நூல் என்றால் என்ன?


முன்னுரை:

சங்ககாலம் தொட்டு இன்றுவரை பயன்படுத்தப் பட்டுவரும் பல தமிழ்ச் சொற்களில் நூல் என்ற பெயர்ச்சொல்லும் ஒன்று என்பதை நாமறிவோம். இச்சொல்லுக்கு இன்றைய அகராதிகள் பல்வேறு பொருட்களைக் கூறியுள்ளன. இருந்தாலும் ஒருசில பாடல்களில் இப் பொருட்கள் எவையுமே பொருந்தாத நிலை காணப்பட்டது. இது இச் சொல்லுக்குப் புதிய பொருள் ஏதேனும் இருக்குமோ என்ற ஐயத்திற்கு வழிவகுத்தது. அதைப் பற்றிய ஆய்வே இந்தக் கட்டுரை. அதுமட்டுமின்றி அகராதிகள் கூறுகின்ற பொருட்களுக்கு வேர் என்ன என்பதைப் பற்றியும் அப்பொருட்கள் அந்த வேரிலிருந்து எவ்வாறு கிளைத்தன என்பதைப் பற்றியும் இக் கட்டுரையில் காணலாம்.

தற்போதைய பொருட்கள்:

நூல் என்ற பெயர்ச்சொல்லுக்கு தற்போது அகராதிகள் கூறும் பொருட்கள் கீழே தரப்பட்டுள்ளன.

கழகத் தமிழ்க் கையகராதி: பஞ்சி நூல், தாலிக்கயிறு, ஆகமம், ஆலோசனை, கல்வி.
சென்னைத் தமிழ்ப் பேரகராதி: பஞ்சிநூல், தாலிக்கயிறு, ஆண்குறியிலுள்ள நரம்பு, ஆண்குறி, மரத்தை (24 சதுர அடி அளவு),  ஆலோசனை.
வின்சுலோ அகராதி: இழை, யாப்பு(புத்தகம்), சாத்திரம், எண்ணம்.

இன்றைய பயன்பாடு:

இன்றைய காலத்தில் நூல் என்ற சொல் யாப்பினையும் (புத்தகத்தையும்) இழையினையும் குறிக்கவே பெரும்பாலும் பயன்படுத்தப் படுகிறது. பொதுவாக பல பொருட்களைத் தருகின்ற ஒரு சொல்லானது அது பயன்படுத்தப்படுகின்ற இடத்திற்கு ஏற்றாற்போல பொருள் கொள்ளப்படும். அதன்படி,

'அந்த நூலைப் படி' என்ற தொடரில் நூல் என்னும் சொல் யாப்பு என்ற பொருள்பெறுகிறது.
'இந்த நூலால் கட்டு' என்ற தொடரில் நூல் என்னும் சொல் இழை என்ற பொருள் பெறுகிறது.

பொருள் முரண்பாடு:

திருக்குறளில் வரும் கீழ்க்காணும் குறள்களை ஆய்வு செய்யும்போது அகராதிகள் கூறும் பொருட்களே அன்றி புதியதோர் பொருளும் இச் சொல்லுக்கு இருப்பதாகத் தோன்றியது.

ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்
காவலன் காவான் எனின். - குறள் எண்: 560.

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை. - குறள் எண்: 322.

மேற்காணும் குறள்களில் வரும் நூல் என்ற சொல் எப் பொருளை உணர்த்துகிறது?. இன்றைய அகராதிகள் கூறும் பொருட்களில் ஒன்றைக் கூட அவை உணர்த்தவில்லை என்பது நன்றாகவே நமக்குப் புரிகிறது இல்லையா?. என்றால் அதன் பொருள் என்ன என்று பார்ப்போம்.

புதிய பொருள்:

நூல் என்ற சொல் மேற்காணும் குறள்களில் உணர்த்தும் புதிய பொருள் 'ஏர், நுகம் அல்லது கலப்பை' என்பதாகும். இது எவ்வாறு என்பதையும் இதற்கான சில ஆதாரங்களையும் கீழே காணலாம்.

நிறுவுதல்:

நூல் என்ற சொல் கீழ்க்காணும் பாடல்களில் எல்லாம் 'கலப்பை' என்னும் பொருளையே உணர்த்துகிறது.

ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்
காவலன் காவான் எனின். - குறள் எண்: 560.

மேற்காணும் குறளில் அறுதொழிலோர் என்பது அறுவடைத் தொழில் செய்வோராகிய வேளாண்மக்களைக் குறிக்கும். நூல் என்பது அவரது முழுமுதல் கருவியாகிய கலப்பையினைக் குறிக்கும். இதன்படி இக் குறளின் சரியான பொருளானது ' நாட்டு மன்னன் தன் நாட்டு மக்களைச் சரியாக காக்காவிட்டால் அந் நாட்டில் உள்ள பசுக்களின் பயனாகிய பாலின் அளவு குறையத் துவங்கும். வேளாண்மக்களும் தமது கலப்பையினை எடுத்து உழவு செய்ய இயலாமல் மென்மெல உழவுத் தொழிலையே மறந்து விடுவார்கள்.' என்பதாகும். ஒரு மன்னனின் கொடுங்கோல் ஆட்சி எவ்வளவு பெரிய பாதிப்பினை நாட்டிற்கு உண்டாக்கும் என்பதனை இக் குறளின் மூலம் அரசர்களுக்கு உணர்த்துகிறார் வள்ளுவர். இக் கருத்தின் பின்னணி என்ன என்று பார்ப்போம். பொருட்செல்வத்தின் மேல் பேராசை கொண்ட ஒரு மன்னன் தன் நாட்டு மக்களிடம் இருந்து அதிகமான வரியினை வசூல் செய்யும்போது அம் மக்கள் சொல்லொணாத் துயரத்திற்கு ஆளாகின்றனர். மனம் வெம்பி அவர்கள் விடும் கண்ணீர் அம் மன்னனின் செல்வத்தை அழிப்பது மட்டுமின்றி அந் நாட்டின் மழைவளத்தையும் குறைக்கிறது. 555 மற்றும் 559 ஆம் குறள்களில் இக் கருத்துக்களைக் காணலாம். மழைவளம் இன்மையினால் பசும்புற்கள் தோன்றுவது குறைகிறது. பசும்புற்களின் பற்றாக்குறையினால் பசுக்களின் பயனாகிய பால்வளம் குறைகிறது. மழைவளம் இன்மையால் வேளாண் மக்களும் கலப்பை எடுத்து உழவு செய்ய இயலாமல் உழவினை மறந்து விடுவர் என்கிறார் வள்ளுவர். முற்றிலும் உண்மையன்றோ?.

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை. 
      - குறள் எண்: 322

மேற்காணும் குறளில் 'தொகுத்தவற்றுள்' என்பது 'தொகுத்தவாற்றுள்' என்று வரவேண்டும். இங்கு நூலோர் என்பது கலப்பை உடைய மக்களாகிய வேளாண் மக்களைக் குறிக்கும். 'தொகுத்தவாற்றுள்' என்பது 'தொகுத்த ஆற்றுள்' எனப் பிரிக்கப்பட்டு 'தொகுத்த முறைகளுள்' எனப் பொருள்கொள்ளப் படும். இதன்படி இக் குறளின் சரியான பொருளானது ' வேளாண் மக்கள் பலமுறைகளால் உணவுப் பொருட்களைத் தொகுத்தாலும் தாம் ஈட்டிய பொருட்களைப் பலருடன் பங்கிட்டு உண்டு பல்லுயிர் காப்பதுவே அம் முறைகள் யாவற்றிலும் தலையானது ஆகும்.' என்பதாம். இக் கருத்தின் பின்னணி என்ன என்று பார்ப்போம். ஒரு காலத்தில் காடாக விளங்கிய இடங்களே பிற்காலத்தில் திருத்தப்பட்டு விளைநிலங்கள் ஆகின்றன. அவ்வாறு திருத்தப் படும்போது அவ் இடத்தில் வாழ்ந்த பல உயிர்கள் மடிந்து விடுகின்றன. இச் செயல் கொலைக்குச் சமமாகும் என்பது திருவள்ளுவரின் கருத்தாகும். அதற்காக வேளாண்மை செய்யாமலும் இருக்க முடியாது. எனவே ஒரு நெறிமுறை வகுக்கிறார் வள்ளுவர். பல உயிர்களைக் கொன்று வேளாண்மை செய்ததற்கு ஈடாக வேளாண் மக்கள் பல உயிர்களுக்கு உணவளித்து வாழவைக்க வேண்டும் என்பதே அவர் வகுத்த நெறிமுறை ஆகும். அதுதான் நீதியும் கூட என்பதனால் தான் வள்ளுவர் இக் கருத்தினை கொல்லாமை என்னும் அதிகாரத்தின் கீழ் இட்டுள்ளார். முற்றிலும் சரியன்றோ?.

..........செந்நூல் கழி ஒருவன் கைப்பற்ற அந்நூலை
முந்நூலாக்  கொள்வானும் போன்ம்!
இகுளை! இஃது ஒன்று கண்டை; இஃது ஒத்தன்
கோட்டினத்து ஆயர் மகன் அன்றே மீட்டொரான்
போர்புகல் ஏற்றுப் பிணர் எருத்தில் தத்தபு.........
- முல்லைக்கலி: 3


கலித்தொகை முல்லைக்கலியின் மூன்றாவது பாடலில் வரும் 30 முதல் 35 வரையிலான பாடல் வரிகள் மேலே காட்டப் பட்டுள்ளன. இவற்றில் வரும் நூல் என்ற சொல் அனைத்து இடங்களிலும் கலப்பை என்ற பொருளையே உணர்த்தி நிற்கின்றது. இது எவ்வாறு என்று காண்பதற்கு முன்னால் இப் பாடலில் வரும் வீர விளையாட்டு ஒன்றினைப் பற்றியும் அறிந்து கொள்ளலாம். ஜல்லிக்கட்டு என்றும் மஞ்சுவிரட்டு என்றும் இக் காலத்தில் கூறப்படுகிற இந்த வீர விளையாட்டினை ஏறுதழுவுதல் என்று சங்க இலக்கியம் கூறுகிறது. ஏறுதழுவுதலானது பழங்கால தமிழர்களின் வீரத்தினை வெளிப்படுத்தும் இன்றியமையாத நிகழ்வாக இருந்து வந்துள்ளது. கட்டிளங்காளைகளும் (இளைஞர்கள்) முட்டிளங்காளைகளும் (எருதுகள்) கட்டிப் புரள்கின்ற அந்த வீர விளையாட்டினை நேராகக் காணும்போது நமக்கு மயிர்க் கூச்செறிவது திண்ணம். ஆம், தன்மீது பாய்ந்து தன்னை அடக்கத் துணியும் இளைஞர்களைத் தனது கொம்புகளால் குத்தி அலேக்காகத் தூக்கி வீசி எறியும்போது ........ அப்பப்பா! எவ்வளவு குருதி!. இப்படி ஒரு வீர நிகழ்ச்சி தான் இந்தப் பாடல் வரிகளிலும் கூறப்பட்டுள்ளது. பல இளைஞர்களைக் குத்திய குருதியால் சிவப்பு வண்ணம் பெற்ற கொம்புகளை உடைய ஒரு காளை மாட்டின் மீது துணிந்து பாய்கிறான் காளை ஒருவன். அதன் கழுத்தின் மேல் அமர்ந்து கொண்டு அதன் இரண்டு கொம்புகளையும் தன் கைகளால் பற்றிக் கொள்ள அக் காளையோ சீறிப் பாய்கிறது. இந்தத் துணிகரமான நிகழ்ச்சியைக் கண்ணுற்ற புலவருக்கு வேறு ஒரு கற்பனை தோன்றுகிறது.

குருதி தோய்ந்த காளைமாட்டின் கொம்புகள் இரண்டும் சிவப்பு வண்ணம் கொண்ட கலப்பையாகத் தோன்றுகிறது அவருக்கு. கொம்புகளைப் பற்றியவாறு அந்த இளைஞன் காளைமாட்டின் மேல் பயணம் செய்யும் நிகழ்ச்சியானது அவருக்கு உழவன் ஒருவன் சிவப்பு வண்ணம் கொண்ட கலப்பையினைத் தன் கைகளால் பற்றிக் கொண்டு முன்நோக்கிச் செல்வதைப் போலத் தோன்றுகிறதாம். என்ன ஒரு அரிய கற்பனை!. இப்பாடலில் வரும் செந்நூல் கழி என்பது செம்மண்ணில் உழுததால் சிவப்பு வண்ணம் பெற்ற கலப்பையினை உடைய நுகத்தடியினைக் குறிக்கிறது. ஒருவன் என்பது இங்கு ஏர் உழுகின்ற காளை மாட்டினைக் குறிக்கிறது. முந்நூல் என்பது முன்னால் உள்ள கலப்பை என்று பொருள் பெறும். எனவே இங்கும் நூல் என்பது கலப்பையைத் தான் குறிக்கிறது என்று தெளியலாம்.

இக்காலத்தில் 'நூல் பிடித்தது போல' என்ற ஒரு சொல்வழக்கு உள்ளது. இதற்கு வழங்கப்படும் பொருளானது 'ஒரே நேர்கோட்டில்' என்பதாகும். இவ் வழக்கில் வரும் நூல் என்னும் சொல் இழையினைக் குறிக்காது; கலப்பையைத் தான் குறிக்கும். ஏனென்றால் இழையைப் பிடித்துக் கொண்டு யாரும் நடக்க மாட்டார்கள் என்பதுடன் இழை வளையும் தன்மை கொண்டது ஆகும். ஏர் பிடித்து நடக்கும்போது மட்டுமே வளைவுநெளிவு இல்லாமல் ஒரே நேர்கோட்டில் செல்ல முடியும். இதைத்தான் 'நூல் பிடித்தது போல' என்ற தொடராகப் பயன்படுத்துகின்றனர். மேற்கண்ட சான்றுகளில் இருந்து நூல் என்னும் சொல் கலப்பையினையும் குறிக்கும் என்பதை அறியலாம்.

முடிவுரை:

நூல் என்ற சொல் ஆதியில் கலப்பையைத் தான் குறித்திருக்க வேண்டும். இந்த வேர்ப்பொருளில் இருந்தே யாப்பு, இழை முதலான பிற பொருட்கள் கிளைத்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. கீழ்க்காணும் பொருள்வளர்ச்சிப் படிநிலைகளை நோக்கினால் இக் கருத்து உண்மை என்பது புலப்படும்.

நூல் ----> கலப்பை -----> கூரிய ஆக்க ஆயுதம்----> எழுதுகோல் , பஞ்சு நூற்கும் கருவி ----> யாப்பு (புத்தகம்), இழை.

கலப்பை என்பது ஒரு கூரிய ஆயுதம். அதுமட்டுமின்றி உணவுப் பயிர்களை விளைவிக்கின்ற வேளாண்மை என்னும் ஆக்கப் பணிக்கு பயன்படுவது. கலப்பையின் கூர்மைப் பண்பே அதனை உழுவதற்கு ஏற்ற கருவியாக அமைத்தது. ஆதியில் கலப்பைப் பொருளைக் குறித்து வந்த நூல் என்ற சொல் நாளடைவில் கலப்பையின் தன்மைகளைக் கொண்ட பிற பொருட்களையும் குறிக்கப் பயன்படலாயிற்று. கலப்பையானது எவ்வாறு கூர்மைப் பண்புடன் ஆக்கப் பணிக்குப் பயன்படுகிறதோ அதேபோன்ற தன்மைகளைக் கொண்ட எழுதுகோலுக்கும் பஞ்சி நூற்கும் கருவிக்கும் நூல் என்ற சொல் வழக்குச்சொல்லாக பயன்படலாயிற்று. நூல் என்பது எழுதுகோலினைக் குறித்ததுடன் நிற்காமல் எழுதுகோலினால் இயற்றப்படும் யாப்பினையும் (புத்தகத்தினையும்) குறிக்கப் பயன்படலாயிற்று. அதேபோல நூல் என்பது நூற்கும் கருவியினைக் குறித்ததுடன் நிற்காமல் அக் கருவியின் பயனாகிய இழையினையும் குறிக்கப் பயன்படலாயிற்று. இதுவே இக் கட்டுரையின் ஆய்வு முடிபாகும்.

சனி, 14 நவம்பர், 2009

குணமும் சினமும்


பாடல்:

குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி
கணமேயும் காத்தல் அரிது.

- குறள் எண்: 29

தற்போதைய பொருள்:

பரிமேலழகர் உரை: துறவு, மெய்யுணர்வு, அவாவின்மை முதலிய நற்குணங்கள் ஆகிய குன்றின் முடிவின்கண் நின்ற முனிவரது வெகுளி தான் உள்ள அளவு கணமே ஆயினும் வெகுளிபட்டாரால் தடுத்தல் அரிது.
கலைஞர் உரை: குணக்குன்றுகளான பெரியவர்கள் கோபம் கொண்டால் அந்தக் கோபம் அவர்கள் உள்ளத்தில் ஒரு கணம் கூட நிலைத்து நிற்காது.
மு.வ உரை: நல்ல பண்புகளாகிய மலையின்மேல் ஏறி நின்ற பெரியோர், ஒரு கணப்பொழுதே சினம் கொள்வார் ஆயினும் அதிலிருந்து ஒருவரைக் காத்தல் அரிதாகும்.
சாலமன் பாப்பையா உரை: நற்குணங்களாம் சிறுமலை மீது ஏறி நின்ற அம் மேன்மக்கள், தமக்குள் ஒரு கணப்பொழுதும் கோபத்தைக் கொண்டிருப்பது கடினம்.

உரைத் தவறுகள்:

மேற்காணும் நான்கு உரைகளிலும் தவறுகள் உள்ளன. அவற்றைக் காண்போம். முதல் மூன்று உரைகளிலும் ஒரு பொதுவான பொருட்பிழை உள்ளது. குணக்குன்றின் மேல் நிற்கும் பெரியோரும் சில சமயங்களில் சினம் கொள்வர் என்னும் பொருள்பட கருத்து கூறியிருப்பதே அப் பிழை ஆகும். இக் கருத்து தவறு என்று நாம் அனைவரும் நன்கு அறிவோம். ஏனென்றால் சினம் என்பது ஒரு கீழ்நிலைக் குணமாகும். இது மனிதனை விலங்காக மாற்றும் தன்மை உடையது. இதனால் தீமையே அன்றி நன்மை ஒருபோதும் விளைவதில்லை. குணக்குன்றின் கீழ்நிலையில் உள்ள இக் குணத்தினை முற்றிலும் கைவிடாதவர்கள் எங்ஙனம் அக் குன்றின் உச்சியில் இருப்பதாகக் கொள்ள முடியும்?. அன்றியும் குணக்குன்றின் உச்சியில் இருப்பவர்கள் கீழ்நிலைக் குணமான சினத்தை முற்றிலும் துறந்தவர்களாக இருக்க அவர்களும் சினம் கொள்வார்கள் என்று கூறுவது சற்றும் பொருத்தமற்ற கருத்து அல்லவா?. அதுமட்டுமின்றி நீத்தார்பெருமையைக் கூறும் இந்த அதிகாரத்தில் ஐம்புலன் அவித்தோர் சினம் கொள்வர் என்று கூறுவது அவருக்குப் பெருமை சேர்க்காது; சிறுமையே சேர்க்கும். எனவே முதல் மூன்று கருத்துக்களில் பொருட்பிழை உள்ளது என்பதை தெள்ளிதின் அறியலாம். இது முதல் பிழை ஆகும்.

மேற்காணும் பிழையே அன்றி வேறொரு பிழையும் உள்ளது. குறளில் வரும் 'காத்தல்' என்ற சொல்லுக்கு அகராதிகள் கூறும் பொருட்கள் இவை தான்: பாதுகாத்தல், எதிர்பார்த்தல், அரசாளுதல், அளித்தல், விலக்கல் ஆகியன. ஆனால் மேற்காணும் உரைகளில் (சா.பா.உரை உட்பட) காத்தல் என்ற சொல்லுக்கு அகராதிகளில் கூறப்படாத பொருட்களே கூறப்பட்டுள்ளன. தடுத்தல் என்ற பொருளில் முதலுரையும் நிலைத்துநிற்றல் என்ற பொருளில் இரண்டாம் உரையும் கொண்டிருத்தல் என்ற பொருளில் நான்காம் உரையும் கூறுகின்றன. அகராதிகளில் இல்லாத இப் பொருட்களை இவர்கள் கூறியிருப்பதும் பிழை ஆகும். மு.வ.உரையோ காத்தல் என்னும் சொல்லுக்கு விளக்கமே அளிக்காமல் காத்தல் என்றே கூறிநிற்கிறது. சரியான விளக்கம் அளிக்காததால் இதுவும் பிழையாகவே கொள்ளப்படும்.

இப்படி பல பொருட்பிழைகள் இக் குறளுக்கான விளக்க உரைகளில் தோன்றக் காரணம் இரண்டாம் அடியில் உள்ள காத்தல் என்ற சொல்லில் உள்ள எழுத்துப் பிழைகளே ஆகும். இவற்றைக் கீழே காணலாம்.

திருத்தம்:

காத்தல் என்ற சொல்லுக்குப் பதிலாகக் காண்டல் என்ற சொல் வரவேண்டும். இதுவே இங்கு தேவையான திருத்தம் ஆகும். கணம் என்ற சொல்லுக்குப் பல பொருட்கள் உண்டெனினும் இங்கு இச் சொல் அற்பம் என்ற பொருளைக் குறிக்கும். இனி இக் குறளின் சரியான பொருள் இதுதான்: ' குணம் ஆகிய குன்றின் மேல் நிற்கும் ஐம்புலன் அவித்தோரிடத்து அற்ப அளவேனும் சினத்தைப் பார்ப்பது அரிதாகும் (பார்க்க இயலாது).'

நிறுவுதல்:

வள்ளுவர் இக்குறளில் மனிதனின் மொத்த குணங்களையும் (உணர்ச்சிகளையும்) ஒரு குன்றாக உருவகிக்கிறார். இதிலிருந்து குன்றின் அடிவாரத்தில் சினம் முதலான இழிகுணங்கள் இருப்பதாகவும் மேல்பகுதியில் அன்பு முதலான நற்குணங்கள் இருப்பதாகவும் கொள்ள முடிகிறது. அழுகை, சிரிப்பு முதலான பல உணர்ச்சிகளில் ஒன்றே சினம் ஆகும். பொதுவாக எந்த ஒரு உணர்ச்சியும் வெளிப்படும்போது முகத்தில் சில மாற்றங்களை ஏற்படுத்தும். எனவே தான் ' அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம் கடுத்தது காட்டும் முகம்' என்று வள்ளுவர் குறிப்பறிதல் அதிகாரத்தில் முகம் பற்றிக் கூறுகிறார். அவ்வாறே ஒருவரது உள்ளத்தில் சினம் தோன்றினால் அவரது முகம் உடனே அதைக் காட்டிக் கொடுத்துவிடும். மற்ற உணர்ச்சிகளைப் போலன்றி உள்ளத்தில் தோன்றிய சினத்தைக் கட்டுப்படுத்தலாமே அன்றி எள்ளளவும் தெரியாமல் மறைப்பது மிகவும் கடினமாகும். ஏனென்றால் சினம் என்பது நான் என்னும் அகந்தை எண்ணத்தின் அடிப்படையில் தோன்றுவது. எனவே சினத்தை முற்றிலும் வேரறுக்க வேண்டுமெனில் முதலில் நான் என்னும் அகந்தையினை வேரறுக்க வேண்டும்.

இந்த நான் என்னும் அகந்தை ஆனது ஐம்புல உணர்வுகளின் மேல் அரியாசனமிட்டு உட்கார்ந்து கொண்டிருக்கும் ஒரு எண்ணம் ஆகும். ஐம்புல உணர்வுகள் ஒடுங்கும்போது நான் என்னும் அகந்தையும் தானாகவே ஒடுங்குகிறது. ஐம்புலன் அவித்த பெரியோர்களின் உள்ளத்தில் நான் என்னும் அகந்தை இல்லை என்பதால் அவர்களது உள்ளத்தில் சினம் தோன்றுவதே இல்லை. உள்ளத்தில் சினம் தோன்றாததால் அவர்களின் முகத்தில் சிறிதளவும் சினத்தைக் காண் முடியாது என்கிறார் வள்ளுவர்.

சரியான பாடல்:

குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி
கணமேயும் காண்டல் அரிது.

( குறிப்பு: இக்குறளின் மூன்றாம் சொல்லுக்குப் பின்னர் கண் என்ற ஏழன் உருபும் நான்காம் சொல்லுக்குப் பின்னர் ஐ என்ற இரண்டாம் உருபும் தொக்கி வந்துள்ளன.)
..........................................................வாழ்க தமிழ்!................................................

திங்கள், 12 அக்டோபர், 2009

மண்குதிரையை நம்பி



பழமொழி:
மண்குதிரையை நம்பி ஆற்றில் இறங்காதே.

தற்போதைய பொருள்:

இப் பழமொழிக்கு இதுவரை கூறப்பட்டு வந்த பொருள்விளக்கம் இதுதான்: ' மண்ணால் செய்த குதிரையினை நம்பி ஆற்றில் இறங்கவேண்டாம். ஏனென்றால் ஆற்றைக் கடக்கும் முன்னர் அக் குதிரை கரைந்து விடும்.' ஆனால் தற்போது ஒருசிலர் 'குதிரை'யை 'குதிர்' எனக் கொண்டு இவ்வாறு பொருள் கூறுகின்றனர் : ' ஆற்றில் காணப்படும் மண்மேடுகளை நம்பி ஆற்றில் இறங்கவேண்டாம். ஏனென்றால் அவை பொய்யானவை. காலை வைத்ததும் உள்ளே இழுத்துக் கொண்டுவிடும்.'

தவறுகள்:

மேற்காணும் இரண்டு விளக்கங்களுமே தவறானவை ஆகும். இது எவ்வாறு என்று பார்ப்போம். மண்குதிரையில் ஏறி ஆற்றில் இறங்க முடியுமா?. மண்குதிரை இயங்காத் தன்மை கொண்டது என்பதால் இக் கேள்விக்கான விடை 'முடியாது' என்பதே ஆகும். மண்குதிரையில் ஏறி ஆற்றில் இறங்கவே முடியாது என்ற நிலையில் இறங்கவேண்டாம் என்று அறிவுரை கூறுவது பயனற்ற வேடிக்கையான ஒரு செயலாகும். பயனற்ற கருத்துக்களைப் பெரியோர்கள் ஒருபோதும் கூறமாட்டார்கள் என்பதால் இவ் விளக்கம் தவறு என்பது பெறப்படுகிறது. அடுத்து இரண்டாவது கருத்தில் வரும் குதிர் என்ற சொல்லைப் பற்றிக் காண்போம். குதிர் என்றால் நெற்கூடு என்று பொருள். இச் சொல்லுக்கு இந்தப் பொருள் மட்டுமே அகராதிகளில் தரப்பட்டுள்ளது. மண்மேடு என்ற பொருள் வேண்டுமென்றே இட்டுக் கூறப்பட்ட ஒன்றாகும். குதிர் என்ற சொல்லுக்கு மண்மேடு என்ற பொருள் எவ்வகையிலும் பொருந்தாது. ஏனென்றால் நெற்கூடும் மண்மேடும் வேறுவேறு தன்மை கொண்டவை. தானியங்களைச் சேமித்து வைக்க உதவுகின்ற உயரமான கலமே குதிர் ஆகும். ஆனால் ஆற்றின் நடுவே காணப்படும் உயரமான மண்மேடுகள் எதையும் சேமிக்க உதவுவதில்லை. உயரமாக இருப்பதால் மட்டும் மண்மேடும் நெற்கூடும் ஒன்றாகி விட முடியாது.

அன்றியும் மேற்காணும் கருத்தில் சொல்வதைப் போல இந்த மண்மேடுகள் காலை வைத்தால் உள்ளே வாங்குவதுமில்லை. ஏனென்றால் இவை நன்கு செறிந்த மணலுடன் அடர்த்தியாகவே இருக்கும். இதன் காரணம் இந்த மண்மேடுகளில் புல், செடி, கொடி முதலான தாவரங்கள் வளரத் துவங்குவது தான். ஆற்றில் நடுநடுவே காணப்படும் இந்த மண்மேடுகளை 'ஆற்றிடைக் குறை' என்று அழைப்பர். இதற்கு நேரான செந்தமிழ்ச் சொல் 'துருத்தி' என்பதாகும். இச் சொல்லைப் பல சங்க இலக்கியங்களில் காணலாம். துருத்திக்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டு ஸ்ரீ ரங்கம் ஆகும். ஆம, காவிரி ஆற்றின் மிகப் பெரிய இடைக்குறை அதாவது மண்மேடே ஸ்ரீரங்கம் ஆகும். எட்டு மைல் நீளமும் நான்கு மைல் அகலமும் கொண்ட இந்தத் துருத்திக்கு இருபுறங்களிலும் ஆறு ஓடுகிறது. அருகில் உள்ள படம் இதனை நன்கு காட்டும். இதிலிருந்து ஆற்று நடுவில் உள்ள மண்மேட்டில் காலை வைத்தால் உள்வாங்கும் என்ற கருத்து தவறானது என்று தெளியலாம்.

அதுமட்டுமின்றி ஆற்றில் இறங்க விரும்பும் ஒருவர் ஆற்று நடுவில் உள்ள மண்மேட்டை நம்பியா இறங்குவார்?. ஒருபோதும் இல்லை. ஏனென்றால் தூரத்தில் இருக்கும் மண்மேடு இவருக்கு இக் கரையில் எவ்வகையிலும் உதவி செய்யப் போவதில்லை. எனவே ஆற்றில் இறங்கும்போது ஒவ்வொரு அடியாக ஆழம் பார்த்து இறங்குவாரே ஒழிய தூரத்தில் மண்மேடு தெரிகிறது உடனே ஓடிப்போய் விடலாம் என்று அவசர கதியில் இறங்கி சிக்கலில் மாட்டிக் கொள்வதில்லை. எனவே மண்மேட்டை நம்பி ஆற்றில் இறங்காதே என்று அறிவுரை கூறுவது பயனற்ற வேடிக்கையான செயலாகும். இத்தகைய பயனற்ற கருத்துக்களைப் பெரியோர்கள் கூறமாட்டார்கள் என்பதால் இக் கருத்து இட்டுக் கூறப்பட்டது என்பது பெறப்படுகிறது. இத் தவறுகளுக்கு எல்லாம் காரணம் ஒரு தூய தமிழ்ச் சொல்லை கொச்சை வழக்கெனத் தவறாகக் கருதி திருத்தியதே ஆகும். இனி சரியான சொல்லைப் பார்ப்போம்.

திருத்தம்:

இப் பழமொழியில் வரும் மண்குதிரை என்பது மங்குதிரை என வரவேண்டும். இதுவே திருத்தம் ஆகும். மங்குதிரையின் பொருளைக் கீழ்க்கண்டவாறு காணலாம்.

மங்குதிரை = மங்கு + திரை.

திரை என்றால் இங்கே அலை என்று பொருள். மங்குதல் என்றால் இங்கு ஒளி மழுங்குதல் என்று பொருள். (ஆதாரம்: கழகத் தமிழ்க் கையகராதி). மங்குதிரை என்னும் வினைத்தொகை ஒளி மழுங்கு அலைகள் என்ற பொருளில் கானல் நீரைக் குறிக்கும். இனி இப்பழமொழியின் சரியான பொருள் இதுதான்: கானல் நீரை நம்பி ஆற்று மணலில் இறங்காதே.

நிறுவுதல்:

மங்குதிரை என்னும் மூலச் சொல்லினை கொச்சை வடிவமாகக் கருதி மண்குதிரை எனத் திருத்தியது தான் இப் பழமொழியின் தவறான பொருள்கோளுக்குக் காரணமாகும். மங்குதிரை என்பது கானல்நீரினைக் குறிக்கும் ஒரு அருமையான சொல். கானல்நீரானது தூரத்தில் நீர்அலை வடிவத்தில் தெரிகின்ற ஒரு மாயத்தோற்றம் என்பதை நாம் அறிவோம். ஆனால் இத்தோற்றம் நிலையானதல்ல. மாறக்கூடியதே. இது எப்படி எங்கே எப்போது உருவாகிறது என்பதை அறிந்துகொண்டால் மங்குதிரை என்னும் சொல்லின் நயத்தினை நாம் நன்கு அறிந்துகொள்ள முடியும்.

கானல்நீர் தோன்றுவதற்கு முதற்காரணம் வெப்பம் ஆகும். நண்பகல் நேரத்தில் கதிரவனின் தெறுகதிர்கள் செங்குத்தாக வறண்ட மணல் பகுதிகளில் விழும்போது தான் இந்தக் கானல் நீர் உருவாகிறது. மணல்பரப்பின் மேற்பகுதி மிகவும் வெப்பமடையும் போது அந்த வெப்ப ஆற்றல் அலைவடிவம் பெற்று கதிர்வீசத் துவங்குகிறது. இந் நிலையில் தூரத்தில் உள்ள பொருட்களின் ஒளிக் கதிர்கள் இந்த அலைகளில் படும்போது அவை மழுங்குகின்றன. மழுங்கிய நிலையில் இந்த ஒளி அலைகள் நம் கண்களை அடைவதால் அப் பொருளுக்குக் கீழே அதன் நிழல் இருப்பதாக நமக்குத் தோன்றுகிறது. அதாவது எவ்வாறு ஒரு நீர்ப்பரப்பு ஒரு பொருளை தனக்குள் பிரதிபலிக்குமோ அதைப்போல இந்த மழுங்கிய ஒளி அலைகள் நமக்கு ஒரு மாய நிழலைக் காட்டுகிறது. அருகில் உள்ள படத்தைப் பாருங்கள். இதைக் காணும்போது அங்கே நீர் இருப்பது போன்ற ஒரு எண்ணம் நமக்குள் பிறக்கிறது இல்லையா?. இதுவே கானல் நீர் ஆகும். அதிக வெப்பமடைந்த தார்ச்சாலைகள் மற்றும் மணல் பரப்புக்களில் கானல்நீர் தோன்றும். கானல்நீர் பற்றிய மேலும் பல உண்மைகளைத் தெரிந்துகொள்ள  விக்கிபீடியா சென்று காணலாம்.

ஆற்றங்கரைகளில் பலவிதமான மரங்கள் வளர்ந்து நிழல் தருவதை நாம் கண்டிருக்கிறோம். எனவே தான் பழங்காலத்தில் (ஏன் இக்காலத்திலும் கூட) மக்கள் ஆற்றங்கரை ஓரமாகவே நடைப்பயணம் செய்து பிற ஊர்களுக்குச் செல்வர். இதனால் வெயிலின் கொடுமை தவிர்க்கப் படுவதுடன் ஆற்றின் அழகிய காட்சியினைக் கண்ட வண்ணம் பயணம் இனிதாக நடைபெறும். ஆனால் இயற்கைச் சூழ்நிலை எப்போதும் ஒரே மாதிரியாகவா இருக்கிறது?. பருவநிலை மாற்றங்களால் போதுமான மழை பெய்யாமல் போக பல ஆறுகள் நீர் முழுதும் வறண்டு வெறும் மணற்பரப்புக்களாகக் காட்சி அளிப்பதை நாம் காண்கிறோம். இந் நிலையில் ஆற்றங்கரை ஓரமாக நடைப்பயணம் செய்யும் மக்கள் வழியில் தாகமெடுத்தால் (தாம் கொண்டுவந்த நீர் முழுதும் தீர்ந்து போன நிலையில்) குடிப்பதற்கு நீரைத் தேடி ஏங்குவது இயல்பு. நீர்வேட்கை உடைய இவர்களது கண்களில் ஆற்றுமணலில் தோன்றிய இந்தக் கானல்நீர் கண்டிப்பாகப் படும். காரணம் ஆற்றுமணல் பகுதி தாழ்வாகவும் ஆற்றங்கரை பகுதி உயர்வாகவும் இருப்பதே. ஏற்கெனவே நீர்வேட்கையால் வருத்தமுற்று இருக்கும் இம் மக்கள் கானல்நீருக்கு எளிதில் ஏமாறுவர். கானல் நீரை உண்மையான நீரென்று நம்பி ஆற்று மணலில் இறங்கி நடப்பர். அதன்பின் அவர்களது நிலை என்னாகும்?. இல்லாத ஒரு நீருக்காக பொல்லாத வெயிலில் நடந்து நடந்து களைத்து உடல் வெம்பி ஏமாற்றத்தால் மனம் நொந்து .... அப்பப்பா! மிகப் பெரிய துன்பம் அது!.

இவ்வாறு கானல்நீரை நம்பி ஏமாந்து துன்பப் படக்கூடாது என்பதற்காகத் தான் பெரியோர்கள் இப் பழமொழியினைக் கூறியுள்ளனர். மணலில் இறங்கிய பின்னர் கானல்நீரினை நோக்கி நடக்கத்தானே செய்வர். அதனால் தான் ஆற்றுமணலில் நீர் இருப்பதுபோலத் தெரிந்தாலும் இறங்கவே வேண்டாம் என்கிறது இப் பழமொழி.

சரியான பழமொழி:

ங்குதிரையை நம்பி ஆற்றில் இறங்காதே.

........................வாழ்க தமிழ்!......................................

திங்கள், 5 அக்டோபர், 2009

மேனி என்றால் என்ன?

முன்னுரை:
மேனி என்ற சொல் சங்க காலத்தில் இருந்து இன்றுவரை பயன்படுத்தப் பட்டு வரும் பல சொற்களில் ஒன்று. ஆனால் இச் சொல்லுக்கு நாம் இன்று கொண்டிருக்கும் பொருளானது பல இலக்கியப் பாடல்களில் பொருந்தாத நிலை காணப்படுகின்றது. இது இச் சொல்லுக்கு புதிய பொருட்களும் இருக்கின்ற உண்மையினை நமக்குச் சுட்டிக் காட்டுவதாக உள்ளது. இச் சொல் குறிக்கும் புதிய பொருட்கள் என்னென்ன என்பதைப் பற்றி இக் கட்டுரையில் காணலாம்.

அகராதிப் பொருள்:

தமிழ் அகராதிகள் மேனி என்ற சொல்லுக்கு என்ன பொருள் கூறுகின்றன என்று கீழே காணலாம்.

சென்னை தமிழ்ப் பேரகராதி      : உடம்பு, வடிவம், நிறம்.
கழகத் தமிழ்க் கையகராதி        : உடம்பழகு, நிறம்.
சூடாமணி நிகண்டு              : வடிவம், நிறம்.

தற்போதைய பொருள்:

இக்காலத்தில் 'மேனி' என்ற சொல்லை உடல் என்னும் ஒரே ஒரு பொருளில் தான் பயன்படுத்துகின்றனர்.

சொல்பயன்பாடு:

மேனி என்ற சொல் எந்தெந்த மேல்கணக்கு மற்றும் கீழ்க்கணக்கு நூல்களில் பயின்று வந்துள்ளது என்பதைக் கீழே காணலாம்.

மேல்கணக்கு நூல்கள்:

அகநானூறு: பாடல்எண் - 42,75,98,156,161,206,217,222,229,237,270,278,333,337,398,169,174,381,69,95.
ஐங்குறுநூறு: பாடல்எண் - 38,41,65,158,174,176,217,221,388,471.
கலித்தொகை: பாடல்எண்- 102,108,13,131,143,35,40,91,58,42,35,117,124,121,41.
குறுந்தொகை: பாடல்எண்- 101,168,185,219,319,331,62,143,33.
நற்றிணை: பாடல்எண் - 8,10,128,134,141,166,251,301,320,324.
புறநானூறு: - 56,159,222,398. பரிபாடல்: பாடல் எண் - 1,4,7,8,12,13,15,20. திரட்டு: 2.
குறிஞ்சிப்பாட்டு: அடி எண் -2. மதுரைக்காஞ்சி - 707. நெடுநல்வாடை - 148.
பெரும்பாணாற்றுப்படை - 160. சிறுபாணாற்றுப்படை - 176. திருமுருகாற்றுப்படை - 19,144. பட்டினப்பாலை - 148.

கீழ்க்கணக்கு நூல்கள்:

திணைமாலை ஐம்பது: பாடல் எண் - 4,15,35,47. திணைமாலை நூற்றைம்பது: பாடல் எண் - 21.
கார் நாற்பது: பாடல் எண் - 10,16,18. கைந்நிலை: பாடல் எண் - 1,27.
நாலடியார்: பாடல் எண் - 317; ஐந்திணை ஐம்பது: பாடல் எண் - 8,15,30,45.
திருக்குறள்: பாடல் எண் - 1113,1182,1185,1189,1278. இன்னிலை: பாடல் எண் - 25. நான்மணிக்கடிகை: பாடல் எண் - 23.
களவழிநாற்பது: பாடல் எண் - 32. முதுமொழிக்காஞ்சி: பாடல் எண் - 86.
ஆசாரக்கோவை: பாடல் எண் - 77. பழமொழி நானூறு: பாடல் எண் - 137.

பொருள் பொருந்தாத இடங்கள்:

மேனி என்னும் சொல்லுக்குத் தற்கால அகராதிகள் காட்டுகின்ற பொருட்கள் எவையும் பொருந்தாத சில இலக்கியப் பாடல்களைக் கீழே காணலாம்.

நின் அம் கலுழ் மேனி பாஅய பசப்பே - குறு - 143
மாஅத்து அம் தளிர் அன்ன நன் மா மேனி பசப்ப - குறு -331
மேனி பசப்பது எவன்-கொல் அன்னாய் - ஐங்கு - 217
நன் மா மேனி பசப்ப - ஐங்கு -221
ஞாயிற்று முன்னர் இருள் போல மாய்ந்தது என் ஆய் இழை மேனி பசப்பு - கலி -42
மேனி மறைத்த பசலையள் ஆனாது - கலி -143
பசலை பாய்ந்த மேனியள் நெடிது நினைந்து - அகம் - 169
பழங்கண் கொண்ட பசலை மேனியள் - அகம் - 174
கொன்றை ஊழ்_உறு மலரின் பாழ் பட முற்றிய பசலை மேனி நோக்கி - அகம் - 398
வான் உயர் வெற்பன் வருவான்கொல் என் தோழி மேனி பசப்பு கெட - திணைமொ -4
முறி எழில் மேனி பசப்ப அருள் ஒழிந்து - திணைமொ -15
மணி எழில் மேனி மலர் பசப்பு ஊர - திணைமொ -47
அவர் தந்தார் என்னும் தகையால் இவர்தந்து என் மேனி மேல் ஊரும் பசப்பு - குறள் -1192

மேற்காணும் பாடல்களை நோக்கினால் மேனியானது பசப்பு, பசலை என்ற சொற்களுடன் தொடர்புற்று வந்துள்ளதை அறியலாம். இந்த பசப்பு, பசலை ஆகிய இரண்டு சொற்களும் கண்ணீரையே குறிக்கும் என்று பசப்பு என்றால் என்ன என்ற கட்டுரையில் முன்னர் ஆதாரங்களுடன் கண்டோம். ஆனால், மேனி என்ற சொல்லுக்கு தற்கால அகராதிகள் காட்டும் பொருட்களான உடல், வடிவம், நிறம் ஆகியவற்றில் ஒன்றுக்கு கூட அழுகையுடன் தொடர்பில்லை என்பதை நாம் அனைவரும் நன்கு அறிவோம். இதிலிருந்து இப் பாடல்களில் வரும் மேனி என்ற சொல்லானது அகராதிகள் காட்டும் பொருட்களைக் குறித்து வரவில்லை என்பது தெளிவாகிறது. என்றால், மேனி என்ற சொல் காட்டும் புதிய பொருட்கள் என்ன என்று கீழே காணலாம்.

மேனி - புதிய பொருட்கள்:

மேனி என்ற சொல் குறிக்கின்ற புதிய பொருட்கள் இரண்டாகும். அவை:-
ண் மற்றும் கண்ணிமை ஆகும்.

நிறுவுதல்:

மேனி என்ற சொல் கண் மற்றும் கண்ணிமை ஆகிய புதிய பொருட்களை எவ்வாறு குறிக்கும் என்று இங்கே ஆதாரங்களுடன் காணலாம்.

பொதுவாக ஒரு மனிதனின் குணநலன்களைப் பற்றி அறிய வேண்டுமானால், அவனது நண்பர்களைப் பற்றி அறிந்தால் போதும். அதைப்போல, ஒரு சொல்லின் உண்மையான பொருளைக் கண்டறிய இலக்கியங்களில் அதற்கு உவமையாகக் கூறப்படும் பிற பொருட்களின் தன்மைகளை அறிந்தால் போதும். அவ்வகையில், இலக்கியங்களில் மேனிக்கு உவமையாகக் கூறப்பட்டுள்ள பிற பொருட்களைப் பற்றி அறிந்துகொள்வதில் இருந்து மேனி என்ற சொல்லின் புதிய பொருளினை எளிதாக அறிந்துகொள்ளலாம்.  .

மேனியும் மாந்தளிரும்:

மாமரத்தின் புதிய இலைக்கொழுந்தாகிய மாந்தளிரானது நல்ல செம்பு வண்ணத்தில் இருக்கும். பெண்களுக்கு இந்த வண்ணம் மிகவும் பிடிக்கும் என்பதால் அவர்கள் தமது கண்களின் இமையினை மாந்தளிர் வண்ணத்தில் அதாவது செம்பு நிறத்தில் பூசி மகிழ்வர். இதைப் பற்றி ஏராளமான பாடல்கள் இலக்கியத்தில் உள்ளன என்றாலும் சில பாடல்களை மட்டுமே இங்கே விளக்கத்துடன் காணலாம்.

நோய் இன்று இயன்ற யாக்கையர் மாவின் அவிர் தளிர் புரையும் மேனியர் - திரு - 143
( நோயில்லாத உடலினராய் மாமரத்தின் இலைக்கொழுந்து போல் ஒளிரும் கண் இமை கொண்டவர்.......)

இப் பாடலில் வரும் மேனி என்பது உடலைக் குறிக்காது என்பது உறுதி. காரணம், யாக்கை என்ற சொல்லால் முன்னரே உடலைக் குறிப்பிட்டு விட்டதால், அடுத்து வரும் மேனி என்பது உடலைக் குறிக்காமல் இமையினையே குறித்தது என்க.

தேமா மேனி சில் வளை ஆயமொடு    - சிறு -176
( இனிக்கின்ற மாவின் தளிரன்ன இமையின் தோள்பகுதியில் சில வளைகள் அணிந்த தோழியருடன்.... )

மாவின் தளிர் ஏர் அன்ன மேனி - மது - 706
( மாவின் இலைக்கொழுந்து போல் அழகிய கண்ணிமை...)

தளிர் ஏர் மேனி தாய சுணங்கின் - நெடு -148
( மாந்தளிர் போன்ற அழகிய கண்ணிமையில் பூசப்பட்டிருந்த பூந்தாதுக்கள்......)

செம் தளிர் மேனியார் - பரி -8
( மாமரத்தின் சிவந்த இலைக்கொழுந்து போன்ற இமையுடையார்....)

மடி இலான் செல்வம் போல் மரன் நந்த அ செல்வம்
படி உண்பார் நுகர்ச்சி போல் பல் சினை மிஞிறு ஆர்ப்ப
மாயவள் மேனி போல் தளிர் ஈன அ மேனி
தாய சுணங்கு போல் தளிர் மிசை தாது உக - கலி - 35

( பொருள்: சோம்பல் அற்றவனிடம் சேரும் செல்வம் போல மாமரமானது பூத்துக் குலுங்க, அவனிடத்தே பிச்சை எடுத்து உண்பவரைப் போல வண்டுகள் அம் மரத்தின் பூந்தேனைக் கிளைதோறும் சென்று உண்ண, அம் மரத்தின் சிவந்த இலைக் கொழுந்துகளின் மேல் பூந்தாதுக்கள் சிந்தியிருந்த தோற்றமானது, பேரழகி ஒருத்தியின் செவ்வண்ணக் கண்ணிமையில் பூசப்பட்டிருந்த பூந்தாதுக்களைப் போலத் தோன்றியது.....)

மேனியும் இதர பொருட்களும்:

மை எழுதப்பட்டு அலங்கரிக்கப்பட்ட பெண்களின் கண் இமையினை மாந்தளிருடன் மட்டுமின்றி, பவளம், மணி, பொன், கதிரவன், மின்னல், விளக்கு, குறிஞ்சிப்பூ, காயாம்பூ, ,அசோக மரத்தளிர், பாம்பின் சட்டை, நெய் போன்ற பலவற்றுடனும் ஒப்பிட்டுப் பாடியுள்ளனர் புலவர்கள். இதைப் பற்றிய பாடல்களை விளக்கங்களுடன் கீழே காணலாம்.

தூசு உடை துகிர் மேனி - பட்டி -148
( முகத்திரை கொண்டு மூடிய செம்பவளம் போன்ற கண்ணிமை..... )

திரு மணி புரையும் மேனி மடவோள் - நற் -8
( அழகிய செம்மணியினை ஒத்த இமைகளை உடைய பெண்.....)

பகல் எரி சுடரின் மேனி சாயவும் - நற் -128
( பகலில் காய்கின்ற கதிரவனைப் போல ஒளிர்ந்த கண்ணிமைகள் வாடவும்.......)

குறிஞ்சி நாள்_மலர் புரையும் மேனி - நற் - 301
( குறிஞ்சிப் பூவின் இதழ் போன்ற கண்ணிமை ......)

பொன் போல் மேனி - குறு - 101
( பொன் போன்ற கண்ணிமை .....)

பொன் ஏர் மேனி நன் நலம் சிதைத்தோர் - குறு -319
( பொன் ஒத்த கண்ணிமை கொண்டவளின் அழகினைக் கெடுத்தவர்.....)

மாண உருக்கிய நன் பொன் மணி உறீஇ பேணி துடைத்து அன்ன மேனியாய் - கலி -17
( பொன் உருண்டைகளை நன்றாக உருக்கி, ஓடாதவண்ணம் பாதுகாத்து, ஒளிருமாறு தீட்டியதைப் போல மை பூசப்பட்ட கண் இமைகளை உடையவளே. ..)

உண்ண உருக்கிய வான் நெய் போல் மேனியள் - சிந்தா - 480
( உண்ணுவதற்காக உருக்கிய நெய்போல மஞ்சள்நிறத்தில் ஒளிரும் இமையினை உடையவள்....)

வை விரி மலர் புரையும் மேனியை - பரி - 1
( காயா மலரின் இதழ் போன்ற கண்ணிமையாள் ....)

செயலை இளம் தளிர் அன்ன நின் மேனி - கார் -16
( அசோக மரத்தின் இலைக்கொழுந்தினைப் போன்ற உனது கண்ணிமையானது.........)

உருவு கொண்ட மின்னே போல திருவில் இட்டுத் திகழ்தரு மேனியள் - மணி -6
( அச்சந்தரும் மின்னலைப் போல ஒளிருமாறு கண்ணிமையில் அழகிய மை அணிந்து......)

பொன்னின் ஒளி பூவின் வெறி சாந்து பொதி சீதம்
மின்னின் எழில் அன்னவள்-தன் மேனி ஒளி மான - கம்ப பால - 28
( பொன்னின் நிறமும் பூவின் மணமும் சந்தனத்தின் குளிர்ச்சியும் கொண்ட அவளது கண்ணிமையின் ஒளியானது மின்னலின் ஒளியினை ஒப்ப......)

அணங்கு அரவு உரித்த தோல் அனைய மேனியன் - சிந்தா -2009
( துன்பந்தருகின்ற பாம்பு உரித்த தோல் போன்ற இமையினை உடையவன். )

முதுமையால் இமைகளில் சுருக்கங்கள் அதிகமாகியதால், அது பார்ப்பதற்குப் பாம்புத் தோல் போலத் தோன்றுவதாகக் கூறுகிறார். 

பொழுது உணர்வு அரிய அ பொரு_இல் மா நகர்
தொழு தகை மடந்தையர் சுடர் விளக்கு என பழுது_அறு மேனியை - கம்ப பால -49
( மாலைப்பொழுது ஆகிவிட்டதை அறியும்வகையில் பெண்கள் தமது இல்லத்தில் ஏற்றுகின்ற சுடர்விளக்கு போல் ஒளிரக் கூடிய கண்ணிமைகளை.... )

தணி மலர் திருமகள் தங்கு மாளிகை
இணர் ஒளி பரப்பி நின்று இருள் துரப்பன
திணி சுடர் நெய் உடை தீ விளக்கமோ
மணி விளக்கு அல்லன மகளிர் மேனியே - கம்ப பால- 50

( தாமரைமேல் அமர்ந்த திருமகள் தங்கியிருப்பது போன்ற அழகிய மாளிகையின் இருளை விரட்டுவது போல எங்கும் ஒளிபாய்ச்சுவது நெய்யால் எரிகின்ற தீ விளக்கோ மாளிகையில் அலங்காரமாக வைக்கப்பட்டுள்ள மணிகளின் விளக்கோ அன்றி மகளிரின் இமையாகிய விளக்கோ அறிய முடியவில்லையே......)

இப் பாடலிலும் மகளிரின் கண்ணிமையினை ஒளிரும் விளக்காக உவமைப்படுத்துவதைப் பாருங்கள்.

மேனியும் கண்ணீரும்:

பசப்பு, பசலை போன்ற சொற்கள் கண்ணீரையே குறிக்கும் என்று பசலை என்றால் என்ன? என்ற கட்டுரையில் பல ஆதாரங்களுடன் கண்டோம். இச் சொற்களுடன் தொடர்புற்று மேனி என்ற சொல் பல பாடல்களில் பயின்று வந்துள்ளது. இதிலிருந்து மேனி என்ற சொல்லானது கண்ணீருடன் தொடர்புடைய உறுப்பான கண்ணையே குறிக்கும் என்பதைத் தெளியலாம். மேனி என்னும் சொல் கண் என்ற பொருளில் பயின்றுவருகின்ற சில பாடல்களை மட்டும் கீழே காணலாம்.

நின் அம் கலுழ் மேனி பாஅய பசப்பே - குறு - 143
( உனது அழகிய கண்களில் வடிகின்ற கண்ணீர்.......)

பயப்பு என் மேனியதுவே - குறு - 219
( எனது கண்களில் தோன்றிய கண்ணீர் ......) இதில் வரும் பயப்பு என்ற சொல்லும் பசப்பு என்ற சொல் போலவே கண்ணீரைக் குறிக்கும்.

மாஅத்து அம் தளிர் அன்ன நன் மா மேனி பசப்ப - குறு -331
( மாந்தளிர் போன்ற இமை கொண்ட கண்கள் கலங்கவும் .....)

மேனி பசப்பது எவன்-கொல் அன்னாய் - ஐங்கு - 217
( அன்னையே உன் கண்கள் அழுவது எதனால்?.....)

நன் மா மேனி பசப்ப - ஐங்கு -221
( நல்ல மாந்தளிர் போன்ற இமை கொண்ட கண்கள் கலங்கி அழ,,,,,,,,)

ஞாயிற்று முன்னர் இருள் போல மாய்ந்தது என் ஆய் இழை மேனி பசப்பு - கலி -42
( கதிரவனைக் கண்டதும் இடம்தெரியாமல் மறைகின்ற இருளினைப் போல என் காதலரைக் கண்டதும் எனது கண்ணில் இருந்த கண்ணீர் இடம் தெரியாமல் மறைந்துபோனது. )

இப் பாடலில் கதிரவனைக் காதலனுக்கும், இருளைக் கண்ணீருக்கும் உவமையாக்கி இருக்கிறார் புலவர்.

மேனி மறைத்த பசலையள் ஆனாது - கலி -143
( கண்களை மறைத்த கண்ணீர் நிற்காமல் ....)

தணி மருங்கு அறியாள் யாய் அழ மணி மருள் மேனி பொன் நிறம் கொளலே - அகம் -156
( வருத்தம் தணிகின்ற வழியேதும் அறியாதவளாய் அவள் தொடர்ந்து அழவும், செம்மணி போன்ற அழகிய இமை உடையாளின் கண்கள் சிவந்து செம்பொன் நிறம் கொண்டன......)

பசலை பாய்ந்த மேனியள் நெடிது நினைந்து - அகம் - 169
( கண்ணீர் வடிகின்ற கண்ணினள் நினைத்து நினைத்து .....)

பழங்கண் கொண்ட பசலை மேனியள் - அகம் - 174
( துன்பத்தால் உண்டான கண்ணீரை உடைய கண்ணினள்......)

தேன் இமிர் நறும் தார் வானவன் உடற்றிய ஒன்னா தெவ்வர் மன் எயில் போல
பெரும் பாழ் கொண்ட மேனியள் - அகம் - 381
( தேனீக்கள் ஒலிக்கின்ற ஒளிவீசும் மாலை அணிந்த வானவனுடன் போரிட்ட பகைவர்களின் கோட்டையினைப் போல மையணி சிதைந்து பாழ்பட்ட கண்ணிமை உடையவள்....)

கொன்றை ஊழ்_உறு மலரின் பாழ் பட முற்றிய பசலை மேனி நோக்கி - அகம் - 398
( கொன்றை மரத்தின் முதிர்ந்து முற்றிய மலரினைப் போல கண்ணீரால் பாழ்பட்ட இமையினைக் கண்டு.....)

பொய் சிதைக்கும் பொன் போலும் மேனியை - நான் -21
( காதலர் கூறும் பொய்யானது பொன் போன்ற கண்ணிமையின் அழகினைக் கெடுக்கும்.......)

செயலை இளம் தளிர் அன்ன நின் மேனி பயலை பழங்கண் கொள - கார் -16
( அசோக மரத்தின் இலைக்கொழுந்தினைப் போன்ற உனது கண்ணிமையானது கண்ணீரால் துன்பமடைய.........)

இப்பாடலில் வரும் பயலை என்பதும் பசலை போலவே கண்ணீரைக் குறிப்பதாகும்.

பிரிந்தவர் மேனி போல் புல்லென்ற வள்ளி பொருந்தினர் மேனி போல் பொற்ப - ஐந்-8
( காதலரைப் பிரிந்தவரின் கண்ணிமையைப் போலப் பூவின்றி வாடியிருந்த வள்ளிக் கொடியானது, காதலரைச் சேர்ந்தவரின் கண்ணிமையினைப் போல பூத்துக் குலுங்க.......)

வான் உயர் வெற்பன் வருவான்கொல் என் தோழி மேனி பசப்பு கெட - திணைமொ -4
( எனது கண்ணின் கண்ணீர் ஒழியுமாறு விண்ணைத் தொடும் மலைநாட்டவன் என்னிடம் வருவானோ சொல் என் தோழி..)

முறி எழில் மேனி பசப்ப அருள் ஒழிந்து - திணைமொ -15
( மாந்தளிர் போன்ற இமைகொண்ட கண்கள் கலங்க அருள் இன்றி........)

மணி எழில் மேனி மலர் பசப்பு ஊர - திணைமொ -47
( செம்மணி போன்ற இமைகொண்ட கண்களில் கண்ணீர் அரும்பி பெருக......)

அவர் தந்தார் என்னும் தகையால் இவர்தந்து என் மேனி மேல் ஊரும் பசப்பு - குறள் -1192
( காதலர் தந்தார் எனும் பெருமையினால் எனது கண்ணில் கண்ணீர் பெருகி வழிகின்றது.......)

உவக்காண் எம் காதலர் செல்வார் இவக்காண் என் மேனி பசப்பு ஊர்வது - குறள் -1195
( என் காதலர் என்னைவிட்டு அதோ செல்கின்றார். எனது கண்ணில் கண்ணீர் இதோ பெருகுகின்றது..)

நெருநற்று சென்றார் எம் காதலர் யாமும் எழு நாளேம் மேனி பசந்து - குறள் -1288
( நேற்று ஒருநாள்தான் காதலர் என்னைவிட்டுப் பிரிந்துசென்றார். நானோ ஒவ்வொருநாளும் கண்கலங்கி வாடுகிறேன். )

ஊர் தரும் மேனி பசப்பு - கைந் -27
( கண்ணில் கண்ணீர் பெருகி வழியும் )

பசந்த மேனியள் படர் உறு மாலையின் - சிலம்பு-8
( அழுத கண்ணினளாய் துன்பமுற்ற மாலைப் பொழுதில்.)

பசந்த மேனியள் படர் நோய் உற்று - சிலம்பு -13
( அழுத கண்ணினள் துன்பமுற்று......)

தம் பொன் மேனி திமிர்ந்த தண் சாந்தமும் - சிந்தா -128
( பொன்போலத் தோன்றுமாறு கண்ணிமையில் பூசிய சந்தனக் குழம்பும்....)

நான நீரில் கலந்து நலம் கொள் பூம் பட்டு ஒளிப்ப
மேனி தோன்ற விளங்கி வெளிப்பட்டதற்கு நாணி
மான மகளிர் போல மணி மேகலைகள் பேசா
தானம் தழுவி கிடப்ப செல்வோள் தன்மை காண்-மின் - சிந்தா - 923

( பூப் போன்ற பட்டுத்துணியால் மூடப்பட்டிருந்த கண்ணிமையில் வாசனை கலந்த வண்ண மையினைப் பூசும்போது வெளிப்பட்டுத் தோன்றியதால், வெட்கப்படும் பெண் போல, நெற்றியில் அணிந்திருந்த மணிமேகலையானது அசையாமல் ஒலிக்காமல் இருக்கும்வண்ணம் நடந்து செல்வாளைப் பாருங்கள்.....)

முடிவுரை:

இதுவரை கண்டதில் இருந்து மேனி என்னும் சொல் கண் மற்றும் கண்ணிமை ஆகிய புதிய பொருட்களையும் என்பது உறுதியாகிறது. கண்ணும் கண்ணிமையும் ஒரே இடத்தில் இருப்பதால் மேனி என்ற சொல் கண்ணையும் இடவாகுபெயராகக் கண்ணிமையினையும் குறிக்கப் பயன்படலாயிற்று. பொதுவாக அலங்கரிக்கப்படாத கண்ணிமையின் வண்ணமும் உடலின் வண்ணமும் ஒன்றாக இருப்பது இயல்புதான். இப்படி இயல்பான உடல் வண்ணத்தில் இருந்து வேறுபடுத்திக் காட்டி அழகு செய்யவே கண்ணிமையில் மை எழுதினர். அப்படி மை எழுதிய கண்ணிமைகளின் மேல் முகத்திரை கொண்டு மூடியவாறு இருப்பதே பெண்களின் பொதுவழக்காகும். ஆனால் பெண்களில் ஒரு பிரிவினரான 'மேனிமினுக்கி' என்பவர்கள் மட்டும் இதற்கு விதிவிலக்காகும். இவர்களைப் பற்றிக் கீழே பார்ப்போம்.

பொதுவாக மினுக்குதல் என்பது மின்னல் போல ஒளிர்தல் என்ற பொருளைத் தருவது. பெண்கள் தமது மையுண்ட கண்ணிமைகளை மூடித் திறக்கும்போது மின்னல் வெட்டுவதைப் போல ஒளிர்ந்து மறையும். கண்ணிமைகளில் இருந்து தோன்றும் இந்த மின்னலின் ஒளியினை முகபடாம் கொண்டு மூடி மறைக்காவிட்டால் அது ஆடவர் கண்களில் பட்டு அவர்களது மனதைக் கொள்ளையடித்து விடும். இவ்வாறு ஆடவர்களின் மனதினைத் தனது கண்ணிமையின் ஒளியினால் கவர்ந்து அவர்களிடம் இருந்து பணத்தைப் பறிப்பவர்களே மேனிமினுக்கிகள் ஆவர். இவர்களையே பொருட்பெண்டிர் என்று வள்ளுவர் குறிப்பிடுகிறார்.

வெள்ளி, 2 அக்டோபர், 2009

சனி நீராடு


பாடல்:

சனி நீராடு.

தற்போதைய பொருள்:

அவ்வையார் இயற்றிய ஆத்திச்சூடியில் உயிர்மெய் வருக்கத்தில் வரும் இப்பாடலுக்குப் பலவிதமான கருத்துக்கள் கூறப்படுகின்றன. நாள்தோறும் செய்கிறோமோ இல்லையோ வாரத்தில் ஒருநாளாக சனிக்கிழமை அன்று கண்டிப்பாக தலைக்கு எண்ணை தேய்த்துக் குளிக்க வேண்டும் என்பதே இப் பாடலுக்குக் கூறப்படும் பெருவாரியான கருத்து ஆகும். ஒருசிலர் சனி என்பதற்கு மந்தமாக நடக்கிற அல்லது மெதுவாக ஓடுகிற என்று பொருள் கொண்டு மெல்ல ஓடும் ஆற்று நீரில் குளிக்க வேண்டும் என்று கருத்து கூறுகின்றனர். இன்னும் ஒருசிலர் சனி என்பதற்கு குளிர்ச்சி என்று பொருள் கொண்டு குளிர்ந்த நீரில் குளிக்கவேண்டும் என்று கருத்து உரைக்கின்றனர். இம் மூன்று கருத்துக்களில் எது சரி எது தவறு என்று காண்பதே இக் கட்டுரையின் நோக்கமாகும்.

தவறுகள்:

ஆராய்ந்து பார்த்ததில் மேற்காணும் மூன்று கருத்துக்களுமே பொருந்தாது என்றே தோன்றுகிறது. இது எவ்வாறு என்று காண்போம். சனி என்பதற்கு சனிக்கிழமை என்று பொருள் கொண்டாலும் எண்ணைக் குளியல் போடவேண்டும் என்று ஔவையார் கூறவில்லையே; வெறுமனே குளிக்கவேண்டும் என்று தானே சொல்லி இருக்கிறார். இதிலிருந்து எண்ணைக் குளியல் என்பது இட்டு சேர்க்கப் பட்டுள்ளது என்பது தெளிவு. வெறுமனே குளிக்கவேண்டும் என்று எடுத்துக் கொண்டாலும் பொருள் பொருத்தமற்றதாகவே தோன்றுகிறது. ஏனென்றால் சனிக்கிழமை அல்லாத மற்ற கிழமைகளில் குளிக்க வேண்டிய கட்டாயம் இல்லை என்றல்லவா பொருள் தொனிக்கிறது?. அவ்வைப் பிராட்டியார் இப்படி ஒரு தவறான வழிநடத்தலை மக்களுக்குக் கூறி இருக்க முடியாது என்பதால் சனி என்பது சனிக்கிழமையினைக் குறிக்காது என்பது தெளிவாகிறது.

சனி என்பதற்கு மந்தம் என்ற பொருள் இங்கே பொருந்துமா என்றால் பொருந்தாது. அப்படி ஒரு பொருள் அச் சொல்லுக்கு எந்த அகராதியிலும் கூறப்பட வில்லை என்பது ஒருபுறம் இருக்க மந்தமாக ஓடுகிற ஆற்று நீரில் குளித்தல் என்பது நடைமுறைக்கு இயலாத ஒரு செயலும் ஆகும். ஏனென்றால் ஆற்று நீரில் குளிக்க வேண்டும் என்றால் ஆற்றில் நன்கு நீர் ஓடவேண்டும்; அத்துடன் ஆறு ஓடுகிற ஊரில் வாழவேண்டும். இந்த இரண்டும் எப்போதும் எல்லோருக்கும் சாத்தியம் ஆவதில்லை என்பது நடைமுறை உண்மை. நடைமுறைக்குச் சாத்தியமில்லாத ஒரு கருத்தை அவ்வையார் கூறமாட்டார் என்பதால் சனி என்பதற்கு மந்தம் என்ற பொருளும் இங்கு பொருந்தாது என்பது தெளிவு.

அடுத்து சனி என்பதற்கு குளிர்ச்சி என்ற பொருள் எந்த அகராதியிலும் காணப்படவில்லை. அத்துடன் குளிர்ந்த நீரில் குளிப்பதோ வெந்நீரில் குளிப்பதோ அவரவர் உடல்நலத்தைப் பொறுத்தது ஆகும். எனவே குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும் என்று பொத்தாம் பொதுவாகக் கூறுவது தவறாகும். அவ்வையார் போன்ற அறிவுடைப் பெருமக்கள் இத்தகைய தவறினைச் செய்ய மாட்டார்கள் என்பதால் இதுவும் தவறான விளக்கம் என்பது பெறப்படுகிறது. இந்தப் பொருள் தவறுகளுக்கான காரணம் ஒரு எழுத்துப் பிழை மட்டுமே. அதைப் பற்றிக் கீழே காணலாம்.

திருத்தம்:

சனி என்னும் சொல் அசனி என்று வரவேண்டும். சொல்லின் முதலில் உள்ள 'அ' என்னும் எழுத்து விடுபட்டுப் போனமையால் தான் இவ்வளவு பொருள் குழப்பங்களும் நேர்ந்தது. அசனி என்ற சொல்லுக்குப் பல பொருட்கள் உண்டென்றாலும் இச் சொல் இங்கு சாம்பிராணி இலையினைக் குறிக்கும். சான்று: கழகத் தமிழ்க் கையகராதி. இனி இப் பாடலின் சரியான பொருள் இது தான்: சாம்பிராணி இலைகள் இட்ட நீரில் (நாள்தோறும்) குளிக்க வேண்டும்.

நிறுவுதல்:


முதலில் சாம்பிராணி இலைகளைப் பற்றி இங்கே காணலாம். சாம்பிராணிச் செடியானது சிறிய செடியாக எளிதில் உடையும் தண்டுடன் இருக்கும். இதன் இலைகள் வெளிர்பச்சையாக வெற்றிலை வடிவத்தில் இருக்கும். இலை இரண்டு மில்லிமீட்டர் கனம் உள்ளதாக இருக்கும். இலையின் மேலும், கீழும் நுண்ணிய துணை இலைகள் படர்ந்திருக்கும். இந்த இலையைக் கசக்கினால் நல்ல வாசனை வரும். இந்தியா முழுவதும் குறிப்பாக ராஜஸ்தான், தென்னிந்தியாவிலும், காடுகளிலும் வளர்கிறது. வீடுகளிலும் விரும்பி மருந்திற்காக வளர்க்கப்படுகிறது. சதைப்பற்று மிக்க, மணமிக்க காம்புகளையுடைய சிறிய புதர்ச்செடி இது.

இதன் இலைகள் மருத்துவத்தில் அதிகம் பயன்படுகின்றன. கை வைத்தியமாகவும், மக்களால் பயன்படுத்தப்படுகிறது. பித்தப்பை கல் உண்டாவதைத் தடுக்கும் குணம் கொண்டது. தசைகள் சுருங்குவதைத் தடுக்கும். நாள்பட்ட இருமல், அஜீரணம், வயிறு சம்பந்தப்பட்ட நோய், இளைப்பு நோய்களுக்கு நல்ல மருந்தாக இலைச்சாறு பயன் தருகிறது. கண் அழற்சிக்கு இதன் சாறு மேல் பூச்சாக தடவ பயன்படும். மருத்துவத் துறையில் இது நரம்புகளுக்குச் சத்து மருந்தாகிறது. மனக் கோளாறுகளைச் சரி செய்யவும், சிறுநீரை எளிதில் வெளிக் கொணரவும் பரிந்துரைக்கப்படுகிறது. இரத்தத்தை சுத்தப்படுத்தும் தாவரமாகவும் கருதப்படுகிறது. தேமல் உள்ள இடங்களில் காலையும், மாலையும் வெந்நீரால் கழுவிச் சுத்தம் செய்து அதன் மேல் சாம்பிராணி இலைச் சாற்றைத் தேய்த்து வந்தால் தேமல் மறையும். தலைவலி தோன்றிய நேரத்தில் சாம்பிராணி இலையைக் கசக்கி அதன் சாறை நெற்றிப் பொட்டில் கனமாகப் பூசி வந்தால் தலைவலி குணமாகும். (நன்றி: தமிழ்வாணன்.காம்.)

இவ்வளவு மருத்துவ குணங்கள் கொண்ட சாம்பிராணி இலைகளை நீரில் போட்டு ஊறவைத்துக் குளித்தால் சலதோசம், இருமல், சளி, தலைவலி ஆகிய நோய்கள் அண்டாது என்பதுடன் குளித்தபின் நல்ல வாசனையாகவும் இருக்கும். மேலும் தேமல் போன்ற தோல் நோய்களும் குணமாகும் என்பதால் தான் அவ்வையார் சாம்பிராணி இலைகளை ஊறப்போட்ட நீரில் நாள்தோறும் குளிக்க வேண்டும் என்று அறிவுரை கூறுகிறார். சாம்பிராணி இலைகள் அடித்தட்டு மக்களாலும் வாங்கப் படக்கூடியது என்பது கொசுறு செய்தி.

சரியான பாடல்:

சனி நீராடு.

...................................................................................

திங்கள், 21 செப்டம்பர், 2009

நிறைமொழி மாந்தர்


பாடல்:

நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்.
              - குறள் எண்: 28

தற்போதைய பொருள்:

கலைஞர் உரை: சான்றோர்களின் பெருமையை, இந்த உலகில் அழியாமல் நிலைத்து நிற்கும் அவர்களது அறவழி நூல்களே எடுத்துக் காட்டும்.
மு.வ உரை: பயன் நிறைந்த மொழிகளில் வல்ல சான்றோரின் பெருமையை, உலகத்தில் அழியாமல் விளங்கும் அவர்களுடைய மறைமொழிகளே காட்டிவிடும்.
சாலமன் பாப்பையா உரை: நிறைவான வாக்குப் பெருமை உடைய மேன் மக்களின் உயர்வை, அவர்கள் இவ்வுலகில் சொன்ன மந்திரச் சொற்களே அடையாளம் காட்டிவிடும்.

தவறுகள்:

மேற்காணும் உரைகளில் முதல் இரண்டு உரைகளும் நிறைமொழி மாந்தர் என்னும் தொடருக்குச் சான்றோர் என்று பொருள் கூறுகின்றன. இப் பொருள் இதற்குப் பொருந்துமா என்றால் பொருந்தாது. ஏனென்றால் சான்றோர் வேறு; நிறைமொழி மாந்தர் வேறு. நல்ல பண்புகளுக்குச் சான்றாக விளங்கும் தன்மை உடையவரே சான்றோர் ஆவர். இக் குறளில் வரும் நிறைமொழி மாந்தர் என்பது சான்றோரைக் குறிக்காது என்பதற்கு இரண்டு காரணங்களைச் சொல்லலாம். ஒன்று: சான்றோர் என்ற சொல்லைத் திருக்குறளில் பல இடங்களில் பயன்படுத்தி இருக்கும் வள்ளுவர் இக் குறளில் அச் சொல்லைப் பயன்படுத்தாதது. இரண்டு: சான்றோரின் இயல்புகள் குறித்து சான்றாண்மை என்னும் தனி அதிகாரத்தில் கூறி இருப்பது. எனவே நீத்தார் பெருமையைக் கூறும் இக் குறளில் வரும் நிறைமொழி மாந்தர் என்பது ஐம்புலன் அவித்தோரையே குறிக்கும் என்பது தெளிவாகிறது. சா.பா.உரையில் வரும் 'நிறைவான வாக்குப் பெருமை' ஆகிய பண்பும் சான்றோர்க்கே உரியது என்பதால் அப் பொருளும் இங்கே பொருந்தாது என்பது பெறப்படுகிறது.

அடுத்து மறைமொழி என்னும் சொல்லுக்கு அறவழி நூல்கள் என்றும் மந்திரச்சொற்கள் என்றும் பொருள் கூறப்பட்டுள்ளது. இப் பொருள்களும் இங்கு பொருந்தாது. ஏனென்றால் நூலாகட்டும் சொற்களாகட்டும் இரண்டுமே உரைக்கும் தன்மை பெற்றவை. ஆனால் வள்ளுவரோ 'மறைமொழி காட்டிவிடும்' என்கிறார். இதிலிருந்து மறைமொழி என்பது காட்டும் தன்மை உடையதே அன்றி உரைக்கும் தன்மை உடையது அல்ல என்பதைப் பெறலாம். எனவே மேற்சொன்ன இரண்டு பொருட்களும் இக் குறளில் வரும் மறைமொழி என்பதற்குப் பொருந்தாது என்பது உறுதியாகிறது. இந்தப் பொருள் தவறுகளுக்குக் காரணம் ஒரே ஒரு எழுத்துப் பிழை என்பதே.

திருத்தம்:

முதலடியில் வரும் 'நிலம்' என்னும் சொல் 'நிறம்' என்று வரவேண்டும். நிறம் என்னும் சொல்லுக்குப் பல பொருட்கள் உண்டென்றாலும் இங்கு அச் சொல் உடலைக் குறிக்கும்(ஆதாரம்: கழகத் தமிழ்க் கையகராதி).இக் குறளில் வரும் நிறைமொழி என்பது மௌனமொழி அதாவது பேசாமையினைக் குறிக்கும். மறைமொழி என்பது உரைக்கப் படாத குறிப்பு மொழியை அதாவது சின்முத்திரை போன்றவற்றைக் குறிக்கும். பெருமை என்பது இக் குறளில் பொருட்பெருமையைக் குறிக்காமல் அறிவுப் பெருமையைக் குறிக்கும். இனி இக்குறளின் சரியான பொருள் இதுதான்: மௌனத்தை மொழியாகக் கொண்ட ஐம்புலன் அவித்தோரின் அறிவுப்பெருமையினை அவரது உடல்குறிப்பு மொழிகள் காட்டி நிற்கும்.'

நிறுவுதல்:

நிறைதல் என்னும் சொல்லுக்கு முழுமையாதல் என்ற பொருள் உண்டு. நிறைமொழி என்பது முழுமையான மொழி என விரியும். இவ் உலகில் மௌனத்தைத் தவிர வேறெந்த மொழியும் முழுமையான மொழி ஆகாது. ஏனென்றால் மௌனமே அனைத்து உயிர்களுக்கும் பொதுவான மொழி ஆகும். எல்லா மொழிகளிலும் இது இருப்பதுடன் எல்லா மொழிகளையும் இது தனக்குள் அடக்கி நிற்கிறது. என்வே தான் இது அனைவராலும் பயன்படுத்தப் படுகிறது. அன்றியும் ஐம்புலன் அவித்தோருக்கு எஞ்ஞான்றும் மௌனமே மொழி ஆகும். ஏனென்றால் ஐம்புலன் அடக்கலின் முதல் நிலையே நாவை அடக்குதல் ஆகும். சுவை மற்றும் சொல் ஒழித்தலே நாவடக்கம் ஆகும். சொல்லும் சுவையும் ஒடுங்கத் துவங்கும்போது உடலிலும் மனதிலும் பல மாற்றங்கள் உண்டாகின்றன. நாவடக்கத்தினால் ஒருவர் மன அமைதியையும் உடல் நலத்தையும் ஒருங்கே பெறுவதுடன் ஏனைப் புலன்களின் அடக்கத்திற்கும் அதுவே அடிகோலுகிறது. எனில் ஐம்புலன் அவித்தோரின் எண்ணங்களைப் பிறர் அறிவது யாங்ஙனம்?. இதற்கான விடையினை இங்கே காணலாம்.

பொதுவாக மௌனத்தை மொழியாகக் கொண்டவர்கள் உடல்குறிப்பு மொழிகளால் தமது எண்ணங்களை வெளிப்படுத்துவர். இவற்றை 'முத்ரா' என்று வடமொழி கூறுகிறது. முத்திரைகள் எண்ணங்களை வெளிப்படுத்த உதவுவதுடன் உடலுக்குப் பல நன்மைகளையும் அளிக்கின்றன. இந்த முத்திரைகள் பலவகைப்படும். முத்திரைகளின் வகைகள் பற்றியும் நன்மைகள் பற்றியும் இந்தியாநெட்ஸோன் என்ற இணையதளத்தில் காணலாம். இந்த முத்திரை ஆனது உடலின் பல உறுப்புக்களால் உருவாக்கப் பட்டாலும் கைகளும் விரல்களுமே அதிகம் பயன்படுத்தப் படுகின்றன. அருகில் உள்ள படம் முத்திரைக்கு ஒரு சான்றாகும். ஐம்புலன் அவித்தோர் தமக்குள் பரிமாறிக் கொள்வது இந்த முத்திரைகளால் தான். ஐம்புலன் அவித்தலில் உள்ள பல்வேறு படிநிலைகளுக்கு ஏற்ப அவரது அறிவின் முதிர்ச்சி மாறுபடுகிறது. இந்த முதிர்ச்சியானது முத்திரைகளால் காட்டப் படுகிறது.


எண்ணமே மொழியாகிறது. வெளிப்படுத்தப் பட்ட ஒருவரது மொழியே அவரது அறிவுநிலையினை அதாவது பெருமையினைக் கூறாநிற்கின்றது. அவ்வகையில் மௌனத்தை மொழியாகக் கொண்ட ஐம்புலன் அவித்தோரின் உடல்குறிப்பு மொழிகளே அவருடைய அறிவுப் பெருமைகளைக் காட்டாநிற்கின்றன. இதுவே இக் குறள் உணர்த்தவரும் கருத்தாகும்.

சரியான பாடல்:

நிறைமொழி மாந்தர் பெருமை நித்து
மறைமொழி காட்டி விடும்.
.........................................................................................................................

வியாழன், 17 செப்டம்பர், 2009

திருக்குறள் காட்டும் இந்திரன் யார்?. (இந்திரனே சாலும் கரி)




குறள்:

ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்புளார் கோமான்
இந்திரனே சாலும் கரி. - 25.

தற்போதைய விளக்க உரைகள்:

கலைஞர் மு.கருணாநிதி உரை: புலன்களை அடக்க முடியாமல் வழிதவறிச் சென்றிடும் மனிதனுக்குச் சான்றாக இந்திரன் விளங்கி, ஐம்புலன்களால் ஏற்படும் ஆசைகளைக் கட்டுப்படுத்தியதால் வான்புகழ் கொண்டவர்களின் ஆற்றலை எடுத்துக் காட்டுகிறான்.

மு.வரதராசனார் உரை: ஐந்து புலன்களாலாகும் ஆசைகளை ஒழித்தவனுடைய வல்லமைக்கு, வானுலகத்தாரின் தலைவனாகிய இந்திரனே போதுமான சான்று ஆவான்.

சாலமன் பாப்பையா உரை: அகன்ற வானத்து வாழ்பவரின் இறைவனாகிய இந்திரனே, புலன்வழிப் பெருகும் ஆசை ஐந்தையும் அறுத்தவனின் வலிமைக்குத் தகுந்த சான்று ஆவான்.

பரிமேலழகர் உரை: ஐந்து அவித்தான் ஆற்றல் - புலன்களில் செல்கின்ற அவா ஐந்தனையும் அடக்கினானது வலிக்கு; அகல் விசும்பு உளார் கோமான் இந்திரனே சாலும் கரி - அகன்ற வானத்துள்ளார் இறைவன் ஆகிய இந்திரனே அமையும் சான்று. (ஐந்தும் என்னும் முற்று உம்மையும் ஆற்றற்கு என்னும் நான்கன் உருபும் செய்யுள் விகாரத்தால் தொக்கன. தான் ஐந்து அவியாது சாபம் எய்தி நின்று, அவித்தவனது ஆற்றல் உணர்த்தினான் ஆகலின், 'இந்திரனே சாலும் கரி' என்றார்.

மணக்குடவர் உரை: நுகர்ச்சியாகிய வைந்தினையுந் துறந்தானது வலிக்கு அகன்ற விசும்பிலுள்ளார்க்கு நாயகனாகிய இந்திரனே யமையுஞ் சான்று. இந்திரன் சான்றென்றது இவ்வுலகின்கண் மிகத் தவஞ் செய்வாருளரானால் அவன் தன்பதம் இழக்கின்றானாக நடுங்குமாதலான். இது தேவரினும் வலியனென்றது.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை: புலன்களில் சொல்லுகின்ற ஐந்து ஆசைகளையும் அடக்கியவனுடைய ஆற்றலுக்கு அகன்ற வானத்தில் உள்ளவர்களின் தலைவனான இந்திரனே சான்றாவான் (சாட்சியாவான்).

உரைத்தவறுகள்:

நீத்தார் பெருமையைச் சுட்டுவதாக அமைந்திருக்கும் இக்குறளில் வரும் இந்திரன் என்ற சொல்லுக்குப் புராணக் கதைகளில் வரும் தேவர்களின் தலைவனாகிய தேவேந்திரனைப் பொருளாகக் கொண்டே அனைவரும் உரை எழுதியுள்ளனர். உண்மையில் யார் இந்த தேவேந்திரன்?. ஒரு மகா அயோக்கியன் என்று புராணம் கூறுகிறது.

தேவேந்திரன் - அகலிகை - கௌதமன் ஆகியோரின் முக்கோணக் காமக்கதை நாடறியும். கௌதமமுனிவர் வீட்டில் இல்லாத நேரம்பார்த்து அவரைப் போலவே பொய்வேடம் பூண்டு அவரது மனைவியாகிய அகலிகையிடம் சென்று தவறாக நடக்க முயற்சிசெய்து சாபம் பெற்றவன் இந்த தேவேந்திரன். பலர் பலவிதமாக இக் கதையினைக் கூறினாலும் ஒன்று மட்டும் உண்மை. இவன் புலனடக்கம் இன்றி அகலிகையின் மேல் காம விருப்பம் கொண்டு அவளை அடைய முயன்றான் என்பதே அது. இதைப்போல புலனடக்கம் இன்றி இவன் பல தவறுகளைச் செய்திருக்கிறான் என்று புராணம் கூறுகிறது. இதிலிருந்து தேவேந்திரன் புலனடக்கம் இல்லாதவன் என்பது மிகத் தெளிவாக அறியப்படுகிறது. இப்படிப்பட்ட ஒருவனை ஐம்புலன் அடக்கியவரின் ஆற்றலுக்குச் சான்றாகக் கூறுவாரா வள்ளுவர்? ஒருபோதும் மாட்டார். நல்லது செய்தால் கிட்டும் நன்மைகளை ஒரு நல்லவரைக்கொண்டுதான் சான்றுகாட்ட வேண்டுமே ஒழிய ஒரு கேடுகெட்டவனைக் கொண்டா சான்று காட்டுவது?.

அதுமட்டுமின்றி வள்ளுவர் எந்தவொரு குறளிலும் புராணக் கதைகளையோ குறிப்பிட்ட சமயம் தொடர்பான பெயர்களையோ பயன்படுத்தவில்லை என்று பல குறள்களின் வாயிலாக அறிந்திருக்கிறோம். இப்படி அனைத்துச் சமயத்தார்க்கும் பொதுவாகக் கருத்துக்களைக் கூறியிருப்பதால்தான் உலகப்பொதுமறை என்று திருக்குறள் கொண்டாடப்படுகிறது. ஆனால், வள்ளுவர் மேல்கொண்ட அதிகமான பற்றினால் ஒவ்வொரு சமயத்தாரும் அவரைத் தமது சமயம் சார்ந்தவராகவே பார்க்கின்றனர். இதன் விளைவாக, அவரது கருத்துக்களைத் தமது சமயக்கருத்துக்கு ஏற்பத் திரித்துக் கூறுகின்றனர். இப்படித் திரித்துக்கூறப்பட்ட பல்வேறு குறள்களில் ஒன்றுதான் இது. இதில் வரும் இந்திரன் என்ற சொல்லை தேவேந்திரன் என்றும் திருமால் என்றும் அவரவர் விருப்பப்படி திரித்துக்கூறி வருகின்றனர்.

தேவேந்திரனும் திருமாலும் குறிப்பிட்ட சமயம் சார்ந்தவர்கள் என்பதால் பொதுமக்களில் எத்தனைபேர் அறிவார் இவர்களை?. மக்கள் பரவலாக அறிந்திராத ஒரு கற்பனைப் பாத்திரத்தினை உவமையாகக் கூறி விளக்கினால் பாடலின் பொருளை அனைவரும் எப்படி விளங்கிக்கொள்ள முடியும்?. குழந்தைப் பருவத்தில் இருந்தே பார்வையற்ற ஒருவர் யானையைத் தடவிப் பார்த்துக் கருத்து கூறுவதைப் போன்றதே இது. புரியாதவற்றை மக்கள் அறியாதவற்றை வள்ளுவர் ஒருபோதும் உவமைப் பொருளாகக் கூறமாட்டார் என்பதால் இப்பாடலில் வரும் இந்திரன் என்பது தேவேந்திரனையோ திருமாலையோ குறிக்க வாய்ப்பில்லை என்பது உறுதிசெய்யப்படுகிறது.

குறளுக்கான திருந்திய விளக்கம்:

இக்குறளுக்கான திருந்திய புதிய விளக்கத்தினைக் காணும் முன்னர் குறளில் வரும் சில சொற்களுக்குக் கீழே அகராதிகள் காட்டும் புதிய பொருட்களைக் கொள்ளவேண்டும்.

ஆர்¹-தல் ār- , 4 v. [T. K. M. āru.] intr. 1. To become full; நிறைதல். ஆரப்பருக (திவ். திருவாய். 10, 10, 5). 2. To spread over; பரவு தல். போதாரிவண்டெலாம் (திணைமாலை. 95, உரை). 3. To be satisfied; திருத்தியாதல். ஆராவமுதம் (திவ். திருவாய். 2, 5, 5). 4. To combine with, belong to; பொருந்துதல். சீரார்செழும்பந்து (திவ். இயற். சிறியதி. 11, கண்ணி). 5. To abide, stay; தங்குதல். (திவா.)--tr. 1. To eat, to drink; உண்ணுதல். அமலைக் கொழுஞ்சோ றார்ந்த பாணர்க்கு (புறநா. 34, 14). 2. To experience; அனுபவித் தல். ஆர்வுற்றார் நெஞ்ச மழிய (கலித். 42, 13). 3. To resemble; ஒத்தல். மணியார்கண்டத் தெம்பெருமான் (பெரியபு. திருநா. 314). 4. To wear, put on; அணிதல். (பிங்.) 5. To get, obtain; பெறுதல். ஆர்கின்ற தின்றோ ரலரே (கந்தபு. தேவரையே. 11).

ஆற்றல் āṟṟal , n. < ஆற்று¹-. 1. Strength, power, prowess, ability; சக்தி. (திவா.) 2. Effort, endeavour; முயற்சி. (திவா.) 3. Abundance, copiousness; மிகுதி. (பிங்.) 4. Determinedness; கடைப்பிடி. ஆற்றலு மவள்வயி னான (தொல். பொ. 129). 5. Endurance, fortitude; பொறை. ஆற் றுவா ராற்றல் பசியாற்றல் (குறள், 225). 6. Manliness, courage; ஆண்மை. (பிங்.) 7. Victory; வெற்றி. (பிங்.) 8. Truth; வாய்மை. (பிங்.) 9. Wisdom, knowledge; ஞானம். (பிங்.) 10. Power inherent in a word to express a particular sense, the connotative power of a word; இன்னசொல் இன்னபொருளுணர்த்து மென் னும் நியதி. (தர்க்கசங்.)

கோமான்¹ kōmāṉ , n. < கோ³. [M. kōmān.] 1. King; அரசன். வத்தவர் கோமான் வயவர் திரிதர (பெருங். உஞ்சைக். 44, 93). 2. Person of eminence, Lord; பெருமையிற் சிறந்தோன். கோமாற்கே நாமென்று மீளா வாளாய் (தேவா. 1236, 1). 3. Spiritual preceptor; குரு. (பிங்.) 4. Elder; மூத்தோன். (திவா.)

இந்திரன் intira , n. < indra. (நாநார்த்த.) 1. The inner soul; அந்தரான்மா. 2. Sun; சூரியன்.

மேலே அகராதிகளில் கண்டபடி,

ஆற்றல் = ஞானம், அறிவு.
ஆர்தல் = நிறைந்திருத்தல்.
கோமான் = பெருமையில் சிறந்தோன்.
இந்திரன் = கதிரவன்.

இப்புதிய பொருட்களின் அடிப்படையில், குறளுக்கான திருந்திய விளக்கம்:

ஐம்புலன்களையும் அடக்கியவரின் அறிவுக்கு, அகன்ற வானத்துள் (ஒளியால்) நிறைந்திருப்பவனும் பெருமையில் சிறந்தோனுமாகிய கதிரவனே பொருத்தமான சான்று ஆவான்.

நிறுவுதல்:

பொதுவாக, புலவர்கள் தமது பாடல்களில் உவமைகளைக் கையாளும்போது மக்கள் நன்கறிந்த இயற்கைப் பொருட்களையே பயன்படுத்துவர். இது திருக்குறளுக்கும் பொருந்தக்கூடியதே. அவ்வகையில், வள்ளுவர் இப்பாடலில் உவமையாகக் கதிரவனைக் கூறியிருக்கிறார்.

வள்ளுவர் இக்குறளில் கூறியிருக்கும் உவமையினைப் போலவே நாமும் இக்காலத்தில் பயன்படுத்தவே செய்கிறோம். வடமொழியில் ஞானசூரியன் என்றும் தமிழில் அறிவில்ஆதவன் என்றும் கூறுவது இந்த உவமையின் அடிப்படையில் தான். ஐம்புலன்களை அடக்கியாள்வதின் மூலம் அறிவு என்னும் ஒளியானது உள்முகமாகப் பாய்ச்சப்படுகிறது. இதனால் அகத்தில் இருக்கும் இருள் நீங்கி அகத்தில் இருக்கும் பொருட்களைப் பற்றிய பேரறிவினைப் பெறுகிறோம். இப் பேரறிவானது எல்லையற்ற தன்மைகொண்டது. கண்களை மூடிக்கொண்டு அகத்தில் நாம் காணும் பேரறிவுக்கு எல்லையே இல்லை என்பதால் அதனைக் கதிரவனின் ஒளியுடன் ஒப்பிட்டுக் கூறுகிறார் வள்ளுவர். சரி, அறிவுக்கும் கதிரவனுக்கும் என்ன தொடர்பு?. ஏன் இரண்டையும் ஒப்பிடுகிறார்கள்?. என்று பார்க்கலாம்.

ஒருபொருள் இருளில் இருக்கும்போது அதை நம்மால் காணவியலாது. அங்கே ஒளி பாயுமானால் அதனை நம்மால் காணமுடியும்; அப்பொருளைப் பற்றிய அறிவினையும் பெறமுடியும். ஆக, ஒளி பாயாதவரை அப்பொருளைப் பொருத்தமட்டிலும் நமக்குள் 'அறியாமை' யே நிறைந்திருக்கும் அல்லவா?. உண்மையில் அப்பொருளின்மீது ஒளிபாயும்போது விலகுவது அங்கிருக்கும் இருள்மட்டுமல்ல; நமது அறியாமையும்தான். இங்கே கூறப்பட்டிருக்கும் 'பொருள்' புறப்பொருளாகட்டும்; அகப்பொருளாகட்டும் இரண்டுக்குமே பொருந்துவதுதான். எனவேதான், மக்களின் அறியாமையினை இருளுக்கும் அறிவினை ஒளிக்கும் உவமையாகக் கூறுவது வழக்கமாயிற்று. வள்ளுவரும் அறிவுடைமை என்னும் அதிகாரத்தில் அறிவினைப் பற்றிக் கீழ்க்காணுமாறு கூறுகிறார்.

அறிவு அற்றம் காக்கும் கருவி செறுவார்க்கும்
உள் அழிக்கல் ஆகா அரண். - 421.

ஒருவரை அவரது அழிவில் இருந்து காப்பாற்றும் வல்லமை மிக்க கருவி அவரது அறிவே ஆகும் என்கிறார். ஏனைய கருவிகளை இவரிடமிருந்து அழித்துவிடலாம். ஆனால் இந்த அறிவென்னும் கருவியினை அழிக்க முடியாது. காரணம், இது பொருளின் வடிவாக இன்றி ஒளியின் வடிவாக இருப்பது.

உலகம் தழீஇய தொட்பம் மலர்தலும்
கூம்பலும் இல்லது அறிவு. - 425

மேற்காணும் குறளில் மலர்தலும் கூம்பலும் இல்லது அறிவு என்று கூறுகிறார் வள்ளுவர். மலர்தலும் கூம்பலும் உடையது எது?. ஒரு மலர்தானே. பொதுவாக ஏதோ ஒருமலர் என்றில்லாமல் இங்கே அதனைத் தாமரைமலராகக் கருதலாம். ஏனென்றால், தாமரைமலரானது பகலிலே மலர்ந்தும் இரவிலே கூம்பியும் காணப்படும். இந்தத் தாமரைமலரினைப் போல நமது அறிவு இருக்கக்கூடாது என்கிறார். மாறாக, தாமரைமலரை மலரச்செய்யும் கதிரவனாக இருக்கவேண்டும் என்கிறார். ஏனென்றால், கதிரவன் மட்டுமே எப்போதும் ஒளிவீசிக் கொண்டிருப்பவன். இக்கதிரவன் நமக்கு மட்டுமின்றி உலகத்தார் அனைவருக்கும் உரியவனாய் இருப்பதைப்போல நமது அறிவானது நம்மோடு மட்டும் அமையாமல் உலகமக்களுடன் பொருந்தக்கூடியதாய் அவர்களுக்கும் பயன்படக்கூடியதாய் அமைவதே சிறப்பானது என்று கூறுகிறார் வள்ளுவர். இக்குறளில் அறிவினைக் கதிரவனுடன் நேரடியாக ஒப்பிடாமல் மறைமுகமாக ஒப்பிட்டிருக்கும் நுட்பம் எண்ணி மகிழத்தக்கது. !

முடிவுரை:

அகக்கண்களில் தோன்றும் அறிவினைக் கதிரவனுடன் இப்பாடலில் ஒப்பிட்டிருப்பதைப்போல, புறக்கண்களில் தோன்றும் அழகினை நிலவுடன் ஒப்பிட்டும் பாடியிருக்கிறார் வள்ளுவர்.

தாம்வீழ்வார் மென்தோள் துயிலின் இனிதுகொல்
தாமரைக் கண்ணான் உலகு. - 1103.

இப்பாடலில் வரும் தோள் என்பது பெண்களின் அழகிய கண்களையும் தாமரைக்கண்ணான் என்பது நிலவினையும் குறிப்பதாகும். இதைப்பற்றித் தாமரைக்கண்ணான் உலகு என்னும் தனிக்கட்டுரையில் விரிவாகக் காணலாம்.

========== வாழ்க தமிழ் ! வளர்க வள்ளுவம் !! =========