திங்கள், 21 மார்ச், 2011

தோள் என்றால் என்ன?


முன்னுரை:

தோள் என்னும் சொல் சங்க காலம் தொட்டு இன்றுவரையிலும் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வரும் பல சொற்களுள் ஒன்றாகும். இச் சொல்லுக்குச் சில பொருட்களை தற்கால அகராதிகள் கூறி இருந்தாலும் அப் பொருட்கள் பல இடங்களில் குறிப்பாக பெண்களைப் பொருத்த மட்டில் பொருந்தாத நிலையே காணப்படுகிறது. இது இச் சொல்லுக்கு வேறு சில பொருட்களும் உள்ள நிலையினையே எடுத்துக் காட்டுகிறது.  இக் கட்டுரையில் இச் சொல் குறிக்கும் வேறு பொருட்களைப் பற்றிக் காணலாம்.

தற்போதைய பொருட்கள்:

தோள் என்னும் சொல்லுக்குத் தற்கால அகராதிகள் கூறும் பொருட்கள் கீழே தரப்பட்டுள்ளன.

1. புயம்          2. துளை             3. கை.

மூன்றுவிதமான பொருட்களை அகராதிகள் கூறினாலும் தற்காலத்தில் மக்களின் பயன்பாட்டில் உள்ளது என்னவோ 'புயம்' மட்டுமே.

அகராதிப் பொருட்கள் பொருந்தா இடங்கள்:

மேற்காணும் அகராதிப் பொருட்களில் ஏதேனும் ஒரு பொருளாவது கீழ்க்காணும் பாடல்களில் பொருந்துகின்றதா என்று பார்ப்போம்.

தோளும் பசப்பும்:

பெண்களின் தோளுடன் பசப்பு / பசலையினைத் தொடர்புறுத்தி பல பாடல்கள் உள்ளன. அவற்றில் சில மட்டும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

மென்தோள் பசப்பது எவன்கொல் அன்னாய் - ஐங்கு.-28
மெல் இறை பணைத்தோள் பசலை தீர - ஐங்கு.-459
வேய் புரை மெல் தோள் பசலையும் - கலி.-39
தாம் பசந்தன என் தடமென் தோளே - குறு.-121

மேற்காணும் பாடல்களில் தோளானது பசக்கும் தன்மை உடையது என்னும் கருத்து கூறப்படுகிறது. இப்பாடல்களில் வரும் தோள் என்பதற்கு புயம் என்றும் பசப்பு / பசலை என்பதற்கு தேமல் என்றும் பொருள்கொண்டு புஜத்தில் தேமல் உண்டானது என்று விளக்கம் கொள்கின்றனர். இவ் விளக்கம் பொருந்துமா என்றால் இல்லை. காரணம், பசத்தல் என்றால் அழுதல், நீர் வடிதல் என்ற பொருட்களே பொருந்தும் என்று பசப்பு என்றால் என்ன என்ற ஆய்வுக் கட்டுரையில் ஏற்கெனவே நிரூபிக்கப்பட்டுள்ளது. அகராதிகள் கூறுகின்ற மூன்று பொருட்களான புஜத்திற்கோ கைக்கோ துளைக்கோ அழுகின்ற அல்லது நீர் வடியும் தன்மை இல்லை என்பதை நாம் நன்கு அறிவோம். ஆக மேற்காணும் பாடல்களில் வரும் தோள் என்ற பெயர்ச்சொல் அகராதிகள் கூறும் பொருட்களில் எதையும் குறிக்கவில்லை என்பது தெளிவு.

தோளும் புணையும்:

பெண்களின் தோளினை நீரின் மேல் மிதந்து செல்ல உதவுகின்ற புணை அதாவது தெப்பத்துடன் ஒப்பிட்டுப் பல பாடல்கள் உள்ளன. அவற்றில் சிலவற்றை மட்டும் இங்கே காணலாம்.

எம்மொடு கொண்மோ எம் தோள் புரை புணையே - ஐங்கு.-78
முழங்குநீர்ப் புணை என அமைந்த நின் தடமென் தோள் - கலி.-56

மேற்காணும் பாடல்களில் தோளானது தெப்ப (புணை) வடிவம் கொண்டது என்னும் கருத்து கூறப்படுகிறது. தெப்பம் என்பது நீள்வட்ட வடிவில் அமைந்த ஒருவகையான நீர் ஊர்தி ஆகும். அகராதிகள் கூறும் மூவகைப் பொருட்களில் (புயம், கை, துளை) எதுவும் நீள்வட்ட வடிவில் இல்லை என்பது நாம் அறிந்த உண்மையாகும். ஆக மேற்காணும் பாடல்களில் வரும் தோள் என்ற பெயர்ச்சொல்லானது அகராதிகள் கூறும் பொருட்களில் எதையும் குறிக்கவில்லை என்பது தெளிவு.

தோளும் அளறும்:

வரைவில் மகளிராகிய பெண்களின் தோள்களை அளற்றுடன் உவமைப்படுத்திக் கீழ்க்காணும் குறளில் கூறுகிறார் வள்ளுவர்.

வரைவிலா மாணிழையார் மென்தோள் புரையிலாப்
பூரியர்கள் ஆழும் அளறு. - குறள் - 919

அளறு என்பது சேறுநிறைந்த புதைகுழியினைக் குறிப்பதாகும். அகராதிகள் கூறும் பொருட்களான புஜம், கை, துளை ஆகிய எவற்றுக்குமே அளற்றின் பண்புகள் இல்லையாதலால் அவற்றை அளற்றுடன் ஒப்பிட இயலாது. ஆனால், வள்ளுவரோ தோளினை அளற்றுடன் ஒப்பிட்டு இருக்கிறார். இதிலிருந்து, தோள் என்பதற்கு அகராதிப் பொருட்கள் நீங்கலான புதிய பொருள் உண்டு என்பது உறுதியாகிறது.

புதிய பொருட்கள்:

தோள் என்னும் பெயர்ச்சொல் குறிக்கும் புதிய பொருள்கள்:

கண், கண்ணிமை.

நிறுவுதல்:

தோள் என்னும் சொல்லானது எவ்வாறு கண் / கண்ணிமையைக் குறிக்கும் என்பதை இங்கே பார்ப்போம். உடல் உறுப்புக்களில் கண்விழிக்கு சில சிறப்புப் பண்புகள் உண்டு. அவை: கலங்கி நீர்வார்க்கும் பண்பு, மையிடப்படும் பண்பு ஆகியன. இந்தப் பண்புகளை விளக்கும் சில பாடல்களைக் கீழே காணலாம்.

கலங்கி நீர்வார்க்கும் (அழும்) பண்பு:

பெண்களின் தோள் ஆகிய கண்கள் கலங்கி நீர்வார்ப்பதனைப் பற்றிக் கூறுகின்ற ஏராளமான பாடல்களில் சில பாடல்வரிகள் மட்டும் சான்றாகக் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

மென்தோள் பசப்பது எவன்கொல் அன்னாய் - ஐங்கு.-28
மெல் இறை பணைத்தோள் பசலை தீர - ஐங்கு.-459
வேய் புரை மெல் தோள் பசலையும் - கலி.-39
திருந்து இழை பணைத்தோள் நெகிழ - ஐங்கு-39
நேர் இறைப் பணைத்தோள் நெகிழ - ஐங்கு-239
வீங்கிறைப் பணைத்தோள் நெகிழச் சேய்நாட்டு - அக.-59

மேற்கண்ட பாடல்களில் வரும் 'தோள் பசத்தல்' மற்றும் 'தோள் நெகிழ்தல்' ஆகியவற்றுக்குக் 'கண் கலங்கி அழுதல்' என்பதே சரியான பொருளாகும். காரணம், பசலை / பசப்பு என்பது அழுகையினைக் குறிக்கும் என்று பசலை என்றால் என்ன என்ற ஆய்வுக் கட்டுரையில் முன்னர் விரிவாகக் கண்டுள்ளோம். அழுகையுடன் தொடர்புடைய உறுப்பு கண்ணே என்பதால் இப்பாடல்களில் வரும் தோள் என்பது கண்ணையே குறிப்பதாயிற்று.

மையிடப்படும் பண்பு:

பெண்கள் தமது தோள் ஆகிய கண்களின் விளிம்பிலும் கண்ணிமைகளிலும் மைதீட்டி அழகுசெய்வது வழக்கமே. இதைப்பற்றிக் கூறுகின்ற சில பாடல்வரிகள் கீழே தரப்பட்டுள்ளன.

என் தோள் எழுதிய தொய்யிலும் - கலி.-18
எல்லா நல் தோள் இழைத்த கரும்புக்கு நீ கூறு - கலி.-64
தெரி வேய்த்தோள் கரும்பெழுதி தொய்யில் - கலி.-76
நடாக்கரும்பு அமன்ற தோளாரைக் காணின் - கலி.-112
பெரும் தோள் தொய்யில் வரித்தும் - அக.-389
கரும்புடைப் பணைத்தோள் நோக்கியும் - நற்.-298

இப்பாடல்களில் வரும் கரும்பு, தொய்யில் ஆகியவை மைகொண்டு வரையப்பட்ட கோலங்களைக் குறிக்கும். கரும்பு என்பது கருமைகொண்டு கண்விளிம்பில் பூசுவதையும் தொய்யில் என்பது வண்ணமை கொண்டு இமைகளில் பூசுவதையும் குறிக்கப் பெரிதும் பயன்படுத்தப் பட்டுள்ளது.

தோளுக்கான உவமைகள்:

தமிழ் இலக்கியத்தில் உவமையணி என்ற ஒன்று மட்டும் இல்லாது போயிருந்தால், பல தமிழ்ச் சொற்களுக்குச் சரியான பொருளை நாம் அறிந்திருக்க முடியாது. இளைய தலைமுறையினர் தமிழ்ச் சொற்களுக்கான பொருளைச் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும் என்ற உயர்ந்த நோக்கில் சங்கப் புலவர்கள் ஒவ்வொரு சொல்லுக்கும் பல அருமையான உவமைகளைக் கூறி விளக்க முயன்றுள்ளனர். அவ்வகையில், தோள் என்ற சொல்லுக்கான பொருளினைச் சரியாகப் புரிந்துகொள்ளும் வகையில், அதனைப் பல எளிமையான உவமைப் பொருள்களுடன் ஒப்பிட்டுக் கூறியுள்ளனர். அவற்றை ஈண்டு விளக்கமாகக் காண்போம்.

தோளும் மூங்கிலும்:

பெண்களின் தோள் ஆகிய கண்களை மூங்கிலுடன் ஒப்பிட்டு ஏராளமான பாடல்களில் புலவர்கள் பாடியுள்ளனர். அவற்றில் சிலவற்றை மட்டும் இங்கே காணலாம்.

வேய்மருள் பணைத்தோள் - ஐங்கு.-318, நற்.-85,188
வேய் எனத் திரண்ட தோள் - கலி.-57
வேயின் திரண்ட தோள் - பழமொழிநானூறு - 32
வேய்புரை பணைத்தோள் - அக.-47

இப் பாடல்களில் பெண்களின் தோளினைக் குறிப்பிடுமிடத்து, பணை (பெருத்த) என்றும் திரண்ட என்றும் அடைகொடுத்திருப்பதால், இவை மூங்கிலின் தண்டுப்பகுதியினைக் குறிக்கவில்லை என்பது தெளிவாகிறது. மாறாக, மூங்கிலின் காய்கள் பெருத்துத் திரண்டு கூரிய முனையுடன் இருப்பதால், இவற்றைப் பெண்களின் உருண்டு திரண்டு மையுண்ட கண்களுக்கு உவமையாக்கிப் பாடினர் புலவர். அருகில் மூங்கில் காயின் படம் காட்டப்பட்டுள்ளது.

தோளும் புணையும்:

பெண்களின் தோள் ஆகிய கண்களை புணையுடன் ஒப்பிட்டும் ஏராளமான பாடல்களில் புலவர்கள் பாடியுள்ளனர். அவற்றில் சிலவற்றை மட்டும் இங்கே காணலாம்.

எம்மொடு கொண்மோ எம் தோள் புரை புணையே - ஐங்கு.-78
முழங்குநீர்ப் புணை என அமைந்த நின் தடமென் தோள் - கலி.-56
புனல்புணை அன்ன சாயிறைப் பணைத்தோள் - குறு.-168

புணை' என்ற சொல் நீர்நிலைகளில் பயணம் செய்ய உதவுகின்ற நீள்வட்ட வடிவிலான மரக்கலனைக் குறிக்கும். அருகில் உள்ள படம் ஒருவகையான புணையைக் காட்டுகிறது. புணையின் வடிவத்தைப் போலவே கண்களும் நீள்வட்ட வடிவில் அதேசமயம் முனைகளில் கூராக உள்ளதால் கண்களை புணையின் வடிவத்திற்கு ஒப்பிட்டு பாடல்களில் கூறியுள்ளனர். புணையும் கண்களைப் போலவே நீருடன் தொடர்புடையவை என்பது இங்கே குறிப்பிட்டுச் சொல்லத்தக்கதாகும்.

தண்ணீரில் தத்தளிக்கும் ஓடத்தைப் போல்
கண்ணீரில் தத்தளிக்கின்றன
காதலனைக் காணாத
வேதனையில் கண்கள்.

எங்கோ எப்போதோ எழுதிய இக்கவிதை இந்த இடத்தில் சரியாகப் பொருந்துகிறது அல்லவா?

தோளும் அளறும்:

வரைவில் மகளிரின் கண்களை அளற்றுடன் ஒப்பிட்டுக் கீழ்க்காணும் குறளில் கூறுவார் வள்ளுவர்.

வரைவிலா மாணிழையார் மென்தோள் புரையிலாப்
பூரியர்கள் ஆழும் அளறு. - குறள் - 919

அளறு என்பது சேறுநிறைந்த புதைகுழியினைக் குறிப்பதாகும். இதில் விழுந்தவர்கள் மீண்டெழ முடியாமல் புதைந்து காணாமல் போய்விடுவர். அதைப்போல, வரைவில் மகளிரின் கண்களைக் கண்டு மனதைப் பறிகொடுத்தவர்கள் மீண்டுவர முடியாமல் அதில் சிக்குண்டு அழிந்துவிடுவர் என்று எச்சரிக்கிறார் வள்ளுவர். புதைகுழியும் கண்ணும் செயலில் மட்டுமின்றி வடிவ அமைப்பிலும் ஒத்திருப்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

தோளும் தோகையும்:

பெண்களின் மையுண்ட கண்ணிமைகளை மயிலின் தோகையில் உள்ள கண்களுடன் ஒப்பிட்டுப் பாடுவது புலவர்களின் வழக்கமே. அதைப்போல, பெண்களின் தோள் ஆகிய கண்ணிமைகளையும் மயில் தோகையுடன் ஒப்பிட்டு கீழ்க்காணும் அகநானூற்றுப் பாடல் கூறுகிறது.

களிமயில் கலாவத்து அன்ன தோளே - அக.-152

இப்பாடலில் வரும் தோள் என்பதற்கு புஜம் அல்லது கை என்று பொருள்கொண்டால், உவமை பொருந்தாமல் போவதை அறியலாம். காரணம், மயில் தோகைக்கும் பெண்களின் புஜம் அல்லது கைக்கும் பொருத்தமான பண்புகள் இல்லை. மயில்தோகையில் உள்ள கண்போல கண்ணிமைகளின்மேல் பல வண்ண மைகொண்டு வரைந்திருந்ததால், அதனை இப்பாடலில் உவமையாகக் காட்டினார்.

தோளும் செய்தியும்:

விருப்பம் கொண்ட ஆணும் பெண்ணும் கண்களால் பேசிக் காதல் வளர்ப்பது உலகறிந்த செய்தி. 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் காதல் என்று அர்த்தம்' என்று கவிஞர் வைரமுத்துவும் எழுதியிருக்கிறார். காதலை மட்டுமல்ல அனைத்து உணர்வுகளையும் அப்படியே காட்டிக்கொடுத்துவிட வல்லவை கண்கள்.

அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ் ஆர்வலர்
புன்கணீர் பூசல் தரும். - குறள் 71.

உண்மையான அன்பினைப் பூட்டிவைக்க முடியாது; அன்புடையோர் அழும்போது அவரது கண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டும் என்று கூறுகிறார் வள்ளுவர். இப்பாடலில் வரும் பூசல் என்பது ஆர்ப்பரித்தல் என்ற பொருளில் வந்துள்ளது. இதே பொருளில் கீழ்க்காணும் இடத்திலும் கூறுகிறார்.

பாடுபெறுதியோ நெஞ்சே கொடியார்க்கு என்
வாடுதோள் பூசல் உரைத்து. - குறள் - 1237

இப்பாடலில் வரும் தோள் பூசல் என்பது கண்களில் இருந்து ஆர்ப்பரித்துக் கொட்டுகின்ற கண்ணீரைக் குறிக்கும்.

தணந்தமை சால அறிவிப்ப போலும்
மணந்தநாள் வீங்கிய தோள். - குறள் - 1233

பொருள்: தலைவன் தன்னைப் பிரிந்து சென்றதனை ஊராருக்குக் கூறுவதைப் போலக் கண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகின்றது திருமண நாளன்று பொலிந்து விளங்கிய எனது கண்கள்.

திருக்குறளில் தோள்:

திருக்குறளில் பல பாடல்களில் தோள் என்ற சொல் பயின்றுவருவதால் சில பாடல்களுக்கு மட்டும் அவற்றின் விளக்கங்களைக் கீழே காணலாம்.

வேட்ட பொழுதின் அவையவை போலுமே
தோட்டார் கதுப்பினாள் தோள் - குறள் - 1105

பொருள்: கண்ணை மூடிக்கொண்டு தனக்கு விருப்பமான பொருளை மனதில் நினைத்துக்கொண்டு கண்ணைத் திறந்து பார்க்கும்போது தான் விரும்பிய பொருள் ஒவ்வொன்றும் கண்முன்னால் இருந்தால் ஒவ்வொருமுறையும் எல்லையற்ற மகிழ்ச்சி உண்டாகும் இல்லையா?. அதைப்போல, பூவிதழை ஒத்த இமைகளையுடைய எனது காதலியின் கண்களை நான் கண்திறந்து பார்க்கும் ஒவ்வொருமுறையும் எனக்குள் எல்லையற்ற இன்பம் புதியதாய் உண்டாகிறதே. !

உறுதோறும் உயிர்தளிர்ப்பத் தீண்டலால் பேதைக்கு
அமிழ்தின் இயன்ற தோள் - குறள் - 1106

பொருள்: அமிழ்தினை உண்ணும்போது உயிர்க்கு புத்துணர்ச்சி கிடைக்கும் என்பார்கள். என் காதலியின் கண்களை நான் காணும் போதெல்லாம் அமிழ்தம் உண்டதைப் போல எனது உயிர் புத்துணர்ச்சி பெறுகிறதே. ஒருவேளை எனது காதலியின் கண்கள் அமிழ்தத்தால் ஆனவையோ?

காண்கமன் கொண்கனை கண்ணாரக் கண்டபின்
நீங்கும்என் மென்தோள் பசப்பு - குறள் - 1265

பொருள்: பிரிந்து சென்றிருந்த எனது காதலர் இதோ வந்துவிட்டார். கண்களே நீங்கள் நிறைவோடு எனது காதலரைக் கண்டு மகிழுங்கள். கண்டபிறகாவது வடிந்துகொண்டிருந்த கண்ணீர் இனி நிற்கட்டும்.

துஞ்சுங்கால் தோள்மேலர் ஆகி விழிக்குங்கால்
நெஞ்சத்தர் ஆவர் விரைந்து. - குறள் -1218

பொருள்: நான் தூங்கும்போது என் கண்களுக்குள் தோன்றுகின்ற காதலர், நான் விழித்தவுடன் என் உள்ளத்திற்கு விரைந்து சென்று விடுவார்!.

இமையாரின் வாழினும் பாடிலரே இல்லாள்
அமையார்தோள் அஞ்சு பவர் - குறள் -906

பொருள்: இல்லத்தரசியாக இருக்கக்கூடிய தகுதியே இல்லாத ஒரு பெண்ணின் உருட்டி மிரட்டும் கண்களைக் கண்டு அஞ்சி நடுங்கி அவளது சொல்கேட்டு நடப்பவர்கள் எவ்வளவு உயர்ந்த பதவியில் இருந்தாலும் பெருமைகொள்ள முடியாது.

தந்நலம் பாரிப்பார் தோயார் தகைசெருக்கிப்
புன்னலம் பாரிப்பார் தோள். - குறள் - 916

பொருள்: தனது இயல்பான நலனைத் தொலைக்க விரும்பாமல் காப்பாற்ற விரும்புபவர், செருக்குடன் இழிந்த குணமுடைய பெண்களின் கண்களைப் பார்க்கவே மாட்டார்கள். 

இக் குறளில் வரும் 'தோள் தோய்தல்' என்பது புஜங்களை உரசிக் கொள்ளுதலையோ உடலுறவினையோ குறிக்காது; கண்ணும் கண்ணும் நோக்கி உரசிக் கொள்வதையே குறிக்கும்.

ராமனும் தோளும்:
Image result for lord raman eyes
ராமாயணத்தில் ராமனின் அழகைக் கண்ட பெண்களின் நிலையினை கீழ்க் கண்டவாறு கூறுகிறார் கம்பர்.

தோள்கண்டார் தோளே கண்டார்
தொடுகழல் கமலம் அன்ன
தாள்கண்டார் தாளே கண்டார்
தடக்கை கண்டாரும் அஃதே .

ராமனின் அழகிய கண்களைக் கண்ட பெண்களின் கண்கள் அதிலேயே குத்திட்டு நின்றன. அங்கிங்கு அசைய முடியவில்லையாம்.  மெய்மறத்தல் என்று சொல்வார்களே அதுபோன்ற நிலையினை அவர்கள் அடைந்தார்களாம். இங்கே தோள் என்ற சொல்லிற்கு புஜம் என்று பொருள் கொள்ள முடியாது. ஏனென்றால் அதே பாடலில் இன்னொரு இடத்தில் 'தடக்கைக் கண்டாரும் அதே' என்று கையினைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.  ஒருபாடலில் இரண்டு இடங்களில் ஒரே பொருளைப் பற்றிக் கூறினால் அது 'கூறியது கூறல்' குற்றமாகிவிடும். கவிச்சக்கரவர்த்தி கம்பர் அக் குற்றத்தை செய்திருக்க மாட்டார் என்பதால் இப் பாடலில் வரும் தோள் என்ற சொல் புஜத்தைக் குறிக்காமல் கண்ணையே குறிக்கும் என்பது தெளிவு.

முடிவுரை:

பெண்களைப் பொருத்தமட்டிலும் தோள் என்ற சொல்லுக்கு அகராதிப்பொருட்கள் நீங்கலாக கண் மற்றும் கண்ணிமை ஆகிய பொருட்களும் உண்டு என்று மேலே ஏராளமான ஆதாரங்களுடன் கண்டோம். அதுமட்டுமின்றி, தோள் என்ற சொல்லுடன் சேர்ந்து தொடி என்ற சொல்லானது பல இடங்களில் பயின்று வந்துள்ளது. இதைப்பற்றி விரிவாக, தொடி - ஆகம் - தொடர்பு என்ன? என்ற ஆய்வுக் கட்டுரையில் விரிவாகக் காணலாம்.
=========== தமிழ் வாழ்க! ========