சனி, 19 நவம்பர், 2011

குடம்பையும் புள்ளும் (கூண்டுப் பறவைகள்)


குறள்:

குடம்பை தனித்தொழியப் புள்பறந் தற்றே
உடம்பொடு உயிரிடை நட்பு.

                           - எண்: 338

தற்போதைய உரைகள்:

கலைஞர் உரை: உடலுக்கும் உயிருக்கும் உள்ள உறவு முட்டைக்கும் பறவைக் குஞ்சுக்கும் உண்டான உறவு போன்றதுதான்.
மு.வ உரை: உடம்போடு உயிர்க்கு உள்ள உறவு, தான் இருந்த கூடு தனியே இருக்க அதை விட்டு வேறிடத்திற்குப் பறவை பறந்தாற் போன்றது.
சாலமன் பாப்பையா உரை: உடம்பிற்கும் உயிருக்கும் இடையேயான உறவு, முட்டை தனித்துக் கிடக்கப் பறவை பறந்து விடுவது போன்றதே.
           
உரைத்தவறுகள்:

மேற்காணும் உரைகளில் மு.வ. உரையானது மணக்குடவரது உரையைப் பின்பற்றியும் கலைஞர் மற்றும் பாப்பையாவின் உரைகள் பரிமேலழகரின் உரையினைப் பின்பற்றியும் எழுதப்பட்டுள்ளன. பரிமேலழகர் உரைப்படி, உடலுக்கும் உயிருக்கும் இடையிலான உறவானது பறவையின் முட்டைக்கும் பறவைக்கும் இடைப்பட்ட உறவு போன்றதாம். இங்கே பரிமேலழகர் குடம்பை என்ற சொல்லுக்கு முட்டை என்ற பொருளைக் கொண்டுள்ளார். மணக்குடவர் உரைப்படி, உடலுக்கும் உயிருக்கும் இடையிலான உறவானது பறவையின் கூட்டுக்கும் பறவைக்கும் இடையிலான உறவு போன்றதாம். இங்கே மணக்குடவர் குடம்பை என்ற சொல்லுக்கு கூடு என்ற பொருளைக் கொண்டுள்ளார். இவற்றில் எது சரியான விளக்கம் என்று இங்கே காணலாம்.

ஆராய்ந்து பார்க்குமிடத்து, மேற்கண்ட இரண்டு விளக்கங்களுமே தவறாகப் படுகிறது. முதலில் மணக்குடவரின் விளக்கத்தைப் பார்ப்போம். அவரது உரைப்படி, உடல்-உயிர் உறவினை கூடு-பறவை உறவுடன் ஒப்பிட முடியுமா என்றால் முடியாது. ஏனென்றால் பறவை தனது கூட்டிலேயே எப்போதும் இருப்பதில்லை. மாலையில் வந்து தங்கி இருந்து இரவு கழித்து அதிகாலையில் எழுந்ததும் இரைதேடச் சென்று விடுகிறது. மறுபடியும் மாலை ஆனதும் தனது கூட்டுக்கே திரும்பி விடுகிறது. இது நாள்தோறும் நடக்கும் செயலாகும். ஆனால் ஒருமுறை ஒரு உடலை விட்டு பிரிந்து செல்லும் உயிரோ மீண்டும் அதே உடலுக்கு திரும்ப வருவதில்லை. இதைத் தான் நாம் மரணம் என்று அழைக்கிறோம். இப்படியாக பறவையின் செயலும் (கூட்டுக்குத் திரும்பி வருவது) உயிரின் செயலும் ( உடலுக்குத் திரும்பாமை) முற்றிலும் இங்கே மாறுபடுகின்றதால் மணக்குடவரின் உரை தவறு என்று தெளியலாம். இல்லை, இல்லை, மணக்குடவர் கூற விழைவது யாதெனின், ஒரு பறவை தனது கூட்டை விட்டு நிரந்தரமாகவே பிரிந்து சென்று விடுகின்றதல்லவா அதைத்தான் உடல்-உயிர் உறவுடன் ஒப்பிட்டுக் கூறுகிறார் என்று சிலர் கூறலாம். இவ் விளக்கமும் பொருந்தா விளக்கமே. ஏனென்றால் அனைத்து பறவைகளுமே கூடுகட்டி வாழ்வதில்லை என்பதுடன் தனது வாழ்நாளில் பலமுறை கூட்டை விட்டுப் பறவை பிரிந்து செல்லும் நிகழ்ச்சியை எப்போதோ ஒருமுறை நிகழும் மரணத்துடன் ஒப்பிடுவது இயல்பாகப் படவில்லை. ஆகவே மணக்குடவரின் விளக்கம் இங்கு பொருத்தமாகப் படவில்லை.

அடுத்து பரிமேலழகரின் விளக்கத்தைப் பார்ப்போம். அவரது உரைப்படி, உடல்-உயிர் உறவினை முட்டை-பறவை உறவுடன் ஒப்பிட முடியுமா என்றால் முடியாது. ஏனென்றால் முட்டை பொறிந்தவுடன் முட்டைக்குள் இருந்து பறவைக் குஞ்சு வெளிவரும் போது முட்டை முற்றிலும் சிதிலமடைந்திருக்கும். இன்னும் தெளிவாகச் சொன்னால், முட்டையை முற்றிலும் சேதப்படுத்திய பின்னரே பறவைக் குஞ்சு வெளிவருகிறது. அதுமட்டுமின்றி வெளிவந்த குஞ்சுகளுக்கு சிறகுகள் முழுமையான வளர்ச்சி அடைந்திருக்காது என்பதால் அனைத்துப் பறவைக் குஞ்சுகளுமே உடனடியாகப் பறந்துவிடுவதில்லை. ஆனால் உடலிலில் இருந்து உயிர் பிரியும் போது உடலுக்கு எவ்வித சேதாரமும் ஏற்படுவதில்லை. பறவையின் முட்டையைப் போல உடையாமல் மனித உடலானது அப்படியே முழுமையாகத் தான் இருக்கிறது. உயிர் பிரிந்த பல மணி நேரத்திற்குப் பின்னர் தான் உடல் அழுகத் துவங்குகிறது. அப்படியே அழுகினாலும் பறவை முட்டையைப் போல உடைந்து விடுவதில்லை. எனவே பறவை முட்டையை மனித உடலுடன் ஒப்பிட்டு பரிமேலழகர் இக் குறளுக்கு விளக்கம் கூறியிருப்பது பொருத்தமாகத் தோன்றவில்லை.

இப்பொருள் குழப்பங்களுக்குக் காரணம் 'குடம்பை' என்ற சொல்லே ஆகும். இக் குறளில் இச் சொல் குறிக்கும் புதிய பொருள் என்னவென்றும் இக் குறளுக்கான புதிய விளக்கம் என்னவென்றும் கீழே காணலாம்.

திருந்திய பொருள்:

இக் குறளில் வரும் குடம்பை என்ற சொல்லுக்கு செய்கூடு அதாவது கூண்டு என்பது பொருளாகும். இப்புதிய பொருளின்படி, இக்குறளுக்கான புதிய விளக்கமானது:

உடலுக்கும் உயிருக்கும் இடையிலான உறவானது, (அத்தனை நாளும் அடைபட்டு வாழ்ந்து கொண்டிருந்த) கூண்டை விட்டு பறவை ஒன்று தனியே (திரும்பி வராதபடிக்கு) பறந்து செல்வதைப் போன்றதாகும். 

நிறுவுதல்:

குடம்பை என்ற சொல்லுக்குக் கீழ்க்காணும் பொருட்களை இன்றைய அகராதிகள் கூறுகின்றன.

சென்னை மற்றும் வின்சுலோ இணையத் தமிழ்ப்பேரகராதிகள்:

குடம்பை kuṭampai: , n. < குட. 1. Nest; கூடு. குடம்பைநூ றெற்றி (கல்லா. கணபதிதுதி, வரி, 26). 2. Egg; முட்டை. (பிங்.) குடம்பை தனித் தொழியப் புட்பறந்தற்றே (குறள், 338).

ஃபேபரிசியஸ் இணையத் தமிழ்ப் பேரகராதி:

குடம்பை (p. 254) [ kuṭampai ] , s. a bird's nest, கூடு; 2. an egg, முட்டை; 3. body, உடம்பு; 4. a tank.

மேற்காணும் கூடு, முட்டை, உடம்பு, தொட்டி ஆகிய பொருட்களில் ஏதேனும் ஒரு பொருளாவது கீழ்க்காணும் பாடல்களுக்குப் பொருந்தி வருகின்றதா என்று பார்ப்போம்.

1. கற்றுரிக் குடம்பை கதநாய் வடுகர் - அகநா: 382

2.  தன் பெரும் கணத்து உளான் ஓர் தலைவனும் சலதிவாணன்
என்பது தோன்ற வேடம் எடுத்து எறி வலை தோள் இட்டு
என் புற மலைப்பக் காவி மீன் இடு குடம்பை தாங்கிப்
பின்புற நடந்து செல்லப் பெருந்துறைப் பாக்கம் புக்கான்.
                - திருவிளையாடல்: 2695

மேற்காணும் பாடல்களில் வரும் குடம்பை என்ற சொல்லுக்கு கூடு, முட்டை, உடம்பு, தொட்டி என்று எந்தப் பொருளைப் போட்டாலும் பொருந்தவில்லை அல்லவா. இது இச் சொல்லுக்குப் புதிய பொருள் இருப்பதையே காட்டுகிறது. ஆம், இப் பாடல்களில் வரும் குடம்பை என்ற சொல்லுக்கு 'கூண்டு' என்ற புதிய பொருளே பொருத்தமாயுள்ளது. இது எவ்வாறென்று காண்போம்.

முதல் பாடலில் வரும் 'கற்றுரிக் குடம்பை' என்பது கீழ்க்காணுமாறு பிரியும்.

கற்றுரிக் குடம்பை = கற்று (கன்று) + உரி ( = தோல்) + குடம்பை

கன்று என்பது இங்கு கற்று என்று வலித்தல் விகாரம் பெற்று வந்துள்ளது. ஆக, கற்றுரிக் குடம்பை என்பது விலங்குக் கன்றின் தோலினால் செய்த கூண்டைக் குறிப்பதாகும்.

இரண்டாம் பாடலில் 'மீன் இடு குடம்பை' என்று இருக்கிறது. இதன் பொருள் 'மீன்களை இடுகின்ற கூண்டு' என்பதாகும். கூடுக்கும் கூண்டுக்கும் ஒரே ஒரு வித்தியாசம் தான். கூடு திறந்த நிலையில் இருக்கும். அதை மூடி விட்டால் அதுவே கூண்டு ஆகும்.

ஆக, அகராதிகள் கூறியுள்ள பொருட்களே அன்றி குடம்பை என்னும் சொல்லிற்கு கூண்டு என்ற பொருளும் உண்டு என்பது தெளிவாகிறது. இதே பொருளில் தான் வள்ளுவர் குடம்பை என்ற சொல்லை இக் குறளில் கையாண்டுள்ளார். இது எவ்வாறு என்று பார்ப்போம்.

ஒரு மனிதன் ஒரு பறவையைப் பிடித்துக் கூண்டுக்குள் அடைக்கிறான். அக் கூண்டுக்குள்ளேயே அப் பறவையை அடைத்து வைத்து அதற்குத் தேவையான உணவையும் நீரையும் அளித்து வருகிறான். வேளா வேளைக்கு உண்ண உணவு கிடைத்தாலும் பருக நீர் கிடைத்தாலும் அந்தப் பறவையின் ஒரே ஒரு ஏக்கம், நோக்கம் எதுவாக இருக்கும் என்றால் அது சுதந்திரமாக அக் கூட்டை விட்டு வெளியே வந்து வானில் பறந்து திரிய வேண்டும் என்பது தானே. இந்த சுதந்திரத்திற்காகத் தான் அப் பறவை ஒவ்வொரு நொடியும் பல வகைகளில் முயன்று கொண்டே இருக்கிறது. வாய்ப்பு கிடைக்கும் பொழுது சடீரென்று கூண்டை விட்டு வெளியேறி சிறகடித்து வானில் பறந்து சென்று விடுகிறது. அப் பறவை இனி திரும்ப வருமா அதே கூட்டுக்கு? ஒருபோதும் வராது. மறுபடியும் ஒரு மனிதன் அப் பறவையைப் பிடித்து வேறொரு கூட்டில் அடைத்து வைக்காதவரை அப் பறவை உல்லாசமாய் வானில் பறந்து கொண்டே இருக்கும்.

இக் கூண்டுப் பறவையின் வாழ்க்கையைப் போலத்தான் மனித உயிரின் வாழ்க்கையும் இருக்கிறது. விதிவசத்தால் உயிரானது ஒரு உடலுக்குள் அடைபடுகிறது. அதுவே பிறப்பு எனப்படுகிறது. உடலுக்குள் அடைபட்டுக் கிடந்தாலும் உயிரானது ஒவ்வொரு நொடியும் தனது சுதந்திரமான இயல்பை எண்ணிக் கொண்டே இருக்கிறது. அண்டவெளியில் கலப்பதையே நாடுகிறது. சரியான வாய்ப்பு கிடைக்கும் பொழுது உடலை விட்டு உயிர் வெளியேறி அண்டவெளியில் கலந்து விடுகின்றது. மறுபடியும் விதிவசத்தால் வேறொரு உடலுக்குள் அடைபடாதவரை அந்த உயிர் அண்டவெளியில் தான் இருக்கும். இந்த விதியின் அளப்பரும் வலிமையை அறிந்த வள்ளுவர் இக் குறள் மூலம் அவ் விதியின் வசத்தால் உடலுக்குள் அகப்பட்ட உயிரின் கதியை ஒரு கூண்டுப் பறவையின் வாழ்க்கையுடன் ஒப்பிட்டுக் கூறுகிறார்.

அதேசமயம், கூண்டின் வலிமையைப் பொறுத்தும் பறவையின் தப்பித்துச் செல்லும் வாய்ப்பு அமைவதைப் போல உடலின் வலிமையைப் பொறுத்தும் உயிர் பிரியும் வாய்ப்பு அமைகிறது. அதனால் தான் திருமூலர் இவ்வாறு கூறுகிறார்.

உடம்பார் அழியின் உயிரார் அழிவர்
திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே

                        - திருமந்திரம்.

கூண்டு என்னதான் வலிமையானதாக இருந்தாலும் ஒருநாள் சமயம் பார்த்து பறவை வெளியேறி விடுவதைப் போல உடலைவிட்டு உயிரும் வெளியேறி விடும் என்று இக் குறள் மூலம் எச்சரிக்கிறார் வள்ளுவர். இப்படியாக, கூண்டுப் பறவையினை உயிருடனும், கூண்டினை உடலுடனும் ஒப்பிட்டு, மனித வாழ்க்கை நிலையற்றது என்னும் உண்மையினை நயம்படக் கூறிய வள்ளுவரின் நுண்மாண் நுழைபுலம் வியக்கத்தக்க தன்றோ!

................................................. வாழ்க தமிழ்!................................

வெள்ளி, 18 நவம்பர், 2011

உலகியற்றியான் (வள்ளுவர் இறைவனை சபித்தாரா?)


குறள்: 

இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகியற் றியான்
                          - எண்: 1062

தற்போதைய பொருள்:

கலைஞர் உரை: பிச்சையெடுத்துதான் சிலர் உயிர்வாழ வேண்டும் என்ற நிலையிருந்தால் இந்த உலகத்தைப் படைத்தவனாகச் சொல்லப்படுபவனும் கெட்டொழிந்து திரியட்டும்.
மு.வ உரை: உலகத்தை படைத்தவன் உலகில் சிலர் இரந்தும் உயிர்வாழுமாறு ஏற்படுத்தியிருந்தால், அவன் இரப்பவரைப் போல் எங்கும் அலைந்து கெடுவானாக.
சாலமன் பாப்பையா உரை: பிச்சை எடுத்துத்தான் உயிர்வாழ வேண்டும் என்ற நிலை இருந்தால், இந்த உலகைப் படைத்தவன் அங்கும் இங்கும் அலைந்து கெடுவானாக.

உரைத்தவறுகள்:

மேற்காணும் மூன்று உரைகளும் 'உலகியற்றியான்' என்னும் சொல்லுக்கு 'உலகைப் படைத்தவன்' என்றே பொருள் கூறுகின்றன. உலகைப் படைத்தவன் யார் என்றால் அது இறைவன் என்று அனைவருக்கும் தெரியும். அவ்வகையில் மேற்காணும் மூன்று உரைகளுமே உலகைப் படைத்த இறைவனுக்கு 'பரந்து கெடுக' என்று வள்ளுவர் சாபமிடுவது போன்ற தொனியில் விளக்கம் கூறியுள்ளன. இக் கருத்து சற்றேனும் ஏற்புடையதா?. இல்லை. ஒருபோதும் இல்லை.

ஏனென்றால் ஒரு மனிதன் தனது வறுமை நிலையினால் பிச்சை எடுத்துண்டு வாழ்கின்றான் என்றால் அதற்கு உலகைப் படைத்த இறைவன் எப்படிப் பொறுப்பாக முடியும்?. இவ் உலகில் அனைத்து உயிர்களையும் இறைவனே படைத்தான் என்றால் அவன் படைத்த அனைத்து உயிர்களிடத்திலும் ஒரே மாதிரித்தானே அன்பு செலுத்துவான். அப்படிச் செலுத்துவது தானே முறையென்று கூறப்படும். இறைவன் முன்னால் ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடின்றி அனைவரும் சமம் என்று தானே அனைத்து மதங்களுமே கூறுகின்றன. அப்படி இருக்க, ஒருவனுடைய ஏழ்மைக்கு இறைவன் பொறுப்பேற்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது எவ்விதத்திலும் அறமாகாது.

ஒருவரது ஏழ்மைக்கு இறைவன் பொறுப்பாகாத நிலையில் வள்ளுவர் இறைவனுக்கு சாபம் இடவேண்டிய தேவையும் இல்லை. அதுமட்டுமின்றி, கடவுள் வாழ்த்தில் இறைவனைப் புகழ்ந்த வள்ளுவர் ' இருள் சேர் இருவினையும் சேரா இறைவன்" என்று அவனது நன்மை தீமைகளுக்கு அப்பாற்பட்ட தன்மையைக் கூறுகிறார். அதன்படி வள்ளுவரது சாபமோ யாருடைய சாபமோ இறைவனைப் பற்றாது. இதை வள்ளுவரும் நன்கு அறிவார். எனவே இறைவனுக்குச் சாபமிடும் மதிகெட்ட செயலை அவர் ஒருபோதும் செய்திருக்க மாட்டார். இதிலிருந்து மேற்காணும் பொருள் விளக்கங்கள் தவறு என்பதை அறிந்து கொள்ளலாம்.

இப்பொருள் குளறுபடிக்குக் காரணம் 'உலகியற்றியான்' என்ற சொல்லுக்கு 'உலகைப் படைத்தவன்' என்று தவறாகப் பொருள் கொண்டதே ஆகும். இதன் உண்மையான பொருள் என்ன என்று கீழே காணலாம்.

திருந்திய பொருள்:

உண்மையில் 'உலகியற்றியான்' என்ற சொல் ஒரு நாட்டின் அரசனைக் குறிப்பதாகும். இது எவ்வாறெனில் 'உலகு' என்னும் சொல்லுக்குப் பல பொருட்கள் இருந்தாலும் இங்கு இச்சொல் ஒரு நாட்டையே குறிக்கும்.

உலகு = நாடு
இயற்றுதல் = நடத்துதல், விதித்தல்

( ஆதாரம்: வின்சுலோ தமிழ் இணையப் பேரகராதி)

ஆக, உலகை இயற்றியவன் என்பது இங்கு ஒரு நாட்டை நடத்திச் செல்பவன் அல்லது ஒரு நாட்டிற்கு சட்டதிட்டங்கள் மற்றும் வரிகளை விதிப்பவன் என்ற முறையில் ஒரு அரசனையே குறிப்பதாகும்.

இனி இக்குறளின் திருந்திய பொருள் இதுதான்: " பிச்சை எடுத்தும் ஒருவன் (ஒரு நாட்டில்) உயிர்வாழ வேண்டுமானால் அந் நாட்டை நடத்திச் செல்கிற மன்னன் (பொருளை இழந்து உணவுக்காக) அலைந்து திரிந்து கெட்டொழியட்டும்." 

நிறுவுதல்:

ஒரு நாட்டில் பிச்சைக்காரர்கள் வாழ்வதற்கு முழுமுதல் காரணம் யார்?. உறுதியாக அந் நாட்டின் அரசனே அன்றோ?. ஆம், ஒரு நாட்டு மன்னன், தன் நாட்டு மக்களின் மீது ஏராளமான வரிகளை விதிப்பதாலும் கொடுங்கோலாட்சி புரிவதாலும் பொருள் வளம் இழந்தவர்கள் ஏழ்மையால் பிச்சை எடுத்துண்டு வாழும் நிலைக்குத் தள்ளப்படுவர். பொதுமக்களின் நலனை சற்றும் கருத்தில் கொள்ளாமல் தனது சுயநலம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு அதிக வரி வசூலிக்கும்பொழுது அதைத் தாளமாட்டாமல் குடிமக்கள் வடிக்கும் கண்ணீர் அந் நாட்டு மன்னனின் செல்வத்தை அழிக்கும் கருவியாகும் என்று கொடுங்கோன்மை என்னும் அதிகாரத்தில் கூறுகிறார்.

அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றே
செல்வத்தைத் தேய்க்கும் படை. - 555

இப்படியாக செல்வத்தை இழந்து அம் மன்னனும் வறுமை நிலையுற்று உணவுக்காக அங்கும் இங்கும் அலைந்து திரிந்து கெட்டு ஒழியட்டும் என்று இக் குறளில் அவனுக்குச் சாபமிடுகிறார் வள்ளுவர்.

இதிலிருந்து இக் குறளில் வள்ளுவர் சாபமிடுவது பிச்சைக்காரனின் ஏழ்மை நிலைக்குக் காரணமான நாட்டு மன்னனையே அன்றி உலகைப் படைத்த இறைவனை அன்று என்பது உறுதி செய்யப்படுகிறது.

................................. வாழ்க தமிழ்!................................

செவ்வாய், 1 நவம்பர், 2011

நான்கு கடவுள் - பகுதி 4 (மகாபாரதப் போர் - தமிழர்கள்)


ஐந்திணைகளும் ஐம்பூதங்களும்:

தொல்தமிழகத்தில் முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல், பாலை என்ற ஐவகை நிலங்கள் இருந்ததாக முன்னர் கண்டோம். இயற்கையின் ஒப்பற்ற அமைப்புக்களாக விளங்கிய இந்த ஐந்துவகை திணைகளும் தொல்தமிழகத்திற்குக் கிடைத்த அரிய வரங்கள் என்றே கூறலாம். வடக்கே பனிமலையும், கிழக்கே கடலும், மேற்கே பாலைவனமும் இயற்கை அன்னை கொடுத்த பாதுகாப்பு அரண்களாக இருந்து தொல்தமிழகத்தைக் காத்துக் கொண்டிருந்தன என்றால் மிகையாகாது.

அதுமட்டுமின்றி, இந்த ஐவகைத் திணைகளில் ஒவ்வொரு திணையும் ஒவ்வொரு விதத்தில் சிறப்புடையதாக விளங்கியது. அதாவது இந்த ஐவகைத் திணைகளும் இயற்கையின் ஐம்பேராற்றல்களான ஐந்து பூதங்களுடன் தொடர்புடையனவாய் இருந்தன. ஒவ்வொரு திணையும் ஒரு பூதத்துடன் தொடர்புடையதாய் அதன் அளப்பரிய ஆற்றலை தன்னில் கொண்டதாய் விளங்கியது. இனி இந்த ஐந்து திணைகளுக்கும் ஐந்து பூதங்களுக்கும் உள்ள தொடர்பு என்ன என்று காணலாம்.

முல்லைத் திணையில் இயற்கையின் முதல் பூதமான ஆகாயம் சிறப்புற விளங்கியது எனலாம். கார்காலத்தை தனது பெரும்பொழுதாகவும் மேகத்தையே (மாயோன்) தனது தெய்வமாகவும் கொண்டது முல்லைத் திணை ஆகும். இம் மேகங்கள் உலாவரும் இடம் ஆகாயம் என்பதால் ஆகாயமே முல்லைத் திணைக்குரிய பூதமாகியது.

குறிஞ்சித் திணையில் இயற்கையின் இரண்டாவது பூதமான நிலம் சிறப்புற விளங்கியது எனலாம். செந்நிலம் ஆகிய சேயோனை தனது தெய்வமாக உடையது குறிஞ்சித் திணை ஆகும். எனவே நிலம் குறிஞ்சித் திணைக்குரிய பூதமாகியது.

மருதத்திணையில் இயற்கையின் மூன்றாவது பூதமான காற்று சிறப்புற விளங்கியது எனலாம். எங்கு பார்த்தாலும் பச்சைப் பசேலென விளங்கும் வயல்கள் நிறைந்தது மருத நிலம். காற்று வீசுவதற்குத் தங்குதடையில்லாத இந்த வயல்வெளியில் கொண்டல், கோடை, தென்றல், வாடை என்ற நால்வகைக் காற்றும் வலம் வந்தன. தொல்தமிழகத்தின் மத்தியில் இருந்த மருத நிலத்திற்குக் கிழக்கே இருந்து கொண்டல் காற்று வீசியது. மேற்கில் இருந்து கோடைக்காற்று வீசியது. வடக்கில் இருந்து வாடைக்காற்று வீசியது. தெற்கில் இருந்து தென்றல் காற்று வீசியது. இப்படி நான்கு புறங்களிலும் இருந்து வீசிய நால்வகைக் காற்றினையும் மருதநில மக்கள் அனுபவித்தனர். இப்படித் தான் மருதநிலத்துக்குரிய பூதமாக காற்று விளங்கியது. காற்று சிறப்புற விளங்கும் இந்த 'மருத' நிலத்திற்கும் காற்றைக் குறிக்கும் 'மாருத' த்திற்கும் மயிரிழை அளவே வேறுபாடு உள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.

மருதம் <----> மாருதம் (காற்று)

நெய்தல் திணையில் இயற்கையின் நான்காவது பூதமான நீர் சிறப்புற விளங்கியது எனலாம். நெய்தல் நில மக்களுக்கு கடலே தெய்வம் என்பதால் நீர் நெய்தல் திணைக்குரிய பூதமாயிற்று.

பாலைத்திணையில் இயற்கையின் ஐந்தாவது பூதமான தீ சிறப்புற விளங்கியது எனலாம். வேனிலை பெரும்பொழுதாகவும் பகலை சிறுபொழுதாகவும் உடைய பாலைநிலத்தில் தீயையொத்த கதிரவனின் வெம்மை கோலோச்சி இருக்கும். எனவே தான் தீ பாலைத்திணைக்குரிய பூதமாயிற்று.

மேலே கண்ட ஐம்பூத - ஐந்திணை உறவானது கீழே தொகுத்துக் கூறப்பட்டுள்ளது.

பூதம்----------------------------திணை

ஆகாயம்---------------------முல்லை
நிலம்---------------------------குறிஞ்சி
காற்று-------------------------மருதம்
நீர்--------------------------------நெய்தல்
தீ----------------------------------பாலை

மகாபாரதப் போரில் தமிழர்கள்:

மகாபாரதப் போரானது பாண்டவர்கள் ஐந்து பேருக்கும் கவுரவர்கள் நூற்றுவருக்கும் இடையில் நடந்ததாகக் கூறப்படுகிறது. வியாசர் இயற்றிய மகாபாரத நூலின்படி இந்த பாண்டவர்கள் ஐந்து பேரும் பாண்டு மன்னனின் பிள்ளைகள் என்றும் கவுரவர்கள் நூற்றுவரும் திருதராட்டிரனின் மக்கள் என்றும் சொல்லப்படுகிறது. குருசேத்திரம் என்னும் இடத்தில் நடந்ததாகக் கூறப்படும் இந்த பெரும்போர் உண்மையிலேயே நடந்ததா? கற்பனையாகக் கூறப்படும் ஒன்றா? உண்மை என்றால் எந்த அளவிற்கு அதில் உண்மை கலந்துள்ளது என்று காண்பதே இக் கட்டுரையின் நோக்கமாகும்.

உண்மையில் இந்த மகாபாரதப் போரானது தொல்தமிழகத்தைச் சேர்ந்த ஐந்து தமிழ் மன்னர்களுக்கும் வேற்றினத்தாருக்கும் இடையில் நடந்த போராகும். இந்த வேற்றினத்தாருக்கு என்ன பெயர் வைப்பது? ஏற்கெனவே ஆரியர் என்ற சொல் புழக்கத்தில் இருந்தாலும் இச்சொல் பல குழப்பங்களையே தோற்றுவித்துள்ளது. எனவே இந்த வேற்றினத்தவருக்கு 'நூற்றுவர்' என்ற பெயரையே கொள்ளலாம்.

இந்த மகாபாரதப் போரானது பல நாட்கள் நீடித்ததாகச் சொல்லப்படுகிறது. என்றால், ஒரு ஐந்து பேர் ஒருநூறு பேருடன் போரிட்டு வெல்ல பல நாட்களாகுமா?. என்ற ஐயம் மனதில் எழலாம். அதுமட்டுமின்றி, வெறும் ஐந்துபேர் ஒருநூறு பேருடன் போரிட்டு வெல்ல முடியுமா? என்ற கேள்வியும் கூடவே எழலாம். இக் கேள்விகளுக்கான விடைகளை மட்டுமின்றி இப் போரில் பங்கேற்ற அந்த ஐந்து தமிழ் மன்னர்கள் யார் யார்? என்றும் கீழே காணலாம்.

தமிழ் மன்னர்கள்:

தொல்தமிழகத்தில் இருந்ததாகக் கூறப்படும் முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல், பாலை என்ற ஐவகை நிலங்களையும் ஆண்டு கொண்டிருந்த ஐந்து தமிழ் மன்னர்கள் தாம் இந்த மகாபாரதப் போருக்குத் தலைமையேற்றவர்கள் ஆவார். இவர்கள் ஐவரின் தலைமையில் பல்லாயிரக் கணக்கான  தமிழ் வீரர்களும் நூற்றுவர் தலைமையில் பல்லாயிரம் எதிரி வீரர்களும் நிலம் அதிரப் பொருத 'தும்பை' வகைப் போரே மகாபாரதப் போர் ஆகும்.

இப்போரில் பங்கேற்ற ஐந்து தமிழ் மன்னர்கள் தான் பிற்காலத்தில் பாண்டவர்களாகிய தருமன், அர்ஜுனன், பீமன், சகாதேவன், நகுலன் என்று அழைக்கப்பட்டனர். இப் பெயர்கள் இம் மன்னர்களின் இயற்கைப் பெயர்கள் அல்ல; பட்டப்பெயர்கள். ஒவ்வொரு நிலத்தில் இருந்தும் வந்த இம் மன்னர்களுக்கு அவர்களின் தனிச்சிறப்பு கருதி இடப்பட்ட தமிழ்ப் பெயர்களே வடமொழியில் இவ்வாறு திரிபுற்று வழங்கப்படுகின்றன.

தருமன்:

பாண்டவர் ஐவரில் முல்லை நிலத்து மன்னனாக வந்தவனே தருமன் ஆவான். கற்பு நெறியும் ஒழுக்கமும் சான்ற முல்லை நிலத்தில் இருந்து வந்தமையால் இம் மன்னனுக்கு தருமன் என்ற பட்டப்பெயர் வழங்கப்பட்டது. தருமன் என்ற தமிழ்ப் பெயரே தர்மா என்று வடமொழியில் வழங்கப்பட்டது.

தருமன் -----> தர்மா

மேகத்தை தெய்வமாகக் கொண்டது முல்லை நாடு. இந்த மேகம் தரும் மழையோ தருமத்தை அடிப்படையாகக் கொண்டது. ஒரு நாட்டில் தருமம் பிறழும் போது மழையில்லாமல் போவதை நாம் அறிவோம். திருவள்ளுவரும் இக் கருத்தை பல இடங்களில் வலியுறுத்தி உள்ளார். இப்படி முல்லை நிலமானது தருமத்தையே தலைமேற்கொண்டு விளங்குவதால் இந் நாட்டில் இருந்து வந்த மன்னனுக்கு அவரது நாட்டின் சிறப்பான தருமம் பற்றி 'தருமன்' என்ற பெயரை சூட்டியிருக்கலாம்.

அர்ஜுனன்:

குறிஞ்சி நிலத்தில் இருந்து வந்த மன்னனே அர்ஜுனன் ஆவான். இவனது பட்டப்பெயர் அருஞ்சுனையன் என்பதாகும். அரிய பல சுனைகளை உடைய மலைநாட்டில் இருந்து வந்தமையால் இவன் அருஞ்சுனையன் எனப்பட்டான். இவன் சிறந்த வேடன் ஆவான். வில் எய்வதில் நிகரற்ற ஆற்றல் உடையவனாக அறியப்பட்டான். அருஞ்சுனையன் என்ற தமிழ்ப் பெயரே அர்ஜுனா என்று வடமொழியாக்கப் பட்டிருக்கலாம்.

அருஞ்சுனையன் -----> அர்ஜுனா

பீமன்:

மருத நிலத்தில் இருந்து வந்த தமிழ் மன்னனே பீமன் ஆவான். இவனது பட்டப்பெயர் பருமன் என்பதாகும். ஓங்கிய உருவமும் அதற்கேற்ப ஈடான உடலும் வலிமையும் கொண்டவனாக இருந்ததால் பெருமை கருதி பருமன் எனப்பட்டான். பருமம் உடையவன் ஆதலால் பருமன் எனப்பட்டான். இப் பருமன் என்ற தமிழ்ப் பெயரே வடமொழியில் பீமன் என்று வழங்கப்படுகிறது.

பருமன் ----> ப்ரமன் ---> பீமன் ----> பீமா

அதுமட்டுமின்றி, ஐந்து பூதங்களில் வலிமை மிக்கது காற்று ஆகும். மெல்லிய தென்றலாய் வருடிக் கொடுப்பதும் புயலாய் மாறி பொருட்களை புடைபெயர்த்து இடுவதும் காற்றே ஆகும். வலிமையின்றி தொய்ந்து கிடக்கும் ஒரு டயருக்குள் காற்றினை அடித்தவுடன் அது ஒரு வண்டியையே தாங்கி நிற்கும் ஆற்றலைப் பெறுகிறது. இந்த காற்றின் ஆற்றல் சிறப்புற்று விளங்கும் மருதநிலத்தில் இருந்து வந்தவன் என்பதாலும் காற்றைப் போல எதிரிகளை தனது உடல் வலிமையால் பந்தாட வல்ல பலசாலி மன்னன் என்பதாலும் இவனுக்கு இப் பெயர் சூட்டப்பட்டிருக்கலாம்.

பருமன் என்ற சொல்லில் இருந்து தோன்றிய ப்ரமன் என்ற சொல்லே பிரம்மாண்டம் (பெரியது) என்ற சொல்லுக்கும் வலிமை மிக்க சுழல் காற்றினைக் குறிக்கும் பிரமம் என்ற சொல்லுக்கும் ஆதாரமாய் இருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

ப்ரமன் ----> பீமன் (பருமையும் வலிமையும் கொண்டவன்)
ப்ரமன் ----> ப்ரமாண்டம் (பெரியது)
ப்ரமன் ------> ப்ரமம் (வலிமையான சுழல்காற்று)

சகாதேவன்:

நெய்தல் நிலத்தில் இருந்து வந்த தமிழ் மன்னனே சகாதேவன் ஆவான். இவனது பட்டப்பெயர் சகடதேவன் ஆகும். இப் பெயரே சகாதேவ் என்று வடமொழியில் வழங்கப்படுகிறது.

சகடதேவன் ------> சகாதேவா

வண்டிச் சக்கரங்களைச் (சகடம்) செய்வதில் பெயர் பெற்றிருந்தவர்கள் இந் நிலத்து மக்கள் ஆதலால் அச் சிறப்பு கருதி இவனுக்கு இப் பெயர் ஏற்பட்டிருக்கலாம். ஐந்துநில மக்களிலும் கடலில் செல்லும் மரக்கலங்களை முதலில் கண்டறிந்தவர்கள் நெய்தல் நில மக்களே ஆவர். கடலில் இருந்து விளைவிக்கப்பட்ட உப்பினை ஏற்றிச் செல்லத் தேவையான வண்டியையும் சக்கரங்களையும் முதலில் கண்டறிந்ததும் நெய்தல் மக்களாகவே இருக்கலாம் என்று தோன்றுகிறது. ஏனென்றால் அதிக விளைபொருட்களை உடைய மருத நிலத்தில் பொருட்களைக் கடத்த மாடுகள் இருந்தன. முல்லை நிலத்திலோ குறிஞ்சி நிலத்திலோ வண்டிகளில் ஏற்றிக்  கடத்த வேண்டிய அளவுக்குப் பொருட்பெருக்கம் இல்லை. பாலைநிலத்தில் கொள்ளையடிப்பதைத் தவிர வேலை எதுவும் இல்லை. எஞ்சியுள்ள நெய்தல் நிலத்தாருக்கு மட்டுமே பெரும் அளவிலான மீனையும் உப்பினையும் கடத்த வேண்டிய சூழல் இருந்ததால் அவர்களே வண்டிகளைக் கண்டறிந்திருக்கலாம். முதன்முதலில் கையால் தள்ளப்பட்ட இந்த வண்டிகளில் மாடுகளைப் பூட்டி இழுக்கும் வழக்கம் பின்னாளில் ஏற்பட்டிருக்க வேண்டும்.

நகுலன்:

பாலைநிலத்தில் இருந்து வந்த தமிழ் மன்னனே நகுலன் ஆவான். இவனுடைய பட்டப்பெயர் நற்குலன் என்பதாகும். இப் பெயரே நகுலா என்று வடமொழியில் வழங்கப்படுகிறது.

நற்குலன் -----> நகுலா

முல்லை, குறிஞ்சி, மருதம், பாலை என்னும் நான்கு நிலங்களுக்கும் தனித்தனியே சிறப்பு உண்டு. ஆனால் பாலை நிலத்து மக்களுக்கு என்ன சிறப்பு உள்ளது? பிறரது பொருட்களை கொள்ளையடிப்பதைத் தவிர அவர்கள் வேறெதுவும் அறியாதவர்கள். இருந்தாலும் தமிழருக்கு எதிரான போர் என்றதும் தானாகவே வந்து தனது ஆதரவைக் காட்டினான் இந் நிலத்து மன்னன். தொல்காப்பியர் கூறியதைப் போல இம் மன்னன் கடைக்குலத்தவனாகவே இருந்தாலும் ஆதரவு தந்து போர் புரியத் தயாராக இருந்ததால் அவனுக்கு 'நல்ல குலத்தவன்' என்ற பொருளில் 'நற்குலன்' என்ற பட்டப்பெயரைச் சூட்டியுள்ளது தமிழரின் பரந்த மனப்பான்மையைக் காட்டுகிறது.

இதுவரை கண்டவற்றை கீழ்க்கண்டவாறு தொகுத்து வழங்கலாம்.


போர் நடந்த இடம்:

இந்தியாவின் தற்போதைய அரியானா மாநிலத்தில் உள்ள குருசேத்திரம் என்ற ஊரில் தான் இப்போர் நடந்ததாகக் கூறப்படுகிறது. தொல்தமிழகப் பகுதிகளில் தமிழ் மன்னர்கள் ஆண்டு கொண்டிருந்த பொழுது ஆஃப்கானிஸ்தானில் இருந்து கைபர் போலன் கணவாய் வழியாக இந்த வேற்றினத்தாராகிய நூற்றுவர்கள் இந்தியாவிற்குள் நுழையத் தலைப்பட்டிருக்கக் கூடும். அப்பொழுது அவர்களுக்கும் தமிழ் மன்னர் ஐவருக்கும் இடையில் இந்த குருசேத்திரம் என்னும் இடத்தில் வைத்து நடந்த பெரும்போரே இந்த மகாபாரதப் போராகும். இந்த நூற்றுவர்கள், தமிழரின் போர்வீரத்தைப் பற்றி முன்னரே கேள்விப்பட்டிருக்கக் கூடும். அதனால் தான் அவர்களது படைக்கு நூறு பேர் தலைமை தாங்கி பெரும் படையாக வந்துள்ளனர்.

போர்க்காலத்தில் இப் போரில் ஈடுபட்ட தமிழ் மன்னர் ஐவரின் படைவீரர்களுக்கும் தேவையான உணவினை அளித்தான் பெருஞ்சோற்று உதியன் சேரலாதன் என்னும் தமிழ் மன்னன் என்று புறநானூறு கூறுகிறது. அப்படியென்றால் இம் மன்னனுடைய நாடும் தொல்தமிழகத்தில் தான் இருந்திருக்க வேண்டும். அப்படி இருந்தால் தான் இவனால் படைவீரர்களுக்கு குருசேத்திரத்தில் உணவளித்திருக்க முடியும். இப்போதுள்ள தமிழகத்தில் இருந்துகொண்டு இதைச் செய்திருக்க சாத்தியமில்லை.

ஆதாரங்கள்:

மேலே நாம் பல புதிய செய்திகளைக் கண்டோம். இவை உண்மை என்பதற்கு என்ன ஆதாரங்கள் உள்ளன என்று காண்போம்.

மேலே கண்ட பல புதிய செய்திகளில், பாரதப் போரில் ஈடுபட்ட தமிழ் மன்னர்கள் ஐவரின் பெயர்களில் வேண்டுமானால் மாறுபாடுகள் இருக்கலாம். ஆனால் மகாபாரதப்போர் என்பது தமிழ் மன்னர்கள் ஐவருக்கும் வேற்றினத்தார் நூற்றுவருக்கும் இடையில் நடந்த போர் தான் என்பதில் எந்தவித மாறுபாடுமில்லை. இதை உறுதிசெய்யும் வண்ணம் தமிழ் இலக்கியங்களில் இப் போர் பற்றிய குறிப்புக்களும் உள்ளன.

அலங்குஉளைப் புரவி ஐவரொடு சினைஇ
நிலம்தலைக் கொண்ட பொலம்பூந் தும்பை
ஈரைம் பதின்மரும் பொருதுகளத் தொழியப்
பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய்

                                                    - புறநானூறு - 2

பெருஞ்சோற்று உதியன் சேரலாதன் பாரதப் போர் நிகழ்ந்த காலத்தில் பெருஞ்சோறு அளித்த நிகழ்ச்சியை இப்பாடல் விவரிக்கிறது.

ஈரைம் பதின்மரும் பொருதுகளத்து அவியப்
பேரமர்க் கடந்த கொடிஞ்சி நெடுந்தேர்
ஆராச் செருவின் ஐவர் போல

- பெரும்பாணாற்றுப்படை - 415-417

                                                                          ..... தொடரும்