சனி, 28 மார்ச், 2009

' கண்ணீரும் கடல்நீரும் '


பாடல்:

'அதுகொல் தோழி காம நோயே?
வதிகுருகு உறங்கும் இன் இலைப் புன்னை
உடைதிரைத் திவலை அரும்பும் தீநீர்
மெல்லம் புலம்பன் பிரிந்தென
பல்லிதழ் உண் கண்பாடு ஒல்லாவே.'
- குறுந்தொகை 5 ஆம் பாடல்.

பொருள்:

இது தானோ தோழி காம நோய் என்பது? தன்னிடத்தே தங்கும் நாரை துயில் கொள்ளும் இனிய இலைகளை உடைய புன்னையின் கிளை மீது உடைந்து போகும் இயல்பின ஆகிய அலைகளின் நீர்த் திவலைகள் தோன்றும் தீய நீரை உடைய மெல்லிய கடல் துறைவன் பிரிந்ததால் என்னுடைய பல்லிதழ்ப் பூவை ஒத்த மையுண்ட கண்கள் துயில் பொருந்தாவாயினவே!.
நன்றி: குறுந்தொகை மூலமும் உரையும், திரு.இராமரத்தினம்,கங்கை புத்தக நிலையம், சென்னை, 2002.

தவறுகள்:

இப்பாடலில் இரண்டு தவறுகள் உள்ளன. முதல் தவறு இரண்டாம் அடியில் உள்ளது. 'வதிகுரு குறங்கு மின்னிலைப் புன்னை' என்ற சொற்றொடரை 'வதி குருகு உறங்கும் இன் இலைப் புன்னை' என்று பதம்பிரித்து 'நாரை உறங்கும் இனிய இலைகளை உடைய புன்னை' என்று பொருள் கூறுகிறார். இப் பொருள் பொருந்துமா என்றால் பொருந்தாது. ஏனென்றால் தலைவனைப் பிரிந்த துயரத்தில் இருக்கும் தலைவி புன்னையின் இலைகளை இனிமையானவை என்று ஒருபோதும் கூறமாட்டாள். அப்படி அவள் கூறுவதற்கு அந்த இலைகள் இனிப்பான சுவை உடையனவும் அல்ல தலைவிக்கு நன்மை செய்தனவும் அல்ல. எனவே 'இன் இலைப் புன்னை' என்று கூறியிருப்பது தவறு என்பது உறுதியாகிறது.

இரண்டாவது பிழை பாடலின் இறுதி அடியில் வருகிறது. 'கண்பாடு ஒல்லாவே' என்ற சொற்றொடருக்கு 'தூக்கம் பொருந்தவில்லை' என்று பொருள் கூறப்பட்டுள்ளது. இது தவறான பொருளாகும். 'தூக்கம் வரவில்லை' என்று சொல்வது தான் காதலியின் நோக்கம் என்றால் புன்னை மரத்தையும் கடல் அலைகளையும் இங்கே அவள் குறிப்பிட மாட்டாள். ஏனென்றால் அவை இங்கே தேவையே இல்லை. தொடர்பே இல்லாத பொருட்களைப் பற்றி வலிந்து கூற வேண்டிய தேவை தலைவிக்கு என்ன இருக்கிறது?. அன்றியும் ஒரு பெண் வீட்டுக்குள் இருந்துகொண்டு தூக்கம் வரவில்லை என்று சொன்னால் ஏற்புடையதாக இருக்கும். ஆனால் இங்கே தலைவி இருப்பதோ கடற்கரையில் ஒரு புன்னை மரத்தடியில். இந்த இடத்தில் நின்றுகொண்டு தூக்கம் வரவில்லை என்று தலைவி கூறுவதாகக் கொள்வது நகைப்புக்கே இடமளிக்கும். எனவே தலைவி கூற வரும் கருத்து 'தூக்கம் வரவில்லை' என்பது அல்ல என்பது தெளிவாகிறது.


திருத்தங்கள்:

இரண்டாம் அடியில் வரும் 'இன் இலைப் புன்னை' என்பதற்குப் பதிலாக 'மின் இலைப் புன்னை' (மின்னுகின்ற இலைகளை உடைய புன்னை) என்று வருவதே சரி ஆகும். இறுதி அடியில் வரும் 'கண்பாடு ஒல்லாவே' என்னும் சொற்றொடருக்கு 'கண்ணீர் ஆறாதாயினவே' என்பதே சரியான பொருள் ஆகும். இவை எவ்வாறு சரி என்பதைக் காணும் முன்னர் நெய்தல் நிலத்தைப் பற்றிக் கொஞ்சம் புரிந்து கொள்ளலாம். இந்த நிகழ்ச்சி நடைபெறும் இடம் ஒரு நெய்தல் நிலம் அதாவது கடலும் கடல் சார்ந்த நிலமும் ஆகும். நெய்தல் நிலத்தின் முதன்மைத் தொழில் மீன் பிடித்தல். கடல் அலைகளின் வீச்சு அதிகமாக இருக்கும் முழுநிலா நாளில் குறிப்பாக இரவு நேரத்தில் மீன்பிடித் தொழில் நடைபெறாது. மீனவர்கள் யாவரும் தொழில் இன்றி உண்டு உறங்கி விடுகின்ற இந்த இரவினைத் தான் காதலர்கள் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொள்ளப் பயன்படுத்துவர். மாதம் ஒருமுறை முழுநிலா நாளில் காணும் காதலனை அடுத்த முழுநிலா நாளன்று தான் தலைவியால் மறுபடியும் காணமுடியும் என்பதால் இப் பிரிவு காதலர்க்கு குறிப்பாக காதலிக்கு மிகப் பெரிய துயரம் ஆகும்.

இங்கே பாடலில் வரும் தலைவியும் அதேபோல ஒரு முழுநிலா நாளன்று வழக்கமாக சந்திக்கும் ஒரு மரத்தின் அடியில் (இங்கே புன்னை மரம்) தலைவனின் வருகைக்காக தனது தோழியுடன் காத்திருக்கிறாள். அவன் வருவதில் தாமதம் ஏற்படுவதை அறிந்த தலைவி அழத் துவங்குகிறாள். கண்ணீர் இடையறாது சொட்டிக் கொண்டே இருக்கிறது. அதே நேரத்தில் கடற்கரையில் இருக்கும் அந்த புன்னை மரக் கிளைகளின் மேல் கடல் அலைகளின் நீர் தெறித்து விழுகின்றன. அப்படித் தெறித்து விழும் நீர்த் திவலைகள் புன்னை இலைகளில் இருந்து சொட்டிக் கொண்டே இருக்கின்றன. கூடவே முழுநிலா ஒளியும் இலைகளின் மேல் பட அந்த இலைகள் இரவு நேரத்தில் மின்னுகின்றன. இதைக் காணும் தலைவி தோழியிடம் கீழ்க்காணுமாறு அழுது புலம்புகிறாள்:

'இது தானோ தோழி காம நோய் என்பது? தன்னிடத்தே தங்கும் நாரை துயில் கொள்ளும் மின்னுகின்ற இலைகளை உடைய புன்னையின் கிளை மீது உடைந்து போகும் இயல்பின ஆகிய அலைகளின் நீர்த் திவலைகள் தோன்றும் தீய நீரை உடைய மெல்லிய கடல் துறைவன் பிரிந்ததால் என்னுடைய பல்லிதழ்ப் பூவை ஒத்த மையுண்ட கண்களில் கண்ணீர் ஆறாதாயினவே!.'

இதுவே பாடலின் சரியான பொருள் ஆகும். இது கீழே ஆதாரங்களுடன் நிறுவப்பட்டுள்ளது.

நிறுவுதல்:

கண்பாடு என்ற சொல்லிற்கு தூக்கம் என்று பொருள் கொண்டதால் தான் பிழை நேர்ந்தது. படுதல் என்றால் விழுதல் என்று பொருள். பாடு என்றால் வீழ்வது என்று பொருள். எற்பாடு என்பது கதிரவன் விழும் அதாவது மறையும் நேரத்தைக் குறிப்பதைப் போல (எற்பாடு = எல்+பாடு; எல் = கதிரவன்; பாடு = வீழ்ச்சி.) கண்ணிமை தாழ்வது அல்லது வீழ்வது என்ற பொருளில் எடுத்துக் கொண்டால் கண்பாடு என்பது தூக்கத்தைக் குறிக்கும். அதே சமயம் இது கண்களில் இருந்து விழும் நீர் என்ற பொருளில் கண்ணீரையும் குறிக்கும். இப் பாடல் தூக்கத்தைப் பற்றியது அல்ல என்பதால் கண்ணீர் என்ற பொருளே இப்பாடலுக்குப் பொருத்தமானது என்பது தெளிவாகிறது. உப்புச்சுவை கொண்ட இந்த கண்ணீரை அதே தன்மைத்தான கடல்நீருடன் ஒப்பிட்டுக் கூறி இருக்கும் நயம் இங்கே உணர்ந்து மகிழத் தக்கது.

தலைவியின் கண்கள் சிந்தும் கண்ணீரைப் போலவே புன்னையின் இலைகளில் இருந்து கடல் நீர்த் திவலைகள் சொட்டிக் கொண்டிருக்கிறது. அதே சமயம் முழுநிலாவின் ஒளி இந்த இலைகளின் மேல் பட்டுக் கொண்டிருக்கிறது. இச் சூழ்நிலையில் அந்தப் புன்னை இலைகளைக் குறித்து 'மின்னுகின்ற இலைகளை உடைய புன்னை' என்று தான் தலைவி சொல்லி இருக்க முடியுமே அன்றி 'இனிய இலைகளை உடைய புன்னை' என்று கூறி இருக்க முடியாது அல்லவா?. எனவே 'மின் இலைப் புன்னை' என்பதே சரியான சொற்றொடர் ஆகும்.

சரியான பாடல்:

'அதுகொல் தோழி காம நோயே?
வதிகுருகு உறங்கும் மின் இலைப் புன்னை
உடைதிரைத் திவலை அரும்பும் தீநீர்
மெல்லம் புலம்பன் பிரிந்தென
பல்லிதழ் உண் கண்பாடு ஒல்லாவே.'
---------------------------------------வாழ்க தமிழ்!------------------------------------------

திங்கள், 16 மார்ச், 2009

' கல் ஆனாலும் கணவன் புல் ஆனாலும் புருசன்'.


தமிழ்நாட்டில் மிகவும் புகழ் பெற்ற பழமொழி இது. இப் பழமொழியின் தாக்கம் பெண்களிடையே மிகுதி என்றால் அது மிகையாகாது. இந்தப் பழமொழியின் தவறான பொருள் விளக்கத்தால் நேர்ந்த விளைவு தான் இது. இந்தத் தவறுக்குக் காரணம் ஒரே ஒரு எழுத்துப் பிழை தான். அந்தப் பிழை என்ன என்று அறிந்து கொள்ளும் முன்னர் இப் பழமொழிக்கு தற்போது கூறப்படும் பொருள் என்ன என்று காண்போம்.

'கல்நெஞ்சன் (முரடன்) ஆக இருந்தாலும் அவன் உன் கணவனே; புல்நெஞ்சன் (கெட்டவன்) ஆக இருந்தாலும் அவன் உன் புருசனே.'

ஆண்-பெண் இணைந்து வாழ்க்கை நடத்தும் இல்லறத்தில் மணமான ஒரு பெண் தனது கணவனை எந்தெந்த வகைகளில் எல்லாம் அனுசரித்துப் போக வேண்டும் என்று அப் பெண்ணுக்கு அறிவுரை கூறுவதாக இந்தப் பழமொழியின் பொருள் உள்ளது. இதனால் இல்லறத்தில் இருந்து ஆணும் பெண்ணும் பிரிந்து செல்லாமல் ஒன்றாக வாழும் ஒரு நன்மை உண்டெனினும் தீமைகளே அதிகமாக விளைகின்றன. இல்லறத்தில் ஆணின் கையே எப்போதும் ஓங்கி இருக்கவும் பெண்ணின் கை எப்போதும் தாழ்ந்து இருக்கவுமாக ஒரு தவறான சமுதாய வழிநடத்தலுக்கு இக் கருத்து வழிவகுத்து விட்டது. இதனால் பாதிப்படைந்த குடும்பங்கள் மிகப் பல. இவ்வளவு கீழான பொருளில் ஒரு பழமொழி ஏன் நடைமுறையில் இருக்க வேண்டும்?. இது தவறான வழிநடத்தலுக்கு வழிவகுக்கும் என்று அறிந்தும் இதை இப்பொருளில் உலவ விட்டது யாருடைய குற்றம்?. விடைதெரியாத கேள்விகள் இவை. 

ஒரு காட்டை எரித்துச் சாம்பலாக்குவதற்கு ஒரு சின்னத் தீப் பொறி போதுமானதைப் போல ஒரே ஒரு எழுத்துப் பிழை போதுமே ஒரு சமுதாயத்தையே மாற்றி அமைப்பதற்கு. அவ்வாறே இந்தப் பழமொழியில் ஒரே ஒரு எழுத்து தவறாக எழுதப்பட்டதன் விளைவு இதில் உள்ள சொற்களுக்குத் தவறான பொருட்களைக் கொள்ளச் செய்து பழமொழியின் நோக்கத்தையே சிதைத்து விட்டது. உண்மையில் இந்தப் பழமொழியினைக் கூறியவர் ஒரு சித்தராகத் தான் இருக்க வேண்டும். ஏனென்றால் சித்தர்கள் மட்டுமே எந்தப் பொருளையும் நேரடியாகக் கூறாமல் மறைமுகமாக உணர்த்துவர். நாம் ஒரு பொருளைக் குறிக்க ஒரு சொல்லைப் பயன்படுத்தினால் அவர்கள் அதே சொல்லை வேறு பொருளைக் குறிக்க பயன்படுத்துவர். இந்தப் பொருள் வேறுபாடுகளைக் காணும் முன்னர் ஒரு சிறுகதையினைப் பார்ப்போம்.

ஒரு ஊரில் ஒரு கொக்கு இருந்தது. அது ஒரு குறிப்பிட்ட பாறாங்கல்லின் மேல் அமர்ந்து இளைப்பாறிய பின் மலம் கழித்துவிட்டுச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தது. இவ்வாறு நாள்தோறும் தன்னை அசிங்கப் படுத்துவதைப் பொறுமையாகப் பார்த்துக் கொண்டிருந்த கல் ஒருநாள் பொறுமை இழந்து கொக்கிடம் கேட்டது ' ஏன் நாள்தோறும் என்மேல் வந்து அமர்ந்து என்னை அசிங்கப் படுத்துகிறாய்?. நான் உனக்கென்ன கெடுதல் செய்தேன்?. சிவனே என்று நான் ஒரு ஓரமாகத் தானே இருக்கிறேன். நீ வேண்டும் என்றே என்னைத் தேடிவந்து என் மேல் அமர்ந்து இளைப்பாறுவதுடன் அசிங்கம் வேறு செய்துவிட்டுப் போகிறாயே? இது ஏன்? உனக்கு இவ்வாறு நடந்து கொள்வதில் குற்ற உணர்ச்சி தோன்றவில்லையா?'. அதற்கு கொக்கு இறுமாப்புடன் பதில் சொன்னது ' நீ இயக்கம் இல்லாமல் ஒரே இடத்தில் கிடக்கிறாய். உன்னால் ஒரு பயனும் இல்லை. நான் அங்கிங்கென தன்னிச்சையாய் பறந்து திரிபவன். உன்னை விட உயர்ந்தவன் என்பதால் இதை நீ ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.' 

அதைக் கேட்ட கல் கடகட என்று சிரித்தது. பின்னர் சொன்னது ' அட முட்டாள் கொக்கே! நான் இயக்கமே இல்லாமல் கிடந்தாலும் இறைவனின் திருமேனி ஆகும் தகுதி பெற்றவன். எப்போதுமே பறந்து கொண்டிருந்தாலும் உனக்கு அந்தத் தகுதி இல்லை. நீ எத்துணை முறை என்னை மாசுபடுத்தினாலும் மழைநீரால் கழுவப்பட்டு மீண்டும் பொலிவுடன் நிற்பவன் நான். அகத்திலும் புறத்திலும் எப்போதும் அழுக்குகளைச் சுமந்துகொண்டு திரிபவன் நீ. இறைவனைப் போல நான் இயக்கமற்று இருக்க இயங்கித் திரிவதால் நீ ஒரு ஆன்மா ஆகிறாய். இயங்கிக் கொண்டிருக்கும் வரையில் தான் நீ ஓர் ஆன்மா. இயக்கம் நின்று விட்டால் எனது நிலையே உனக்கும். இந்த உண்மையைப் புரிந்துகொண்டால் என்னை ஏளனம் செய்யமாட்டாய்.' கல் சொன்ன பதிலைக் கேட்டு மெய்உணர்வு பெற்ற கொக்கு கல்லை வணங்கி விட்டு சென்றது. 

இந்தக் கதை உணர்த்தும் கருத்து என்ன?. கல் இயங்காத தன்மை உடையது ஆனாலும் அத்தகைய பண்புடையதே நம் இறைவன் ஆகிய தலைவன். பறவை இயங்கிக் கொண்டே இருக்கும் தன்மை கொண்டது ஆனாலும் அத்தகைய பண்புடையதே ஆன்மா ஆகும். இதுவே இப்பழமொழியின் கருத்து ஆகும். இந்த ஆன்மா அடிக்கடி இறைவனிடத்தில் தங்கி இளைப்பாறிவிட்டுச் செல்வதுடன் என்றும் இறைவனுக்குக் கட்டுப்பட்டது என்னும் உயரிய ஆன்மீகக் கருத்தை உணர்த்துவதே இப் பழமொழியின் நோக்கம் ஆகும். இனி சரியான பழமொழி இது தான்.

'கல் ஆனாலும் கணவன்; புள் ஆனாலும் புருசன்.'
(கணவன் = இறைவன்; தலைவன்; புள் = பறவை; புருசன் = ஆன்மா.)

(நன்றி: திருநெல்வேலி சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழக கையகராதி)

------------------------------------வாழ்க தமிழ்!---------------------------------------------