புதன், 30 அக்டோபர், 2013

திருவள்ளுவர் சாதிசமயங்களை ஆதரித்தாரா? ( வள்ளுவரும் பார்ப்பனரும் )

முன்னுரை:

திருக்குறள் என்பது வள்ளுவர் மனு தர்மத்தைத் தழுவி எழுதிய நூல் என்றும் வள்ளுவர் சாதி சமயங்களை ஆதரித்தார் என்றும் தவறான கருத்துக்கள் உலாவருகின்றன. இக் கருத்துக்களுக்கு ஆதாரமாக சிலர் சில குறள்களை எடுத்துக்காட்டி வருகின்றனர். இக் கருத்துக்கள் முற்றிலும் தவறு என்பதையும் அந்த ஆதாரங்கள் பிழையானவை என்பதையும் பல்வேறு ஆதாரங்களுடன் உறுதி செய்வதே இக் கட்டுரையின் தலையாய நோக்கமாகும்.

வள்ளுவர் கூறும் பார்ப்பான் யார்?

முதலில் ஒழுக்கமுடைமையில் வரும் பார்ப்பான் என்ற சொல் பயன்பாடு பற்றிக் காணலாம். 

மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்.  - 134

இக் குறளுக்கு தற்போது கூறப்பட்டு வரும் விளக்க உரைகள் கீழே தரப்பட்டுள்ளன.

கலைஞர் உரை: பார்ப்பனன் ஒருவன் கற்றதை மறந்துவிட்டால் மீண்டும் படித்துக் கொள்ள முடியும்; ஆனால், பிறப்புக்குச் சிறப்பு சேர்க்கும் ஒழுக்கத்திலிருந்து அவன் தவறினால் இழிமகனே ஆவான்.

மு.வ உரை: கற்ற மறைபொருளை மறந்தாலும் மீண்டும் அதனை ஓதிக் கற்றுக் கொள்ள முடியும்; ஆனால் மறை ஓதுபவனுடைய குடிப்பிறப்பு, ஒழுக்கம் குன்றினால் கெடு்ம்.

சாலமன் பாப்பையா உரை: பார்ப்பான் தான் கற்ற வேதத்தை மறந்து போனாலும் பிறகு கற்றுக் கொள்ளலாம்; ஆனால், அவன் பிறந்த குலத்திற்கு ஏற்ற மேலான ஒழுக்கத்திலிருந்து தாழ்ந்தால் அவன் குலத்தாலும் தாழ்வான்.

பரிமேலழகர் உரை: ஓத்து மறப்பினும் கொளலாகும் - கற்ற வேதத்தினை மறந்தானாயினும் அவ் வருணம் கெடாமையின் பின்னும் அஃது ஓதிக்கொள்ளலாம், பார்ப்பான் பிறப்பு ஒழுக்கம் குன்றக் கெடும்.- அந்தணனது உயர்ந்த வருணம் தன் ஒழுக்கம் குன்றக் கெடும். (மறந்தவழி இழிகுலத்தனாம் ஆகலின், மறக்கலாகாது என்னும் கருத்தான், 'மறப்பினும்' என்றார். சிறப்புடை வருணத்திற்கு மொழிந்தமையின், இஃது ஏனைய வருணங்கட்கும் கொள்ளப்படும்.).

மணக்குடவர் உரை: பிராமணன் வேதத்தினை ஓதி மறந்தானாயினும் பின்னும் ஓதிக் கொள்ளலாம்: ஒழுக்கங் குறையுமாயின் குலங்கெடும். இஃது ஒழுக்கம் கல்வியிலும் வலிதானவாறு கூறிற்று.

உரைத் தவறுகள்:

மேலே கூறப்பட்டுள்ள விளக்க உரைகள் யாவும் 'பார்ப்பான்' என்பதற்கு 'பிராமணன்' என்றும் 'அந்தணன்' என்றும் கூறி அதை ஒரு சாதிப் பெயராகக் கற்பிக்கிறது. இக் கருத்து முற்றிலும் தவறான ஒன்றாகும். இதற்கான காரணங்கள் கீழே முன்வைக்கப்படுகின்றன.

1. இக் குறளில் ஒரு குறிப்பிட்ட சாதியினைப் பற்றிக் கூற வேண்டிய கட்டாயமோ தேவையோ முதலில் வள்ளுவருக்கு இல்லை எனலாம். காரணம் எச் சாதியினராக இருந்தாலும் கற்ற கல்வியை மறந்து விட்டால் மீண்டும் படித்துக் கொள்ளலாம்.

2. மக்களுக்குக் கல்வியின் தேவையினையும் அதனால் உண்டாகும் சிறப்பினையும் விரிவாகப் பல குறள்களில் கூறியுள்ள வள்ளுவர் அக் கல்வியினை ஒரே ஒரு குறிப்பிட்ட சாதியினருக்கு மட்டுமே உரிய பொருளாகத் தோன்றும் வகையில் ஒரு கருத்தினை ஒருபோதும் கூறமாட்டார்.

3. ஒழுக்கம் கெட்டு நடந்தால் பிராமணர் மட்டுமல்ல எச் சாதியினரின் பெருமையும் கெட்டுவிடும் என்பது வள்ளுவர் மட்டுமல்ல நாம் அனைவருமே அறிந்த உண்மை. அவ்வாறிருக்க பார்ப்பான் என்ற சொல்லின் மூலம் ஒரு குறிப்பிட்ட சாதியின் பெருமை மட்டுமே கெடும் என்று வள்ளுவர் கூறுவதாகப் பொருள் கொண்டால் அது வள்ளுவரின் நுண்மாண் நுழைபுலத்திற்கும் சான்றாண்மைக்கும் இழுக்காய் அமைந்து விடும் என்பது வெளிப்படை.

4. வள்ளுவர் இதே போல பார்ப்பார் என்ற சொல்லை குறள் 285 லும் கையாண்டுள்ளார். ஆனால் அங்கு அச் சொல் எந்த சாதியினையும் குறிப்பிடுவதான பொருளில் வரவில்லை.

அருள்கருதி அன்புடைய ராதல் பொருள்கருதிப்
பொச்சாப்புப் பார்ப்பார்கண் இல்.

இதிலிருந்து வள்ளுவர் கூறும் பார்ப்பான் என்ற சொல் ஒரு குறிப்பிட்ட சாதியினரைக் குறித்து வரவில்லை என்பது தெளிவாகிறது. என்றால் இதன் உண்மையான பொருள் என்ன என்று பார்க்கலாம்.

திருத்தமும் புதிய பொருளும்:

இக் குறளில் வரும் பார்ப்பான் என்ற சொல் ஆசிரியன் / குரு  என்ற பொருளிலும் பிறப்பு என்ற சொல் வாழ்க்கை என்ற பொருளிலும் பயின்று வந்துள்ளது. இப் புதிய பொருட்களின்படி, இக்  குறளுக்கான திருந்திய பொருளானது:  

ஒரு ஆசிரியர் தனது கல்வி அறிவை மறந்தாலும் மறுபடியும் கற்றுக் கொள்ளலாம். ( இதனால் அவரது ஆசிரிய வாழ்க்கை முற்றிலும் அழியாது. ) ஆனால் அவர் தனக்குரிய ஒழுக்கத்தை மறந்து நடப்பாராயின் அவரது ஆசிரிய வாழ்க்கை முற்றும் அழியும்.

நிறுவுதல்:

இக் குறளுக்கான புதிய பொருளினை ஆதாரங்களுடன் இங்கு நிறுவலாம். முதலில் பார்ப்பான் என்ற சொல்லின் புதிய பொருள் பற்றிக் காணலாம்.

பார்த்தல் என்ற வினைக்கு கீழ்க்காணும் பொருட்களை சென்னை இணையத் தமிழ்ப் பேரகராதி காட்டுகிறது.

 பார்¹-த்தல் pār- , 11 v. tr. [K. pāru, M. pārkka.] 1. To see, look at, view, notice, observe; கண்ணால்நோக்குதல். பாராக்குறழா (கலித். 65). 2. To examine, inspect, search into, scrutinise; ஆராய்தல். படுபயனும் பார்த்துச் செயல் (குறள், 676). 3. To know; அறிதல். காலம்பார்த் துள்வேர்ப்ப ரொள்ளியவர் (குறள், 487). 4. To look for, expect; எதிர்பார்த்தல். வருவிருந்து பார்த்திருப் பான் (குறள், 86). 5. To desire, long for; விரும்பு தல். புதுமை பார்ப்பார் (கம்பரா. பூக்கொய். 9). 6. To search for, seek; தேடுதல். ஆட்பார்த் துழலு மருளில் கூற்று (நாலடி, 20). 7. To worship; வணங்குதல். (சூடா.) 8. To estimate, value; மதித்தல். அவன் வயிரம் பார்ப்பதில் கெட்டிக்காரன். Colloq. 9. To heed, pay attention to; கவனித் தல். 10. To look after, take care of, manage, superintend; மேற்பார்த்தல். பண்ணை பார்க்கிறான். 11. To peruse, look through, revise; பார்வையிடு தல். இந்தப் பத்திரத்தைப் பாருங்கள். 12. To treat, administer medicine; மருந்து முதலியன கொடுத்தல். யார் வைத்தியம் பார்த்துக் கொண்டிருக் கிறார். 13. To charm away by incantations, exorcise; மந்திரித்தல். இந்த விஷக்கடிக்கு மாந்திரி கன் பார்க்கவேணும். 14. To intend, design, attempt, purpose, aim at; கருதுதல். 15. To look at with compassion; கடைக்கணித்தல். பார்த் தொருகா லென்கவலை தீராயோ (தாயு. பராபர. 663).

பார்த்தல் என்ற வினைச்சொல்லுக்கு மேலே கூறப்பட்டுள்ள பொருட்களை நோக்கினால் அவற்றுள் மேற்பார்வையிடுதல், மதித்தல், ஆராய்தல், அறிதல், கவனித்தல், கருதுதல், எதிர்பார்த்தல் போன்ற செயல்பாடுகள் யாவும் ஒரு ஆசிரியர் / குருவுக்கானவை என்று தெளிவாகப் புரியும். பார்த்தலாகிய வினைகளைச் செய்வோரையே பார்ப்பார் என்று இக் குறளில் கூறுகிறார் வள்ளுவர். இதை ஆங்கிலத்தில் மாஸ்டர் என்றும் கூறுவார்கள்.

அடுத்து, பிறப்பு என்ற சொல்லுக்கான புதிய பொருள் பற்றிக் காணலாம். பிறப்பு என்பதற்கு கீழ்க்காணும் பொருட்களை அகராதிகள் முன்வைக்கின்றன.

பிறப்பு piṟappu , n. < பிற-. [M. piṟappu.] 1. Birth, nativity; சனனம். விழிப்பது போலும் பிறப்பு (குறள், 339). 2. Origin, production; உற்பத்தி. பிறப்பி னாக்கம் வேறுவேறியல (தொல். எழுத். 83). 3. Order or class of beings including animals and vegetables; caste; சாதி. இழுக்க மிழிந்த பிறப்பாய் விடும் (குறள், 133). 4. Beginning, commencement, as of a month or a year; தொடக்கம். வருஷப்பிறப்பு, மாசப்பிறப்பு. 5. Brother or sister; உடன்பிறந்த வர். (W.) 6. Necklace of small seed-like gold pieces; மகளிரணியும் முளைத்தாலி. காசும் பிறப் புங் கலகலப்ப (திவ். திருப்பா. 7). 7. (Pros.) A formula of a foot of one nirai-y-acainēr-acaiu, occurring as the last foot of a veṇpā; வெண்பாவின் இறுதி யில் நிரையசையொன்றுடன் உகரமான நேரசை கூடி வரும் வாய்பாடு. (காரிகை, செய். 5.) 8. Fear, alarm; அச்சம். (பிங்.) 9. Confusion, bewilderment; மயக்கம். (பிங்.) 10. Closeness, thickness, denseness; நெருக்கம். (பிங்.)

மேற்காணும் பொருட்களில் ஒன்றாக வரும்  ' தொடக்கம் ' என்பது இக் குறளில் ' வாழ்க்கையின் துவக்கம் ' என்ற பொருளில் பயன்படுத்தப் பட்டுள்ளது. மனிதர்கள் அனைவரும் ஒரே பிறப்புடையவரே; அதாவது மனிதப் பிறவியென்பது ஒன்றுதான். ஆனால் இந்த ஒரே பிறவியில் ஒருவர் எத்தனையோ வாழ்க்கையினைத் தொடங்கி வாழமுடியும்.  ஆசிரியராய், பொறியாளராய், மருத்துவராய், வழக்கறிஞராய், பாடகராய், ஓவியராய் .....

ஒவ்வொரு வாழ்க்கையிலும் சில கடமைகளும் கட்டுப்பாடுகளும் உண்டு. அதேபோல ஆசிரிய வாழ்க்கையிலும் கடமைகளும் கட்டுப்பாடுகளும் உண்டு. மாணவர்களுக்குக் கல்வி அறிவு மட்டுமின்றி நல்ல ஒழுக்கத்தையும் சேர்த்தே கற்பிக்க வேண்டிய கடமை ஆசிரியருக்கு உண்டு. அப்படி கற்பிக்கின்ற ஆசிரியர் முதலில் ஒழுக்கமுடையவராக வாழவேண்டும் என்பது அவருக்கான கட்டுப்பாடுகளில் ஒன்றாகும். தானே ஒரு சான்றாக இருந்து மாணவர்களுக்கு நல்ல ஒழுக்கத்தைக் கற்றுத் தரவேண்டிய ஆசிரியர்,  ஒழுக்கங்கெட்டு நடக்கும்போது அவரிடம் கல்வி பயிலும் மாணவர்களின் கல்வி அறிவினைப் பற்றியோ நடத்தையைப் பற்றியோ சொல்லத் தேவையில்லை.

பொதுவாக, மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இடையிலான தொடர்பு மிக நுட்பமானது. ஆசிரியரைப் பார்த்தே மாணவர்கள் தங்களது ஒழுக்கத்தைக் கற்றுக் கொள்கின்றனர். நல்ல ஒழுக்கமான ஆசிரியரிடம் கற்றுக்கொள்ளும் மாணவர்களும் நல்ல ஒழுக்கமுடையவர்களாகவே இருப்பர் என்பதில் ஐயமில்லை. பாடங்களின் பொருள் நன்கு விளங்குமாறு மாணவர்களுக்குக் கற்றுத்தந்த ஆசிரியர் திடீரென்று ஒருநாள் தனது ஞாபகமறதியால் சரியாக கற்றுத்தராமல் போனால் பெரிதாக ஒன்றும் ஆகிவிடாது. மறுநாள் அதனைத் தான் கற்றுவந்து மாணவர்களுக்கு நன்றாக சொல்லிக் கொடுத்துவிடலாம். ஆனால், அதுநாள்வரையிலும் நல்ல ஒழுக்கத்துடன் இருந்துவந்த ஆசிரியர் திடீரென்று தனது கட்டுப்பாட்டை மீறி ஒழுக்கங்கெட்டு நடக்கத் துவங்கினால், அவரது மாணவர்களுக்கு அது மிகுந்த அதிர்ச்சியைத் தரும்; அவர்களது மனதில் பெரும் குழப்பத்தை விளைவிக்கும். ஆசிரியரது நடத்தையில் ஏற்பட்ட மாறுபாட்டுக்கான காரணம் விளங்காமல் அவர்களால் பாடத்தில் கவனம் செலுத்த முடியாமல் முதலில் அவர்களது கல்வி பாதிக்கப்படும். ஆசிரியரின் கெட்ட ஒழுக்கத்தினால் அவர் மேல் மாணவர்கள் வைத்திருந்த அன்பும் மதிப்பும் கடுமையாகப் பாதிக்கப்படும். விளைவு?.

ஆசிரிய - மாணவ உறவில் விரிசல் ஏற்பட்டுப் பெரிதாகத் துவங்கும். இந்த உறவின் விரிசலால் ஏற்படுகின்ற விபரீதங்கள் பலவற்றை இப்போது நாம் கண்கூடாகவே பார்க்கிறோம். மாணவர்களை ஆசிரியர்கள் கடுமையாகத் தண்டிப்பதும், பதிலுக்கு மாணவர்கள் ஆசிரியர்களைத் தாக்குவதுமாக ஊடகங்களில் தொடர்செய்திகளாக வந்துகொண்டே இருக்கின்றன. இதற்கெல்லாம் என்ன காரணம்?. யார் காரணம்?. ஆசிரியர்களின் ஒழுக்கக்கேடு தான்.

ஆசிரியர்கள் தமது கடமைகளை மட்டுமின்றி தமக்குரிய கட்டுப்பாடுகளையும் சரியாகப் புரிந்துவைத்திருத்தல் வேண்டும். ஆண் ஆசிரியர்கள் மாணவிகளிடம்  எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பதும், ஆசிரியைகள் ஆண் மாணவர்களிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதும் அத்தகைய கட்டுப்பாடுகளில் உள்ளவையாகும். கட்டுப்பாட்டை மீறி ஒருவர் நடக்கும்போதுதான் உறவில் விரிசல் ஏற்படுகிறது. அதுவே சிக்கலாக உருமாறுகிறது.

ஆசிரியர்களின் நல் ஒழுக்கமே அவர்களுக்கான கட்டுப்பாடாகும். கட்டுப்பாட்டை மீறுகின்ற ஆசிரியரது தவறான நடத்தையானது மாணவர்களது ஒழுக்கத்தை மட்டுமின்றி கல்வியையும் பாதிப்பதால்தான் அத்தகைய ஆசிரியர் இனிமேல் ஆசிரியராகவே வாழத் தகுதியற்றவர் என்ற பொருளில் அவரது ' ஆசிரிய வாழ்க்கை முற்றிலும் அழியும் ' என்று இக் குறளில் கூறுகிறார் வள்ளுவர். 

முடிவுரை:

இதுவரை கண்டவற்றிலிருந்து, பார்ப்பான் என்று வள்ளுவர் இக் குறளில் குறிப்பிடுவது ஒரு சாதியினர் அல்லர் என்பதும் பார்த்தலாகிய தொழிலைச் செய்வோரையே என்பதும்  விளங்கும்.  இதே பொருளில் குறள் 285 லும் கூறுகிறார்.

அருள்கருதி அன்புடைய ராதல் பொருள்கருதிப்
பொச்சாப்புப் பார்ப்பார்கண் இல்.

( பொருள்: பிறரது பொருளைக் களவாடக் கருதி அவரது மறதியை எதிர்பார்த்து இருப்பவரிடத்தில் அருளோ அன்போ எதுவுமிருக்காது.)

இங்கும் பார்ப்பார் என்பது சாதியை அன்றி எதிர்பார்த்தலாகிய தொழிலைச் செய்வோரையே குறிப்பதை அறியலாம். அதுமட்டுமின்றி ஒரு சாதியினைக் குறிப்பிடுவதாகக் கருதப்படும் அந்தணர் என்ற சொல்லையும் அறுதொழிலோர் என்ற சொல்லையும் வள்ளுவர் சாதிப் பொருளில் எங்கும் கூறவில்லை என்று கீழ்க்காணும் ஆய்வுக் கட்டுரைகளில் சான்றுகளுடன் காணலாம்.

http://thiruththam.blogspot.in/2012/02/blog-post.html ( அறவாழி அந்தணன் - யார் அந்தணர் ?)

http://thiruththam.blogspot.in/2009/11/blog-post_28.html ( நூல் என்றால் என்ன? - அறுதொழிலோர் யார் ? )

சாதியை மட்டுமின்றி எந்த ஒரு சமயத்தினையும் வள்ளுவர் ஆதரிக்கவில்லை என்பதைக் கீழ்க்காணும் பல்வேறு கட்டுரைகளில் ஆதாரங்களுடன் காணலாம்.

http://thiruththam.blogspot.in/2012/05/blog-post.html ( அவியுணவின் ஆன்றோர் யார் ? )

http://thiruththam.blogspot.in/2012/01/blog-post.html ( திருக்குறள் காட்டும் தேவர் யார் ?)

http://thiruththam.blogspot.in/2012/01/3.html ( திருக்குறளில் தெய்வம் - பசு வழிபாடு )

http://thiruththam.blogspot.in/2012/01/2.html ( திருக்குறளில் தெய்வம் - பகுதி 2 )

http://thiruththam.blogspot.in/2011/12/1.html ( திருக்குறளில் தெய்வம் - பகுதி 1 )

http://thiruththam.blogspot.in/2011/11/blog-post_25.html ( அடியளந்தான் யார்? - திருமாலா? )

http://thiruththam.blogspot.in/2011/08/blog-post.html ( மாமுகடி = மூதேவி ? )

http://thiruththam.blogspot.in/2011/01/blog-post.html ( செய்யவள் தவ்வை யார் ? )

http://thiruththam.blogspot.in/2010/09/blog-post_22.html ( தாமரைக் கண்ணான் உலகு - தாமரைக் கண்ணான் யார்? )

http://thiruththam.blogspot.in/2009/09/blog-post_17.html ( இந்திரனே சாலும் கரி - இந்திரன் யார் ? )

http://thiruththam.blogspot.in/2009/04/blog-post_19.html ( மலர்மிசை ஏகினான் யார் ? )


இதிலிருந்து வள்ளுவர் சாதி சமயங்களை ஆதரிக்கவில்லை என்பதும் திருக்குறள் மனு தர்மத்தைத் தழுவி எழுதப்பட்ட நூல் அல்ல என்பதும் உறுதி செய்யப்படுகிறது.

( பி.கு: இக் கட்டுரை குறித்த ஐயங்கள் இருந்தால் தாராளமாய்க் கேட்கலாம். மாற்று / மறுப்புக் கருத்துக்கள் இருப்பினும் அதை ஆதாரங்களுடன் முன் வைக்கலாம். )

===========================================

திங்கள், 14 அக்டோபர், 2013

தீதும் நன்றும் - பகுதி 2 - ( விதியை வெல்ல முடியும்! )

யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன
சாதலும் புதுவது அன்றே வாழ்தல்
இனிதென மகிழ்ந்தன்றும் இலமே முனிவின்
இன்னாது என்றலும் இலமே மின்னொடு
வானம் தண்துளி தலைஇ ஆனாது
கல்பொருது இறங்கும் மல்லல் பேரியாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோல ஆருயிர்
முறைவழிப் படூஉம் என்பதை திறவோர்
காட்சியின் தெளிந்தனம் ஆகலின் மாட்சியில்
பெரியோரை வியத்தலும் இலமே
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே
                            - புறம்: 192

விளக்கமும் திருத்தமும்:

எல்லா ஊரும் எனது ஊரே; எல்லா மக்களும் எனது உறவினர்களே.

- இந்தப் பாடலின் நோக்கத்தை இந்த முதல்வரி தான் பறைசாற்றி நிற்கிறது. இந்த வரி எவ்வாறு சரி என்பதை விளக்கத்தான் இந்த முழுப்பாடலும் எழுதப்பட்டுள்ளது. எல்லா ஊரையும் ஏன் உங்கள் ஊர் என்று சொல்கிறீர்? எல்லா மக்களையும் ஏன் உங்கள் உறவினர் என்று சொல்கிறீர்கள்? வெறும் பேச்சுக்கு வேண்டுமானால் நீங்கள் இவ்வாறு கூறுவது நன்றாக இருக்கிறது. ஆனால் நடைமுறையில் இதெல்லாம் சரிப்பட்டு வருமா? மற்ற ஊர் மக்கள் இதை ஒப்புக் கொள்வார்களா?. உங்கள் கூற்றை சரி என்று நீங்கள் உறுதிசெய்ய இயலுமா?. இதுபோன்ற கேள்விகள் இந்த முதல்வரியினைப் படிக்கின்ற அத்தனை பேருக்கும் எழும் என்பது புலவருக்குத் தெரியும். அதனால் தான் அடுத்தடுத்த வரிகளில் இக் கேள்விகளுக்கான விடையினை வைக்க முயல்கிறார் புலவர். ஆனால்.......

தீமையும் நன்மையும் பிறரால் விளைவதில்லை.

- முதல் வரியே மகா குழப்பம். இதில் இரண்டாம் வரியில் இன்னும் குழப்புகிறாரே. தீமையும் நன்மையும் பிறரால் வருவதில்லையாம். பின் யாரால் வருகிறதாம்?. நம்மாலா? அதாவது நாம் செய்யும் வினைகளால் தான் நமக்கு நன்மையும் தீமையும் வருகிறது என்று சொல்ல வருகின்றாரா?. ஆனால், உண்மை அப்படி இல்லையே. பிறருக்குத் தீமையே செய்யாத ஒருவருக்கு தீமை வரத்தான் செய்கிறது. பிறருக்கு நன்மையே செய்யாத ஒருவருக்கு நன்மையும் வரத்தான் செய்கிறது. இதை நாம் கண்கூடாக வாழ்க்கையில் பார்க்கிறோம். அப்படியென்றால் இதற்கு என்னதான் பொருள்?. சரி சரி பொறுமையாக மூன்றாம் வரியினைப் பார்ப்போம்.

வறுமைப்படுதலும் செல்வம் நிறைதலும் அவ்வாறே.

-  வறுமைப்படுதலை நோதலென்றார். ஆம், வறுமையினை விடக் கொடிய நோய் ஒன்று உண்டா?. அனைத்துத் துன்பங்களுக்கும் அடிப்படை ஆதாரமே இந்த வறுமை தானே. செல்வம் நிறைதலை தணிதலென்றார். ஆம், செல்வம் இருந்தால் தானே வாழ்க்கையில் மகிழ்ச்சி உண்டாகும். இந்த வறுமையும் செல்வமும் கூட பிறரால் வருவதில்லையாம். அப்படியென்றால், ஒருவன் பிச்சைக்காரனாய் வாழ்வதற்கும், செல்வந்தராய் இருப்பதற்கும் காரணம் என்ன?. பொறுமையாக அடுத்த வரியில் அதற்கான விடையினைத் தேடுவோம். (நோதல் = வறுமைப்படுதல். தணிதல் = நிறைதல். அகராதி காண்க.)

சாவு என்பது புதுப்பிக்கத் தக்கதல்ல.

- ஆ, எவ்வளவு உண்மையான கருத்து !!!. நமது ஓட்டுநர் அடையாள அட்டையினை அதன் தேதி முடிந்ததும் புதுப்பிக்கிறோம். நமது வெளிநாட்டுக் கடவுச்சீட்டினையும்
அதன் தேதி முடிவடைந்தால் புதுப்பிக்க முடிகிறது. இதுபோல பலவற்றை ஏன் நமது இளமையைக் கூட புதுப்பிக்க முயல்கிறோம். ஆனால், இந்த சாவினை மட்டும் நம்மால் புதுப்பிக்க முடிவதில்லையே. ஏன் நம்மால் சாவினை தள்ளிப்போட முடியவில்லை?. வாழ்நாள் என்னும் சீட்டில் எழுதப்பட்டுள்ள கடைசி தேதியை முடிவு செய்தது யார்?. விடைதெரியாத இக் கேள்விகளுக்கு விடையைக் காண அடுத்த வரிக்குச் செல்வோம். (புதுவுதல் = புதுமையாக்குதல் / புதுப்பித்தல்)

இல்வாழ்க்கை இனிமையானது என்று நான் மகிழவும் இல்லை;

- இல்வாழ்க்கை என்பதே இன்பமும் துன்பமும் நிறைந்தது தான். நன்மை விளையும் போது மகிழ்வதும் தீமை விளையும் போது வருந்துவதும் மனித உயிரின் இயல்பு தான். ஆனால், இங்கு புலவர் தனது இல்வாழ்க்கையினை எண்ணிப் பார்த்து இவ்வாறு சொல்கிறார். இல்வாழ்வில் தனக்கு எல்லையற்ற இன்பங்கள் கிடைத்த போதும் கூட தனது மனம் மகிழவில்லை என்கிறார். சரி, அவரது குடும்ப விசயங்களை ஏன் அவர் நம்மிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும்?. இதனால் யாருக்கு என்ன பயன்?. இன்னும் கீழே இறங்கி பார்ப்போம்.

துறவு துன்பமானது என்று நான் வருந்தவும் இல்லை.

- இம்மை எனப்படும் இல்லறத்தில் தனது 60 அகவை வரை மனைவியுடனும் மக்களுடனும் வாழ்ந்து முடித்துவிட்டு இப்போது மறுமை எனப்படும் துறவற வாழ்வில் ஈடுபட்டுள்ள புலவர் இவ்வாறு கூறுகிறார். உண்மையில் இல்லறத்தைக் காட்டிலும் துறவறத்தில் இடையூறுகள் பல உண்டு. முதல் இடையூறு தனிமை. இல்லறத்தில் பலருடன் அளவளாவி வாழ்ந்த ஒருவருக்கு இந்தத் தனிமையினை எதிர்கொண்டு வெல்வதென்பது மிகக் கடினமான செயல். இரண்டாவது இடையூறு உணவு. என்னதான் துறவியானாலும் உடல் இருக்கும் வரை பசிக்கு உணவு வேண்டுமே. காட்டிலும் மலையிலும் வாழும் துறவிகளுக்குத் தான் தெரியும் அங்கே உணவு பெறுவது எவ்வளவு கடினமானதென்று. இதுபோக பருவகால மாற்றங்கள், விலங்குகள் என்று பல்வேறு இடையூறுகள் உண்டு. இவற்றையெல்லாம் எதிர்கொண்டு சமாளித்து வாழ்வதற்குக் கலங்காத உள்ளம் வேண்டும். ஆனால் புலவர் தனது இல்வாழ்வில் இன்பத்தைக் கண்டு மயங்காததால் துறவறத்தின் துன்பங்கள் அவரைப் பாதிக்கவில்லை என்று தெரிகிறது. ம்ம்.. இப்போது தான் மெல்லப் புரியத் துவங்குகிறது. இன்னும் அடியில் செல்வோம்.

மின்னலுடன் மழையானது ஒருதுளியாகத் துவங்கி தொடர்ந்து பெய்ததால்

- அனைத்து உயிர்களின் தோற்றமும் ஒரு புள்ளியில் தான் என்பதைப் போல இந்த மழையும் ஒரு துளியில் தான் தோன்றுகிறது. பூமியில் இருக்கும் நீர் கதிரவனின் வெப்பத்தால் ஆவியாகி மேலே சென்று மேகங்களாகி மிதக்கிறது. இந்த மேகங்களில் மின்னல் ஏற்பட அவை மழைத்துளியாகி அவையெல்லாம் ஒன்று சேர்ந்து மழையாகி மீண்டும் பூமியை நோக்கி விழுகிறது. சரி சரி இதெல்லாம் தெரிந்தது தானே, இதை ஏன் இங்கே சொல்ல வேண்டும்?. அடுத்த வரிக்குச் செல்வோம்.

பாறைகளில் மோதிக் கீழிறங்கிய நீர் வலிமையானதோர் காட்டாறாய் மாற

- ஆ, இது தான் மிக இன்றியமையாத வரி. வலிமையே இல்லாமல் காற்றில் மிதக்கின்ற ஒரு மேகமானது மழைத்துளியாய் மாறியதும் அதற்கு லேசாக ஒரு ஆற்றல் உருவாகிறது. இத்துளிகள் எல்லாம் ஒன்று சேர்ந்ததும் அதன் ஆற்றல் பெருகுகிறது. இதனால் பூமியை நோக்கி அது இழுக்கப்படுகிறது. பூமியை வந்தடைந்த இவை சிறு ஓடைகளாய் உருவெடுத்து மீண்டும் பல்கிப் பெருகுவதால் வலிமையானதோர் ஆற்றல் பொருளாய் அதாவது ஒரு காட்டாறாய் மாறுகிறது. பெரிய பெரிய பாறைகளைக் கூட இடம்பெயரச் செய்யும் இந்த அளப்பரிய ஆற்றல் நீருக்குக் கிடைத்தது எவ்வாறு?. நீரானது பூமியின் மேல் பரப்பிலேயே இருந்திருந்தால் இந்த வலிமை அதற்குக் கிடைத்திருக்குமா? ஒருபோதும் இல்லை தானே. இந்த நீருக்கு ஒரு இயக்க ஆற்றலைக் கொடுத்தது எது?. பூமிதான்; பூமியின் ஈர்ப்பு விசைதான். சரி, அடுத்த வரியில் என்ன சொல்கிறார் பார்ப்போம்.

அந்நீரில் சிக்கிய படகின் போக்கினைப் போல

- அளப்பரிய ஆற்றல் கொண்ட ஒரு காட்டாற்றிலே ஒரு படகு சிக்கிக்கொண்டால் அதன் கதி என்னவாகும்?. படகோட்டியின் விருப்பத்திற்கேற்ப படகினை அப்போது ஓட்டிச் செல்ல முடியுமா?. முடியாது. காட்டாற்றின் போக்கில் தான் படகு பயணிக்க முடியும். அங்கே அப்போது படகோட்டியின் முயற்சிகள் அனைத்தும் பயனற்றுப் போகும். ஆனால் அதே ஆறு காட்டாறாக மாறுவதற்கு முன்புவரை அந்த ஆற்றில் தான் விரும்பிய வண்ணம் படகோட்டியானவன் படகினை ஓட்டிக்கொண்டு தானே இருந்தான். இப்போது ஏன் அவனால் முடியவில்லை?. ஏனென்றால் அப்போது அவனது முயற்சிகளை வெல்லும் ஆற்றல் ஒன்று இல்லை. இப்போது இருக்கிறது, காட்டாற்றின் வடிவாக. தனக்கு எதிராக தன்னை வெல்லும் பேராற்றல் ஒன்று மெல்லமெல்ல உருவாகி வருவதை அதுவரை அவனாலேயே அறிய முடியவில்லை பாருங்கள். இதை என்னவென்று சொல்வீர்கள்?. புலவர் இதை என்னவென்று சொல்கிறார்?. வாருங்கள் அடுத்த வரியில் பார்ப்போம்.

மன்னுயிர் விதியின் போக்கில்தான் இயங்கும் என்பதனை

- ஓ, இதைத்தான் புலவர் விதியென்று சொல்கிறாரா?. அதாவது உயிர்களின் இயக்கமானது பார்ப்பதற்குத் தன்னிச்சையாக நடப்பது போலத் தோன்றினாலும் உண்மையில் அவை விதியின் ஆளுமைக்குட்பட்டுத் தான் நடப்பதாகக் கூறுகிறார் புலவர். காட்டாறு உருவாகும் வரை அதுபற்றி அந்த படகோட்டி அறிந்திருக்காததைப் போல ஒரு செயல் நடவாத வரை விதியானது தன்னை மறைத்தே வைத்திருக்கும். செயல் நிகழும்போது தான் விதியின் வலிமையை நம்மால் உணரமுடிகிறது. விதியால் நிகழ்த்தப்படும் ஒரு செயல் சிலருக்கு நன்மையினையும் அதேசமயம் சிலருக்குத் தீமையினையும் தருகிறது. இங்கு தீமையோ நன்மையோ விதி ஒன்றுதான்; செயலும் ஒன்றுதான். ஆனால், விளைவுகள் இரண்டு. இடம், நேரம், சூழல் என்று அந்த செயலுடன் தொடர்புடையவை மூன்று. ஆக, ஒரு செயல் ஒரு சூழலில் நமக்கு நன்மை தருமா தீமை தருமா என்பதனை அந்த விதி தான் தீர்மானிக்கிறது என்கிறார். சரி, விதியின் இந்த அளப்பரிய ஆற்றலை அவர் எவ்வாறு அறிந்தார்?. அடுத்த வரியைப் பார்ப்போம். 

வெளியிடத்திலே (நிகழ்ந்த) ஓர் காட்சியின் மூலமாகக் கண்டு தெளிந்தோம் ஆகையால்
- திறந்த வெளியிடத்திலே நிகழ்ந்த ஓர் காட்சியினைக் கண்டு அதன்மூலமாக விதியின் வலிமை பற்றிய தெளிவினைத் தான் பெற்றதாகச் சொல்கிறார். அப்படி அவர் கண்ட காட்சி எது?. அது தான் கோடைமழைக் காட்சி. இக் கட்டுரையின் முதல் பகுதியில் விரிவாகக் கூறப்பட்ட மழை நிகழ்ச்சி. மலையில் நிகழ்ந்த மழை நிகழ்ச்சியும் அதனால் உண்டான விளைவுகளும் புலவருக்குள் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி இருந்தன. யாரும் எதிர்பாராதவண்ணம், அதுவரை பழங்களை உண்டு மகிழ்ந்திருந்த குரங்குகளும், மீன்பிடித்து மகிழ்ந்திருந்த படகோட்டிகளும் திடீரெனத் தோன்றிய மழை வெள்ளத்தில் காணாமல் போனது அவரை சிந்திக்கத் தூண்டியது. இந்த மழை வெள்ளத்தின் அளப்பரிய ஆற்றலை இப்பாடலில் விதியின் ஆற்றலுடன் ஒப்பிடுகிறார்.  ( திறவோர் = திறவு + ஓர். திறவு = வெளியிடம். அகராதி காண்க.)

பெரியோரின் சிறப்பற்ற கீழ்ச்செயல் கண்டு வியப்பதும் இல்லை;

- மேன்மை மிக்க பெரியோர்கள் செய்யும் செயல்கள் யாவும் நற்செயல்கள் தான். இதில் வியப்பதற்கு ஒன்றுமில்லை தான். ஆனால் அத்தகைய மேன்மை தாங்கிய பெருமக்கள் ஒருநாள் தமது பெருமை குன்றுமாறு இழிசெயல் புரிந்தால் என்னவாகும்?. என்னது? அவரா? அவரா இந்த மாதிரிக் காரியம் செய்தார்? என்னால் நம்பவே முடியவில்லையே.!. என்று வியப்படைகிறோம் அல்லவா?. இவ்வாறு வியப்படைவது உலக இயல்பு தான். ஆனால் நம் புலவர் அவ்வாறு வியப்படைய மாட்டேன் என்கிறார். ஏன்? ஏனென்றால், பெரியோரின் இச் செயலுக்குக் காரணம் அவரல்லர். விதி, விதி தான் காரணம். ஆம், விதிவசத்தால் தன் மதியிழந்து அவர் செய்யும் செயலே இந்த இழிசெயல் என்கிறார். எவ்வளவு பெரிய மனிதரும் விதியின் கைப்பாவை ஆகிவிட்டால் அவர் கதி அதோ கதிதான் என்பதை நாமும் பல கதைகளில் படித்திருக்கிறோம். பெரியோரின் இழிசெயலுக்குப் பின்புலமாக விதி இருக்கும் காரணத்தினால் தான் புலவர் அச்செயல் கண்டு தான் வியப்படைவதில்லை என்கிறார். சரிதானே?. (மாட்சியில் = மாட்சி + இல் = மாட்சியற்ற )

சிறியோரின் நற்செயல் கண்டு இகழ்வதும் இல்லை.

- கீழ்க்குணம் மிக்க சிறியோரின் செயல்கள் அனைத்தும் தீய செயல்களாகத் தான் இருக்கும் என்று அனைவருக்கும் தெரியும். தனது வாழ்க்கை முழுவதும் பிறருக்குத் தீமையே செய்து வந்த ஒருவன் திடீரென்று நல்லவனாகி நன்மை செய்யத் துவங்கினால் என்னவாகும்?. என்னது? அவனா?. அவனாவது நல்லது செய்றதாவது!. என்று அவன் செய்த நல்ல காரியத்தையும் இகழ்ச்சியாகவே மக்கள் பேசுவர். இதுவும் உலக இயல்பு தான். ஆனால் நம் புலவர் இதிலும் மாறுபடுகிறார். தான் அவ்வாறு இகழமாட்டேன் என்கிறார். ஏன்?. ஏனென்றால் இதுவரை தீமையே செய்த வந்த ஒருவன் நல்லவனாய் நற்செயல்கள் புரிவதும் விதியினால் தான் என்கிறார். ஆம், நல்ல மதியினைக் கெடுக்க வல்லதும் கெட்ட மதியினை திருத்த வல்லதும் இந்த விதி என்கிறார் புலவர். ஒருவகையில் பார்த்தால் இந்த விதியானது வள்ளுவர் சொன்ன மழை போலத்தான் இருக்கிறது. கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய் மற்றாங்கே எடுப்பதூஉம் எல்லாம் மழை என்று கூறிய வள்ளுவர் வாக்கு இங்கு பொருத்தமாய் அமைவதைப் பாருங்கள்.

பாடலின் சாரம்:

இனி, இப்பாடலின் மூலமாக புலவர் கணியன் பூங்குன்றனார் கூற வருகின்ற கருத்தின் சாரத்தினைக் கீழே காணலாம்.

ஒருவருக்கு வரும் நன்மையும் தீமையும் பிறரால் வருவதில்லை; மாறாக விதிவசத்தாலே வருகின்றது. ஒருவரின் வறுமை நிலையினையும் செல்வநிலையினையும் கூட இந்த விதிதான் முடிவு செய்கிறது. ஒருவரது வாழ்க்கை இனிமையானதாக இருப்பதும் துன்பம் நிறைந்ததாக இருப்பதும் அதே விதியினால் தான். சாவும் கூட முன்னரே விதியினால் நிச்சயிக்கப்பட்ட ஒன்றுதான். நல்லோரின் மதியினைக் கெடுத்து தீமை செய்ய வைக்கவும் தீயோரை நல்வழிப்படுத்தி நன்மை செய்ய வைக்கவும் இந்த விதியினால் முடியும். ஆம், இந்த விதியானது மிக மிக மிக வலியது. இதை வெல்லவே முடியாதா? முடியும்!

என்றால் விதியை வெல்லும் வழிதான் என்ன?. அது தான் ஒற்றுமை. ஆம், ஒற்றுமை ஒன்றே விதியின் வலிமையைக் குறைக்க வல்லது.

இது எப்படி சாத்தியமாகும்?. முதலில் விதி எவ்வாறு வலிமை பெறுகிறது என்று பாருங்கள். இதற்கு இப் பாடலில் வரும் காட்டாற்றினையே சான்றாக எடுத்துக் கொள்வோம். பூமியில் பொழியும் மழைநீர் முதலில் சிறு சிறு ஓடைகளாய்த் தான் உருவெடுக்கிறது. பின்னர் இவை ஒன்று சேர்ந்து ஒரு வலிமை மிக்க காட்டாறாய் மாறுகிறது. இந்த மாற்றத்திற்கு ஊன்றுகோலாய் இருப்பது புவி ஈர்ப்பு விசை தான். அதைப்போல மனிதர்கள் நிலத்தால் இனத்தால் மொழியால் பிரிந்திருந்தாலும் அன்பு என்னும் ஈர்ப்பு விசையினால் ஒன்றாக்கப் பட்டால் மனித ஆற்றல் வலிமை பெறும். ஒற்றுமையால் வலிமை பெற்ற மனித ஆற்றலை விதியினால் அசைக்க முடியாது. இது எப்படி?. மீண்டும் பாடலில் இருந்தே சான்று பார்ப்போம்.

பாறைகள் தனித்தனியாய் இருக்கும் போது அவற்றை மிக எளிதாக ஒரு காட்டாறு இடம்பெயர்த்து விடும். ஆனால் அதே பாறைகள் ஓரிடத்தில் குழுமி நெருக்கமாக இருந்தால் அவற்றில் ஒன்றைக் கூட காட்டாற்றினால் அசைக்க முடியாது. மாறாக, அது பாறைகளைச் சுற்றிச் செல்லும். காரணம், ஒற்றுமையினால் விளைந்த பேராற்றல். அதைப்போல மனிதர்கள் பிரிவுற்று இருக்கும் பொழுது வலிமை குறைந்தவர்களாகத் தான் இருப்பர். ஒன்றாகச் சேரும்பொழுது விதி கூட இந்த மனித ஆற்றலுக்கு முன் வளைந்து கொடுக்கும். இதைச் சில நடைமுறை எடுத்துக்காட்டுக்களுடன் காணலாம்.

ஒருவருக்கு வாழ்வில் நன்மையும் தீமையும் வறுமையும் செல்வமும் இன்பமும் துன்பமும் விதிவசத்தால் தான் வருகின்றது என்று முன்னர் கண்டோம். ஆனால் மக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் அன்பு பூண்டொழுகும் பொழுது அங்கு தீமையில்லை; வறுமையில்லை; துன்பமுமில்லை. ஏனென்றால் ஒருவருக்கொருவர் அன்பு பூண்டபின், பிறருக்குத் தீமை செய்யமாட்டார்; ஒருவருக்கு வறுமையோ துன்பமோ விளைந்தால் ஓடோடிச் சென்று அவர் வறுமையினைக் களைவார்; அவரது துன்பத்தினைத் துடைப்பார் அன்றோ!. இவ்வாறு மனிதரின் ஒற்றுமை என்னும் பேராற்றலுக்கு முன்னால் விதியின் வலிமை குன்றத் துவங்கி விடும். சுருங்கச் சொன்னால் மனிதருக்கிடையிலான இடைவெளி கூடக்கூட விதி வலிமை பெறும்; குறையக் குறைய விதி வலியிழக்கும். மனிதம் வெல்லும்.!. இதற்கான முதல் படி அனைத்து ஊர்களையும் தம் ஊராக நினைத்து வளங்களைப் பகிர்ந்து கொள்ளுதலும் அனைத்து மக்களையும் தமது உறவினராகப் பேணுதலுமே.

இதைக் கருத்தில் கொண்டே புலவர் கூறினார்: யாதும் ஊரே யாவரும் கேளிர். என்ன அவர் கூற்று சரிதானே?.

சனி, 12 அக்டோபர், 2013

தீதும் நன்றும் - பகுதி 1 ( யாதும் ஊரே ! )

அந்தக் கல்மண்டபத்தின் கருவறையினை பெரியது என்று சொல்ல முடியாது. நான்கு பேர் படுத்தால் புரண்டு படுக்க முடியாத அளவுக்கு சிறியது தான். அந்த உச்சி வெயில் வேளையில் அவர் கருவறையின் நடுவில் கண்மூடி அமர்ந்திருந்தார். கருவறையில் இருந்த ஒரு சிறிய சாளரத்தின் வழியாக உள்ளே நுழைந்த வெயில் கருவறையினை வெளிச்சம் போட்டுக் காட்டியது. கருவறையின் ஒரு மூலையில் ஒரு பாத்திரம் மட்டுமே கிடந்தது.

அவர் திடீரென்று கண் திறந்து பார்த்தார். பசி அவரது வயிற்றைப் பதம் பார்த்திருக்க வேண்டும். ஒட்டிப் போன வயிறுடன் அவர் இருந்தாலும் அவரது கண்களில் ஒரு ஒளி தெரிந்தது. அவரது உடல் அவருக்கு அகவை 60 க்கு மேலிருக்கலாம் என்று கூறினாலும் அவரது ஒளி வீசும் கண்கள் அவரை இளமையாகவே காட்டின. இடுப்புக்குக் கீழ் ஒரே ஒரு நூலாடை அணிந்திருந்தார். இன்னொரு நூலாடையின் மேல் அவர் அமர்ந்திருந்தார். அது அவரது மேலாடையாகவும் இருக்கலாம்.

இப்போது அவரது கண்கள் எதையோ தேடின.

இங்கே தானே வைத்திருந்தேன். எங்கே போயிருக்கும்?

பசிக்கும் வயிறுடன் மெல்ல எழுந்து கருவறையினை விட்டு வெளியில் முன் மண்டபத்திற்கு வந்தார். அங்கும் யாரையும் காணவில்லை.

அட, எங்கே போயிருக்கும் அவை? யார் எடுத்துச் சென்றிருப்பர்?.

முன் மண்டபத்தினையும் விட்டு நிலத்தில் கால் பதித்து மண்டபத்தின் அருகில் இருந்த அந்த அரச மரத்தடிக்கு வந்தார். அந்த அரச மரம் நல்ல உயரத்தில் நன்கு பரந்து விரிந்து வளர்ந்திருந்தது. தலையை மெல்ல உயர்த்தி மரத்தை நோக்கினார். மரக் கிளைகளில் ஒரு சில குரங்குகள் தென்பட்டன. அவற்றை உற்றுப் பார்த்தபோது ஒரு குரங்கின் கையில் கொய்யாக் கனிகளும் இன்னொன்றின் கையில் மாங்கனியும் இருப்பதைக் கண்டார்.

ஓ நீங்கள் தானா அப் பழங்களை எடுத்துச் சென்றது. பரவாயில்லை. உங்களுக்கும் பசிக்கும் தானே. சாப்பிடுங்கள். நான் கீழே இறங்கி சாரலில் இருந்து பழங்களைப் பறித்து வருகிறேன்.

எண்ணியவர் கீழே சாரலை நோக்கினார். அது மிக மிக ஆழத்தில் இருந்தது. ஆம், அவர் இருந்த கல் மண்டபம் அந்த மலையின் உச்சியில் இருந்தது. பூங்குன்றம் என்பது அம் மலையின் பெயர். பெயருக்கேற்றவாறே அம் மலையில் பல்வகையான பூக்களின் மணம் கமழ்ந்தவாறு இருக்கும். இப்போது கோடை காலமாதலால் பூக்கள் இன்றி சில மரங்கள் தங்கள் இலைகளையும் உதிர்த்துவிட்டு கூடாகக் காட்சியளித்தன.

அவர் கீழே இறங்கத் துவங்கிய நொடியில் திடீரென்று அவ்விடத்தை இருள் சூழ்வது போலத் தோன்றியது. ஆம், அங்கிருந்த மேகங்கள் எல்லாம் ஒன்று கூடி மலை உச்சிக்கு வந்து நின்றன.

ஓ மழை வரப் போகிறது போலும். இனி நாம் இப்போதைக்கு இறங்கிச் செல்ல முடியாது.

எண்ணியவர் அண்ணாந்து மேகங்களைப் பார்த்தார். நச்சென்று அவரது முகத்தில் விழுந்தது ஒரு மழைத் துளி.

கோடையின் வெப்பத்தால் வெப்புண்டு கிடந்த அவரது முகத்தில் மழைத்துளி விழுந்ததும் அவரது உடல் புல்லரித்தது. உடன் குளிர் காற்று வீசத் துவங்கியது. முன் மண்டபத்தின் மேல் ஏறி நின்று கொண்டு கீழே பார்த்தார்.

மலைச்சாரலின் முடிவில் ஒருபுறம் ஒரு சிறிய ஆறு ஓடிக் கொண்டிருந்தது. ஓடிக்கொண்டிருந்தது என்பதை விட தேங்கி இருந்தது என்று சொல்லலாம். சிறிதளவே நீர் இருந்த போதிலும் அதிலும் ஒரு சிலர் படகோட்டிக் கொண்டும் மீன் பிடித்துக் கொண்டும் இருந்தார்கள். ஆற்றுக்கு அந்தப் பக்கமாக இன்னொரு மலை இருந்தது. ஆனால் அதில் மரங்கள் மிகக் குறைவாகவும் கற்கள் நிறைந்தும் இருந்தன. பெரிய பெரிய பாறைகள் ஆங்காங்கே வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டது போல் இருந்தன. இந்த இரண்டு மலைகளுக்கும் இடையில் தான் அந்த ஆறு மிக மெதுவாக ஓடிக் கொண்டிருந்தது.

திடீரென மின்னல் வெட்டியது. அவ்வளவு தான், வானமே பொத்துக் கொண்டதோ என்று நினைக்கும் அளவுக்கு பெரும் மழை பொழியத் துவங்கி விட்டது. இப்போது மண்டபத்தைச் சுற்றியிருந்த எதையும் அவரால் பார்க்க இயலவில்லை. ஏன் அந்த மரம் கூடத் தெரியாத அளவுக்கு வலுவான மழை பெய்து கொண்டிருந்தது. இடியும் மின்னலும் மாறிமாறி ஏற்பட்டு அந்த இடத்தின் அமைதியைக் குலைத்து ஒருவித அச்சத்தை உருவாக்கிக் கொண்டிருந்தன.

அவர் அமைதியாய் முன் மண்டபத்தில் அமர்ந்து கொண்டு சிந்திக்கலானார்.

பாவம், இந்த குரங்குகளின் நிலை என்ன ஆகுமோ தெரியவில்லையே! இந்த பயங்கரமான மழையில் சிக்கிக் கொண்ட இவை இனி உயிர் தப்புமா? கடவுளே.

அவரது உடல் பசிக்காக ஏங்கினாலும் மனம் குரங்குகளின் நிலைக்காக வருந்தியது. மனம் பின்னோக்கிச் சென்றது.

இளம் வயதில் இல்வாழ்க்கையில் இருந்தபோது மனைவி, அவருக்குப் பலவகையான பழங்களை அருகிலிருந்து ஊட்டிய பொழுதுகளை எண்ணிப் பார்த்தார். அப்போது என் மனம் களிப்புற்று இருந்ததா? எண்ணிப் பார்த்தார். ம்கூம். இல்லை. இப்போது துறவு வாழ்க்கையில் உண்ண உணவின்றி பசியால் உழலும் இக் கணத்தில் என் மனம் துன்புறுகிறதா? இல்லை. ஆனால், இதோ இந்த உடல் தான் எதையாவது உண்ணத் தா என்று கேட்கிறது. ஒருநாளைக்கு ஒருவேளை உணவு தானே. அதுவும் பழங்கள் மட்டும் தானே. அதையேனும் கொடுக்கக் கூடாதா என்று ஏங்குகிறது. அது பாட்டுக்குக் கேட்டுக் கொண்டிருக்கட்டும். நாம் நமது வேலையினைக் கவனிப்போம்.

இப்போது அவர் கண்களை மூடிக் கொண்டார். உடலின் தேவையைப் புறந்தள்ளி விட்டு சூழலை முற்றிலும் மறந்துவிட்டு ஓகநிலையில் ஆழ்ந்தார். எவ்வளவு நேரம் அவ்வாறு இருந்தாரோ அவருக்குத் தெரியாது. கண்களைத் திறந்து பார்த்தார். இப்போது மழை விட்டிருந்தது. வானம் தெளிந்திருந்தது.

அருகிலிருந்த மரத்தைப் பார்த்தவர் துணுக்குற்றார். மரத்தில் இருந்த பல கிளைகள் முறிந்து தொங்கிக் கொண்டிருந்தன. குரங்குகளைக் காணவில்லை. அடடா, என்ன ஆயிற்றோ அவைகளுக்கு? பாவம்!.

அருகில் இருந்த மலையைப் பார்த்தவர் இன்னும் ஆச்சர்யமடைந்தார். அங்கிருந்த பாறைகளில் பலவற்றைக் காணவில்லை. ஒருசில இடம் பெயர்ந்திருந்தன.

ஓ மிக வலுவான மழை பெய்துள்ளதோ?. இந்த மலையின் கோலத்தையே மாற்றி அமைத்து விட்டதே இந்த மழை.

எண்ணிக் கொண்டே கீழே இருந்த ஆற்றைப் பார்த்தவர் அரண்டு போனார். அமைதியாக இருந்த அந்த ஆறு இப்போது காட்டாறாக மாறி இருந்தது. பல மரக்கிளைகள் அந்த ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டன. அங்கிருந்த எந்த ஒரு படகினையும் இப்போது காணமுடியவில்லை. ஒருவேளை அப் படகுகள் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டிருக்குமோ? என்று எண்ணிக் கொண்டிருந்த பொழுதே அவரது எண்ணம் சரிதான் என்று மெய்ப்பிப்பதைப் போல ஒரு படகு அந்த ஆற்றில் பயங்கரமாக புரண்டு புரண்டு வந்து கொண்டிருந்தது. ஆற்றின் வேகத்துடன் ஈடு கொடுக்க முடியாமல் மூழ்குவதும் எழும்புவதுமாய் இருந்த அதன் நிலை அவரது மனதினை என்னமோ செய்தது. அப்போது......

கதிரவன் மேற்கில் மறையத் துவங்கினான்.

அவரது மனதில் ஒரு பாடல் உதிக்கத் துவங்கியது.


                      ............................... தொடரும்.

வெள்ளி, 14 ஜூன், 2013

இறை என்றால் என்ன?

முன்னுரை:

சங்க காலந்தொட்டு இன்றுவரை மக்கள் பேச்சுவழக்கிலும் எழுத்து வழக்கிலும்  இருந்துவரும் பல தமிழ்ச் சொற்களுள் இறை என்ற சொல்லும் ஒன்றாகும். இச் சொல்லுக்குப் பலவிதமான பொருட்களை இன்றைய தமிழ் அகராதிகள் கூறுகின்றன. ஆயினும் பல பாடல்களில் இந்த அகராதிப் பொருட்களுள் ஒன்றுகூடப் பொருந்திவராத நிலையே காணப்படுகிறது. இது இச் சொல்லுக்கு வேறொரு புதிய பொருள் இருப்பதையே காட்டுகிறது. அந்த புதிய பொருள் எது என்பதைப் பற்றியும் இப் புதிய பொருளில் இருந்து பிற பொருட்கள் எவ்வாறு உருவாகியிருக்கக் கூடும் என்பதனையும் பல ஆதாரங்களுடன் விளக்கமாகக் காண்பதே இக் கட்டுரையின் நோக்கமாகும்.

இறை - தற்போதைய பொருட்கள்:

இறை என்ற சொல்லுக்குத் தற்போதைய அகராதிகள் கூறும் பொருட்கள் கீழே தரப்பட்டுள்ளது.

சென்னை இணையத் தமிழ்ப் பேரகராதி:

, n. < இற-. 1. Height; உயரம். ஏந்துகொடி யிறைப்புரிசை (புறநா. 17, 27). 2. Head; தலை. (சூடா.) 3. Supreme God; கடவுள். இறை நிலையுணர்வரிது (திவ். திருவாய். 1, 3, 6). 4. Šiva; சிவன். (பிங்.) 5. Brahmā; பிரமன். (பிங்.) 6. King, sovereign, monarch; அரசன். இறைகாக்கும் வையக மெல்லாம் (குறள், 547). 7. Eminence, greatness; தலைமை. (பிங்.) 8. Impartiality; justice; நடுவுநிலைமை. கண்ணோடா திறைபுரிந்து (குறள், 541). 9. [K. eṟe.] Any one who is great, as one's father or guru or any renowned and illustrious person; உயர்ந்தோன். (தொல். பொ. 256; திவா.) 10. Superior, master, chief; தலைவன். (திவா.) 11. Elder brother; தமையன். (பரிபா. 11, 8.) 12. Husband, as lord of his wife; கண வன். நப்பின்னைதக்கிறை (திவ். பெரியதி. 2, 3, 5). 13. [K. eṟake, M. iṟa.] Inside of a sloping roof, eaves of a house; வீட்டிறப்பு. குறியிறைக் குரம்பை (புறநா. 129). 14. Feather, quill; இறகு. (பிங்.) 15. Wing, plumage; சிறகு. 16. Death, dying, extinction; இறக்கை. (கலித். 18, உரை.) 17. Mango tree; மாமரம். (மலை.)

, n. < இறு²-. 1. Abiding, halting, tarrying; தங்கல். நெஞ்சிறை கொண்ட (மணி. 4, 69). 2. Seat; ஆசனம். இறையிடை வரன்முறை யேறி (கம்பரா. அயோத். மந்திர. 12). 3. Duty, obligation; கடமை. (திவ். திருவாய். 5, 2, 8.) 4. [M. iṟa.] Tax on land, duty, share of the produce accruing to the king as rent; அரசிறை. இறைவற் கிறையொ ருங்கு நேர்வது நாடு (குறள், 733). 5. Answer, reply; விடை. எண்ணிறையுள் (நன். 386). 6. Lines inside the finger joints; விரல்வரை. இறைக்கரஞ் சிவப் பெய்திட (இரகு. நாட்டுப். 34). 7. Measure of the first joint of the fore-finger being about 1 inch; விரலிறையளவு. 8. Very small particle, atom, minute quantity, short space of time; அற்பம். இறையு ஞானமி லாதவென் புன்கவி (கம்பரா. சிறப்பு. 10). 9. Wrist, fore-arm; முன்கை. எல்வளை யிறை யூரும்மே (கலித். 7). 10. Arm; கை. இறைவளை யாழ்தழீஇ யிருப்ப (சீவக. 656). 11. Joints of the body; உடலுறுப்பின் மூட்டுவாய். இறைகளவை நெறு நெறென (திவ். பெரியதி. 5, 10, 4). 12. Corner; மூலை. முடங்கிறை (முல்லை. 87).

பொருள் பொருந்தா இடங்கள்:

இறை என்பதற்கு அகராதிப்பொருட்கள் எவையும் பொருந்தாத பல பாடல்கள் உள்ளன. இருப்பினும் சான்றுக்கு இங்கே சில பாடல்கள் மட்டுமே தரப்பட்டுள்ளன.

கறையுங்கொப் பளித்த கண்டர் காமவேள் உருவம் மங்க
இறையுங்கொப் பளித்த கண்ணார் - தேவாரம்: 242

மேற்காணும் தேவாரப் பாடலில் இருந்து இறை என்பது கண்ணுடன் தொடர்புடைய உறுப்பு என்பது தெளிவாகத் தெரிகிறது. ஆனால் கண்ணுடன் தொடர்புடைய உறுப்பு எதுவும் மேற்கண்ட அகராதிப் பொருட்களில் இல்லை.

நெய்தல் உண்கண் ஏர் இறைப் பணைத்தோள் - ஐங்கு - 181

நேர்இறை பணைத்தோட்கு ஆர்விருந் தாக - ஐங்கு - 468

சாய்இறைப் பணைத்தோள் அவ்வரி அல்குல் - ஐங்கு - 481

வண்ணம் நீவிய வணங்குஇறைப் பணைத்தோள், - புறநா.

சுணங்கு அணிந்து எழிலிய அணந்துஏந்து இளமுலை;
வீங்குஇறைப் பணைத்தோள், மடந்தை - புறநா.

நுணங்குஅமை புரையும் வணங்குஇறைப் பணைத் தோள், - அகம்.

மேலே காணும் பாடல்கள் யாவற்றிலும் 'இறை' என்பது தோளுடன் இணைத்தே சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் தோள் என்பது கண்ணுடன் தொடர்புடைய உறுப்பு என்று ' தோள் என்றால் என்ன? ' என்ற ஆய்வுக் கட்டுரையில் நாம் முன்னரே பல ஆதாரங்களுடன் கண்டுள்ளோம். இதிலிருந்து இறை என்பதும் கண்ணுடன் தொடர்புடைய ஓர் உறுப்பே என்பது உறுதியாவதுடன் அகராதிகள் எவையும் இதுவரை இப் பொருளைக் கூறவில்லை என்பதும் தெளிவாகிறது.

இறை - புதிய பொருள் என்ன?

இறை என்பது கண்ணுடன் தொடர்புடைய ஓர் உறுப்பு என்று மேலே கண்டோம். என்றால் அது கண்ணின் எந்த உறுப்பினைக் குறிக்கிறது?. இதைப் பற்றி இங்கே காணலாம்.

கீழ்க்காணும் பாடல்களில் இறை என்பது பொழுதுடன் கூடி இறைப்போது என்றும் இறைப்பொழுது என்றும் வருகிறது.

குடமுடைந் தால் அவை ஓடென்று வைப்பர்
உடலுடைந் தால்இறைப் போதும் வையாரே.-  திருமந்திரம் - 16

நாலாயிரத் திவ்ய பிரபந்தத்தில் பல பாடல்களில் இறைப்போது வருகிறது. அவற்றில் சில பாடல்கள் மட்டும் கீழே.

விண்ணெல்லாம்கேட்கஅழுதிட்டாய்.
................................
பொறுத்து இறைப்போது இரு நம்பீ. - 144

திருமாலவன் திருநாமங்கள் எண்ணக் கண்ட விரல்களால்
இறைப்பொழுதும் எண்ணகிலாதுபோய் - 362

எழுமையும் கூடி ஈண்டிய பாவம் இறைப்பொழுது அளவினில் எல்லாம்
கழுவிடும் பெருமைக் கங்கையின் கரைமேல் கண்டமென்னும் கடிநகரே. - 395.

பிறப்பகத்தே மாண்டொழிந்த பிள்ளைகள் நால்வரையும்
இறைப்பொழுதில் கொணர்ந்து கொடுத்து ஒருப்படித்த உறைப்பனூர் - 403

மறைத்தவன் புகுந்த போதே மனம் அங்கு வைத்த தத்தன்
இறைப் பொழுதின் கண் கூடி வாளினால் எறியல் உற்றான் - பெரியபுராணம்: 482


தேவாரத்தில் இந்த இறை என்னும் சொல்லானது மாத்திரை என்னும் சொல்லுடன் இணைந்து பொழுதைக் குறிக்கும் பொருளில் வருகிறது.

மறையன் மாமுனி வன்மரு வார்புரம்
இறையின் மாத்திரை யில்லெரி யூட்டினான் - தேவாரம்: 479.

மேலேகண்ட பாடல்களில் இருந்து இறை என்னும் உறுப்பானது பொழுதுடன் தொடர்புடைய ஒரு தொழிலைச் செய்வது என்னும் கருத்து பெறப்படுகிறது. மேலும் இவ் உறுப்பானது கண்ணுடன் தொடர்புடையது என்பதால் அவ் உறுப்பு 'கண்ணிமை' தான் என்பது பெறப்படுகிறது. ஏனென்றால் கண்ணின் பல்வேறு உறுப்புகளில் கண்ணிமை மட்டுமே பொழுதுடன் தொடர்புடைய தொழிலான இமைத்தல் என்ற பணியைச் செய்கிறது. இதிலிருந்து,

இறைப்போது, இறைப்பொழுது, இறைமாத்திரை என்பவை கண்ணிமைக்கும் கால அளவினைக் குறித்து வந்தவை என்பதை அறியலாம்.

நிறுவுதல்:

இறை என்பது கண்ணிமையைக் குறிக்கும் என்று மேலே கண்டோம். கண்ணிமையின் பண்புகளைக் குறிக்கும் சில பாடல்களை சான்றாகக் காட்டி மேலும் இதை உறுதிப்படுத்தலாம்.

(1) கண்ணிமையானது மென்மையானது.

சில்வளை சொரிந்த மெல்இறை - அகம்.

(2) காதலின்போது நாணத்தினால் தலைவி தலைவனை நேராகப் பார்க்காமல் தலைதாழ்த்தியே இருப்பாள். அப்போது அவளது கண்இமை தாழ்ந்தே இருக்கும். இதை சாய் இறை என்றும் வணங்கு இறை என்றும் இலக்கியம் கூறுகிறது.

சாய்இறைப் பணைத்தோள் அவ்வரி அல்குல் - ஐங்கு - 481
நுணங்குகட் சிறுகோல் வணங்குஇறை மகளிரொடு - அகம்.

(3) மணமான பின்னர் கணவனை மனைவி நோக்கும்போது அவளின் கண்ணிமை தாழ்ந்திராமல் நேராக இருக்கும். இதை நேர் இறை என்று குறிப்பிடுகிறது இலக்கியம்.

நேர்இறை பணைத்தோட்கு ஆர்விருந் தாக - ஐங்கு - 468

(4) பெண்கள் தங்கள் கண்ணிமையை  வண்ணம் பூசி அழகு செய்வர்.

வண்ணம் நீவிய வணங்குஇறைப் பணைத்தோள், - புறம்

(5) கடவுளைத் தொழும்போது நம் கண்களும் கைகளும் கூப்பியபடி அதாவது மூடியபடி இருக்கும். இதனைக் கீழ்க்காணும் அகநானூற்றுப் பாடல் கூறுகிறது.

வல்லே வருக, வரைந்த நாள்; என,
நல்இறை மெல்விரல் கூப்பி,
இல்லுறை கடவுட்கு ஓக்குதும், பலியே!  - அகம்.

மேலே கண்ட சான்றுகளில் இருந்து இறை என்பது கண்ணிமை தான் என்பது உறுதியாகிறது.

இறையும் வளையும்:

இறை என்ற சொல் பயின்றுவரும் பல பாடல்களில் வளை என்ற சொல்லும் இணைந்தே வருகிறது. இந்த வளை என்பது என்ன?  என்பதைப் பற்றியும் இங்கே காண்லாம். இறையும் வளையும் சேர்ந்து வரும் பல பாடல்களில் சில மட்டும் கீழே தரப்பட்டுள்ளன.

துறைவன் துறந்தமை தூற்றாகொல் முன்கை
இறைஇறவா நின்ற வளை. - குறள்: 1157

துறைநணி யூரனை உள்ளியென்
இறையேர் எல்வளை நெகிழ்பு ஓடும்மே.- ஐங்கு  -10

துறைவன் துறந்தெனத் துறந்துஎன்
இறையேர் முன்கை நீக்கிய வளையே. - ஐங்கு - 163

துறைவன் சொல்லிய சொல்என்
இறையேர் எல்வளை கொண்டு நின்றதுவே. - ஐங்கு - 165

வளர்பிறை போல வழிவழிப் பெருகி
இறைவளை நெகிழ்த்த எவ்வ நோயொடு - குறு -

மாஇதழ் புரையும் மலிர்கொள் ஈர்இமை,
............................
வெய்ய உகுதர, வெரீஇப், பையென,
சில்வளை சொரிந்த மெல்இறை முன்கை - அகம்-

செவ்வாய்ப் பெண்டிர் கவ்வையின் கலங்கி,
இறைவளை நெகிழ்ந்த நம்மொடு  - அகம்.

மேற்காணும் பாடல்களில் இறையானது வளை என்னும் அணியினை உடையது என்றும் இந்த வளையானது அழுகையினால்  நெகிழக் கூடியது என்றும் கூறப்பட்டுள்ளது. பெண்கள் மனம் வருந்தி அழும்போது உண்டாகும் கண்ணீரால் வளை எனப்படும் கண்ணின் அணி கெடுகிறது என்று கூறுவதில் இருந்து இந்த வளை என்பது கண்ணிமையில் பூசப்படும் ஓர் அழகுப் பொருள் தான் என்பது தெளிவாகிறது.

மேலும் காதலனின் பிரிவினால் கண்கள் கலங்கி அழுது அழுது காதலியின் இமைகளும் வெம்மையுற்றன. அவ் வெம்மை தாளாத காதலி ஒருத்தி தன்மீது மழைநீர் மொத்தமும் பொழிய மேகத்திடம் வேண்டுவதைப் பாருங்கள்.

கனைஇருள் வானம்! - கடல் முகந்து, என் மேல்
உறையொடு நின்றீயல் வேண்டும்; ஒருங்கே -
நிறைவளை கொட்பித்தான் செய்த துயரால்
இறைஇறை பொத்திற்றுத் தீ. - கலித்தொகை.

இந்த வளை என்னும் பெயர்ச்சொல்லானது வளைத்தல் என்ற வினையின் அடிப்படையில் பிறந்ததாகும். வளைத்தல் என்ற சொல்லுக்கு எழுதுதல், வரைதல் என்றும் பொருள் கூறுகிறது சென்னை இணையத் தமிழ்ப்பேரகராதி.

வளை²-த்தல் vaḷai-
, 11 v. tr. Caus. of வளை¹-. 1. To bend, inflect; வளையச்செய்தல். 2. To surround; சூழ்தல். இடுமுட் புரிசை யேமுற வளைஇ (முல்லைப். 27). 3. To hinder, obstruct; தடுத்தல். வள்ளனீங்கப் பெறாய் வளைத்தேனென (சீவக. 889). 4. To grasp, seize; பற்றுதல். 5. To carry off, sweep away; to steal; கவர்தல். திருடர் வந்து எல்லாவற்றையும் வளைத்துக்கொண்டு விட்டார் கள். 6. To reiterate, to revert again and again; பேச்சு முதலியவற்றைத் திருப்புதல். வளைத்து வளைத்துப் பேசுகிறான். 7. To paint, delineate; எழுதுதல். உருவப்பல்பூ வொருகொடி வளைஇ (நெடு நல். 113). 8. To wear, put on; அணிதல். சடை முடிமேல் முகிழ்வெண்டிங்கள் வளைத்தானை (தேவா. 871, 1).

இப்படி கண்ணிமையில் எழுதப்பட்ட அல்லது பூசப்பட்ட அணியின் பெயரே வளை என்றானது.

இறையும் இதர பொருட்களும்:

இறை என்ற சொல்லுக்கு கண்ணிமைதான் முதன்மைப்பொருளாக இருந்திருக்குமோ என்று எண்ணத்தக்க வகையில் பல சொற்களின் பொருட்கள் விளங்குகின்றன. இங்கே இந்த இதர சொற்கள் எவை என்பதையும் அவற்றின் பொருட்கள் இறை என்ற சொல்லில் இருந்து எவ்வாறு கிளைத்தன என்பதைப் பற்றியும் காணலாம்.

(1) இறையாகிய கண்ணிமையின் முதன்மைத் தொழில் கண்ணைப் பாதுகாப்பது என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. இந்த கண்இமையைப் போலவே குடிமக்களைப் பாதுகாப்பதால் அரசனுக்கும் உலக உயிர்களைக் காப்பதால் கடவுளுக்கும் இறை என்ற பெயர் ஏற்பட்டது.

(2) கண்ணின் இமை போல பார்ப்பதற்கு தாழ்வாக இறங்கி இருப்பதால் வீட்டின் முகப்பில் உள்ள தாழ்வாரத்தையும் இறை என்றே அகராதிகள் குறிப்பிடுகின்றன.

(3) இறைக்குத்து: இதற்கு சென்னை இணையத் தமிழ்ப் பேரகராதி கீழ்க்காணும் பொருளைத் தருகிறது.

இறைக்குத்து iṟai-k-kuttu
, n. < இறை¹ +. Fixed gaze of the eyes at the approach of death; சாகுந் தருணத்திற் கண்விழி அசைவற்று நிற்கை. Loc.

சாகும் தருணத்தில் கண்ணிமை மேலே சென்று ஆடாமல் அசையாமல் கண்கள் ஒரே இடத்தில் வெறித்துப் பார்க்கும் நிலையினையே இறைக்குத்து என்று கூறுவர்.

(4) இறைகூர்தல்: இதன் பொருள் தங்குதல், தூங்குதல் என்பதாகும். கண்ணிமைகளை மூடி ஓய்வெடுக்கும் நிலையினை இது குறிக்கிறது.

(5) இறைத்தல் : கண்ணிமைத்தலின் போது இமையானது கீழும் மேலும் இயங்கும். கண்ணிமையினைப் போலவே கீழும் மேலுமாக இயக்குவதால் கிணறு போன்ற ஆழமான இடங்களில் இருந்து நீர் முதலியனவற்றை முகப்பதற்கும் இறைத்தல் என்ற பெயர் ஏற்பட்டது.

இறை ------> இறைத்தல் = இமையை மூடித் திறத்தல் -----> கீழும் மேலுமாக இயக்குதல் = நீர் இறைத்தல் போன்றவை.

நீர் இறைத்தலுடன் தொடர்புடைய பிற பொருட்கள் இறைகூடை (இறைவை), இறைப்பெட்டி மற்றும் இறைமரம் ஆகியவை.

(6) இறைஞ்சுதல்: பணிவாக நிற்கும்போதும் வணங்கும்போதும் கண்ணிமையானது தாழ்ந்தே இருக்கும். அடிக்கடி தாழ்ந்து எழும் இயல்புடைய கண்ணிமையினைக் குறிக்கும் இறை என்ற சொல்லில் இருந்து இறைஞ்சுதல் என்ற புதிய சொல் கீழ்க்கண்டவாறு பிறக்கிறது.

இறை ---- > இறைஞ்சுதல் = தாழ்தல், பணிதல், வணங்குதல்.

முடிவுரை:

இறை என்னும் சொல்லுடன் வளை என்ற சொல் இணைந்து வரும் பல பாடல்களை இக் கட்டுரையில் கண்டோம். இதைப் போலவே தோள் என்ற சொல்லுடன் தொடி என்ற சொல் பல பாடல்களில் இணைந்து வருவது இங்கு குறிப்பிடத்தக்கது. எப்படி வளை என்ற சொல்லானது இறையின் மேல் பூசப்படும் அழகுப் பொருளைக் குறிக்கிறதோ அவ்வாறே இந்த தொடி என்பதும் தோளாகிய கண்ணின் வட்டப் பகுதியில்  பூசப்படும் அழகுப் பொருளாக இருப்பது எண்ணி வியக்கத்தக்கது. இதைப் பற்றி 'தோள் என்றால் என்ன?' என்ற ஆய்வுக் கட்டுரையில் விரிவாகக் கூறப்பட்டுள்ளது.
------------------------- வாழ்க தமிழ்!------------------------

திங்கள், 10 ஜூன், 2013

நாளும் வாளும்

முன்னுரை:

நாளென ஒன்றுபோற் காட்டி உயிர்ஈரும்
வாளது உணர்வார்ப் பெறின். - 334.

தற்போதைய விளக்கங்கள்:

கலைஞர் உரை: வாழ்க்கையைப் பற்றி உணர்ந்தவர்கள், நாள் என்பது ஒருவரின் ஆயுளை அறுத்துக் குறைத்துக் கொண்டேயிருக்கும் வாள் என்று அறிவார்கள்.

மு.வ உரை: வாழ்க்கையை ஆராய்ந்து உணர்வாரைப் பெற்றால் நாள் என்பது ஒரு கால அளவுகோல்காட்டி, உயிரை உடம்பிலிருந்து பிரித்து அறுக்கும் வாளாக உள்ளது.

சாலமன் பாப்பையா உரை: நாள் என நமக்குத் தோன்றும் காலம், நம் உயிரைப் பிளந்து செல்லும் வாளே; அறிஞர்க்குத்தான் இது விளங்கும்.

பரிமேலழகர் உரை: நாள் என ஒன்றுபோல் காட்டி ஈரும் வாளது உயிர் - நாள் என்று அறுக்கப்படுவதொரு காலவரையறைபோலத் தன்னைக் காட்டி ஈர்ந்து செல்கின்ற வாளினது வாயது உயிர், உணர்வார்ப் பெறின் - அஃது உணர்வாரைப் பெறின். (காலம் என்னும் அருவப்பொருள் உலகியல் நடத்தற் பொருட்டு ஆதித்தன் முதலிய அளவைகளால் கூறுபட்டதாக வழங்கப்படுவதல்லது, தானாகக் கூறுபடாமையின், நாள் என ஒன்றுபோல் என்றும் அது தன்னை வாள் என்று உணரமாட்டாதார் தமக்குப் பொழுது போகாநின்றது என்று இன்புறுமாறு நாளாய் மயக்கலின் 'காட்டி' என்றும் இடைவிடாது ஈர்தலான் 'வாளின் வாயது' என்றும், அஃது ஈர்கின்றமையை உணர்வார் அரியர் ஆகலின் உணர்வார்ப் பெறின் என்றும் கூறினார். உயிர் என்னும் சாதியொருமைப் பெயர் ஈண்டு உடம்பின்மேல் நின்றது. ஈரப்படுவது அதுவேயாகலின். வாள் என்பது ஆகுபெயர். இனி இதனை நாள் என்பதொரு பொருள்போலத் தோன்றி உயிரை ஈர்வதொருவாளாம் என்று உரைப்பாரும் உளர் :'என' என்பது பெயரன்றி இடைச் சொல்லாகலானும், 'ஒன்றுபோல் காட்டி' என்பதற்கு ஒரு பொருள் சிறப்பு இன்மையானும், 'அது' என்பது குற்றியலுகரம் அன்மையானும், அஃது உரையன்மை அறிக.).

மணக்குடவர் உரை: நாளென்பது இன்பந் தருவ தொன்று போலக் காட்டி, உயிரையீர்வதொரு வாளாம்: அதனை யறிவாரைப் பெறின். இஃது உயிரீரும் என்றமையால் இளமை நிலையாமை கூறிற்று.

உரைத்தவறுகள்:

மேற்காணும் உரைகளுள் முதல் நான்கு உரைகளில் 'நாள்' என்பதற்கு 'காலம்' என்று பொருள் கொண்டு விளக்கம் கூறியுள்ளனர். இது இங்கு பொருந்துமா என்றால் பொருந்தாது என்றே கூறலாம். ஏனென்றால் 'நாளென ஒன்றுபோல் காட்டி' என்று வள்ளுவர் கூறியுள்ளார். அதாவது இந்த 'நாள்' என்ற பொருளானது தன்னை வெளிப்படுத்திக் காட்டும் தன்மையது என்கிறார். ஆனால் காலத்திற்கோ தன்னை வெளிப்படுத்திக் காட்டும் ஆற்றலில்லை. அது ஒரு அருவப்பொருள். அதை யாரும் காணமுடியாது. எனவே வள்ளுவர் இக் குறளில் நாள் என்பதனை காலம் என்ற பொருளில் கையாளவில்லை என்பது தெளிவாகிறது.

மணக்குடவரோ நாள் என்பதற்கு இன்பம் என்ற பொருளைப் பயன்படுத்துகிறார். இப் பொருளும் இங்கே பொருந்தாது என்றே கூற்லாம். ஏனென்றால் நாளானது எல்லோருக்கும் இன்பம் தருவதில்லை. சிலருக்கு இன்பமும் சிலருக்கு துன்பமும் தருகிறது. இன்று ஒருவருக்கு இன்பமளித்த நாள் அவருக்கே அதே நாளில் துன்பம் தருகிறது. எனவே இங்கு நாள் என்ற சொல்லுக்கு இன்பம் என்று பொருள் கொள்வது பொருந்தவில்லை.

என்றால் இக் குறளில் வரும் நாள் என்ற சொல்லுக்கு வேறொரு புதிய பொருள் இருப்பது தெளிவாகிறது. அது என்னவென்று இங்கே காணாலாம்.

திருந்திய பொருள்:

இக் குறளில் வரும் நாள் என்ற சொல் ஒளி (பகல்) யினைக் குறிக்கும். இப் புதிய பொருளின்படி இக் குறளுக்கான திருந்திய புதிய விளக்கம் இதுதான்:

ஒரேபொருள்போல் தன்னை வெளிக்காட்டி நிற்கும் ஒளியே (பலவாகப் பிரிந்து ஒவ்வொரு உடலிலும் புகுந்து அவற்றின்) உயிரை வேரறுக்கும் வாளாக செயல்படுகின்றது என்ற உண்மையை அறிஞர்களே அறிவர். 

நிறுவுதல்:

நாள் என்ற சொல்லுக்கு தற்கால அகராதிகள் கீழ்க்காணும் பொருட்களைத் தருகின்றன.

சென்னை இணையத் தமிழ்ப் பேரகராதி:

நாள் nāḷ
, n. 1. [T. nāḍu, M. nāḷ.] Day of 24 hours; தினம். சாதலொருநா ளொருபொழு தைத் துன்பம் (நாலடி, 295). 2. [T. nāḍu, M. nāḷ.] Time; காலம். பண்டைநாள் (கம்பரா. நட்பு. 43). 3. Lifetime, life; ஆயுள். நாளோடு வாள்கொடுத்த நம்பன் றன்னை (தேவா. 219, 10). 4. Auspicious day; நல்ல நாள். நாட்கேட்டுக் கல்யாணஞ் செய்து (நாலடி, 86). 5. Early dawn; காலை. நாண்மோர் மாறும் (பெரும்பாண். 160). 6. Forenoon; முற் பகல். நாணிழற்போல விளியுஞ் சிறியவர் கேண்மை (நாலடி, 166). 7. Lunar asterism; நட்சத்திரம். திங்களு நாளு முந்துகிளந் தன்ன (தொல். எழுத். 286). 8. Lunar day, period of the moon's passage through an asterism; திதி. (W.) 9. Freshness, newness; புதுமை. கோதையை நாணீராட்டி (சிலப். 16, 8). 10. Youth, juvenility, tenderness; இளமை. நௌவி நாண்மறி (குறுந். 282). 11. New-blown flower; அன்றலர்ந்த பூ. பொன்குறையுநாள் வேங்கை நீழலுள் (திணைமாலை. 31). 12. A symbolic expression of the last metrical foot of one syllable, in veṇpā.  n. Flower; புஷ்பம். (தக்கயாகப். 68, உரை.)

ஆனால் இக் குறளில் வரும் நாள் என்ற சொல்லுக்கு ஒளி என்ற புதிய பொருள் கொள்ளப்பட்டுள்ளது. இப் பொருள் எவ்வாறு பொருந்தும் என்று பார்ப்போம்.

நாள் என்ற சொல் ஒளி என்ற பொருளில் திங்களுடனும் மலருடனும் இணைத்து பல இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது. சில எடுத்துக்காட்டுக்கள் மட்டுமே கீழே தரப்பட்டுள்ளன.

மதி நாள் முற்றிய மங்கலத் திருநாள் - மணிமேகலை: 10-083
குண திசை மருங்கில் நாள் முதிர் மதியமும்
குட திசை மருங்கில் சென்று வீழ் கதிரும் - மணிமேகலை: 05-120
உவவுத் தலைவந்த பெருநாள் அமையத்து, - புறநானூறு.
நாள்நிறை மதியத்து அனையை; - புறநானூறு.
இமை இருள் அகல முறு கிறுகு புரி ஒரு புரி நாள்மலர் - பரிபாடல்.
நாள் நிறை மதி அலர்தரு பக்கம் போல், - பரிபாடல்
நாள் மலர்க் கொன்றையும் பொலந் தார் போன்றன; - பரிபாடல்.
குவளைக் குறுந்தாள் நாள்மலர் நாறும் - குறுந்தொகை
பொன்குறையு நாள்வேங்கை நீழலுள் - திணைமாலை. 31

இவற்றில் நாள்மலர் என்பது ஒளிமிக்க புதிய மலரைக் குறிப்பதாகும்.

நாள் என்பது ஒளியை மட்டும் குறிக்காமல் ஒளிமிக்க நேரமான பகலையும் கீழ்க்காணும் பாடலில் குறிக்கிறது.

நாளங்காடியில் நடுக்கின்றி நிலைஇய -சிலப். 5, 62.

மேலே கண்டவற்றில் இருந்து நாள் என்பதற்கு ஒளி என்ற பொருளும் பொருத்தமாயுள்ளது என்பது அறியப்படுகிறது. இப் பொருளில் தான் வள்ளுவர் இக்குறளை இயற்றியுள்ளார் என்பதனை கீழ்க்காணும் கருத்தும் உறுதிசெய்கிறது.

கதிரவனின் ஒளிக்கதிர்கள் ஒன்றிணைந்து பார்ப்பதற்கு ஒருபொருளாய்த் தோன்றினாலும் உண்மையில் அது பல கோடிக் கதிர்களால் ஆனது என்பதனை யாவரும் அறிவோம். இந்த உண்மையைத் தான் ஒரு உவமையாக இக் குறளில் கையாண்டுள்ளார் வள்ளுவர். ஒருபொருளாய்த் தோன்றும் ஒளிக்கதிர்கள் உடலினுள் பாய்ந்து உயிரை அறுக்கும் வாள்களாக செயல்படுகின்றன என்று கூறுவதன் மூலம் ஒளிக்கதிர்களை வாட்களுடன் ஒப்பிட்டுக் கூறியுள்ளார். ஒளிக்கதிரும் வாளும் தம் கூர்மைப் பண்பினால் ஒப்புமையுடையவை என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

முடிவுரை:

வாழ்க்கை நிலையாமை குறித்த உண்மையினை அழகான ஒப்புமை மூலம் இக் குறளில் கூறுகிறார் வள்ளுவர். நாள்தோறும் கதிரவன் தோன்றுகிறான். அதன் அழகினில் நாம் இன்புறுகிறோம். ஒளியும் வெப்பமும் பெற்று வளர்கிறோம். ஆனால் அதே கதிரவனின் கதிர்கள் தான் நம் உடலில் புகுந்து நம் உயிரை அறுக்கும் வாட்களாகவும் செயல்படுகின்றன என்பதை நாம் உணரத் தவறுகிறோம். நம் உடலானது கொஞ்சம் கொஞ்சமாக வளர்கின்ற அதேசமயத்தில் நம் உயிரானது கொஞ்சம் கொஞ்சமாக அறுபட்டுக் கொண்டிருக்கிறது என்ற முத்தான உண்மையை எல்லோராலும் அறிய முடியாது என்பதால் தான் அறிஞர்கள் மட்டுமே அறிவர் என்ற பொருளில் 'உணர்வார்ப் பெறின்' என்று கூறி முடிக்கிறார் வள்ளுவர்.
--------------------------------- வாழ்க தமிழ்!-------------------

புதன், 6 மார்ச், 2013

தீ.....தான்......சிவம் !


முன்னுரை:

யார்....யார்....சிவம்?
நீ...நான்...சிவம்!

அன்பே சிவம் என்னும் தமிழ்த் திரைப்படத்தில் வருகின்ற மேற்காணும் பாடல் வரிகளை நம்மில் பலர் கேட்டு மகிழ்ந்திருக்கலாம். இதைப் போலவே அமைந்தது தான் இந்தக் கட்டுரையின் தலைப்பும்.

யார் .... யார் ..... சிவம்?
தீ.... தான் ...... சிவம்!

ஆம், சிவம் என்பது தீயின் வடிவமே என்பதை ஆதாரங்களுடன் நிறுவுவதே இக் கட்டுரையின் நோக்கமாகும். சைவ இலக்கியங்களிலும் சிவன் தீயின் வடிவாகப் போற்றப்பட்டிருக்கிறார். சில பாடல்களில் சிவனை நேரடியாக தீயின் வடிவாகவும் சிலவற்றில் மறைமுகமாகவும் கூறியிருக்கின்றனர். இதைப் பற்றிக் கீழே விளக்கமாகக் காணலாம்.

பொன்னார் மேனியன்:

சுந்தரமூர்த்தி நாயனாரால் பாடப்பட்ட பல அருமையான பாடல்களில் கீழ்க்காணும் தேவாரப் பாடலை அறியாதவர் இருக்க முடியாது என்றே கூற்லாம்.

பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக்கசைத்து
மின்னார் செஞ்சடைமேல் மிளிர்க்கொன்றை அணிந்தவனே
மன்னே மாமணியே மழபாடியுள் மாணிக்கமே
அன்னே உன்னையல்லால் இனியாரை நினைக்கேனே.: தேவாரம்: 239

திருமழபாடியிலுள்ள ஈசனை மேற்காணும் பாடலில் தீயின் வடிவமாகவே கண்டு பாடுகிறார் சுந்தரர்.  இதைப் பற்றிக் கீழே விளக்கமாகக் காணலாம்.

தீயானது பற்றி எரியும் போது அதன் மையத்தில் வெளிர்பொன் நிறம் ஒளிரும். தீயின் இந்த மையப் பகுதியினை சிவனின் உடலாக உருவகப்படுத்தி 'பொன்னார் மேனியன்' என்றார் சுந்தரர். அருகில் உள்ள படம் இதை விளக்கும்.





தீயானது கங்கு நிலையில் கனன்றுகொண்டு இருக்கும் போது அதன் மேற்புறத்தில் சில இடங்களில் கரிந்துபோய் பார்ப்பதற்கு கருப்பும் சிவப்புமாகத் தோன்றும். இந்த கங்குதான் தீயின் அடிநிலை அதாவது முதல்நிலை. இதிலிருந்து தான் தீ வெளிப்படுகிறது. இந்த கங்கினை நோக்கிய சுந்தரருக்கு உடல் முழுவதும் கருநிறக்  கோடுகளைக் கொண்ட புலியின் ஞாபகம் வருகிறது.  இதனால் இந்த கங்கினை, ஈசன் தன் இடையில் அணிந்திருக்கும் புலித்தோலாக உருவகப்படுத்திக் கூறுகிறார் சுந்தரர். அருகில் இருக்கும் இரண்டு படங்களையும் ஒப்பு நோக்கினால் இது எளிதின் விளங்கும்.

பற்றி எரிகின்ற தீயின் நுனி நாக்குகளைப் பார்த்தால் அவை செம்பழுப்பு வண்ணத்தில் ஒளிர்வதைக் காணலாம். மேலும் அவை ஓரிடத்தில் நிலையாக இராமல் அங்குமிங்கும் பரந்து திரிந்த வண்ணமாக இருப்பதையும் காணலாம். தீயின் இந்த புற நாக்குகளையே 'மின்னார் செஞ்சடை' என்கிறார் சுந்தரர். செம்பழுப்பு வண்ணத் தீயின் நாக்குகளை நடராஜரின் செம்பழுப்பு வண்ண சடாமுடியாக உருவகப்படுத்துகிறார் சுந்தரர். ஆம், பரந்து விரிந்து எரிந்து கொண்டிருக்கும் தீயினை, தலைமுடி அங்குமிங்கும் பறக்கக் கூத்தாடும் நடராஜராகக் காண்கிறார். அருகில் உள்ள படம் இதை தெளிவாக்கும்.

அடுத்து ஈசன் தன் செஞ்சடைமேல் கொன்றை மாலையை அணிந்துள்ளதாகக் கூறுகிறார். இந்த மாலையானது தீயின் எப்பகுதியினைக் குறிப்பிடுகிறது?. அருகில் இருக்கும் தீயின் படத்தைப் பார்த்தால் இது விளங்கும். தீயின் செம்பழுப்பு வண்ண புறநாக்குகளின் கீழாகவும் தீயின் மையப்பகுதிக்கு மேலாகவும் அடர்மஞ்சள் நிறத்தில் வளைந்து வளைந்து செல்லும் ஒரு மாலை போன்ற ஒரு பகுதி தெரிகிறதே அதைத்தான் 'கொன்றை மாலை' என்று குறிப்பிடுகிறார் சுந்தரர். அருகிலுள்ள கொன்றை மலரின் படம் இதை இன்னும் தெளிவாக்கும்.

இப்படி, ஈசனின் உடல், சடாமுடி, அணிந்திருக்கும் ஆடை, புனைந்திருக்கும் மலர் என்று நால்வகைப் பொருட்களையும் தீயின் வெவ்வேறு பகுதிகளுடன் உருவகப்படுத்தியே மேற்காணும் பாடலில் அவர் பாடியிருக்கிறார் என்பதை அறிய முடிகிறது.

சிவனுக்கு எட்டு தோள்களா?:

சுந்தரர் மட்டுமல்ல, மணிவாசகப் பெருமானும் ஈசனை தீயின் வடிவாகவே கண்டு வழிபடுகிறார். கீழ்க்காணும் பாடலில் சிவனுக்கு எட்டு தோள்களும் மூன்று கண்களும் இருப்பதாகப் பாடுகிறார்.

அன்றே என்றன் ஆவியும் உடலும் உடைமை எல்லாமும்
குன்றே அனையாய் எனையாட்கொண்ட போதே கொண்டிலையோ
இன்றோர் இடையூறு எனக்குண்டோ எண்டோள் முக்கண் எம்மானே
நன்றே செய்வாய் பிழைசெய்வாய் நானோ இதற்கு நாயகமே.

- திருவாசகம்: குழைத்த பத்து.

கேட்போர் மனதை அப்படியே உருக்கிவிடும் தன்மை வாய்ந்த இப்பாடலின் மூன்றாம் வரியில் ஈசனுக்கு எட்டு தோள்களும் மூன்று கண்களும் இருப்பதாகக் கூறுகிறார். சிவனுக்கு நெற்றிக்கண்ணையும் சேர்த்து மூன்று கண்கள் இருப்பது அனைவரும் அறிந்ததே. இதைப் பிற நாயன்மார்களும் புலவர்களும் பாடியுள்ளனர். ஆனால் சிவனுக்கு எட்டு தோள் என்று இப்பாடலில் மாணிக்கவாசகர் பாடுவது ஏன்?. இதைப் பற்றிக் கீழே காணலாம்.

தோள் என்பது புயத்தை மட்டுமின்றி கண்ணைச் சுற்றியுள்ள விளிம்புப் பகுதியையும் குறிக்கும் என்று முன்னர் ' தோள் என்றால் என்ன?' என்ற ஆய்வுக்கட்டுரையில் ஆதாரங்களுடன் கண்டுள்ளோம். இப் பாடலில் வரும் தோள் என்ற சொல்லும் கண்விளிம்பு என்ற் பொருளில் தான் ஆளப்பட்டுள்ளது. இப் புதிய பொருளின்படி சிவனுக்குக் கண்விளிம்புகள் எட்டு என்ற புதிய விளக்கம் பெறப்படுகிறது. இது எவ்வாறு என்று கீழே காணலாம்.

அருகில் உள்ள சிவனின் படத்தைப் பாருங்கள். தவநிலையில் அமர்ந்திருக்கும் அவரது நெற்றிக்கண்ணானது முழுமையாக மூடிய நிலையில் இருக்கிறது. இக்கண்ணிற்கு மேல், கீழ் என்று இரண்டு விளிம்புகள் உண்டு. கீழிருக்கும் இரண்டு கண்களோ பாதி மூடி பாதி திறந்த நிலையில் இருக்கின்றன. இக் கண்கள் ஒவ்வொன்றிற்கும் மேல், இடை, கீழ் என்று மூன்று விளிம்புகள் உண்டு. ஆக இந்த மூன்று கண்களின் விளிம்புகளையும் கூட்டினால் மொத்தம் எட்டாக வருவதைக் காணலாம்.





நெற்றிக்கண் = 2 விளிம்புகள்
வலக்கண் = 3 விளிம்புகள்
இடக்கண்= 3 விளிம்புகள்

மொத்தம்= 2+3+3 = 8 விளிம்புகள்.

சிவன் முகம்:

ஈசனின் முகத்தில் மூன்று கண்களும் அக் கண்களுக்கு மொத்தம் எட்டு விளிம்புகளும் உண்டு என்று மேலே கண்டோம். இந்த உருவ அமைப்பு எதனைக் குறிக்கிறது? இதற்கும் சிவனின் தீ வடிவத்திற்கும் என்ன தொடர்பு இருக்க முடியும்?. இதைப் பற்றிக் கீழே காண்லாம்.

சிவன் தீயின் வடிவம் என்று முன்னர் கண்டோம். எனில் சிவனுடைய மூன்று கண்களும் அவற்றின் எட்டு விளிம்புகளும்  தீயுடன் தொடர்புடையதாய்த் தானே இருக்க முடியும்?. ஆம்! இந்த மூன்று கண்களும் தீயின் மூன்று வகையான தொழில்களையே குறிக்கின்றன. படைத்தல், அழித்தல், காத்தல் என்ற முத்தொழில்களையே சிவனின் மூன்று கண்களாகக் கூறுகிறார் மணிவாசகர். இம் மூன்று தொழில்களும் தீக்குரிய மூன்றுவித தொழில்களே ஆகும். ஆம், அழித்தல் மட்டுமின்றி தீயானது ஆக்கல் மற்றும் காத்தல் பணிகளையும் செய்கிறது.


இதற்கு சான்றாக கதிரவனைக் கூறலாம். ஆம், கதிரவனும் பன்னெடுங்காலமாக எரிந்து கொண்டிருக்கும் ஒரு தீப்பிழம்பு தானே.! இக் கதிரவனே பூமியில் உயிர்களின் பிறப்பிற்கு மூலகாரணமாக விளங்குவது நாம் அனைவரும் நன்கு அறிந்ததே. உயிர்களின் படைப்பிற்கும் அவற்றின் வாழ்வுக்கும் காரணமாய் இருக்கும் கதிரவனே அவற்றை அழிக்கவும் செய்கிறான்.

கதிரவன் என்னும் தீயின் இந்த மூன்று தொழில்களையே ஈசனின் மூன்று கண்களாகக் கூறுகிறார் மணிவாசகப்பெருமான். இதன் மூலம் கதிரவனையே அவர் சிவனாக போற்றியிருப்பதும் தெள்ளிதின் விளங்கும். இனி ஈசனின் எட்டு தோள்களைப் பற்றிக் காணலாம்.


தோளும் கோளும்:

முறையான அறிவியல் கல்வி பயின்றிராத போதும் இறை அருளாளர்கள் சிறந்த வானியல் அறிவு பெற்றிருந்தார்கள் என்பதற்கு மேற்காணும் பாடலையே ஒரு காட்டாகக் கூறமுடியும். ஆம், நமது பால்வீதி மண்டலத்தின் நடுவில் கதிரவன் இருக்க அதைச் சுற்றிலும் எட்டு கோள்கள் இருக்கும் இயற்கை அமைப்பினை உணர்ந்த மணிவாசகர், கதிரவன் என்னும் தீயினை சிவனாகவும், அதைச் சுற்றியுள்ள எட்டு கோள்களை சிவனின் எட்டு தோள்களாகவும் இப்பாடலில் உருவகப்படுத்துகிறார்.

புதன், வெள்ளி, பூமி, செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் என்ற எட்டு கோள்களும் கதிரவனின் எட்டு ஆற்றல் விளிம்புகளாக (ஆளும் இடங்கள்) செயல்பட்டுக் கொண்டிருப்பதாக அவர் கூறுகிறார். ஏனென்றால் கதிரவன் என்னும் பெருந்தீயிடமிருந்து வெளிப்படும் ஆற்றலை இக்கோள்களே உள்வாங்கிப் பெருக்குகின்றன. இந்த எட்டு கோள்களின் மீதும் கதிரவன் நேரடியாக ஆட்சி செய்கிறது. ஆனால் இந்த கோள்களின் கணக்கில் சந்திரன் வராதா? என்றால் வராது. ஏனென்றால் சந்திரன் பூமியினுடைய ஒரு துணைக்கோள். பூமியைப் போலவே பால்வீதி மண்டலத்தில் பல கோள்களுக்குத் துணைக்கோள்கள் உண்டு. இவற்றையெல்லாம் கணக்கில் கொள்ள முடியாது. ஏனென்றால் இத் துணைக்கோள்களின் இயக்கமானது அவற்றின் கோள்களைச் சார்ந்தே அமைந்திருக்கிறது.

இதுவரை கண்டவற்றில் இருந்து மணிவாசகர் மேற்காணும் பாடலில் பாடிய மூன்று கண்ணும் எட்டு தோளும் முறையே தீயின் முத்தொழில்களையும் எட்டு ஆற்றல் விளிம்புகளையுமே குறித்து நிற்கிறது என்பதை தெள்ளிதின் அறியலாம்.

சிவலிங்கம்:

ஈசனின் திருக்கோயில்களில் மூலவராக இருப்பது பெரும்பாலும் லிங்க வடிவமே ஆகும். இந்த லிங்க வடிவத்தின் பொருள் என்ன? இதுவும் தீயின் வடிவம் தானா? என்பதைப் பற்றி இங்கே காணப் போகிறோம்.

நாம் முன்னரே கண்டதைப் போல ஈசனின் லிங்க வடிவமும் எரிந்து கொண்டிருக்கும் தீயின் வடிவமே ஆகும். பொதுவாக லிங்க வடிவத்தில் மூன்று பகுதிகள் உண்டு. முதலாவது அடிப்பகுதி. அதற்கு மேல் ஆவுடை. அதற்கு மேல் தண்டுப் பகுதி. இதில் அடிப்பகுதியானது விளக்கு வைக்கப்படும் மணை (கட்டை) யாகும். ஆவுடை என்பது அகல் விளக்காகும். தண்டு என்பது விளக்குத் தீ ஆகும். ஆம், எரிந்து கொண்டிருக்கும் ஒரு விளக்குத் தீயின் வடிவாக ஈசனை உணர்த்தவே கோயிலில் ஈசனுக்கு லிங்க வடிவம் கொடுத்தனர் பெரியோர்.

பரந்து விரிந்து எரிகின்ற பெருந்தீயினை தலைவிரித்துக் கூத்தாடும் நடராஜரின் வடிவாகக் காட்டிய பெரியோர் ஏன் அதனை மூலவராகக் கொள்ளாமல் ஒரு சிறிய விளக்குத் தீயினைக் கொள்ள வேண்டும்?. இதைப்பற்றிக் கீழே காணலாம்.

அழல் உருவான சிவம்:

சைவ இலக்கியங்களில் பல சிவனை அழல் வடிவமாகவே பாடியுள்ளன. சிவபெருமான் நீண்டதோர் அழல் உருவாக வடிவெடுத்து நின்றதையும் இந்த அழலின் அடியைத் தேடி திருமாலும், முடியைத் தேடி பிரமனும் சென்று காண முடியாமல் திரும்பியதையும் கீழ்க்காணும் தேவாரப் பாடல் கூறுகிறது.

அரிஅயன் தேடும் அடிமுடி காணா
...அழலுரு வாய்நெடி துயர்ந்தாய்
வரியதள் உடையாய் மான்மழு தீயும்
...மகிழ்வுடன் கரமதில் கொண்டாய்
வரிசையில் துயர்செய் வருவினை தாங்கும்
...மனதையும் தந்தருள் செய்வாய்
பரிமளக் கொடிப்பூ படர்ந்திடும் பொழில்சூழ்
...பராய்த்துறை மேவிய பரனே....8

இப்படி கட்டுக்கடங்காத ஓர் ஆற்றலின் வடிவாக விளங்கும் ஈசனை ஒரு கட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியின் விளைவாகத் தோன்றியதே லிங்க வடிவமாகும்.

ஈசன் தானே ஒரு அளப்பெரும் ஆற்றலாய் எங்கும் விரிந்து பரந்திருந்தாலும் அவனை நமக்குள் எழுப்புவதன் மூலம் நாம் அவன் பதத்தை எளிதின் அடைய முடியும் என்பதை உணர்ந்த பெரியோர் அதனை மக்களுக்கு உணர்த்தவே லிங்க வடிவம் கொடுத்தனர். ஆம், ஆசை, சினம் போன்ற உணர்வுகளை மேலெழும்ப விடாமல் கீழே அழுத்தி ( மணை), வயிறே அகல் விளக்காக, விந்து என்னும் உயிர்நீரே எண்ணையாக எரித்தால் சிவம் என்னும் தீ அங்கு தோன்றும். இத் தீயினை தொடர்ந்து எரியச் செய்வதன் மூலம் உயிர்கள் முக்தி பெறலாம். மேலும் இத் தீயானது குண்டலி எனப்படும் வட்ட வடிவ அடிவயிற்றுப் பகுதியின் நடுவில் தோன்றுவது. இந்த குண்டலியைத் தான் சிவலிங்கத்தைச் சுற்றியுள்ள ஒரு பாம்பின் வடிவாகக் கோயில்களில் காட்டினர் பெரியோர்.

மண்ணுலகில் பிறந்த உயிர்கள் யாவும் இத் தீயினை எழுப்பி உய்ய வேண்டும் என்னும் உயரிய நோக்கத்தை வலியுறுத்தவே கோவில்களில் சிவலிங்க வழிபாடு தோன்றியது. ஆனால் நாளடைவில் சிவலிங்க வடிவத்தின் தத்துவம் தவறாகக் கொள்ளப்பட்டு பல கீழ்த்தரமான விளக்கங்களும் இன்று உலா வருவது வேதனையானது.

                                 .............தொடரும்.

சனி, 19 ஜனவரி, 2013

சும்மா (இரு) என்றால் என்ன?


முன்னுரை:

தமிழ் இலக்கியங்களில் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு இன்றளவும் நடைமுறையில் அதிக மாற்றமின்றி பயன்பட்டு வரும் தமிழ்ச் சொற்கள் பலவற்றில் 'சும்மா' என்ற சொல்லும் ஒன்று. இச் சொல்லை எத்தனைமுறை எவ்வளவு பேர் பயன்படுத்துகிறார்கள் என்று கூறத் தேவையில்லை. தவறு செய்துவிட்டு எளிதாக தப்பித்துக் கொள்வதற்கும் அல்லது மன்னிப்புக் கேட்பதற்கும் விளையாட்டாய் பேசுவதற்கும் இன்னும் பல காரணங்களுக்காகவும் இச் சொல்லை நாம் அதிகம் பயன்படுத்துகிறோம். ஆனால் இச் சொல்லின் உண்மையான வடிவம் என்ன? இதன் உண்மையான பொருள் என்ன? என்பதைப் பற்றி நம்மில் பலரும் அறிந்திருக்க மாட்டோம். இதைப் பற்றி ஆதாரங்களுடன் ஆராய்வதே இக் கட்டுரையின் நோக்கமாகும்.

சும்மா - அகராதிப் பொருட்கள்:

தற்கால அகராதிகள் சும்மா என்ற சொல்லுக்குக் கூறும் பல்வேறு பொருட்கள் கீழே தரப்பட்டுள்ளன.

சென்னைப் பேரகராதி: 
, adv. prob. சுகமாக. [K. summane.] 1. [M. cumma.] Leisurely, without any occupation or work; தொழிலின்றி. வாகன மேறிச் சேணிற் சும்மா திரிமூர்த்தி யல்லாமல் (தனிப் பா. ii, 246, 581). 2. In normal condition, in health; இயல்பாய். உடம்பு சும்மா இருக்கிறான். 3. [M. cumma.] Silently, quietly, in perfect peace and rest; அமைதியாய். சும்மாவிருக்கு மெல்லையுட் செல்ல வெனைவிட்டவா (கந்தரலங். 10). 4. Bare; வறிதாக. அவள் கழுத்துச் சும்மா இருக் கிறது. 5. Without any reason; காரணமின்றி. சும்மா போவானேன் 6. Uselessly; பயனின்றி. போய்ச் சும்மா வந்தான். 7. Vaguely, unintentionally, at random; கருத்தின்றி. சும்மா சொன்னே னோ? 8. As a joke; விளையாட்டாய். சும்மா சொன் னேன். 9. [M. cumma.] Gratuitously, gratis; இலவசமாய். சும்மா கொடுப்பானா? Colloq. 10. Freely, unhesitatingly, unceremoniously; தடை யின்றி. சும்மா வரலாம். 11. Continuously, repeatedly; அடிக்கடி. சும்மா வந்துகொண்டிருக்கிறான்.

பேப்ரிசியஸ் அகராதி:
சும்மா (p. 414) [ cummā ] , adv. lazily, idly, leisurely, தொழில் படாமையாய்; 2. uselessly, விருதாவாய்; 3. unintentionally, without reason, முகாந்திரமில்லாமல்; 4. gratuitously, இலவசமாய்; 5. freely, repeatedly, continuously, ஒழியாமல்.

வின்சுலோ அகராதி:
சும்மா, (p. 479) [ cummā, ] adv. Leisurely, uselessly, lazily, idly, தொழிற்படாமையாய். 2. Separately, வா ளா. 3. Gratuitously, இலவசமாய். 4. Jocosely, &c., பொருணோக்கின்றி. 5. Silently, taciturnly, மௌனமாய். 6. Freely, unhesitatingly, unceremoniously, உபசாரமின்றி. 7. Cause lessly, vaguely, unintentionally, முகாந்தரமி ன்றி. 8. Merely, simply, இயல்பாய். 8. Over and above; continuously, repeatedly, ஒழி வின்றி. இப்போது நான்சும்மப இருக்கிறேன். I am at present without any employment. சும்மாகிடைக்குமாசோணாசலன்பாதம். Can the feet of the High be approached without pains? சத்தியம்பண்ணிச்சொன்னானோசும்மாசொன்னானோ. Did he speak on oath, or vaguely? சும்மாகிட. Hold your peace. சும்மாவந்தேன். I came having no par ticular business. போய்ச்சும்மாவந்தான். He went and re turned without success. சும்மாவருகிறான். He comes here very often. அவனைச்சும்மாவிடுவேனா. Will I let him go unpunished? அவனைச்சும்மாவிடு. Let him alone. சும்மாசொல்லு. Tell it without fear. சும்மாவாயைத்திற. Just open your mouth.

சும்மா - உண்மை வடிவம் என்ன?

சும்மா என்று நாம் தற்போது வழங்கும் சொல்லின் உண்மையான வடிவம் 'சும்மாது' ஆகும். இந்த சும்மாது என்ற சொல் ஈற்றில் உள்ள 'து' எழுத்தினை இழந்து 'சும்மா' என்று தற்போது வழங்கப்படுகிறது. இவ்வாறு ஈற்றெழுத்தை ஒழித்து வழங்கலாமா? இவ்வாறு வழங்கப்படுவதற்கு அடிப்படை என்ன? என்னும் கேள்விகள் எழலாம். இவற்றுக்கான விடைகளைக் காணலாம்.

வாளாது இருந்தான் என்பதனை 'து' கரம் நீக்கி 'வாளா இருந்தான்' என்றோ 'வாளாவிருந்தான்' என்று புணர்ந்தோ கூறுவது இலக்கிய வழக்காகும். இதன் பொருள் செயலற்று இருந்தான் என்பதேயாம். இதைப் போலவே,

வாரா விடல், பாடா விடல் - வாராது விடல், பாடாது விடல் என்பதில் து கரம் நீக்கி வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு வழங்கப்படுவதற்கு ஈறு கெட்ட எதிர்மறை வினையெச்சம் என்று இலக்கணம் உண்டு.

இந்த இலக்கணத்தின் அடிப்படையில் தான் 'சும்மாது' என்னும் சொல் தனது ஈற்றில் உள்ள துகரத்தை இழந்து 'சும்மா' என்று வழங்கப்பட்டு வருகிறது.

இதிலிருந்து சும்மா என்னும் சொல் இலக்கண முறைப்படி அமைந்த தமிழ்ச்சொல்லே என்பது தெளிவாகிறது.


சும்மா இரு - சில தவறான புரிதல்கள்:

சும்முதல் என்னும் வினைச்சொல்லின் அடிப்படையில் பிறந்ததே சும்மா என்பதாகும். சும்முதல் என்னும் சொல்லுக்கு மூச்சு வாங்குதல் என்ற பொருளை எடுத்துக் கொண்டு சும்மா(து) இரு என்பதற்கு மூச்சு வாங்காதிரு என்னும் விளக்கம் அளிக்கின்றனர் ஒரு சிலர். இவ் விளக்கமும் பொருளும் அடிப்படையிலேயே மிகத் தவறானதாகும். இது எவ்வாறு என்பதைப் பார்ப்போம்.

முதலில் சும்மா இரு என்னும் சொல் இலக்கியங்களில் எங்கெங்கே ஆளப்பட்டுள்ளன என்று பார்ப்போம்.

சும்மா திருந்திடஞ் சோதனை யாகுமே - திருமந்திரம்: 2635
சும்மா இருசொல் லறவென் றலுமே - அருணகிரிநாதர்:12
சும்மா விருக்கவைத்தான் சூத்திரத்தை நானறியேன் - பட்டினத்தார்.
துறவி யானவர்கள் அகப்பேய் சும்மா இருப்பார்கள் - அகப்பேய் சித்தர்
சொன்னது கேட்டாயே அகப்பேய் சும்மா இருந்துவிடு - அகப்பேய் சித்தர்
சும்மா இருந்தவிடம் அகப்பேய் சுட்டது சொன்னேனே - அகப்பேய் சித்தர்
சும்மா இருக்கும் சுகம் - திருவருட்பா: 1959

மேலே உள்ளவற்றைப் பார்த்தால் ஓர் உண்மை புலப்படும். சும்மா இரு என்று மேலே சொன்னவர்கள் யாவரும் சித்தர்களாகவோ ஞானிகளாகவோ இருந்திருக்கிறார்கள் என்பது தான் அது. சித்தர்களும் ஞானிகளும் இறைவனை அடைவதற்கான வழிமுறையாக மக்களுக்குச் சொல்லப்பட்டவையே மேற்காணும் பாடல்கள்.

சும்மா இருப்பதே சுகம் என்று ராமலிங்க அடிகள் கூறுகிறார். இதற்கு மூச்சு வாங்காமலிருப்பதே சுகம் என்று பொருள் கொள்ளலாமா?. கூடாது. அவ்வாறு பொருள் கொண்டால் மிகப்பெரிய தவறாகிவிடும்!. ஏனென்றால் மூச்சு வாங்காமல் தொடர்ந்தாற்போல ஓரிரு நிமிடங்கள் இருந்தாலே நமது இதயம் எவ்வளவு வேகமாகத் துடிக்கும் என்பதையும் உடல் எவ்வளவு துன்பம் அடையும் என்பதனையும் நாம் நன்கு அறிவோம். ஏன் மூச்சு வாங்காமல் இருந்தால் இவ்வாறு நிகழ்கிறது? குருதியில் இருந்து கரியமில வாயுவினை வெளியே எடுத்துச் செல்வதும் உயிர்வாயுவினை குருதிக்கு அளிப்பதுமான மிக இன்றியமையாத வேலையை இந்த மூச்சுக் காற்று தான் செய்கிறது. இந்த மூச்சினை உள்ளிழுக்காமல் இருந்தால் என்னாகும்? குருதியின் இயல்பான தன்மையே மாறி இதயம் நின்று மரணம் ஏற்படும்! இப்படி உயிருக்கே உலை வைக்கிறதும் மக்களால் இயல்பாக செய்யவே முடியாததுமான ஒரு கடினமான செயலை எந்த சித்தராவது ஞானியாவது மக்களுக்குச் சொல்வாரா?. ஒருபோதும் மாட்டார்!.

அதுமட்டுமின்றி, எந்த ஒரு சித்தராகட்டும் ஞானியாகட்டும் மூச்சு வாங்காமல் உயிருடன் இருக்கவே முடியாது. அதற்கான காரணம் மேலே கூறப்பட்டுள்ளது. உண்வு உண்ணாமல் ஏன் நீரைக் கூடப் பருகாமல் வெறும் காற்றை மட்டுமே உண்டு வாழ்ந்த சித்தர்கள் உண்டு. இவர்களை பவகார யோகிகள் என்பர். ஆனால் மூச்சுக் காற்றினைக் கூட உள்ளிழுக்காமல் உயிருடன் வாழ்ந்ததாக எந்த ஒரு சித்தரின் வரலாறும் கூறவில்லை.

எனவே சும்மா இரு என்று சித்தர்கள் சொன்னதற்கு மூச்சு வாங்காமல் இரு என்று பொருள் கொள்வது மிகப்பெரிய தவறு என்பது புலப்படும். இதிலிருந்து சும்முதல் என்னும் சொல்லுக்கு மூச்சு வாங்குதல் என்னும் பொருளைக் கொள்வது தவறு என்பது தெளிவாகிறது. என்றால், சும்முதல் என்னும் சொல்லுக்கு உண்மையான பொருள் என்ன? சும்மா இரு என்பதன் உண்மையான விளக்கம் என்ன?. என்பதைப் பற்றிக் காண்லாம்.

சும்மாவும் சும்மையும்:

சும்மா என்னும் சொல்லானது சும்முதல் என்னும் வினையின் அடிப்படையாகப் பிறந்தது என்று முன்னர் கண்டோம்.  இந்த சும்முதல் என்பதன் உண்மையான பொருள் அதிர்தல் / ஒலித்தல் என்பதாகும்.

இந்த சும்முதல் வினையின் விளைவே சும்மை எனப்பட்டது. இதன் பொருள் ஓசை என்பதாகும்.

சென்னைப் பேரகராதி:  சும்மை² cummai
, n. < சும் onom. 1. Sound, noise, clamour; ஓசை. இழுமென் சும்மை யிடனுடை வரைப்பின் (பொருந. 65).

இந்த சும்மை என்னும் சொல்லானது பொதுவாக ஓசைப் பொருளையே குறித்து வருவதால் இது மனிதர்கள் பேசும் பொருளுள்ள பேச்சு மொழியைக் குறிக்காமல் அவர்தம் பொருளற்ற ஒலிக் குறிப்புக்களையும், பறவைகள், வண்டுகள், விலங்குகள் எழுப்பும் ஒலிக்குறிப்புக்களையும் கடலலைகள், மேகங்கள், இசைக் கருவிகள் எழுப்பும் அதிர்வுகளையும்  குறிக்கவே பெரும்பாலும் பயன்படுத்தப் பட்டுள்ளது. சான்றுக்கு சில பாடல்கள் கீழே தரப்பட்டுள்ளன.

பழு மரத்து ஈண்டிய பறவையின் எழூஉம்
இழுமென் சும்மை இடை இன்று ஒலிப்ப - மணிமேகலை: 14-027
வருவோர் பெயர்வோர் மாறாச் சும்மையும் - மணிமேகலை: 06-070
சோலை வாய்வண்டு இரைத்தெழு சும்மையும் - பெரியபுராணம்: 1.2.17
தளிமழை பொழியுந் தண்பரங் குன்றிற் கவிகொள் சும்மை - மதுரைக் காஞ்சி: 263
பழுமர முள்ளிய பறவையின் யானுமவன்
இழுமென் சும்மை யிடனுடை வரைப்பின் - பொருந:65
நரம்பி னோசையும் முழவதிர் சும்மையும் - திருவிளையாடல்
ஒலி கொண்ட சும்மையான் மண மனை - கலித்தொகை
பாடுஇமிழ் கடலின் எழுந்த சும்மையொடு - அகநானூறு
கல்லென் சும்மையர் ஞெரேரெனப் புகுதந்து - அகநானூறு
குற்றானா உலக்கையால் கலிச் சும்மை வியல் ஆங்கண் - புறநானூறு

சும்மா - உண்மைப் பொருள் என்ன?

நாம் மேலே கண்ட சும்மை என்பதன் எதிர்ப்பதமே சும்மா என்பதாகும். சும்மை என்பது ஒலிநிலையைக் குறிக்கவும் சும்மா என்பது ஒலியற்ற நிலையைக் குறிக்கவும் பயன்படலாயிற்று. இதன் விளக்கத்தைக் கீழே காணலாம்.

சும்முதல் என்பது ஒலித்தலைக் குறிக்க,

சும்மாது இருத்தல் என்பது அதன் எதிர்வினையான ஒலியற்று இருத்தலைக் குறிப்பதாயிற்று.

சும்முதல்  x   சும்மாது இருத்தல் ......> சும்மா இருத்தல் = அதிராமல் (அ) ஒலியற்று இருத்தல்.

சரி, சித்தர்களும் ஞானிகளும் பேசாமலிரு என்று சொல்லாமல் ஏன் சும்மா இரு என்று சொல்ல வேண்டும்?. இதைப் பற்றிக் கீழே காணலாம்.

சும்மா இரு - உண்மை விளக்கம்:

சித்தர்களும் ஞானிகளும் இறைவனை அடைவதற்குப் பல வழிமுறைகளைக் கூறி இருந்தாலும் அவற்றின் மையக் கருத்து மனதை ஒருநிலைப் படுத்துதலே ஆகும். மனிதரின் மனம் ஏனை உயிரினங்களைக் காட்டிலும் மிகவும் சிக்கலானது. ஏனென்றால் மனிதனே பல்வேறு வினைகளைச் செய்கிறான். இதனால் அவ் வினைகளுடன் தொடர்புடைய எண்ணங்களும் அவனது மனதில் பதிவாகின்றன. இந்த எண்ணங்களின் குவியலாக உள்ள மனதினை எப்படி ஒருநிலைப் படுத்தி இறைவனை நினைக்க வைப்பது?. இது சாத்தியமா? இது எளிதான செயலா?. என்றால் ஆம் என்பதே சித்தர்களின் பதில். அவர்கள் வெறும் பதிலை மட்டும் கூறவில்லை; அப்படியே வாழ்ந்து காட்டியும் சென்றிருக்கிறார்கள்.

மனிதன் தனது மனதினை அடக்க வேண்டுமென்றால் முதலில் அவன் தனது ஆற்றல் வீணாவதைத் த்டுக்க வேண்டும் என்று அறிந்தனர் அப் பெரியோர். அப்படி வீணடிக்கப்படும் ஆற்றலில் அவனது பேச்சுமொழியே முதன்மையானதும் இன்றியமையாததும் ஆக இருப்பதைக் கண்டனர். ஒருநாளில் எத்தனைமுறை மனிதன் பேசிப்பேசி தனது ஆற்றலை வீணாக்குகிறான் என்று அறிந்த அவர்கள் இந்த பேச்சைக் கட்டுப்படுத்தி உள் ஆற்றலைப் பெருக்குவதின் மூலம் மனதின் அலைச்சல் குறைவதை அறிந்தனர். எதையுமே பேசாமல் எவ்வித ஒலிகளும் எழுப்பாமல் மௌனமாக யோக நிலையில் அமர்ந்து இருப்பதன் மூலம் மனம் அடங்குவதைக் கண்ட சித்தர்கள் அதையே மக்களுக்கு எடுத்துரைத்தார்கள்.

சும்மா இருத்தல் என்பது சொல்லற இருத்தலே என்பதைத் தனக்கு இறைவனே காட்டினான் என்று கூறுகிறார் அருணகிரிநாதர்.

சும்மா இருசொல் லறவென் றலுமே - அருணகிரிநாதர்:12

இப்படி எவ்வித ஒலியும் எழுப்பாமல் மௌனமாக இருக்கும் சூத்திரத்தை இதுநாள் வரையிலும் தான் அறியாமல் வீணடித்து விட்டதாக வருந்துகிறார் பட்டினத்தார்.

சும்மா விருக்கவைத்தான் சூத்திரத்தை நானறியேன் - பட்டினத்தார்.

சரி, பேசாமல் இருப்பதற்கும் சித்தர்கள் கூறும் சும்மா இருப்பதற்கும் ஏதேனும் வேறுபாடு உள்ளதா என்றால் உண்டு. பேசாதிருத்தல் என்பது மொழி வழங்காமையைக் குறிக்கும். ஆனால் சும்மா இருத்தல் என்பது பேச்சு மட்டுமின்றி எவ்வித ஒலியினையும் எழுப்பாத நிலையைக் குறிக்கும். வாயிலிருந்தோ மற்ற உடலுறுப்புக்களில் ( கைகள், கால்கள்) இருந்தோ எவ்வித ஒலிக்குறிப்பும் அதிர்வும் தோன்றா வண்ணம் இருக்கும் நிலையினையே சும்மா இருத்தலென்று கூறினர் சித்தர்கள்.

ஆம், வாய் அமைதியாய் இருக்கும் போது பேச்சு எழுவதில்லை. அதைப்போல கைகளும் கால்களும் இயக்கமின்றி ஓரிடத்தில் அமைதியாய் இருக்கும் போது எவ்வித ஒலிக்குறிப்பும் அதிர்வும் தோன்றுவதில்லை. இப்படி வாயும் கைகளும் கால்களும் அமைதியாய் ஓரிடத்தில் தொடர்ந்து இருக்கும் நிலையினையே யோகநிலை என்று கூறினர் பெரியோர். இந்த யோகநிலையில் தொடர்ந்து அமர்ந்திருக்கும் போது நமது உள்முக ஆற்றல் பெருகுகிறது. இந்த ஆற்றலின் தாக்கத்தால் மனம் ஒருநிலைப்படத் துவங்குகிறது. இறைவனைக் காண அதுவே அடிகோலுகிறது.


முடிவுரை:

மனம் ஒருநிலைப்பட்ட சித்தர்களும் ஞானிகளும் யாரிடத்திலும் பேசமாட்டார்கள். இவர்களையே நிறைமொழி மாந்தர் என்று கூறுகிறார் வள்ளுவர்.

நிறைமொழி மாந்தர் பெருமை நிறத்து
மறைமொழி காட்டி விடும்.

மௌனமே இவர்களது மொழியாகும். சும்மா இருத்தலையே செய்யும் இப்பெரியோர்களின் பெருமையினை அவர்களது உடல்குறிப்பு மொழிகள் ( சின்முத்திரைகள்) காட்டி நிற்கும் என்கிறார் வள்ளுவர். இதைப்பற்றி நிறைமொழி மாந்தர் என்ற ஆய்வுக் கட்டுரையில் விரிவாகக் காணலாம்.

இப்படி சித்தர்கள் கூறிய சும்மா இருத்தல் என்பது அதன் உண்மையான யோகநிலைப் பொருளில் இருந்து விரிவடைந்து தற்காலத்தில் செயலின்றி இருப்பதையும் பேசாமல் இருப்பதையும் குறிக்கப் பயன்படலாயிற்று.
-----------------------------------------------------------------------------