திங்கள், 19 மார்ச், 2012

ஆனைக்கொரு காலம் ( பூனைக்கு?)

முன்னுரை:

ஆனைக்கு ஒரு காலம் வந்தால்
பூனைக்கும் ஒரு காலம் வரும்.


என்றொரு பழமொழி இன்றும் வழக்கில் உண்டு. இதைப்பற்றி விரிவாக ஆராய்வதே இக் கட்டுரையின் நோக்கமாகும்.

தற்போதைய விளக்கங்கள்:

இப்பழமொழிக்குக் காலம் காலமாகக் கூறப்பட்டு வரும் விளக்கம் இதுதான்:


ஆனை போல பெரியவர்களுக்கு வாழ்க்கையில் ஒரு நல்ல காலம் வந்தால்
பூனை போல சிறியவர்களுக்கும் அவரது வாழ்வில் ஒரு நல்ல காலம் வரும்.

இக் கருத்து சரியானதா என்று பார்ப்போம். இங்கே பெரியவர் என்பது உருவத்தால் மட்டுமின்றி செல்வாக்கு, பணபலம், புகழ் போன்றவற்றால் பெருமை உடையவர்களைக் குறிப்பதாகவும் கொள்ளலாம். சிறியவர் என்பது உருவத்தால் மட்டுமின்றி செல்வாக்கு, பணபலம், புகழ் ஆகிய எதுவுமே கொஞ்சம்கூட இல்லாத மிகச் சாதாரண நிலையில் உள்ளவர்களையும் குறிப்பதாகக் கொள்ளலாம். மொத்தத்தில் இப்பழமொழி உணர்த்த வரும் கருத்துப்படி பார்த்தால் நல்லகாலம் என்பது அனைத்துவகையான மக்களுக்கும் வாழ்க்கையில் ஒரு கட்டத்திலாவது வரவே செய்யும் என்பதே.

ஆனை போல பெரியவர்களானாலும் சரி, பூனை போல சிறியவர்களானாலும் சரி, நன்மை மட்டுமல்ல தீமையும் அனைவருக்கும் அவரவர் வினைப்படிதான் நடக்கும். இதைத்தான் ' தீதும் நன்றும் பிறர்தர வாரா' என்று புறநானூற்றிலேயே கூறிவிட்டனர். ஆக, இக் கருத்து ஓரளவுக்குத் தான் சரியாகக் கூறப்பட்டுள்ளது. மேலும் இக் கருத்தினை நேரடியாகக் கூறாமல் ஆனையினையும் பூனையினையும் பயன்படுத்திக் கூறி இருப்பதன் தேவை என்ன?. இக் கருத்து உருவான பின்புலம் என்ன? இதைப் பற்றிக் கீழே விரிவாகக் காணலாம்.

அதற்கு முன்னர், மேற்காணும் கருத்தைத்தவிர, இணையத்தில் காணப்பட்ட வேறு சில கருத்துக்களைப் பற்றிக் காணலாம்.

கருத்து 2:

இக் கருத்தினை முன்மொழிவோர், ஆனை என்பதனை ஆநெய் என்பதின் திரிபு என்றும் பூனை என்பதனை பூநெய் என்பதின் திரிபு என்றும் கொண்டு, இப்பழமொழியை

ஆநெய்க்கு ஒரு காலம் வந்தால்
பூநெய்க்கும் ஒரு காலம் வரும்.

என்று மாற்றிக் கொண்டு கீழ்க்கண்டவாறு பொருள் கூறுகின்றனர். 

ஆநெய் ஆகிய பசுநெய்யினை ஒரு காலத்தில் உண்டால் பூநெய் ஆகிய தேனையும் ஒரு காலத்தில் உண்ணவேண்டி வரும்.

அதாவது, பசுநெய்யினை உணவுடன் சேர்த்து அதிகம் உண்டால் அதனால் உண்டாகும் கொழுப்பினைக் குறைக்க அதன்பின்னர் தேனை உண்ண வேண்டி வரும் என்று விளக்கம் கூறுகின்றனர்.

இக் கருத்து ஏற்புடையதாகத் தோன்றவில்லை. ஏனென்றால், பசுநெய் மட்டுமல்ல, கொழுப்பை உண்டாக்கும் பல எண்ணைப் பலகாரங்களையும் மாமிச உணவுகளையும் நாம் (கொழுப்பு என) அறிந்தே தான் உண்கிறோம். இருந்தாலும் அதனைக் குறைப்பதற்கு நாம் தேனையா உட்கொள்கிறோம்?. இல்லையே. மேலும் நெய்யும் தேனும் உணவுப்பொருட்களே. இதில் எதை அதிகம் உண்டாலும் சிக்கல் வரும். அதனால் தானே ' அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு' என்று கூறினர் பெரியோர். எனவே இப் பழமொழி இங்கே உணவுப் பொருட்களைக் குறித்து வரவில்லை என்பது தெளிவாகிறது. 

கருத்து 3:

கருத்து 2 னைப் போலவே இதுவும் ஆநெய், பூநெய்யுடன் தொடர்புடையதே. ஆனால் சற்று மாறுபடுவது; ஆன்மீகத்துடன் தொடர்புடையது. இக் கருத்தின் படி,

இறைவனுக்கு முதலில் பசுநெய்யால் முழுக்காட்டப்படும். அதன்பின்னர்
தேனால் முழுக்காட்டப்படும்.

இக் கருத்தும் பொருத்தமானதாகத் தெரியவில்லை. ஏனென்றால் இறைவனுக்கு செய்யப்படும் முழுக்காட்டுதலைப் பழமொழியாகச் சொல்ல வேண்டிய தேவை ஒன்றுமில்லை. மேலும் இறைவனுக்குப் பலவகையான முழுக்காட்டுதல்கள் உண்டு. எனவே இப்பழமொழி இங்கே இறைவனுடன் தொடர்புடையதாய் வரவில்லை என்பது தெளிவு.

இனி, முதலாம் கருத்துக்கு அரணாக உள்ள இப் பழமொழியின் பின்புலம் பற்றிக் காண்போம்.

பழமொழியின் பின்புலம்:

பழமொழிகளிலே பலவகைகள் உண்டு. பழமொழிகள் கூறுகின்ற கருத்துக்களின் அடிப்படையில் அவற்றை மருத்துவப் பழமொழி, வேளாண்மைப் பழமொழி, இலக்கியப் பழமொழி, வரலாற்றுப்பழமொழி என பலவகைகளாகப் பிரிக்கலாம்.

நாம் தலைப்பில் கண்ட பழமொழியானது ஒரு வேளாண்மைப் பழமொழி ஆகும். வேளாண்மையே மக்களின் அடிப்படைத் தொழில் என்பதால் இது தொடர்பாக பல பழமொழிகள் வழக்கில் எழுந்தன. அவற்றில் ஒரு சில பழமொழிகள் மட்டும் சான்றாகக் கீழே தரப்பட்டுள்ளன. (நன்றி: விக்கிகோட்.ஆர்க்)

காற்றுள்ள போதே தூற்றிக் கொள்
உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்கு மிஞ்சாது.
அகல உழுவதை விட ஆழ உழுவது மேல்.
அறுக்க மாட்டாதவன் இடுப்பில் ஐம்பத்தெட்டு கருக்கு அருவாளாம்.
அறுப்புக் காலத்தில் எலிக்கு ஐந்து பெண்சாதி.
ஆடிப் பட்டம் தேடி விதை.

மேலே கண்டதைப் போல, வேளாண்மைத் தொழிலை அடிப்படையாகக் கொண்டு எழுந்த பழமொழிகள் பலவற்றுள்ளும், நமது தலைப்புப் பழமொழிக்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு. இப் பழமொழியானது வேளாண்மைத் தொழிலில் பயன்படுத்தப்படும் விலங்குகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட ஒன்றாகும்.

வேளாண்மைத் தொழிலில் மிக அதிகமாக பயன்படுத்தப்படும் விலங்கு 'எருது' என்பது அனைவருக்கும் தெரியும். உழவுமாடாகவும் வண்டி மாடாகவும் பெரிதும் பயன்படுவது எருதே ஆகும். பல நேரங்களில் விளைந்த நெற்கதிர்களை கதிரடிக்கவும் இவற்றைப் பயன்படுத்துவர். ஆனால், விளைச்சல் அதிகமாக இருந்தால், யானைகளையும் கதிரடிக்கப் பயன்படுத்துவர். இதன் அடிப்படையில் எழுந்தது தான் கீழ்க்காணும் பாடல்:

" மாடு கட்டிப் போரடித்தால்
மாளாது செந்நெல் என்று
ஆனை கட்டிப் போரடிக்கும்
அழகான தென்மதுரை."


மிக அழகான இப் பாடலை இயற்றியது யார் எனத் தெரியவில்லை. ஆனால், தென்மதுரையில் உழவுத் தொழில் எவ்வளவு செழித்திருந்தது என்பது மட்டும் இப்பாடலின் மூலம் நன்கு தெரிகிறது.

இப்படி யானைகளைக் கொண்டு கதிரடித்த பின்னர், பிரிந்த நெல்மணிகளைத் தனியாக எடுத்துத் தானியக் கிடங்குகளில் சேமித்து வைத்திருப்பர். இப்போது தான் சிக்கல் துவங்குகிறது. சேமித்து வைக்கப்பட்டுள்ள இந்த நெல்மணிகளைக் குறிவைத்து எலிகளின் பட்டாளம் படையெடுக்கத் துவங்குகின்றது. ஒவ்வொரு எலியும் தனக்குத் தேவையானதை விட ஐந்து மடங்கு தானியத்தை அள்ளிக் கொண்டு செல்லுமாம். இதனடிப்படையில் தான்,

" அறுப்புக் காலத்தில் எலிக்கு ஐந்து பெண்சாதி "

என்ற பழமொழியே எழுந்தது எனலாம்.

கூட்டம் கூட்டமாக இவை புகுந்து நெல்மணிகளைத் திருடிக் கொண்டு செல்வதை அப்படியே விட்டுவிட்டால், கிடங்கையே காலி செய்து விடும். எனவே இந்த எலிகளைக் கூண்டோடு ஒழிக்க, பூனைகளைக் கொண்டுவந்து தானியக் கிடங்குக்குள் வைப்பர். பூனைகளும் கிடங்கிற்குள் வருகின்ற எலிகளை வேட்டையாடித் தின்றுவிடும்.

முடிவுரை:

இவ்வாறாக கதிரடிக்கும் காலத்தில் யானையின் உதவியும் சேமிக்கும் காலத்தில் பூனையின் உதவியும் மனிதருக்குத் தேவைப்பட்டது. இதைத்தான்,

யானைக்கொரு காலம் வந்தால்
பூனைக்குமொரு காலம் வரும்.

என்று கூறிச் சென்றுள்ளனர் நம் முன்னோர். இப் பழமொழியில் இருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டிய இன்றியமையாத செய்தி என்னவென்றால்:

மிகப் பெரிய யானைகள் மட்டுமே பயன் தருபவை அல்ல.
மிகச் சிறிய பூனைகளும் தான். எனவே
உருவு கண்டு எள்ளாமை வேண்டாம்.! ( நன்றி: திருவள்ளுவர்)



......................................... தமிழ் வாழ்க!.......................................................

வியாழன், 8 மார்ச், 2012

மாசில் வீணை (75 ஆம் கட்டுரை)

முன்னுரை:

ஒளியின் வடிவாய் அண்டவெளி எங்கும் நிறைந்திருக்கும் சிவபரம்பொருளைப் போற்றிப்பாடிய பலருள்ளும் தேவார நால்வராகிய அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர் ஆகியோர் குறிப்பிட்டுச் சொல்லத் தக்கவர்கள். ஏனென்றால் இவர்களது பாடல்கள் கற்போரையும் பாடுவோரையும் நெஞ்சம் கரைந்துருகச் செய்து சிவபக்தனாக்கி விடும் தன்மை கொண்டவை. இவர் நால்வருள்ளும் வயதில் மூத்தவரும் இறை அனுபவம் மிக்கவருமாகிய அப்பரின் பாடல்கள் மிகவும் இனிமையானவை.

மருள்நீக்கியார் என்ற இயற்பெயர் கொண்ட இவர் துவக்கத்தில் சமண சமயம் தழுவி தருமசேனர் என்ற பட்டப்பெயர் பெற்றார். பின்னர் சூலைநோயினால் சிவ பக்தனாக மாறினார். சிவபக்தனாக மாறியமைக்காக அவர் பட்ட துன்பங்கள் கொஞ்ச நஞ்சமல்ல.. சமணர்கள் செய்த சூழ்ச்சியால் அரசனால் சுண்ணாம்புக் காளவாசலுக்குள் (நீற்றறை) சிறை வைக்கப்பட்டார். கடுமையான வெப்பமும் சுண்ணாம்பின் கார நெடியும் எந்த ஒரு சாதாரண மனிதனையும் சிலமணி நேரம் கூட உயிரோடு விட்டு வைக்காது. என்ன ஆச்சரியம்! சிவன் அருளால் திருநாவுக்கரசர் ஏழு நாட்களுக்குப் பின்னும் நீறறறையில் இருந்து உயிரோடு வெளி வந்தார். சொக்கலிங்கத்தின் அருளால் நீற்றறை அவருக்கு சொர்க்கலோகம் ஆனது. திருநாவுக்கரசர் நீற்றறைக்குள் தனது அனுபவம் எப்படி இருந்தது என்று கூறுவதைப் பாருங்கள்.

இறையருள் தந்த இன்பங்கள்:

மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
ஈசன் எந்தை இணையடி நீழலே.

இப்பாடலுக்குத் தற்போது கூறப்படும் பொருள் இதுதான்: " மாசில் வீணை காதிற்கு இன்பம். மாலை மதியம் கண்ணிற்கின்பம். வீசு தென்றல் மூக்கிற்கு நறுமணம் சேர்த்து இன்பம் நல்கும். வண்டு அறை பொய்கை நாவிற்கு இன்பம். (நீரினால்) இளவேனில் மெய் உடலுக்கு இன்பம். இவ்வாறு ஐம்பொறிகளாகிய மெய், வாய், கண், மூக்கு, செவி எனும் ஐம்பொறிகளின் வாயிலாக சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்னும் ஐம்புல இன்பம் நுகர்தல் உலகியல், இதேபோன்று பொறி புலன் இன்றி உயிர் நேரே அனுபவிக்கும் இன்பமே இறையின்பம். சிற்றின்பம் சிறுகாலை இன்பம். பேரின்பம் - என்றும் மாறுபாடு இல்லாது நிலைத்திருப்பது. அதற்கு உலகியல் சிற்றின்பங்களைக் காட்டித்தான் சாதாரண மக்கட்கு இறை இன்பத்தை உணர்த்த இயலும். அந்தமுறையில் அப்பர் நீற்றறையில் தாம் அனுபவித்த இறையின்பத்தை உலகியலோடு இணைத்துச் சுவைபட அருளியுள்ளமை அறிந்து இன்புறத்தக்கது. "

உரைத்தவறுகள்:

மேற்காணும் உரையில் சில தவறுகள் உள்ளன. அவற்றை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

மாசில் வீணை காதிற்கு இன்பம். - இக்கருத்து சரியானது.

மாலை மதியம் கண்ணிற்கு இன்பம் - இதுவும் சரியானதே.

வீசு தென்றல் மூக்கிற்கு இன்பம் (நறுமணத்தால்) - இது சரியல்ல. ஏனென்றால் தென்றல் காற்று தனது மென்மைத் தன்மையினால் உடலை வருடும்போது உடலுக்கு ஒரு சுகத்தைக் கொடுக்குமே அல்லாமல் மூக்கிற்கு நறுமணத்தைக் கொண்டு வராது. நறுமணமோ துர்நாற்றமோ அது தென்றல் கடந்து வரும் பாதையைப் பொருத்ததே அன்றி தென்றலுக்குரிய பொதுவான பண்பல்ல. மேலும் பாடலில் 'வீசு தென்றல்' என்று தான் உள்ளதே ஒழிய 'நறுமணம்' என்ற பொருளைக் குறிப்பதாக எந்த ஒரு சொல்லும் அதனுடன் இல்லாதது குறிப்பிடத்தக்கது. ஆக, வீசு தென்றல் மூக்கிற்கு நறுமணம் தரும் என்ற கருத்து ஏற்புடையதல்ல.

மூசு வண்டு அறை பொய்கை நாவிற்கு இன்பம் (நீரினால்) - இந்தக் கருத்தும் ஏற்புடையதல்ல. ஏனென்றால் பொய்கை என்பது தேங்கி நிற்கும் நீரை உடைய சிறுகுளத்தைக் குறிப்பதாகும். 'மூசு வண்டு அறை பொய்கை' என்று கூறி இருப்பதால் அப் பொய்கையில் வண்டுகள் மொய்ப்பதான பல பூக்கள் பூத்துள்ளமை அறியப்படுகிறது. ஆக, நீர் தேங்கி இருப்பதாலும் அதில் பல மலர்கள் பூத்திருப்பதாலும் பொய்கை நீரானது நாட்பட்ட தன்மையினால் நிறமும் சுவையும் மாறி இருக்கும். மேலும் பொய்கையில் பாம்பு, தவளை, பூச்சிகள் போன்றவையும் வாழ்வதால் பொய்கை நீரினை யாரும் அருந்த மாட்டார்கள். எனவே மூசு வண்டறை பொய்கை நாவிற்கு இன்பம் என்னும் கருத்து தவறு என்பது பெறப்படுகிறது.

வீங்கு இளவேனில் மெய் உடலுக்கு இன்பம் - இக் கருத்தும் பொருத்தமற்றதே. ஏனெனில் இப்பாடலில் வரும் இளவேனில் என்பது பருவ காலத்தைக் குறித்து வந்திருக்க வாய்ப்பில்லை. இது எவ்வாறு என்று பார்ப்போம்.

வீங்குதல் என்ற சொல்லுக்குக் கீழ்க்காணும் பொருட்கள் இருப்பதாக சென்னை இணையத் தமிழ்ப் பேரகராதி கூறுகின்றது.

வீங்கு-தல் vīṅku- , 5 v. intr. [K. bīgu.] 1. To increase in size; to become enlarged; பருத் தல். (நாமதீப. 710.) 2. To swell; பூரித்தல். மணந்தநாள் வீங்கிய தோள் (குறள், 1233). 3. To become morbidly inflamed and swollen; வீக்க முறுதல். (பொரு. நி.) 4. To grow; வளர்தல். (அக. நி.) 5. To be copious or excessive; to increase; மிகுதல். வளம் வீங்கு பெருக்கம் (பதிற்றுப். 24, 17). 6. To be close, crowded; நெருங்குதல். (சூடா.) 7. To become tight and pressing; இறுகுதல். வீங்கிறை தடக்கையின் (குறிஞ்சிப். 123). 8. To be taut and not slack; விறைப்பாய் நிற்றல். விளரூன் றின்ற வீங்குசிலை மறவர் (அகநா. 89, 10). 9. To go up; மேனோக்கிச் செல்லுதல். நாவிளிம்பு வீங்கி (தொல். எழுத். 96). 10. To become emaciated; மெலிதல். அவன் வீங்கலா யிருக்கிறான். 11. To have morbid desires; ஏக்கங்கொள்ளுதல். 12. To sleep; தூங்கு தல். (யாழ். அக.)

மேற்காணும் பொருட்களுள் ஏதேனும் ஒரு பொருளாவது இளவேனில் பருவத்தின் தன்மைகளுடன் பொருந்தி வருகின்றதா என்று பார்த்தால் ஒன்றும் பொருந்தாத நிலையே காணப்படுகிறது. இதிலிருந்து, 'வீங்கு இளவேனில்' என்ற சொல்லில் வரும் இளவேனில் என்ற சொல் பருவகாலத்தைக் குறித்து இங்கு வரவில்லை என்பது பெறப்படுகிறது. என்றால், இளவேனில் என்பது இப்பாடலில் எதைக் குறிக்கும் என்பதைக் காணலாம்.

வேனில் என்றால் என்ன?

வேனில் என்ற சொல்லுக்குத் தற்போதிய அகராதிகள் கீழ்க்காணும் பொருளைத் தருகின்றன.

வேனில்¹ veṉil, n. prob. வே-. 1. See வேனிற்காலம். வேனிலாயினுந் தண்புனலொழுகுந் தேனூர் (ஐங்குறு. 54). 2. Spring season; இள வேனில். 3. Heat; வெப்பம். வேனி னீடிய சுர னிறந்தோரே (அகநா. 201). 4. Mirage; கானல். (பிங்.)
வேனில்² vēṉil. , n. prob. வேய்¹-. (பிங்.) 1. Decoration; ஒப்பனை. 2. Beauty; அழகு. 3. Splendour; பொலிவு.

திருநாவுக்கரசர், மேற்காணும் பொருட்களில் அல்லாமல், புதிய பொருளில் 'வேனில்' என்ற சொல்லைக் கையாண்டுள்ளார். அதுதான் 'பனைமரத்தின் நுங்கு' ஆகும். ஆம், வேனில் அதாவது கோடைகாலம் என்றதும் நம் எல்லோருக்கும் உடனே நினைவுக்கு வருவது 'பனைமரத்தின் நுங்கு' தானே?. இன்சுவையும் குளிர்ச்சியும் மிக்க நுங்கினை விரும்பி உண்ணாதவர் யாரே இருக்க முடியும் இவ் உலகில்?.

வேனில் என்பது முதலில் பனைமரம் என்ற பொருளிலும் பின்னர் அதன் பயனாகிய நுங்கினையும் குறிக்கப் பயன்படலாயிற்று. பனைமரம் என்ற பொருளில் இலக்கியத்தில் கீழ்க்காணும் இடங்களில் பயன்படுத்தப் பட்டுளளது.

வேனில் அருஞ்சுரம் தண்ணிய இனிய வாக - ஐங்கு: 303
தண்பத வேனில் இன்ப நுகர்ச்சி - ஐங்கு: 368

மள்ளர் அன்ன மரவந் தழீஇ மகளிர் அன்ன ஆடுகொடி நுடக்கும்
அரும்பதம் கொண்ட பெரும்பத வேனில்.. - ஐங்கு: 400

மேற்காணும் பாடல்களில் வரும் வேனில் என்பது பனைமரத்தினையும் பதம் என்பது நுங்கினையும் குறித்து வந்துள்ளன. ஐங்குறுநூற்றின் 400 ஆவது பாடலில் வரும் உவமை மிக அழகானது. கருமை நிறங்கொண்ட வீரர்களைத் தழுவி நிற்கும் மகளிரைப் போல கரிய பனைமரத்தினைச் சுற்றி மெல்லிய கொடிகள் பரந்துள்ளதைக் கூறுகின்றன அவ் வரிகள். மேலும் சில பாடல்கள்:

வேனில் ஓரிணர் தேனோடு ஊதி ஆராது பெயருந் தும்பி - - குறு. 211
நிழலுரு இழந்த வேனில் குன்றத்து - மதுரை.: 313

எரியணிந்த விளம்பிண்டி யிணரார்ந்த விடமெல்லாம்
பொரியணிந்த புன்குதிர்ந்து பூநாறுந் துறையெல்லாம்
வரியணிந்து வண்டூத வளர்கின்ற இளவேனில்
புரியணிந்த குழலீர்நுஞ் செல்வம்போற் பொலிந்ததே
- சூளாமணி

அகநானூற்றின் 333 ம் பாடல் பனைமரத்தின் மேலுள்ள வரிகள் யானையின் கரிய துதிக்கையில் உள்ள வரிகளைப் போல இருப்பதை நமக்கு நினைவூட்டுகிறது.

வேனில் வெளிற்றுப்பனை போலக் கையெடுத்து
யானைப் பெருநிரை வானம் பயிரும்....

பனைமரத்தின் அருகில் இருந்த ஒரு மரத்தில் அமர்ந்திருந்த பறவை ஒன்று எதையோ உண்டுகொண்டு இருந்தது. அப்போது திடீரென காற்று வீசவும் பனைமரத்தின் நடுவில் இருந்த காய்ந்த ஓலையானது காற்றில் அசைந்து சடசடவென்று ஒலியெழுப்ப, அதைக்கேட்டு அஞ்சிய பறவை உணவை உண்ணாமல் மரத்தைவிட்டுப் பறந்துசென்ற காட்சியைக் கண்முன்னர் காட்டும் சங்கப்பாடல் வரிகள் கீழே:  

வேனில் அரையத்து இலையொலி வெரீஇ
போகில் புகா உண்ணாது பிறிதுபுலம் படரும் .. - ஐங்கு. 325


மேற்காணும் சான்றுகளில் இருந்து வேனில் என்பதற்கு தற்போதைய அகராதிகள் கூறி இருக்கும் பொருட்களைத் தவிர,

பனைமரம், நுங்கு போன்ற பொருட்களும் உண்டென்பது உறுதியாகிறது.

திருந்திய பொருள்:

மேற்கண்ட புதிய பொருட்களின் அடிப்படையில், இப்பாடலின் புதிய பொருள் பின்வருமாறு:

குற்றமிலாத வீணையின் இன்னிசையும், மாலை நேரத்து சந்திரனின் தண்ணொளியும், வீசுகின்ற தென்றலின் குளிர்ச்சியும், பருத்த இள நுங்குகளின் இன்சுவையும், மொய்க்கும் வண்டுகளின் ஆரவார மிக்க மலர்ப் பொய்கையின் வாசமும் போல எந்தையாகிய ஈசனின் திருவடி நீழல் எமக்கு (நீற்றறைக்குள்) இன்பம் நல்கியது.

நிறுவுதல்:

திருநாவுக்கரசருக்கு நீற்றறையில் நேர்ந்த அனுபவத்தினை இப்பாடல் மிக அழகான உவமைகளுடன் கூறுகிறது. பொதுவாக சுண்ணாம்பு சுடப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு நீற்றறைக்குள் சிறை வைக்கப்படும் ஒருவரது ஐந்து புலன்களும் சொல்லொணாத வேதனைகள் அடையும் என்பது அனைவரும் அறிந்த உண்மை. ஆனால், இங்கே சிவபெருமானின் அருளால் திருநாவுக்கரசருக்கு எவ்வித வேதனைகளும் ஏற்படவில்லை. மாறாக, ஐந்து புலன்களுக்கும் நல்ல விருந்து கிடைத்ததாகச் சொல்கிறார் அவர். இந்த ஐம்புல விருந்துகளைப் பற்றியும் ஒவ்வொன்றாகக் கீழே காணலாம்.

முதலில், இப்பாடலில் வரும் வேனில் என்னும் சொல்லுக்கு நுங்கு என்ற பொருள் எவ்வளவு பொருத்தமாயுள்ளது என பார்ப்போம.

வீங்கு இள வேனில் = பருத்த இள நுங்கின் சுவை

நுங்கில் இள நுங்கு, கல் நுங்கு என இருவகை உண்டு. இதில் இள நுங்கானது தொட்டால் மெதுவாக இருக்கும். உள்ளே இன்சுவையுடைய நீரைக் கொண்டிருக்கும். கல் நுங்கானது முதிர்ந்த தன்மையுடன் தொட்டால் கல் போல கடினமாக இருக்கும். இதில் நீர் இருக்காது. கடித்தால் தேங்காயைப் போன்ற சுவையுடன் இருக்கும். மக்கள் பெரும்பாலும் விரும்பிச் சுவைப்பது இள நுங்கினையே. ஏனென்றால் இதன் நீரானது மிக இனிய சுவையுடன் கோடைகாலத்தில் உண்டாகும் உடல் சூட்டைக் குறைக்கும் அளவுக்கு குளிர்ச்சியும் கொண்டிருக்கும். திருநாவுக்கரசர் நீற்றறையில் இருக்கும்போது சுண்ணாம்பின் காரநெடியால் அவரது நாக்கில் கொப்புளங்களோ புண்களோ உண்டாகவில்லை; மாறாக ஈசனின் அருளால் அவரது நாக்கில் இள நுங்கின் இன்சுவை உடைய நீர் ஊறிற்றாம். என்னே ஈசனின் அருள்!.

மாசில் வீணை = குற்றமில்லாத வீணையின் இசை

இசைக்கருவிகள் பலவற்றுள்ளும் வீணைக்கென்று தனிச்சிறப்பு உண்டு. இதன் இசை கேட்பவர் நெஞ்சை நெகிழ்த்தி விடும். கலைமகள் கையிலும் இந்த வீணையே உள்ளது. வீணையிலும் குற்றமில்லாத வீணை அதாவது பிசிறில்லாமல் தெளிவாக இசைக்கும் வீணையின் இசை செவிக்கு பேரின்பம் தருவதாகும். பொதுவாக ஒரு சுண்ணாம்புக் காளவாசலில் சுண்ணாம்பு சுடப்படும் போது வெடிக்கும் சப்தமும், கொதிக்கும் சப்தமும் கலந்த நிலையில் கேட்பவரது காதும் மனதும் புண்ணாகி விடும். ஆனால், திருநாவுக்கரசருக்கோ அப்படி ஒரு நிலை ஏற்படவில்லை. இறைவனின் அருளால் அவரது காதில் குற்றமில்லாத வீணையின் இனிய இசையே கேட்டதாம். என்னே பரமனின் அருள்!

மாலை மதியம் = மாலை நேரத்து சந்திர ஒளி

அதென்ன மாலை நேரத்து சந்திர ஒளி?. சந்திரனின் ஒளியானது இரவு முழுக்க நமக்குக் கிடைத்தாலும் மாலை நேரத்தில் ( 6 மணி முதல் 10 மணி வரை) கிடைக்கும் முதல் ஒளியினையே நாம் பெரும்பாலும் காண்கிறோம. நிலாச்சோறு காட்டி ஊட்டுவதில் இருந்து காதலர்கள் ஒன்றாகக் கூடி கண்ணுற்று மகிழ்வது வரை நிகழும் நிகழ்ச்சிகள் எல்லாம் 10 மணிக்குள் முடிந்துவிடும். அதன்பின்னர் சாமப்பொழுது ( 10 மணி முதல் 2 மணி வரை) துவங்கி விடுவதால் பெரும்பாலும் தூங்கச் சென்று விடுவர். எனவே தான் மாலை நேரத்து சந்திரன் இங்கு பேசப்படுகிறான். பொதுவாக சுண்ணாம்புக் காளவாசலில் ஒருவர் மாட்டிக் கொண்டால், அதிலிருந்து வெளிப்படும் வெப்பம் மிகுந்த புகையினால் கண்களைத் திறந்து பார்க்கவே முடியாது. ஆனால் திருநாவுக்கரசருக்கோ வேறு மாதிரியான காட்சி தெரிகிறது. அவருக்கு புகை மண்டலம் தெரியவில்லை. மாறாக, கண்ணிற்கினியதாய் மாலை நேரத்து சந்திரனின் ஒளியைப்போல தெளிவான இனிமையான காட்சி தெரிகிறது. என்னே ஈசனின் அருள்!

வீசு தென்றல் = வீசுகின்ற தென்றல் காற்றின் குளுமை

கொண்டல், கோடை, தென்றல், வாடை என்ற நால்வகைக் காற்றுள்ளும் தென்றல் காற்று இதமானது மட்டுமின்றி குளுமையானதும் கூட. இதைப்பற்றி தொல்தமிழகம் - பகுதி 1 என்ற ஆய்வுக் கட்டுரையில் விரிவாகக் கண்டுள்ளோம். இனி, நீற்றறையில் சிக்கிக்கொண்ட ஒருவருக்கு அதிலிருந்து வரும் வெப்பக் காற்றினால் அவரது உடல் படும்பாடு சொல்லொணாதது. ஆனால் திருநாவுக்கரசருக்கோ அந்த நீற்றறையில் வெப்பமே தெரியவில்லையாம். மாறாக நீற்றறைக்குள் தென்றல் வீசுவதைப் போல இதமாகவும் உடலுக்குக் குளுமையாகவும் இருந்ததாகச் சொல்கிறார். அட, இதல்லவா ஈசனின் அருள்!

மூசு வண்டறை பொய்கை = மொய்க்கும் வண்டுகள் ஆரவரிக்கும் குளத்து வாசனை

பொதுவாக பொய்கை என்றாலே அதில் அல்லி, தாமரை முதலான பல நீர்ப்பூக்கள் பூத்திருக்கும். இப் பூக்களினால் கவரப்பட்ட வண்டுகள் அப்பூக்களைச் சுற்றிப் பறந்தவாறு அங்குமிங்கும் திரிந்து கொண்டு ஒலி எழுப்பிக் கொண்டிருக்கும். பலவிதமான பூக்களின் நறுமணக் கலவையால் பொய்கைக்கு அருகில் சென்றாலே ஒருவித நறுமண வாசனையை அறிய முடியும். பொதுவாக நீற்றறைக்குள் சுண்ணாம்பின் காரநெடிதான் இருக்கும். இந்தக் காரநெடியால் மூக்கு புண்ணாகி எரிவதுடன் மூச்சடைப்பும் ஏற்படும். ஆனால், திருநாவுக்கரசருக்கோ நீற்றறைக்குள் ஒரு பொய்கையின் மலர் வாசனையே கிடைத்ததாம். நறுமணமிக்க பல பூக்களின் வாசனையை முகர்ந்ததாகக் கூறுகிறார். என்னே சிவனருள்! என்னே சிவனருள்!

முடிவுரை:

இப்படி ஐந்து புலன்களும் வெந்து போகும்படியான ஒரு சுண்ணாம்புக் காளவாசலுக்குள் தள்ளப்பட்ட திருநாவுக்கரசருக்கோ இறையருளால் ஐந்து புலன்களும் மகிழ்ந்து இன்புறுமாறு ஒரு பெரிய விருந்து கிடைத்தது. சுண்ணாம்புக் காளவாசல் அன்றி வேறு ஒரு சாதாரண சிறைக்குள் அவரை அடைத்திருந்தாலும் இப்படி ஒரு ஐம்புலன் விருந்து கிடைத்திருக்காது என்றே சொல்லலாம். ஏனென்றால் சுண்ணாம்புக் காளவாசலில் தான் ஐந்து புலன்களுக்கும் தீங்கு விளைவிப்பதான புகையும் வெப்பமும் ஒலியும் ஒருங்கே இருக்கும். இந்த நீற்றறையில் என்ன நடந்திருக்கும் என்பதை சற்று கற்பனை செய்து தான் பார்ப்போமே.

நீற்றறைக்குள் சிறைவைக்கப்பட்டதும் திருநாவுக்கரசர் திடுக்கிட்டுப் போகிறார். வெப்பமிக்க சுண்ணாம்புப் புகையினால் அவரால் கணகளையே திறக்க இயலவில்லை. கண்களை மூடிக் கொள்கிறார். உடல் சுடுகிறது. நா வறள்கிறது. மூக்கில் சுண்ணாம்புப் புகை புகுந்து துன்புறுத்துகிறது. சுண்ணாம்பு வெடிக்கும் ஒலியும் கொதிக்கும் ஒலியும் காதில் புகுந்து வேதனைப் படுத்துகிறது. இனி சிவனே கதி என்று கண்களை மூடிய நிலையிலேயே அமர்ந்து ஈசனின் ஐந்தெழுத்து மந்திரத்தை ஓதத் துவங்குகின்றார். நேரம் கடக்கிறது. எவ்வளவு நேரம் சிவ மந்திரத்தில் ஈடுபட்டிருந்தாரோ அவருக்கே தெரியவில்லை. திடீரென்று இதுவரை கேட்டுக் கொண்டிருந்த வெடியொலியும் கொதியொலியும் அடங்கி விட்டிருந்தது. எங்கிருந்தோ இனிமையான வீணையின் இசை அவரது காதில் கேட்கிறது. துணுக்குற்ற அவர் கண்களைத் திறந்து பார்க்கிறார். என்னே ஆச்சர்யம்! அவர் முன் இருந்த புகை மண்டலம் போய் இப்போது நிலா ஒளிவீசிக் கொண்டிருந்தது. அந் நிலவொளியைக் கண்டு அவர் மகிழ்ந்திருக்கும் நேரத்தில் தென்றல் அவரை 'சுகமா?' என்று நலம் விசாரித்துச் செல்கிறது. திருநாவுக்கரசரின் உடல் குளிர்கிறது. சூழல் முற்றிலும் மாறிப்போன மகிழ்ச்சியில் அவரது நாவில் நீர் ஊறுகிறது. அட, இந்த உமிழ்நீர் ஏன் இன்று இளநுங்கின் நீரைப் போல் இனிக்கிறது? என்று மயங்குகிறார் திருநாவுக்கரசர். ஈசன் நமக்கு அருளிவிட்டானோ? என்ற ஐயம் தோன்றுகிறது அவர் மனதில். ஆம் என்று அவருக்குப் பதிலளிப்பதைப் போல அவரது மூக்கிற்குள் நுழைகிறது பூக்களின் நறுமண வாசம். ஈசனின் அருளால் திக்குமுக்காடிப் போகிறார் திருநாவுக்கரசர். மீண்டும் கண்களை மூடிக்கொண்டு சிவ மந்திரத்தை ஓதத் துவங்குகிறார் நீற்றறையின் கதவுகள் திறக்கப்படும் வரை.

ஓங்குக திருநாவுக்கரசர் புகழ்!          ஓங்கி வளர்க அவர்தம் தமிழ்!
...............................................................................................................................