திங்கள், 12 அக்டோபர், 2009

மண்குதிரையை நம்பி



பழமொழி:
மண்குதிரையை நம்பி ஆற்றில் இறங்காதே.

தற்போதைய பொருள்:

இப் பழமொழிக்கு இதுவரை கூறப்பட்டு வந்த பொருள்விளக்கம் இதுதான்: ' மண்ணால் செய்த குதிரையினை நம்பி ஆற்றில் இறங்கவேண்டாம். ஏனென்றால் ஆற்றைக் கடக்கும் முன்னர் அக் குதிரை கரைந்து விடும்.' ஆனால் தற்போது ஒருசிலர் 'குதிரை'யை 'குதிர்' எனக் கொண்டு இவ்வாறு பொருள் கூறுகின்றனர் : ' ஆற்றில் காணப்படும் மண்மேடுகளை நம்பி ஆற்றில் இறங்கவேண்டாம். ஏனென்றால் அவை பொய்யானவை. காலை வைத்ததும் உள்ளே இழுத்துக் கொண்டுவிடும்.'

தவறுகள்:

மேற்காணும் இரண்டு விளக்கங்களுமே தவறானவை ஆகும். இது எவ்வாறு என்று பார்ப்போம். மண்குதிரையில் ஏறி ஆற்றில் இறங்க முடியுமா?. மண்குதிரை இயங்காத் தன்மை கொண்டது என்பதால் இக் கேள்விக்கான விடை 'முடியாது' என்பதே ஆகும். மண்குதிரையில் ஏறி ஆற்றில் இறங்கவே முடியாது என்ற நிலையில் இறங்கவேண்டாம் என்று அறிவுரை கூறுவது பயனற்ற வேடிக்கையான ஒரு செயலாகும். பயனற்ற கருத்துக்களைப் பெரியோர்கள் ஒருபோதும் கூறமாட்டார்கள் என்பதால் இவ் விளக்கம் தவறு என்பது பெறப்படுகிறது. அடுத்து இரண்டாவது கருத்தில் வரும் குதிர் என்ற சொல்லைப் பற்றிக் காண்போம். குதிர் என்றால் நெற்கூடு என்று பொருள். இச் சொல்லுக்கு இந்தப் பொருள் மட்டுமே அகராதிகளில் தரப்பட்டுள்ளது. மண்மேடு என்ற பொருள் வேண்டுமென்றே இட்டுக் கூறப்பட்ட ஒன்றாகும். குதிர் என்ற சொல்லுக்கு மண்மேடு என்ற பொருள் எவ்வகையிலும் பொருந்தாது. ஏனென்றால் நெற்கூடும் மண்மேடும் வேறுவேறு தன்மை கொண்டவை. தானியங்களைச் சேமித்து வைக்க உதவுகின்ற உயரமான கலமே குதிர் ஆகும். ஆனால் ஆற்றின் நடுவே காணப்படும் உயரமான மண்மேடுகள் எதையும் சேமிக்க உதவுவதில்லை. உயரமாக இருப்பதால் மட்டும் மண்மேடும் நெற்கூடும் ஒன்றாகி விட முடியாது.

அன்றியும் மேற்காணும் கருத்தில் சொல்வதைப் போல இந்த மண்மேடுகள் காலை வைத்தால் உள்ளே வாங்குவதுமில்லை. ஏனென்றால் இவை நன்கு செறிந்த மணலுடன் அடர்த்தியாகவே இருக்கும். இதன் காரணம் இந்த மண்மேடுகளில் புல், செடி, கொடி முதலான தாவரங்கள் வளரத் துவங்குவது தான். ஆற்றில் நடுநடுவே காணப்படும் இந்த மண்மேடுகளை 'ஆற்றிடைக் குறை' என்று அழைப்பர். இதற்கு நேரான செந்தமிழ்ச் சொல் 'துருத்தி' என்பதாகும். இச் சொல்லைப் பல சங்க இலக்கியங்களில் காணலாம். துருத்திக்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டு ஸ்ரீ ரங்கம் ஆகும். ஆம, காவிரி ஆற்றின் மிகப் பெரிய இடைக்குறை அதாவது மண்மேடே ஸ்ரீரங்கம் ஆகும். எட்டு மைல் நீளமும் நான்கு மைல் அகலமும் கொண்ட இந்தத் துருத்திக்கு இருபுறங்களிலும் ஆறு ஓடுகிறது. அருகில் உள்ள படம் இதனை நன்கு காட்டும். இதிலிருந்து ஆற்று நடுவில் உள்ள மண்மேட்டில் காலை வைத்தால் உள்வாங்கும் என்ற கருத்து தவறானது என்று தெளியலாம்.

அதுமட்டுமின்றி ஆற்றில் இறங்க விரும்பும் ஒருவர் ஆற்று நடுவில் உள்ள மண்மேட்டை நம்பியா இறங்குவார்?. ஒருபோதும் இல்லை. ஏனென்றால் தூரத்தில் இருக்கும் மண்மேடு இவருக்கு இக் கரையில் எவ்வகையிலும் உதவி செய்யப் போவதில்லை. எனவே ஆற்றில் இறங்கும்போது ஒவ்வொரு அடியாக ஆழம் பார்த்து இறங்குவாரே ஒழிய தூரத்தில் மண்மேடு தெரிகிறது உடனே ஓடிப்போய் விடலாம் என்று அவசர கதியில் இறங்கி சிக்கலில் மாட்டிக் கொள்வதில்லை. எனவே மண்மேட்டை நம்பி ஆற்றில் இறங்காதே என்று அறிவுரை கூறுவது பயனற்ற வேடிக்கையான செயலாகும். இத்தகைய பயனற்ற கருத்துக்களைப் பெரியோர்கள் கூறமாட்டார்கள் என்பதால் இக் கருத்து இட்டுக் கூறப்பட்டது என்பது பெறப்படுகிறது. இத் தவறுகளுக்கு எல்லாம் காரணம் ஒரு தூய தமிழ்ச் சொல்லை கொச்சை வழக்கெனத் தவறாகக் கருதி திருத்தியதே ஆகும். இனி சரியான சொல்லைப் பார்ப்போம்.

திருத்தம்:

இப் பழமொழியில் வரும் மண்குதிரை என்பது மங்குதிரை என வரவேண்டும். இதுவே திருத்தம் ஆகும். மங்குதிரையின் பொருளைக் கீழ்க்கண்டவாறு காணலாம்.

மங்குதிரை = மங்கு + திரை.

திரை என்றால் இங்கே அலை என்று பொருள். மங்குதல் என்றால் இங்கு ஒளி மழுங்குதல் என்று பொருள். (ஆதாரம்: கழகத் தமிழ்க் கையகராதி). மங்குதிரை என்னும் வினைத்தொகை ஒளி மழுங்கு அலைகள் என்ற பொருளில் கானல் நீரைக் குறிக்கும். இனி இப்பழமொழியின் சரியான பொருள் இதுதான்: கானல் நீரை நம்பி ஆற்று மணலில் இறங்காதே.

நிறுவுதல்:

மங்குதிரை என்னும் மூலச் சொல்லினை கொச்சை வடிவமாகக் கருதி மண்குதிரை எனத் திருத்தியது தான் இப் பழமொழியின் தவறான பொருள்கோளுக்குக் காரணமாகும். மங்குதிரை என்பது கானல்நீரினைக் குறிக்கும் ஒரு அருமையான சொல். கானல்நீரானது தூரத்தில் நீர்அலை வடிவத்தில் தெரிகின்ற ஒரு மாயத்தோற்றம் என்பதை நாம் அறிவோம். ஆனால் இத்தோற்றம் நிலையானதல்ல. மாறக்கூடியதே. இது எப்படி எங்கே எப்போது உருவாகிறது என்பதை அறிந்துகொண்டால் மங்குதிரை என்னும் சொல்லின் நயத்தினை நாம் நன்கு அறிந்துகொள்ள முடியும்.

கானல்நீர் தோன்றுவதற்கு முதற்காரணம் வெப்பம் ஆகும். நண்பகல் நேரத்தில் கதிரவனின் தெறுகதிர்கள் செங்குத்தாக வறண்ட மணல் பகுதிகளில் விழும்போது தான் இந்தக் கானல் நீர் உருவாகிறது. மணல்பரப்பின் மேற்பகுதி மிகவும் வெப்பமடையும் போது அந்த வெப்ப ஆற்றல் அலைவடிவம் பெற்று கதிர்வீசத் துவங்குகிறது. இந் நிலையில் தூரத்தில் உள்ள பொருட்களின் ஒளிக் கதிர்கள் இந்த அலைகளில் படும்போது அவை மழுங்குகின்றன. மழுங்கிய நிலையில் இந்த ஒளி அலைகள் நம் கண்களை அடைவதால் அப் பொருளுக்குக் கீழே அதன் நிழல் இருப்பதாக நமக்குத் தோன்றுகிறது. அதாவது எவ்வாறு ஒரு நீர்ப்பரப்பு ஒரு பொருளை தனக்குள் பிரதிபலிக்குமோ அதைப்போல இந்த மழுங்கிய ஒளி அலைகள் நமக்கு ஒரு மாய நிழலைக் காட்டுகிறது. அருகில் உள்ள படத்தைப் பாருங்கள். இதைக் காணும்போது அங்கே நீர் இருப்பது போன்ற ஒரு எண்ணம் நமக்குள் பிறக்கிறது இல்லையா?. இதுவே கானல் நீர் ஆகும். அதிக வெப்பமடைந்த தார்ச்சாலைகள் மற்றும் மணல் பரப்புக்களில் கானல்நீர் தோன்றும். கானல்நீர் பற்றிய மேலும் பல உண்மைகளைத் தெரிந்துகொள்ள  விக்கிபீடியா சென்று காணலாம்.

ஆற்றங்கரைகளில் பலவிதமான மரங்கள் வளர்ந்து நிழல் தருவதை நாம் கண்டிருக்கிறோம். எனவே தான் பழங்காலத்தில் (ஏன் இக்காலத்திலும் கூட) மக்கள் ஆற்றங்கரை ஓரமாகவே நடைப்பயணம் செய்து பிற ஊர்களுக்குச் செல்வர். இதனால் வெயிலின் கொடுமை தவிர்க்கப் படுவதுடன் ஆற்றின் அழகிய காட்சியினைக் கண்ட வண்ணம் பயணம் இனிதாக நடைபெறும். ஆனால் இயற்கைச் சூழ்நிலை எப்போதும் ஒரே மாதிரியாகவா இருக்கிறது?. பருவநிலை மாற்றங்களால் போதுமான மழை பெய்யாமல் போக பல ஆறுகள் நீர் முழுதும் வறண்டு வெறும் மணற்பரப்புக்களாகக் காட்சி அளிப்பதை நாம் காண்கிறோம். இந் நிலையில் ஆற்றங்கரை ஓரமாக நடைப்பயணம் செய்யும் மக்கள் வழியில் தாகமெடுத்தால் (தாம் கொண்டுவந்த நீர் முழுதும் தீர்ந்து போன நிலையில்) குடிப்பதற்கு நீரைத் தேடி ஏங்குவது இயல்பு. நீர்வேட்கை உடைய இவர்களது கண்களில் ஆற்றுமணலில் தோன்றிய இந்தக் கானல்நீர் கண்டிப்பாகப் படும். காரணம் ஆற்றுமணல் பகுதி தாழ்வாகவும் ஆற்றங்கரை பகுதி உயர்வாகவும் இருப்பதே. ஏற்கெனவே நீர்வேட்கையால் வருத்தமுற்று இருக்கும் இம் மக்கள் கானல்நீருக்கு எளிதில் ஏமாறுவர். கானல் நீரை உண்மையான நீரென்று நம்பி ஆற்று மணலில் இறங்கி நடப்பர். அதன்பின் அவர்களது நிலை என்னாகும்?. இல்லாத ஒரு நீருக்காக பொல்லாத வெயிலில் நடந்து நடந்து களைத்து உடல் வெம்பி ஏமாற்றத்தால் மனம் நொந்து .... அப்பப்பா! மிகப் பெரிய துன்பம் அது!.

இவ்வாறு கானல்நீரை நம்பி ஏமாந்து துன்பப் படக்கூடாது என்பதற்காகத் தான் பெரியோர்கள் இப் பழமொழியினைக் கூறியுள்ளனர். மணலில் இறங்கிய பின்னர் கானல்நீரினை நோக்கி நடக்கத்தானே செய்வர். அதனால் தான் ஆற்றுமணலில் நீர் இருப்பதுபோலத் தெரிந்தாலும் இறங்கவே வேண்டாம் என்கிறது இப் பழமொழி.

சரியான பழமொழி:

ங்குதிரையை நம்பி ஆற்றில் இறங்காதே.

........................வாழ்க தமிழ்!......................................

திங்கள், 5 அக்டோபர், 2009

மேனி என்றால் என்ன?

முன்னுரை:
மேனி என்ற சொல் சங்க காலத்தில் இருந்து இன்றுவரை பயன்படுத்தப் பட்டு வரும் பல சொற்களில் ஒன்று. ஆனால் இச் சொல்லுக்கு நாம் இன்று கொண்டிருக்கும் பொருளானது பல இலக்கியப் பாடல்களில் பொருந்தாத நிலை காணப்படுகின்றது. இது இச் சொல்லுக்கு புதிய பொருட்களும் இருக்கின்ற உண்மையினை நமக்குச் சுட்டிக் காட்டுவதாக உள்ளது. இச் சொல் குறிக்கும் புதிய பொருட்கள் என்னென்ன என்பதைப் பற்றி இக் கட்டுரையில் காணலாம்.

அகராதிப் பொருள்:

தமிழ் அகராதிகள் மேனி என்ற சொல்லுக்கு என்ன பொருள் கூறுகின்றன என்று கீழே காணலாம்.

சென்னை தமிழ்ப் பேரகராதி      : உடம்பு, வடிவம், நிறம்.
கழகத் தமிழ்க் கையகராதி        : உடம்பழகு, நிறம்.
சூடாமணி நிகண்டு              : வடிவம், நிறம்.

தற்போதைய பொருள்:

இக்காலத்தில் 'மேனி' என்ற சொல்லை உடல் என்னும் ஒரே ஒரு பொருளில் தான் பயன்படுத்துகின்றனர்.

சொல்பயன்பாடு:

மேனி என்ற சொல் எந்தெந்த மேல்கணக்கு மற்றும் கீழ்க்கணக்கு நூல்களில் பயின்று வந்துள்ளது என்பதைக் கீழே காணலாம்.

மேல்கணக்கு நூல்கள்:

அகநானூறு: பாடல்எண் - 42,75,98,156,161,206,217,222,229,237,270,278,333,337,398,169,174,381,69,95.
ஐங்குறுநூறு: பாடல்எண் - 38,41,65,158,174,176,217,221,388,471.
கலித்தொகை: பாடல்எண்- 102,108,13,131,143,35,40,91,58,42,35,117,124,121,41.
குறுந்தொகை: பாடல்எண்- 101,168,185,219,319,331,62,143,33.
நற்றிணை: பாடல்எண் - 8,10,128,134,141,166,251,301,320,324.
புறநானூறு: - 56,159,222,398. பரிபாடல்: பாடல் எண் - 1,4,7,8,12,13,15,20. திரட்டு: 2.
குறிஞ்சிப்பாட்டு: அடி எண் -2. மதுரைக்காஞ்சி - 707. நெடுநல்வாடை - 148.
பெரும்பாணாற்றுப்படை - 160. சிறுபாணாற்றுப்படை - 176. திருமுருகாற்றுப்படை - 19,144. பட்டினப்பாலை - 148.

கீழ்க்கணக்கு நூல்கள்:

திணைமாலை ஐம்பது: பாடல் எண் - 4,15,35,47. திணைமாலை நூற்றைம்பது: பாடல் எண் - 21.
கார் நாற்பது: பாடல் எண் - 10,16,18. கைந்நிலை: பாடல் எண் - 1,27.
நாலடியார்: பாடல் எண் - 317; ஐந்திணை ஐம்பது: பாடல் எண் - 8,15,30,45.
திருக்குறள்: பாடல் எண் - 1113,1182,1185,1189,1278. இன்னிலை: பாடல் எண் - 25. நான்மணிக்கடிகை: பாடல் எண் - 23.
களவழிநாற்பது: பாடல் எண் - 32. முதுமொழிக்காஞ்சி: பாடல் எண் - 86.
ஆசாரக்கோவை: பாடல் எண் - 77. பழமொழி நானூறு: பாடல் எண் - 137.

பொருள் பொருந்தாத இடங்கள்:

மேனி என்னும் சொல்லுக்குத் தற்கால அகராதிகள் காட்டுகின்ற பொருட்கள் எவையும் பொருந்தாத சில இலக்கியப் பாடல்களைக் கீழே காணலாம்.

நின் அம் கலுழ் மேனி பாஅய பசப்பே - குறு - 143
மாஅத்து அம் தளிர் அன்ன நன் மா மேனி பசப்ப - குறு -331
மேனி பசப்பது எவன்-கொல் அன்னாய் - ஐங்கு - 217
நன் மா மேனி பசப்ப - ஐங்கு -221
ஞாயிற்று முன்னர் இருள் போல மாய்ந்தது என் ஆய் இழை மேனி பசப்பு - கலி -42
மேனி மறைத்த பசலையள் ஆனாது - கலி -143
பசலை பாய்ந்த மேனியள் நெடிது நினைந்து - அகம் - 169
பழங்கண் கொண்ட பசலை மேனியள் - அகம் - 174
கொன்றை ஊழ்_உறு மலரின் பாழ் பட முற்றிய பசலை மேனி நோக்கி - அகம் - 398
வான் உயர் வெற்பன் வருவான்கொல் என் தோழி மேனி பசப்பு கெட - திணைமொ -4
முறி எழில் மேனி பசப்ப அருள் ஒழிந்து - திணைமொ -15
மணி எழில் மேனி மலர் பசப்பு ஊர - திணைமொ -47
அவர் தந்தார் என்னும் தகையால் இவர்தந்து என் மேனி மேல் ஊரும் பசப்பு - குறள் -1192

மேற்காணும் பாடல்களை நோக்கினால் மேனியானது பசப்பு, பசலை என்ற சொற்களுடன் தொடர்புற்று வந்துள்ளதை அறியலாம். இந்த பசப்பு, பசலை ஆகிய இரண்டு சொற்களும் கண்ணீரையே குறிக்கும் என்று பசப்பு என்றால் என்ன என்ற கட்டுரையில் முன்னர் ஆதாரங்களுடன் கண்டோம். ஆனால், மேனி என்ற சொல்லுக்கு தற்கால அகராதிகள் காட்டும் பொருட்களான உடல், வடிவம், நிறம் ஆகியவற்றில் ஒன்றுக்கு கூட அழுகையுடன் தொடர்பில்லை என்பதை நாம் அனைவரும் நன்கு அறிவோம். இதிலிருந்து இப் பாடல்களில் வரும் மேனி என்ற சொல்லானது அகராதிகள் காட்டும் பொருட்களைக் குறித்து வரவில்லை என்பது தெளிவாகிறது. என்றால், மேனி என்ற சொல் காட்டும் புதிய பொருட்கள் என்ன என்று கீழே காணலாம்.

மேனி - புதிய பொருட்கள்:

மேனி என்ற சொல் குறிக்கின்ற புதிய பொருட்கள் இரண்டாகும். அவை:-
ண் மற்றும் கண்ணிமை ஆகும்.

நிறுவுதல்:

மேனி என்ற சொல் கண் மற்றும் கண்ணிமை ஆகிய புதிய பொருட்களை எவ்வாறு குறிக்கும் என்று இங்கே ஆதாரங்களுடன் காணலாம்.

பொதுவாக ஒரு மனிதனின் குணநலன்களைப் பற்றி அறிய வேண்டுமானால், அவனது நண்பர்களைப் பற்றி அறிந்தால் போதும். அதைப்போல, ஒரு சொல்லின் உண்மையான பொருளைக் கண்டறிய இலக்கியங்களில் அதற்கு உவமையாகக் கூறப்படும் பிற பொருட்களின் தன்மைகளை அறிந்தால் போதும். அவ்வகையில், இலக்கியங்களில் மேனிக்கு உவமையாகக் கூறப்பட்டுள்ள பிற பொருட்களைப் பற்றி அறிந்துகொள்வதில் இருந்து மேனி என்ற சொல்லின் புதிய பொருளினை எளிதாக அறிந்துகொள்ளலாம்.  .

மேனியும் மாந்தளிரும்:

மாமரத்தின் புதிய இலைக்கொழுந்தாகிய மாந்தளிரானது நல்ல செம்பு வண்ணத்தில் இருக்கும். பெண்களுக்கு இந்த வண்ணம் மிகவும் பிடிக்கும் என்பதால் அவர்கள் தமது கண்களின் இமையினை மாந்தளிர் வண்ணத்தில் அதாவது செம்பு நிறத்தில் பூசி மகிழ்வர். இதைப் பற்றி ஏராளமான பாடல்கள் இலக்கியத்தில் உள்ளன என்றாலும் சில பாடல்களை மட்டுமே இங்கே விளக்கத்துடன் காணலாம்.

நோய் இன்று இயன்ற யாக்கையர் மாவின் அவிர் தளிர் புரையும் மேனியர் - திரு - 143
( நோயில்லாத உடலினராய் மாமரத்தின் இலைக்கொழுந்து போல் ஒளிரும் கண் இமை கொண்டவர்.......)

இப் பாடலில் வரும் மேனி என்பது உடலைக் குறிக்காது என்பது உறுதி. காரணம், யாக்கை என்ற சொல்லால் முன்னரே உடலைக் குறிப்பிட்டு விட்டதால், அடுத்து வரும் மேனி என்பது உடலைக் குறிக்காமல் இமையினையே குறித்தது என்க.

தேமா மேனி சில் வளை ஆயமொடு    - சிறு -176
( இனிக்கின்ற மாவின் தளிரன்ன இமையின் தோள்பகுதியில் சில வளைகள் அணிந்த தோழியருடன்.... )

மாவின் தளிர் ஏர் அன்ன மேனி - மது - 706
( மாவின் இலைக்கொழுந்து போல் அழகிய கண்ணிமை...)

தளிர் ஏர் மேனி தாய சுணங்கின் - நெடு -148
( மாந்தளிர் போன்ற அழகிய கண்ணிமையில் பூசப்பட்டிருந்த பூந்தாதுக்கள்......)

செம் தளிர் மேனியார் - பரி -8
( மாமரத்தின் சிவந்த இலைக்கொழுந்து போன்ற இமையுடையார்....)

மடி இலான் செல்வம் போல் மரன் நந்த அ செல்வம்
படி உண்பார் நுகர்ச்சி போல் பல் சினை மிஞிறு ஆர்ப்ப
மாயவள் மேனி போல் தளிர் ஈன அ மேனி
தாய சுணங்கு போல் தளிர் மிசை தாது உக - கலி - 35

( பொருள்: சோம்பல் அற்றவனிடம் சேரும் செல்வம் போல மாமரமானது பூத்துக் குலுங்க, அவனிடத்தே பிச்சை எடுத்து உண்பவரைப் போல வண்டுகள் அம் மரத்தின் பூந்தேனைக் கிளைதோறும் சென்று உண்ண, அம் மரத்தின் சிவந்த இலைக் கொழுந்துகளின் மேல் பூந்தாதுக்கள் சிந்தியிருந்த தோற்றமானது, பேரழகி ஒருத்தியின் செவ்வண்ணக் கண்ணிமையில் பூசப்பட்டிருந்த பூந்தாதுக்களைப் போலத் தோன்றியது.....)

மேனியும் இதர பொருட்களும்:

மை எழுதப்பட்டு அலங்கரிக்கப்பட்ட பெண்களின் கண் இமையினை மாந்தளிருடன் மட்டுமின்றி, பவளம், மணி, பொன், கதிரவன், மின்னல், விளக்கு, குறிஞ்சிப்பூ, காயாம்பூ, ,அசோக மரத்தளிர், பாம்பின் சட்டை, நெய் போன்ற பலவற்றுடனும் ஒப்பிட்டுப் பாடியுள்ளனர் புலவர்கள். இதைப் பற்றிய பாடல்களை விளக்கங்களுடன் கீழே காணலாம்.

தூசு உடை துகிர் மேனி - பட்டி -148
( முகத்திரை கொண்டு மூடிய செம்பவளம் போன்ற கண்ணிமை..... )

திரு மணி புரையும் மேனி மடவோள் - நற் -8
( அழகிய செம்மணியினை ஒத்த இமைகளை உடைய பெண்.....)

பகல் எரி சுடரின் மேனி சாயவும் - நற் -128
( பகலில் காய்கின்ற கதிரவனைப் போல ஒளிர்ந்த கண்ணிமைகள் வாடவும்.......)

குறிஞ்சி நாள்_மலர் புரையும் மேனி - நற் - 301
( குறிஞ்சிப் பூவின் இதழ் போன்ற கண்ணிமை ......)

பொன் போல் மேனி - குறு - 101
( பொன் போன்ற கண்ணிமை .....)

பொன் ஏர் மேனி நன் நலம் சிதைத்தோர் - குறு -319
( பொன் ஒத்த கண்ணிமை கொண்டவளின் அழகினைக் கெடுத்தவர்.....)

மாண உருக்கிய நன் பொன் மணி உறீஇ பேணி துடைத்து அன்ன மேனியாய் - கலி -17
( பொன் உருண்டைகளை நன்றாக உருக்கி, ஓடாதவண்ணம் பாதுகாத்து, ஒளிருமாறு தீட்டியதைப் போல மை பூசப்பட்ட கண் இமைகளை உடையவளே. ..)

உண்ண உருக்கிய வான் நெய் போல் மேனியள் - சிந்தா - 480
( உண்ணுவதற்காக உருக்கிய நெய்போல மஞ்சள்நிறத்தில் ஒளிரும் இமையினை உடையவள்....)

வை விரி மலர் புரையும் மேனியை - பரி - 1
( காயா மலரின் இதழ் போன்ற கண்ணிமையாள் ....)

செயலை இளம் தளிர் அன்ன நின் மேனி - கார் -16
( அசோக மரத்தின் இலைக்கொழுந்தினைப் போன்ற உனது கண்ணிமையானது.........)

உருவு கொண்ட மின்னே போல திருவில் இட்டுத் திகழ்தரு மேனியள் - மணி -6
( அச்சந்தரும் மின்னலைப் போல ஒளிருமாறு கண்ணிமையில் அழகிய மை அணிந்து......)

பொன்னின் ஒளி பூவின் வெறி சாந்து பொதி சீதம்
மின்னின் எழில் அன்னவள்-தன் மேனி ஒளி மான - கம்ப பால - 28
( பொன்னின் நிறமும் பூவின் மணமும் சந்தனத்தின் குளிர்ச்சியும் கொண்ட அவளது கண்ணிமையின் ஒளியானது மின்னலின் ஒளியினை ஒப்ப......)

அணங்கு அரவு உரித்த தோல் அனைய மேனியன் - சிந்தா -2009
( துன்பந்தருகின்ற பாம்பு உரித்த தோல் போன்ற இமையினை உடையவன். )

முதுமையால் இமைகளில் சுருக்கங்கள் அதிகமாகியதால், அது பார்ப்பதற்குப் பாம்புத் தோல் போலத் தோன்றுவதாகக் கூறுகிறார். 

பொழுது உணர்வு அரிய அ பொரு_இல் மா நகர்
தொழு தகை மடந்தையர் சுடர் விளக்கு என பழுது_அறு மேனியை - கம்ப பால -49
( மாலைப்பொழுது ஆகிவிட்டதை அறியும்வகையில் பெண்கள் தமது இல்லத்தில் ஏற்றுகின்ற சுடர்விளக்கு போல் ஒளிரக் கூடிய கண்ணிமைகளை.... )

தணி மலர் திருமகள் தங்கு மாளிகை
இணர் ஒளி பரப்பி நின்று இருள் துரப்பன
திணி சுடர் நெய் உடை தீ விளக்கமோ
மணி விளக்கு அல்லன மகளிர் மேனியே - கம்ப பால- 50

( தாமரைமேல் அமர்ந்த திருமகள் தங்கியிருப்பது போன்ற அழகிய மாளிகையின் இருளை விரட்டுவது போல எங்கும் ஒளிபாய்ச்சுவது நெய்யால் எரிகின்ற தீ விளக்கோ மாளிகையில் அலங்காரமாக வைக்கப்பட்டுள்ள மணிகளின் விளக்கோ அன்றி மகளிரின் இமையாகிய விளக்கோ அறிய முடியவில்லையே......)

இப் பாடலிலும் மகளிரின் கண்ணிமையினை ஒளிரும் விளக்காக உவமைப்படுத்துவதைப் பாருங்கள்.

மேனியும் கண்ணீரும்:

பசப்பு, பசலை போன்ற சொற்கள் கண்ணீரையே குறிக்கும் என்று பசலை என்றால் என்ன? என்ற கட்டுரையில் பல ஆதாரங்களுடன் கண்டோம். இச் சொற்களுடன் தொடர்புற்று மேனி என்ற சொல் பல பாடல்களில் பயின்று வந்துள்ளது. இதிலிருந்து மேனி என்ற சொல்லானது கண்ணீருடன் தொடர்புடைய உறுப்பான கண்ணையே குறிக்கும் என்பதைத் தெளியலாம். மேனி என்னும் சொல் கண் என்ற பொருளில் பயின்றுவருகின்ற சில பாடல்களை மட்டும் கீழே காணலாம்.

நின் அம் கலுழ் மேனி பாஅய பசப்பே - குறு - 143
( உனது அழகிய கண்களில் வடிகின்ற கண்ணீர்.......)

பயப்பு என் மேனியதுவே - குறு - 219
( எனது கண்களில் தோன்றிய கண்ணீர் ......) இதில் வரும் பயப்பு என்ற சொல்லும் பசப்பு என்ற சொல் போலவே கண்ணீரைக் குறிக்கும்.

மாஅத்து அம் தளிர் அன்ன நன் மா மேனி பசப்ப - குறு -331
( மாந்தளிர் போன்ற இமை கொண்ட கண்கள் கலங்கவும் .....)

மேனி பசப்பது எவன்-கொல் அன்னாய் - ஐங்கு - 217
( அன்னையே உன் கண்கள் அழுவது எதனால்?.....)

நன் மா மேனி பசப்ப - ஐங்கு -221
( நல்ல மாந்தளிர் போன்ற இமை கொண்ட கண்கள் கலங்கி அழ,,,,,,,,)

ஞாயிற்று முன்னர் இருள் போல மாய்ந்தது என் ஆய் இழை மேனி பசப்பு - கலி -42
( கதிரவனைக் கண்டதும் இடம்தெரியாமல் மறைகின்ற இருளினைப் போல என் காதலரைக் கண்டதும் எனது கண்ணில் இருந்த கண்ணீர் இடம் தெரியாமல் மறைந்துபோனது. )

இப் பாடலில் கதிரவனைக் காதலனுக்கும், இருளைக் கண்ணீருக்கும் உவமையாக்கி இருக்கிறார் புலவர்.

மேனி மறைத்த பசலையள் ஆனாது - கலி -143
( கண்களை மறைத்த கண்ணீர் நிற்காமல் ....)

தணி மருங்கு அறியாள் யாய் அழ மணி மருள் மேனி பொன் நிறம் கொளலே - அகம் -156
( வருத்தம் தணிகின்ற வழியேதும் அறியாதவளாய் அவள் தொடர்ந்து அழவும், செம்மணி போன்ற அழகிய இமை உடையாளின் கண்கள் சிவந்து செம்பொன் நிறம் கொண்டன......)

பசலை பாய்ந்த மேனியள் நெடிது நினைந்து - அகம் - 169
( கண்ணீர் வடிகின்ற கண்ணினள் நினைத்து நினைத்து .....)

பழங்கண் கொண்ட பசலை மேனியள் - அகம் - 174
( துன்பத்தால் உண்டான கண்ணீரை உடைய கண்ணினள்......)

தேன் இமிர் நறும் தார் வானவன் உடற்றிய ஒன்னா தெவ்வர் மன் எயில் போல
பெரும் பாழ் கொண்ட மேனியள் - அகம் - 381
( தேனீக்கள் ஒலிக்கின்ற ஒளிவீசும் மாலை அணிந்த வானவனுடன் போரிட்ட பகைவர்களின் கோட்டையினைப் போல மையணி சிதைந்து பாழ்பட்ட கண்ணிமை உடையவள்....)

கொன்றை ஊழ்_உறு மலரின் பாழ் பட முற்றிய பசலை மேனி நோக்கி - அகம் - 398
( கொன்றை மரத்தின் முதிர்ந்து முற்றிய மலரினைப் போல கண்ணீரால் பாழ்பட்ட இமையினைக் கண்டு.....)

பொய் சிதைக்கும் பொன் போலும் மேனியை - நான் -21
( காதலர் கூறும் பொய்யானது பொன் போன்ற கண்ணிமையின் அழகினைக் கெடுக்கும்.......)

செயலை இளம் தளிர் அன்ன நின் மேனி பயலை பழங்கண் கொள - கார் -16
( அசோக மரத்தின் இலைக்கொழுந்தினைப் போன்ற உனது கண்ணிமையானது கண்ணீரால் துன்பமடைய.........)

இப்பாடலில் வரும் பயலை என்பதும் பசலை போலவே கண்ணீரைக் குறிப்பதாகும்.

பிரிந்தவர் மேனி போல் புல்லென்ற வள்ளி பொருந்தினர் மேனி போல் பொற்ப - ஐந்-8
( காதலரைப் பிரிந்தவரின் கண்ணிமையைப் போலப் பூவின்றி வாடியிருந்த வள்ளிக் கொடியானது, காதலரைச் சேர்ந்தவரின் கண்ணிமையினைப் போல பூத்துக் குலுங்க.......)

வான் உயர் வெற்பன் வருவான்கொல் என் தோழி மேனி பசப்பு கெட - திணைமொ -4
( எனது கண்ணின் கண்ணீர் ஒழியுமாறு விண்ணைத் தொடும் மலைநாட்டவன் என்னிடம் வருவானோ சொல் என் தோழி..)

முறி எழில் மேனி பசப்ப அருள் ஒழிந்து - திணைமொ -15
( மாந்தளிர் போன்ற இமைகொண்ட கண்கள் கலங்க அருள் இன்றி........)

மணி எழில் மேனி மலர் பசப்பு ஊர - திணைமொ -47
( செம்மணி போன்ற இமைகொண்ட கண்களில் கண்ணீர் அரும்பி பெருக......)

அவர் தந்தார் என்னும் தகையால் இவர்தந்து என் மேனி மேல் ஊரும் பசப்பு - குறள் -1192
( காதலர் தந்தார் எனும் பெருமையினால் எனது கண்ணில் கண்ணீர் பெருகி வழிகின்றது.......)

உவக்காண் எம் காதலர் செல்வார் இவக்காண் என் மேனி பசப்பு ஊர்வது - குறள் -1195
( என் காதலர் என்னைவிட்டு அதோ செல்கின்றார். எனது கண்ணில் கண்ணீர் இதோ பெருகுகின்றது..)

நெருநற்று சென்றார் எம் காதலர் யாமும் எழு நாளேம் மேனி பசந்து - குறள் -1288
( நேற்று ஒருநாள்தான் காதலர் என்னைவிட்டுப் பிரிந்துசென்றார். நானோ ஒவ்வொருநாளும் கண்கலங்கி வாடுகிறேன். )

ஊர் தரும் மேனி பசப்பு - கைந் -27
( கண்ணில் கண்ணீர் பெருகி வழியும் )

பசந்த மேனியள் படர் உறு மாலையின் - சிலம்பு-8
( அழுத கண்ணினளாய் துன்பமுற்ற மாலைப் பொழுதில்.)

பசந்த மேனியள் படர் நோய் உற்று - சிலம்பு -13
( அழுத கண்ணினள் துன்பமுற்று......)

தம் பொன் மேனி திமிர்ந்த தண் சாந்தமும் - சிந்தா -128
( பொன்போலத் தோன்றுமாறு கண்ணிமையில் பூசிய சந்தனக் குழம்பும்....)

நான நீரில் கலந்து நலம் கொள் பூம் பட்டு ஒளிப்ப
மேனி தோன்ற விளங்கி வெளிப்பட்டதற்கு நாணி
மான மகளிர் போல மணி மேகலைகள் பேசா
தானம் தழுவி கிடப்ப செல்வோள் தன்மை காண்-மின் - சிந்தா - 923

( பூப் போன்ற பட்டுத்துணியால் மூடப்பட்டிருந்த கண்ணிமையில் வாசனை கலந்த வண்ண மையினைப் பூசும்போது வெளிப்பட்டுத் தோன்றியதால், வெட்கப்படும் பெண் போல, நெற்றியில் அணிந்திருந்த மணிமேகலையானது அசையாமல் ஒலிக்காமல் இருக்கும்வண்ணம் நடந்து செல்வாளைப் பாருங்கள்.....)

முடிவுரை:

இதுவரை கண்டதில் இருந்து மேனி என்னும் சொல் கண் மற்றும் கண்ணிமை ஆகிய புதிய பொருட்களையும் என்பது உறுதியாகிறது. கண்ணும் கண்ணிமையும் ஒரே இடத்தில் இருப்பதால் மேனி என்ற சொல் கண்ணையும் இடவாகுபெயராகக் கண்ணிமையினையும் குறிக்கப் பயன்படலாயிற்று. பொதுவாக அலங்கரிக்கப்படாத கண்ணிமையின் வண்ணமும் உடலின் வண்ணமும் ஒன்றாக இருப்பது இயல்புதான். இப்படி இயல்பான உடல் வண்ணத்தில் இருந்து வேறுபடுத்திக் காட்டி அழகு செய்யவே கண்ணிமையில் மை எழுதினர். அப்படி மை எழுதிய கண்ணிமைகளின் மேல் முகத்திரை கொண்டு மூடியவாறு இருப்பதே பெண்களின் பொதுவழக்காகும். ஆனால் பெண்களில் ஒரு பிரிவினரான 'மேனிமினுக்கி' என்பவர்கள் மட்டும் இதற்கு விதிவிலக்காகும். இவர்களைப் பற்றிக் கீழே பார்ப்போம்.

பொதுவாக மினுக்குதல் என்பது மின்னல் போல ஒளிர்தல் என்ற பொருளைத் தருவது. பெண்கள் தமது மையுண்ட கண்ணிமைகளை மூடித் திறக்கும்போது மின்னல் வெட்டுவதைப் போல ஒளிர்ந்து மறையும். கண்ணிமைகளில் இருந்து தோன்றும் இந்த மின்னலின் ஒளியினை முகபடாம் கொண்டு மூடி மறைக்காவிட்டால் அது ஆடவர் கண்களில் பட்டு அவர்களது மனதைக் கொள்ளையடித்து விடும். இவ்வாறு ஆடவர்களின் மனதினைத் தனது கண்ணிமையின் ஒளியினால் கவர்ந்து அவர்களிடம் இருந்து பணத்தைப் பறிப்பவர்களே மேனிமினுக்கிகள் ஆவர். இவர்களையே பொருட்பெண்டிர் என்று வள்ளுவர் குறிப்பிடுகிறார்.

வெள்ளி, 2 அக்டோபர், 2009

சனி நீராடு


பாடல்:

சனி நீராடு.

தற்போதைய பொருள்:

அவ்வையார் இயற்றிய ஆத்திச்சூடியில் உயிர்மெய் வருக்கத்தில் வரும் இப்பாடலுக்குப் பலவிதமான கருத்துக்கள் கூறப்படுகின்றன. நாள்தோறும் செய்கிறோமோ இல்லையோ வாரத்தில் ஒருநாளாக சனிக்கிழமை அன்று கண்டிப்பாக தலைக்கு எண்ணை தேய்த்துக் குளிக்க வேண்டும் என்பதே இப் பாடலுக்குக் கூறப்படும் பெருவாரியான கருத்து ஆகும். ஒருசிலர் சனி என்பதற்கு மந்தமாக நடக்கிற அல்லது மெதுவாக ஓடுகிற என்று பொருள் கொண்டு மெல்ல ஓடும் ஆற்று நீரில் குளிக்க வேண்டும் என்று கருத்து கூறுகின்றனர். இன்னும் ஒருசிலர் சனி என்பதற்கு குளிர்ச்சி என்று பொருள் கொண்டு குளிர்ந்த நீரில் குளிக்கவேண்டும் என்று கருத்து உரைக்கின்றனர். இம் மூன்று கருத்துக்களில் எது சரி எது தவறு என்று காண்பதே இக் கட்டுரையின் நோக்கமாகும்.

தவறுகள்:

ஆராய்ந்து பார்த்ததில் மேற்காணும் மூன்று கருத்துக்களுமே பொருந்தாது என்றே தோன்றுகிறது. இது எவ்வாறு என்று காண்போம். சனி என்பதற்கு சனிக்கிழமை என்று பொருள் கொண்டாலும் எண்ணைக் குளியல் போடவேண்டும் என்று ஔவையார் கூறவில்லையே; வெறுமனே குளிக்கவேண்டும் என்று தானே சொல்லி இருக்கிறார். இதிலிருந்து எண்ணைக் குளியல் என்பது இட்டு சேர்க்கப் பட்டுள்ளது என்பது தெளிவு. வெறுமனே குளிக்கவேண்டும் என்று எடுத்துக் கொண்டாலும் பொருள் பொருத்தமற்றதாகவே தோன்றுகிறது. ஏனென்றால் சனிக்கிழமை அல்லாத மற்ற கிழமைகளில் குளிக்க வேண்டிய கட்டாயம் இல்லை என்றல்லவா பொருள் தொனிக்கிறது?. அவ்வைப் பிராட்டியார் இப்படி ஒரு தவறான வழிநடத்தலை மக்களுக்குக் கூறி இருக்க முடியாது என்பதால் சனி என்பது சனிக்கிழமையினைக் குறிக்காது என்பது தெளிவாகிறது.

சனி என்பதற்கு மந்தம் என்ற பொருள் இங்கே பொருந்துமா என்றால் பொருந்தாது. அப்படி ஒரு பொருள் அச் சொல்லுக்கு எந்த அகராதியிலும் கூறப்பட வில்லை என்பது ஒருபுறம் இருக்க மந்தமாக ஓடுகிற ஆற்று நீரில் குளித்தல் என்பது நடைமுறைக்கு இயலாத ஒரு செயலும் ஆகும். ஏனென்றால் ஆற்று நீரில் குளிக்க வேண்டும் என்றால் ஆற்றில் நன்கு நீர் ஓடவேண்டும்; அத்துடன் ஆறு ஓடுகிற ஊரில் வாழவேண்டும். இந்த இரண்டும் எப்போதும் எல்லோருக்கும் சாத்தியம் ஆவதில்லை என்பது நடைமுறை உண்மை. நடைமுறைக்குச் சாத்தியமில்லாத ஒரு கருத்தை அவ்வையார் கூறமாட்டார் என்பதால் சனி என்பதற்கு மந்தம் என்ற பொருளும் இங்கு பொருந்தாது என்பது தெளிவு.

அடுத்து சனி என்பதற்கு குளிர்ச்சி என்ற பொருள் எந்த அகராதியிலும் காணப்படவில்லை. அத்துடன் குளிர்ந்த நீரில் குளிப்பதோ வெந்நீரில் குளிப்பதோ அவரவர் உடல்நலத்தைப் பொறுத்தது ஆகும். எனவே குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும் என்று பொத்தாம் பொதுவாகக் கூறுவது தவறாகும். அவ்வையார் போன்ற அறிவுடைப் பெருமக்கள் இத்தகைய தவறினைச் செய்ய மாட்டார்கள் என்பதால் இதுவும் தவறான விளக்கம் என்பது பெறப்படுகிறது. இந்தப் பொருள் தவறுகளுக்கான காரணம் ஒரு எழுத்துப் பிழை மட்டுமே. அதைப் பற்றிக் கீழே காணலாம்.

திருத்தம்:

சனி என்னும் சொல் அசனி என்று வரவேண்டும். சொல்லின் முதலில் உள்ள 'அ' என்னும் எழுத்து விடுபட்டுப் போனமையால் தான் இவ்வளவு பொருள் குழப்பங்களும் நேர்ந்தது. அசனி என்ற சொல்லுக்குப் பல பொருட்கள் உண்டென்றாலும் இச் சொல் இங்கு சாம்பிராணி இலையினைக் குறிக்கும். சான்று: கழகத் தமிழ்க் கையகராதி. இனி இப் பாடலின் சரியான பொருள் இது தான்: சாம்பிராணி இலைகள் இட்ட நீரில் (நாள்தோறும்) குளிக்க வேண்டும்.

நிறுவுதல்:


முதலில் சாம்பிராணி இலைகளைப் பற்றி இங்கே காணலாம். சாம்பிராணிச் செடியானது சிறிய செடியாக எளிதில் உடையும் தண்டுடன் இருக்கும். இதன் இலைகள் வெளிர்பச்சையாக வெற்றிலை வடிவத்தில் இருக்கும். இலை இரண்டு மில்லிமீட்டர் கனம் உள்ளதாக இருக்கும். இலையின் மேலும், கீழும் நுண்ணிய துணை இலைகள் படர்ந்திருக்கும். இந்த இலையைக் கசக்கினால் நல்ல வாசனை வரும். இந்தியா முழுவதும் குறிப்பாக ராஜஸ்தான், தென்னிந்தியாவிலும், காடுகளிலும் வளர்கிறது. வீடுகளிலும் விரும்பி மருந்திற்காக வளர்க்கப்படுகிறது. சதைப்பற்று மிக்க, மணமிக்க காம்புகளையுடைய சிறிய புதர்ச்செடி இது.

இதன் இலைகள் மருத்துவத்தில் அதிகம் பயன்படுகின்றன. கை வைத்தியமாகவும், மக்களால் பயன்படுத்தப்படுகிறது. பித்தப்பை கல் உண்டாவதைத் தடுக்கும் குணம் கொண்டது. தசைகள் சுருங்குவதைத் தடுக்கும். நாள்பட்ட இருமல், அஜீரணம், வயிறு சம்பந்தப்பட்ட நோய், இளைப்பு நோய்களுக்கு நல்ல மருந்தாக இலைச்சாறு பயன் தருகிறது. கண் அழற்சிக்கு இதன் சாறு மேல் பூச்சாக தடவ பயன்படும். மருத்துவத் துறையில் இது நரம்புகளுக்குச் சத்து மருந்தாகிறது. மனக் கோளாறுகளைச் சரி செய்யவும், சிறுநீரை எளிதில் வெளிக் கொணரவும் பரிந்துரைக்கப்படுகிறது. இரத்தத்தை சுத்தப்படுத்தும் தாவரமாகவும் கருதப்படுகிறது. தேமல் உள்ள இடங்களில் காலையும், மாலையும் வெந்நீரால் கழுவிச் சுத்தம் செய்து அதன் மேல் சாம்பிராணி இலைச் சாற்றைத் தேய்த்து வந்தால் தேமல் மறையும். தலைவலி தோன்றிய நேரத்தில் சாம்பிராணி இலையைக் கசக்கி அதன் சாறை நெற்றிப் பொட்டில் கனமாகப் பூசி வந்தால் தலைவலி குணமாகும். (நன்றி: தமிழ்வாணன்.காம்.)

இவ்வளவு மருத்துவ குணங்கள் கொண்ட சாம்பிராணி இலைகளை நீரில் போட்டு ஊறவைத்துக் குளித்தால் சலதோசம், இருமல், சளி, தலைவலி ஆகிய நோய்கள் அண்டாது என்பதுடன் குளித்தபின் நல்ல வாசனையாகவும் இருக்கும். மேலும் தேமல் போன்ற தோல் நோய்களும் குணமாகும் என்பதால் தான் அவ்வையார் சாம்பிராணி இலைகளை ஊறப்போட்ட நீரில் நாள்தோறும் குளிக்க வேண்டும் என்று அறிவுரை கூறுகிறார். சாம்பிராணி இலைகள் அடித்தட்டு மக்களாலும் வாங்கப் படக்கூடியது என்பது கொசுறு செய்தி.

சரியான பாடல்:

சனி நீராடு.

...................................................................................