புதன், 30 அக்டோபர், 2013

திருவள்ளுவர் சாதிசமயங்களை ஆதரித்தாரா? ( வள்ளுவரும் பார்ப்பனரும் )

முன்னுரை:

திருக்குறள் என்பது வள்ளுவர் மனு தர்மத்தைத் தழுவி எழுதிய நூல் என்றும் வள்ளுவர் சாதி சமயங்களை ஆதரித்தார் என்றும் தவறான கருத்துக்கள் உலாவருகின்றன. இக் கருத்துக்களுக்கு ஆதாரமாக சிலர் சில குறள்களை எடுத்துக்காட்டி வருகின்றனர். இக் கருத்துக்கள் முற்றிலும் தவறு என்பதையும் அந்த ஆதாரங்கள் பிழையானவை என்பதையும் பல்வேறு ஆதாரங்களுடன் உறுதி செய்வதே இக் கட்டுரையின் தலையாய நோக்கமாகும்.

வள்ளுவர் கூறும் பார்ப்பான் யார்?

முதலில் ஒழுக்கமுடைமையில் வரும் பார்ப்பான் என்ற சொல் பயன்பாடு பற்றிக் காணலாம். 

மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்.  - 134

இக் குறளுக்கு தற்போது கூறப்பட்டு வரும் விளக்க உரைகள் கீழே தரப்பட்டுள்ளன.

கலைஞர் உரை: பார்ப்பனன் ஒருவன் கற்றதை மறந்துவிட்டால் மீண்டும் படித்துக் கொள்ள முடியும்; ஆனால், பிறப்புக்குச் சிறப்பு சேர்க்கும் ஒழுக்கத்திலிருந்து அவன் தவறினால் இழிமகனே ஆவான்.

மு.வ உரை: கற்ற மறைபொருளை மறந்தாலும் மீண்டும் அதனை ஓதிக் கற்றுக் கொள்ள முடியும்; ஆனால் மறை ஓதுபவனுடைய குடிப்பிறப்பு, ஒழுக்கம் குன்றினால் கெடு்ம்.

சாலமன் பாப்பையா உரை: பார்ப்பான் தான் கற்ற வேதத்தை மறந்து போனாலும் பிறகு கற்றுக் கொள்ளலாம்; ஆனால், அவன் பிறந்த குலத்திற்கு ஏற்ற மேலான ஒழுக்கத்திலிருந்து தாழ்ந்தால் அவன் குலத்தாலும் தாழ்வான்.

பரிமேலழகர் உரை: ஓத்து மறப்பினும் கொளலாகும் - கற்ற வேதத்தினை மறந்தானாயினும் அவ் வருணம் கெடாமையின் பின்னும் அஃது ஓதிக்கொள்ளலாம், பார்ப்பான் பிறப்பு ஒழுக்கம் குன்றக் கெடும்.- அந்தணனது உயர்ந்த வருணம் தன் ஒழுக்கம் குன்றக் கெடும். (மறந்தவழி இழிகுலத்தனாம் ஆகலின், மறக்கலாகாது என்னும் கருத்தான், 'மறப்பினும்' என்றார். சிறப்புடை வருணத்திற்கு மொழிந்தமையின், இஃது ஏனைய வருணங்கட்கும் கொள்ளப்படும்.).

மணக்குடவர் உரை: பிராமணன் வேதத்தினை ஓதி மறந்தானாயினும் பின்னும் ஓதிக் கொள்ளலாம்: ஒழுக்கங் குறையுமாயின் குலங்கெடும். இஃது ஒழுக்கம் கல்வியிலும் வலிதானவாறு கூறிற்று.

உரைத் தவறுகள்:

மேலே கூறப்பட்டுள்ள விளக்க உரைகள் யாவும் 'பார்ப்பான்' என்பதற்கு 'பிராமணன்' என்றும் 'அந்தணன்' என்றும் கூறி அதை ஒரு சாதிப் பெயராகக் கற்பிக்கிறது. இக் கருத்து முற்றிலும் தவறான ஒன்றாகும். இதற்கான காரணங்கள் கீழே முன்வைக்கப்படுகின்றன.

1. இக் குறளில் ஒரு குறிப்பிட்ட சாதியினைப் பற்றிக் கூற வேண்டிய கட்டாயமோ தேவையோ முதலில் வள்ளுவருக்கு இல்லை எனலாம். காரணம் எச் சாதியினராக இருந்தாலும் கற்ற கல்வியை மறந்து விட்டால் மீண்டும் படித்துக் கொள்ளலாம்.

2. மக்களுக்குக் கல்வியின் தேவையினையும் அதனால் உண்டாகும் சிறப்பினையும் விரிவாகப் பல குறள்களில் கூறியுள்ள வள்ளுவர் அக் கல்வியினை ஒரே ஒரு குறிப்பிட்ட சாதியினருக்கு மட்டுமே உரிய பொருளாகத் தோன்றும் வகையில் ஒரு கருத்தினை ஒருபோதும் கூறமாட்டார்.

3. ஒழுக்கம் கெட்டு நடந்தால் பிராமணர் மட்டுமல்ல எச் சாதியினரின் பெருமையும் கெட்டுவிடும் என்பது வள்ளுவர் மட்டுமல்ல நாம் அனைவருமே அறிந்த உண்மை. அவ்வாறிருக்க பார்ப்பான் என்ற சொல்லின் மூலம் ஒரு குறிப்பிட்ட சாதியின் பெருமை மட்டுமே கெடும் என்று வள்ளுவர் கூறுவதாகப் பொருள் கொண்டால் அது வள்ளுவரின் நுண்மாண் நுழைபுலத்திற்கும் சான்றாண்மைக்கும் இழுக்காய் அமைந்து விடும் என்பது வெளிப்படை.

4. வள்ளுவர் இதே போல பார்ப்பார் என்ற சொல்லை குறள் 285 லும் கையாண்டுள்ளார். ஆனால் அங்கு அச் சொல் எந்த சாதியினையும் குறிப்பிடுவதான பொருளில் வரவில்லை.

அருள்கருதி அன்புடைய ராதல் பொருள்கருதிப்
பொச்சாப்புப் பார்ப்பார்கண் இல்.

இதிலிருந்து வள்ளுவர் கூறும் பார்ப்பான் என்ற சொல் ஒரு குறிப்பிட்ட சாதியினரைக் குறித்து வரவில்லை என்பது தெளிவாகிறது. என்றால் இதன் உண்மையான பொருள் என்ன என்று பார்க்கலாம்.

திருத்தமும் புதிய பொருளும்:

இக் குறளில் வரும் பார்ப்பான் என்ற சொல் ஆசிரியன் / குரு  என்ற பொருளிலும் பிறப்பு என்ற சொல் வாழ்க்கை என்ற பொருளிலும் பயின்று வந்துள்ளது. இப் புதிய பொருட்களின்படி, இக்  குறளுக்கான திருந்திய பொருளானது:  

ஒரு ஆசிரியர் தனது கல்வி அறிவை மறந்தாலும் மறுபடியும் கற்றுக் கொள்ளலாம். ( இதனால் அவரது ஆசிரிய வாழ்க்கை முற்றிலும் அழியாது. ) ஆனால் அவர் தனக்குரிய ஒழுக்கத்தை மறந்து நடப்பாராயின் அவரது ஆசிரிய வாழ்க்கை முற்றும் அழியும்.

நிறுவுதல்:

இக் குறளுக்கான புதிய பொருளினை ஆதாரங்களுடன் இங்கு நிறுவலாம். முதலில் பார்ப்பான் என்ற சொல்லின் புதிய பொருள் பற்றிக் காணலாம்.

பார்த்தல் என்ற வினைக்கு கீழ்க்காணும் பொருட்களை சென்னை இணையத் தமிழ்ப் பேரகராதி காட்டுகிறது.

 பார்¹-த்தல் pār- , 11 v. tr. [K. pāru, M. pārkka.] 1. To see, look at, view, notice, observe; கண்ணால்நோக்குதல். பாராக்குறழா (கலித். 65). 2. To examine, inspect, search into, scrutinise; ஆராய்தல். படுபயனும் பார்த்துச் செயல் (குறள், 676). 3. To know; அறிதல். காலம்பார்த் துள்வேர்ப்ப ரொள்ளியவர் (குறள், 487). 4. To look for, expect; எதிர்பார்த்தல். வருவிருந்து பார்த்திருப் பான் (குறள், 86). 5. To desire, long for; விரும்பு தல். புதுமை பார்ப்பார் (கம்பரா. பூக்கொய். 9). 6. To search for, seek; தேடுதல். ஆட்பார்த் துழலு மருளில் கூற்று (நாலடி, 20). 7. To worship; வணங்குதல். (சூடா.) 8. To estimate, value; மதித்தல். அவன் வயிரம் பார்ப்பதில் கெட்டிக்காரன். Colloq. 9. To heed, pay attention to; கவனித் தல். 10. To look after, take care of, manage, superintend; மேற்பார்த்தல். பண்ணை பார்க்கிறான். 11. To peruse, look through, revise; பார்வையிடு தல். இந்தப் பத்திரத்தைப் பாருங்கள். 12. To treat, administer medicine; மருந்து முதலியன கொடுத்தல். யார் வைத்தியம் பார்த்துக் கொண்டிருக் கிறார். 13. To charm away by incantations, exorcise; மந்திரித்தல். இந்த விஷக்கடிக்கு மாந்திரி கன் பார்க்கவேணும். 14. To intend, design, attempt, purpose, aim at; கருதுதல். 15. To look at with compassion; கடைக்கணித்தல். பார்த் தொருகா லென்கவலை தீராயோ (தாயு. பராபர. 663).

பார்த்தல் என்ற வினைச்சொல்லுக்கு மேலே கூறப்பட்டுள்ள பொருட்களை நோக்கினால் அவற்றுள் மேற்பார்வையிடுதல், மதித்தல், ஆராய்தல், அறிதல், கவனித்தல், கருதுதல், எதிர்பார்த்தல் போன்ற செயல்பாடுகள் யாவும் ஒரு ஆசிரியர் / குருவுக்கானவை என்று தெளிவாகப் புரியும். பார்த்தலாகிய வினைகளைச் செய்வோரையே பார்ப்பார் என்று இக் குறளில் கூறுகிறார் வள்ளுவர். இதை ஆங்கிலத்தில் மாஸ்டர் என்றும் கூறுவார்கள்.

அடுத்து, பிறப்பு என்ற சொல்லுக்கான புதிய பொருள் பற்றிக் காணலாம். பிறப்பு என்பதற்கு கீழ்க்காணும் பொருட்களை அகராதிகள் முன்வைக்கின்றன.

பிறப்பு piṟappu , n. < பிற-. [M. piṟappu.] 1. Birth, nativity; சனனம். விழிப்பது போலும் பிறப்பு (குறள், 339). 2. Origin, production; உற்பத்தி. பிறப்பி னாக்கம் வேறுவேறியல (தொல். எழுத். 83). 3. Order or class of beings including animals and vegetables; caste; சாதி. இழுக்க மிழிந்த பிறப்பாய் விடும் (குறள், 133). 4. Beginning, commencement, as of a month or a year; தொடக்கம். வருஷப்பிறப்பு, மாசப்பிறப்பு. 5. Brother or sister; உடன்பிறந்த வர். (W.) 6. Necklace of small seed-like gold pieces; மகளிரணியும் முளைத்தாலி. காசும் பிறப் புங் கலகலப்ப (திவ். திருப்பா. 7). 7. (Pros.) A formula of a foot of one nirai-y-acainēr-acaiu, occurring as the last foot of a veṇpā; வெண்பாவின் இறுதி யில் நிரையசையொன்றுடன் உகரமான நேரசை கூடி வரும் வாய்பாடு. (காரிகை, செய். 5.) 8. Fear, alarm; அச்சம். (பிங்.) 9. Confusion, bewilderment; மயக்கம். (பிங்.) 10. Closeness, thickness, denseness; நெருக்கம். (பிங்.)

மேற்காணும் பொருட்களில் ஒன்றாக வரும்  ' தொடக்கம் ' என்பது இக் குறளில் ' வாழ்க்கையின் துவக்கம் ' என்ற பொருளில் பயன்படுத்தப் பட்டுள்ளது. மனிதர்கள் அனைவரும் ஒரே பிறப்புடையவரே; அதாவது மனிதப் பிறவியென்பது ஒன்றுதான். ஆனால் இந்த ஒரே பிறவியில் ஒருவர் எத்தனையோ வாழ்க்கையினைத் தொடங்கி வாழமுடியும்.  ஆசிரியராய், பொறியாளராய், மருத்துவராய், வழக்கறிஞராய், பாடகராய், ஓவியராய் .....

ஒவ்வொரு வாழ்க்கையிலும் சில கடமைகளும் கட்டுப்பாடுகளும் உண்டு. அதேபோல ஆசிரிய வாழ்க்கையிலும் கடமைகளும் கட்டுப்பாடுகளும் உண்டு. மாணவர்களுக்குக் கல்வி அறிவு மட்டுமின்றி நல்ல ஒழுக்கத்தையும் சேர்த்தே கற்பிக்க வேண்டிய கடமை ஆசிரியருக்கு உண்டு. அப்படி கற்பிக்கின்ற ஆசிரியர் முதலில் ஒழுக்கமுடையவராக வாழவேண்டும் என்பது அவருக்கான கட்டுப்பாடுகளில் ஒன்றாகும். தானே ஒரு சான்றாக இருந்து மாணவர்களுக்கு நல்ல ஒழுக்கத்தைக் கற்றுத் தரவேண்டிய ஆசிரியர்,  ஒழுக்கங்கெட்டு நடக்கும்போது அவரிடம் கல்வி பயிலும் மாணவர்களின் கல்வி அறிவினைப் பற்றியோ நடத்தையைப் பற்றியோ சொல்லத் தேவையில்லை.

பொதுவாக, மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இடையிலான தொடர்பு மிக நுட்பமானது. ஆசிரியரைப் பார்த்தே மாணவர்கள் தங்களது ஒழுக்கத்தைக் கற்றுக் கொள்கின்றனர். நல்ல ஒழுக்கமான ஆசிரியரிடம் கற்றுக்கொள்ளும் மாணவர்களும் நல்ல ஒழுக்கமுடையவர்களாகவே இருப்பர் என்பதில் ஐயமில்லை. பாடங்களின் பொருள் நன்கு விளங்குமாறு மாணவர்களுக்குக் கற்றுத்தந்த ஆசிரியர் திடீரென்று ஒருநாள் தனது ஞாபகமறதியால் சரியாக கற்றுத்தராமல் போனால் பெரிதாக ஒன்றும் ஆகிவிடாது. மறுநாள் அதனைத் தான் கற்றுவந்து மாணவர்களுக்கு நன்றாக சொல்லிக் கொடுத்துவிடலாம். ஆனால், அதுநாள்வரையிலும் நல்ல ஒழுக்கத்துடன் இருந்துவந்த ஆசிரியர் திடீரென்று தனது கட்டுப்பாட்டை மீறி ஒழுக்கங்கெட்டு நடக்கத் துவங்கினால், அவரது மாணவர்களுக்கு அது மிகுந்த அதிர்ச்சியைத் தரும்; அவர்களது மனதில் பெரும் குழப்பத்தை விளைவிக்கும். ஆசிரியரது நடத்தையில் ஏற்பட்ட மாறுபாட்டுக்கான காரணம் விளங்காமல் அவர்களால் பாடத்தில் கவனம் செலுத்த முடியாமல் முதலில் அவர்களது கல்வி பாதிக்கப்படும். ஆசிரியரின் கெட்ட ஒழுக்கத்தினால் அவர் மேல் மாணவர்கள் வைத்திருந்த அன்பும் மதிப்பும் கடுமையாகப் பாதிக்கப்படும். விளைவு?.

ஆசிரிய - மாணவ உறவில் விரிசல் ஏற்பட்டுப் பெரிதாகத் துவங்கும். இந்த உறவின் விரிசலால் ஏற்படுகின்ற விபரீதங்கள் பலவற்றை இப்போது நாம் கண்கூடாகவே பார்க்கிறோம். மாணவர்களை ஆசிரியர்கள் கடுமையாகத் தண்டிப்பதும், பதிலுக்கு மாணவர்கள் ஆசிரியர்களைத் தாக்குவதுமாக ஊடகங்களில் தொடர்செய்திகளாக வந்துகொண்டே இருக்கின்றன. இதற்கெல்லாம் என்ன காரணம்?. யார் காரணம்?. ஆசிரியர்களின் ஒழுக்கக்கேடு தான்.

ஆசிரியர்கள் தமது கடமைகளை மட்டுமின்றி தமக்குரிய கட்டுப்பாடுகளையும் சரியாகப் புரிந்துவைத்திருத்தல் வேண்டும். ஆண் ஆசிரியர்கள் மாணவிகளிடம்  எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பதும், ஆசிரியைகள் ஆண் மாணவர்களிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதும் அத்தகைய கட்டுப்பாடுகளில் உள்ளவையாகும். கட்டுப்பாட்டை மீறி ஒருவர் நடக்கும்போதுதான் உறவில் விரிசல் ஏற்படுகிறது. அதுவே சிக்கலாக உருமாறுகிறது.

ஆசிரியர்களின் நல் ஒழுக்கமே அவர்களுக்கான கட்டுப்பாடாகும். கட்டுப்பாட்டை மீறுகின்ற ஆசிரியரது தவறான நடத்தையானது மாணவர்களது ஒழுக்கத்தை மட்டுமின்றி கல்வியையும் பாதிப்பதால்தான் அத்தகைய ஆசிரியர் இனிமேல் ஆசிரியராகவே வாழத் தகுதியற்றவர் என்ற பொருளில் அவரது ' ஆசிரிய வாழ்க்கை முற்றிலும் அழியும் ' என்று இக் குறளில் கூறுகிறார் வள்ளுவர். 

முடிவுரை:

இதுவரை கண்டவற்றிலிருந்து, பார்ப்பான் என்று வள்ளுவர் இக் குறளில் குறிப்பிடுவது ஒரு சாதியினர் அல்லர் என்பதும் பார்த்தலாகிய தொழிலைச் செய்வோரையே என்பதும்  விளங்கும்.  இதே பொருளில் குறள் 285 லும் கூறுகிறார்.

அருள்கருதி அன்புடைய ராதல் பொருள்கருதிப்
பொச்சாப்புப் பார்ப்பார்கண் இல்.

( பொருள்: பிறரது பொருளைக் களவாடக் கருதி அவரது மறதியை எதிர்பார்த்து இருப்பவரிடத்தில் அருளோ அன்போ எதுவுமிருக்காது.)

இங்கும் பார்ப்பார் என்பது சாதியை அன்றி எதிர்பார்த்தலாகிய தொழிலைச் செய்வோரையே குறிப்பதை அறியலாம். அதுமட்டுமின்றி ஒரு சாதியினைக் குறிப்பிடுவதாகக் கருதப்படும் அந்தணர் என்ற சொல்லையும் அறுதொழிலோர் என்ற சொல்லையும் வள்ளுவர் சாதிப் பொருளில் எங்கும் கூறவில்லை என்று கீழ்க்காணும் ஆய்வுக் கட்டுரைகளில் சான்றுகளுடன் காணலாம்.

http://thiruththam.blogspot.in/2012/02/blog-post.html ( அறவாழி அந்தணன் - யார் அந்தணர் ?)

http://thiruththam.blogspot.in/2009/11/blog-post_28.html ( நூல் என்றால் என்ன? - அறுதொழிலோர் யார் ? )

சாதியை மட்டுமின்றி எந்த ஒரு சமயத்தினையும் வள்ளுவர் ஆதரிக்கவில்லை என்பதைக் கீழ்க்காணும் பல்வேறு கட்டுரைகளில் ஆதாரங்களுடன் காணலாம்.

http://thiruththam.blogspot.in/2012/05/blog-post.html ( அவியுணவின் ஆன்றோர் யார் ? )

http://thiruththam.blogspot.in/2012/01/blog-post.html ( திருக்குறள் காட்டும் தேவர் யார் ?)

http://thiruththam.blogspot.in/2012/01/3.html ( திருக்குறளில் தெய்வம் - பசு வழிபாடு )

http://thiruththam.blogspot.in/2012/01/2.html ( திருக்குறளில் தெய்வம் - பகுதி 2 )

http://thiruththam.blogspot.in/2011/12/1.html ( திருக்குறளில் தெய்வம் - பகுதி 1 )

http://thiruththam.blogspot.in/2011/11/blog-post_25.html ( அடியளந்தான் யார்? - திருமாலா? )

http://thiruththam.blogspot.in/2011/08/blog-post.html ( மாமுகடி = மூதேவி ? )

http://thiruththam.blogspot.in/2011/01/blog-post.html ( செய்யவள் தவ்வை யார் ? )

http://thiruththam.blogspot.in/2010/09/blog-post_22.html ( தாமரைக் கண்ணான் உலகு - தாமரைக் கண்ணான் யார்? )

http://thiruththam.blogspot.in/2009/09/blog-post_17.html ( இந்திரனே சாலும் கரி - இந்திரன் யார் ? )

http://thiruththam.blogspot.in/2009/04/blog-post_19.html ( மலர்மிசை ஏகினான் யார் ? )


இதிலிருந்து வள்ளுவர் சாதி சமயங்களை ஆதரிக்கவில்லை என்பதும் திருக்குறள் மனு தர்மத்தைத் தழுவி எழுதப்பட்ட நூல் அல்ல என்பதும் உறுதி செய்யப்படுகிறது.

( பி.கு: இக் கட்டுரை குறித்த ஐயங்கள் இருந்தால் தாராளமாய்க் கேட்கலாம். மாற்று / மறுப்புக் கருத்துக்கள் இருப்பினும் அதை ஆதாரங்களுடன் முன் வைக்கலாம். )

===========================================

திங்கள், 14 அக்டோபர், 2013

தீதும் நன்றும் - பகுதி 2 - ( விதியை வெல்ல முடியும்! )

யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன
சாதலும் புதுவது அன்றே வாழ்தல்
இனிதென மகிழ்ந்தன்றும் இலமே முனிவின்
இன்னாது என்றலும் இலமே மின்னொடு
வானம் தண்துளி தலைஇ ஆனாது
கல்பொருது இறங்கும் மல்லல் பேரியாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோல ஆருயிர்
முறைவழிப் படூஉம் என்பதை திறவோர்
காட்சியின் தெளிந்தனம் ஆகலின் மாட்சியில்
பெரியோரை வியத்தலும் இலமே
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே
                            - புறம்: 192

விளக்கமும் திருத்தமும்:

எல்லா ஊரும் எனது ஊரே; எல்லா மக்களும் எனது உறவினர்களே.

- இந்தப் பாடலின் நோக்கத்தை இந்த முதல்வரி தான் பறைசாற்றி நிற்கிறது. இந்த வரி எவ்வாறு சரி என்பதை விளக்கத்தான் இந்த முழுப்பாடலும் எழுதப்பட்டுள்ளது. எல்லா ஊரையும் ஏன் உங்கள் ஊர் என்று சொல்கிறீர்? எல்லா மக்களையும் ஏன் உங்கள் உறவினர் என்று சொல்கிறீர்கள்? வெறும் பேச்சுக்கு வேண்டுமானால் நீங்கள் இவ்வாறு கூறுவது நன்றாக இருக்கிறது. ஆனால் நடைமுறையில் இதெல்லாம் சரிப்பட்டு வருமா? மற்ற ஊர் மக்கள் இதை ஒப்புக் கொள்வார்களா?. உங்கள் கூற்றை சரி என்று நீங்கள் உறுதிசெய்ய இயலுமா?. இதுபோன்ற கேள்விகள் இந்த முதல்வரியினைப் படிக்கின்ற அத்தனை பேருக்கும் எழும் என்பது புலவருக்குத் தெரியும். அதனால் தான் அடுத்தடுத்த வரிகளில் இக் கேள்விகளுக்கான விடையினை வைக்க முயல்கிறார் புலவர். ஆனால்.......

தீமையும் நன்மையும் பிறரால் விளைவதில்லை.

- முதல் வரியே மகா குழப்பம். இதில் இரண்டாம் வரியில் இன்னும் குழப்புகிறாரே. தீமையும் நன்மையும் பிறரால் வருவதில்லையாம். பின் யாரால் வருகிறதாம்?. நம்மாலா? அதாவது நாம் செய்யும் வினைகளால் தான் நமக்கு நன்மையும் தீமையும் வருகிறது என்று சொல்ல வருகின்றாரா?. ஆனால், உண்மை அப்படி இல்லையே. பிறருக்குத் தீமையே செய்யாத ஒருவருக்கு தீமை வரத்தான் செய்கிறது. பிறருக்கு நன்மையே செய்யாத ஒருவருக்கு நன்மையும் வரத்தான் செய்கிறது. இதை நாம் கண்கூடாக வாழ்க்கையில் பார்க்கிறோம். அப்படியென்றால் இதற்கு என்னதான் பொருள்?. சரி சரி பொறுமையாக மூன்றாம் வரியினைப் பார்ப்போம்.

வறுமைப்படுதலும் செல்வம் நிறைதலும் அவ்வாறே.

-  வறுமைப்படுதலை நோதலென்றார். ஆம், வறுமையினை விடக் கொடிய நோய் ஒன்று உண்டா?. அனைத்துத் துன்பங்களுக்கும் அடிப்படை ஆதாரமே இந்த வறுமை தானே. செல்வம் நிறைதலை தணிதலென்றார். ஆம், செல்வம் இருந்தால் தானே வாழ்க்கையில் மகிழ்ச்சி உண்டாகும். இந்த வறுமையும் செல்வமும் கூட பிறரால் வருவதில்லையாம். அப்படியென்றால், ஒருவன் பிச்சைக்காரனாய் வாழ்வதற்கும், செல்வந்தராய் இருப்பதற்கும் காரணம் என்ன?. பொறுமையாக அடுத்த வரியில் அதற்கான விடையினைத் தேடுவோம். (நோதல் = வறுமைப்படுதல். தணிதல் = நிறைதல். அகராதி காண்க.)

சாவு என்பது புதுப்பிக்கத் தக்கதல்ல.

- ஆ, எவ்வளவு உண்மையான கருத்து !!!. நமது ஓட்டுநர் அடையாள அட்டையினை அதன் தேதி முடிந்ததும் புதுப்பிக்கிறோம். நமது வெளிநாட்டுக் கடவுச்சீட்டினையும்
அதன் தேதி முடிவடைந்தால் புதுப்பிக்க முடிகிறது. இதுபோல பலவற்றை ஏன் நமது இளமையைக் கூட புதுப்பிக்க முயல்கிறோம். ஆனால், இந்த சாவினை மட்டும் நம்மால் புதுப்பிக்க முடிவதில்லையே. ஏன் நம்மால் சாவினை தள்ளிப்போட முடியவில்லை?. வாழ்நாள் என்னும் சீட்டில் எழுதப்பட்டுள்ள கடைசி தேதியை முடிவு செய்தது யார்?. விடைதெரியாத இக் கேள்விகளுக்கு விடையைக் காண அடுத்த வரிக்குச் செல்வோம். (புதுவுதல் = புதுமையாக்குதல் / புதுப்பித்தல்)

இல்வாழ்க்கை இனிமையானது என்று நான் மகிழவும் இல்லை;

- இல்வாழ்க்கை என்பதே இன்பமும் துன்பமும் நிறைந்தது தான். நன்மை விளையும் போது மகிழ்வதும் தீமை விளையும் போது வருந்துவதும் மனித உயிரின் இயல்பு தான். ஆனால், இங்கு புலவர் தனது இல்வாழ்க்கையினை எண்ணிப் பார்த்து இவ்வாறு சொல்கிறார். இல்வாழ்வில் தனக்கு எல்லையற்ற இன்பங்கள் கிடைத்த போதும் கூட தனது மனம் மகிழவில்லை என்கிறார். சரி, அவரது குடும்ப விசயங்களை ஏன் அவர் நம்மிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும்?. இதனால் யாருக்கு என்ன பயன்?. இன்னும் கீழே இறங்கி பார்ப்போம்.

துறவு துன்பமானது என்று நான் வருந்தவும் இல்லை.

- இம்மை எனப்படும் இல்லறத்தில் தனது 60 அகவை வரை மனைவியுடனும் மக்களுடனும் வாழ்ந்து முடித்துவிட்டு இப்போது மறுமை எனப்படும் துறவற வாழ்வில் ஈடுபட்டுள்ள புலவர் இவ்வாறு கூறுகிறார். உண்மையில் இல்லறத்தைக் காட்டிலும் துறவறத்தில் இடையூறுகள் பல உண்டு. முதல் இடையூறு தனிமை. இல்லறத்தில் பலருடன் அளவளாவி வாழ்ந்த ஒருவருக்கு இந்தத் தனிமையினை எதிர்கொண்டு வெல்வதென்பது மிகக் கடினமான செயல். இரண்டாவது இடையூறு உணவு. என்னதான் துறவியானாலும் உடல் இருக்கும் வரை பசிக்கு உணவு வேண்டுமே. காட்டிலும் மலையிலும் வாழும் துறவிகளுக்குத் தான் தெரியும் அங்கே உணவு பெறுவது எவ்வளவு கடினமானதென்று. இதுபோக பருவகால மாற்றங்கள், விலங்குகள் என்று பல்வேறு இடையூறுகள் உண்டு. இவற்றையெல்லாம் எதிர்கொண்டு சமாளித்து வாழ்வதற்குக் கலங்காத உள்ளம் வேண்டும். ஆனால் புலவர் தனது இல்வாழ்வில் இன்பத்தைக் கண்டு மயங்காததால் துறவறத்தின் துன்பங்கள் அவரைப் பாதிக்கவில்லை என்று தெரிகிறது. ம்ம்.. இப்போது தான் மெல்லப் புரியத் துவங்குகிறது. இன்னும் அடியில் செல்வோம்.

மின்னலுடன் மழையானது ஒருதுளியாகத் துவங்கி தொடர்ந்து பெய்ததால்

- அனைத்து உயிர்களின் தோற்றமும் ஒரு புள்ளியில் தான் என்பதைப் போல இந்த மழையும் ஒரு துளியில் தான் தோன்றுகிறது. பூமியில் இருக்கும் நீர் கதிரவனின் வெப்பத்தால் ஆவியாகி மேலே சென்று மேகங்களாகி மிதக்கிறது. இந்த மேகங்களில் மின்னல் ஏற்பட அவை மழைத்துளியாகி அவையெல்லாம் ஒன்று சேர்ந்து மழையாகி மீண்டும் பூமியை நோக்கி விழுகிறது. சரி சரி இதெல்லாம் தெரிந்தது தானே, இதை ஏன் இங்கே சொல்ல வேண்டும்?. அடுத்த வரிக்குச் செல்வோம்.

பாறைகளில் மோதிக் கீழிறங்கிய நீர் வலிமையானதோர் காட்டாறாய் மாற

- ஆ, இது தான் மிக இன்றியமையாத வரி. வலிமையே இல்லாமல் காற்றில் மிதக்கின்ற ஒரு மேகமானது மழைத்துளியாய் மாறியதும் அதற்கு லேசாக ஒரு ஆற்றல் உருவாகிறது. இத்துளிகள் எல்லாம் ஒன்று சேர்ந்ததும் அதன் ஆற்றல் பெருகுகிறது. இதனால் பூமியை நோக்கி அது இழுக்கப்படுகிறது. பூமியை வந்தடைந்த இவை சிறு ஓடைகளாய் உருவெடுத்து மீண்டும் பல்கிப் பெருகுவதால் வலிமையானதோர் ஆற்றல் பொருளாய் அதாவது ஒரு காட்டாறாய் மாறுகிறது. பெரிய பெரிய பாறைகளைக் கூட இடம்பெயரச் செய்யும் இந்த அளப்பரிய ஆற்றல் நீருக்குக் கிடைத்தது எவ்வாறு?. நீரானது பூமியின் மேல் பரப்பிலேயே இருந்திருந்தால் இந்த வலிமை அதற்குக் கிடைத்திருக்குமா? ஒருபோதும் இல்லை தானே. இந்த நீருக்கு ஒரு இயக்க ஆற்றலைக் கொடுத்தது எது?. பூமிதான்; பூமியின் ஈர்ப்பு விசைதான். சரி, அடுத்த வரியில் என்ன சொல்கிறார் பார்ப்போம்.

அந்நீரில் சிக்கிய படகின் போக்கினைப் போல

- அளப்பரிய ஆற்றல் கொண்ட ஒரு காட்டாற்றிலே ஒரு படகு சிக்கிக்கொண்டால் அதன் கதி என்னவாகும்?. படகோட்டியின் விருப்பத்திற்கேற்ப படகினை அப்போது ஓட்டிச் செல்ல முடியுமா?. முடியாது. காட்டாற்றின் போக்கில் தான் படகு பயணிக்க முடியும். அங்கே அப்போது படகோட்டியின் முயற்சிகள் அனைத்தும் பயனற்றுப் போகும். ஆனால் அதே ஆறு காட்டாறாக மாறுவதற்கு முன்புவரை அந்த ஆற்றில் தான் விரும்பிய வண்ணம் படகோட்டியானவன் படகினை ஓட்டிக்கொண்டு தானே இருந்தான். இப்போது ஏன் அவனால் முடியவில்லை?. ஏனென்றால் அப்போது அவனது முயற்சிகளை வெல்லும் ஆற்றல் ஒன்று இல்லை. இப்போது இருக்கிறது, காட்டாற்றின் வடிவாக. தனக்கு எதிராக தன்னை வெல்லும் பேராற்றல் ஒன்று மெல்லமெல்ல உருவாகி வருவதை அதுவரை அவனாலேயே அறிய முடியவில்லை பாருங்கள். இதை என்னவென்று சொல்வீர்கள்?. புலவர் இதை என்னவென்று சொல்கிறார்?. வாருங்கள் அடுத்த வரியில் பார்ப்போம்.

மன்னுயிர் விதியின் போக்கில்தான் இயங்கும் என்பதனை

- ஓ, இதைத்தான் புலவர் விதியென்று சொல்கிறாரா?. அதாவது உயிர்களின் இயக்கமானது பார்ப்பதற்குத் தன்னிச்சையாக நடப்பது போலத் தோன்றினாலும் உண்மையில் அவை விதியின் ஆளுமைக்குட்பட்டுத் தான் நடப்பதாகக் கூறுகிறார் புலவர். காட்டாறு உருவாகும் வரை அதுபற்றி அந்த படகோட்டி அறிந்திருக்காததைப் போல ஒரு செயல் நடவாத வரை விதியானது தன்னை மறைத்தே வைத்திருக்கும். செயல் நிகழும்போது தான் விதியின் வலிமையை நம்மால் உணரமுடிகிறது. விதியால் நிகழ்த்தப்படும் ஒரு செயல் சிலருக்கு நன்மையினையும் அதேசமயம் சிலருக்குத் தீமையினையும் தருகிறது. இங்கு தீமையோ நன்மையோ விதி ஒன்றுதான்; செயலும் ஒன்றுதான். ஆனால், விளைவுகள் இரண்டு. இடம், நேரம், சூழல் என்று அந்த செயலுடன் தொடர்புடையவை மூன்று. ஆக, ஒரு செயல் ஒரு சூழலில் நமக்கு நன்மை தருமா தீமை தருமா என்பதனை அந்த விதி தான் தீர்மானிக்கிறது என்கிறார். சரி, விதியின் இந்த அளப்பரிய ஆற்றலை அவர் எவ்வாறு அறிந்தார்?. அடுத்த வரியைப் பார்ப்போம். 

வெளியிடத்திலே (நிகழ்ந்த) ஓர் காட்சியின் மூலமாகக் கண்டு தெளிந்தோம் ஆகையால்
- திறந்த வெளியிடத்திலே நிகழ்ந்த ஓர் காட்சியினைக் கண்டு அதன்மூலமாக விதியின் வலிமை பற்றிய தெளிவினைத் தான் பெற்றதாகச் சொல்கிறார். அப்படி அவர் கண்ட காட்சி எது?. அது தான் கோடைமழைக் காட்சி. இக் கட்டுரையின் முதல் பகுதியில் விரிவாகக் கூறப்பட்ட மழை நிகழ்ச்சி. மலையில் நிகழ்ந்த மழை நிகழ்ச்சியும் அதனால் உண்டான விளைவுகளும் புலவருக்குள் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி இருந்தன. யாரும் எதிர்பாராதவண்ணம், அதுவரை பழங்களை உண்டு மகிழ்ந்திருந்த குரங்குகளும், மீன்பிடித்து மகிழ்ந்திருந்த படகோட்டிகளும் திடீரெனத் தோன்றிய மழை வெள்ளத்தில் காணாமல் போனது அவரை சிந்திக்கத் தூண்டியது. இந்த மழை வெள்ளத்தின் அளப்பரிய ஆற்றலை இப்பாடலில் விதியின் ஆற்றலுடன் ஒப்பிடுகிறார்.  ( திறவோர் = திறவு + ஓர். திறவு = வெளியிடம். அகராதி காண்க.)

பெரியோரின் சிறப்பற்ற கீழ்ச்செயல் கண்டு வியப்பதும் இல்லை;

- மேன்மை மிக்க பெரியோர்கள் செய்யும் செயல்கள் யாவும் நற்செயல்கள் தான். இதில் வியப்பதற்கு ஒன்றுமில்லை தான். ஆனால் அத்தகைய மேன்மை தாங்கிய பெருமக்கள் ஒருநாள் தமது பெருமை குன்றுமாறு இழிசெயல் புரிந்தால் என்னவாகும்?. என்னது? அவரா? அவரா இந்த மாதிரிக் காரியம் செய்தார்? என்னால் நம்பவே முடியவில்லையே.!. என்று வியப்படைகிறோம் அல்லவா?. இவ்வாறு வியப்படைவது உலக இயல்பு தான். ஆனால் நம் புலவர் அவ்வாறு வியப்படைய மாட்டேன் என்கிறார். ஏன்? ஏனென்றால், பெரியோரின் இச் செயலுக்குக் காரணம் அவரல்லர். விதி, விதி தான் காரணம். ஆம், விதிவசத்தால் தன் மதியிழந்து அவர் செய்யும் செயலே இந்த இழிசெயல் என்கிறார். எவ்வளவு பெரிய மனிதரும் விதியின் கைப்பாவை ஆகிவிட்டால் அவர் கதி அதோ கதிதான் என்பதை நாமும் பல கதைகளில் படித்திருக்கிறோம். பெரியோரின் இழிசெயலுக்குப் பின்புலமாக விதி இருக்கும் காரணத்தினால் தான் புலவர் அச்செயல் கண்டு தான் வியப்படைவதில்லை என்கிறார். சரிதானே?. (மாட்சியில் = மாட்சி + இல் = மாட்சியற்ற )

சிறியோரின் நற்செயல் கண்டு இகழ்வதும் இல்லை.

- கீழ்க்குணம் மிக்க சிறியோரின் செயல்கள் அனைத்தும் தீய செயல்களாகத் தான் இருக்கும் என்று அனைவருக்கும் தெரியும். தனது வாழ்க்கை முழுவதும் பிறருக்குத் தீமையே செய்து வந்த ஒருவன் திடீரென்று நல்லவனாகி நன்மை செய்யத் துவங்கினால் என்னவாகும்?. என்னது? அவனா?. அவனாவது நல்லது செய்றதாவது!. என்று அவன் செய்த நல்ல காரியத்தையும் இகழ்ச்சியாகவே மக்கள் பேசுவர். இதுவும் உலக இயல்பு தான். ஆனால் நம் புலவர் இதிலும் மாறுபடுகிறார். தான் அவ்வாறு இகழமாட்டேன் என்கிறார். ஏன்?. ஏனென்றால் இதுவரை தீமையே செய்த வந்த ஒருவன் நல்லவனாய் நற்செயல்கள் புரிவதும் விதியினால் தான் என்கிறார். ஆம், நல்ல மதியினைக் கெடுக்க வல்லதும் கெட்ட மதியினை திருத்த வல்லதும் இந்த விதி என்கிறார் புலவர். ஒருவகையில் பார்த்தால் இந்த விதியானது வள்ளுவர் சொன்ன மழை போலத்தான் இருக்கிறது. கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய் மற்றாங்கே எடுப்பதூஉம் எல்லாம் மழை என்று கூறிய வள்ளுவர் வாக்கு இங்கு பொருத்தமாய் அமைவதைப் பாருங்கள்.

பாடலின் சாரம்:

இனி, இப்பாடலின் மூலமாக புலவர் கணியன் பூங்குன்றனார் கூற வருகின்ற கருத்தின் சாரத்தினைக் கீழே காணலாம்.

ஒருவருக்கு வரும் நன்மையும் தீமையும் பிறரால் வருவதில்லை; மாறாக விதிவசத்தாலே வருகின்றது. ஒருவரின் வறுமை நிலையினையும் செல்வநிலையினையும் கூட இந்த விதிதான் முடிவு செய்கிறது. ஒருவரது வாழ்க்கை இனிமையானதாக இருப்பதும் துன்பம் நிறைந்ததாக இருப்பதும் அதே விதியினால் தான். சாவும் கூட முன்னரே விதியினால் நிச்சயிக்கப்பட்ட ஒன்றுதான். நல்லோரின் மதியினைக் கெடுத்து தீமை செய்ய வைக்கவும் தீயோரை நல்வழிப்படுத்தி நன்மை செய்ய வைக்கவும் இந்த விதியினால் முடியும். ஆம், இந்த விதியானது மிக மிக மிக வலியது. இதை வெல்லவே முடியாதா? முடியும்!

என்றால் விதியை வெல்லும் வழிதான் என்ன?. அது தான் ஒற்றுமை. ஆம், ஒற்றுமை ஒன்றே விதியின் வலிமையைக் குறைக்க வல்லது.

இது எப்படி சாத்தியமாகும்?. முதலில் விதி எவ்வாறு வலிமை பெறுகிறது என்று பாருங்கள். இதற்கு இப் பாடலில் வரும் காட்டாற்றினையே சான்றாக எடுத்துக் கொள்வோம். பூமியில் பொழியும் மழைநீர் முதலில் சிறு சிறு ஓடைகளாய்த் தான் உருவெடுக்கிறது. பின்னர் இவை ஒன்று சேர்ந்து ஒரு வலிமை மிக்க காட்டாறாய் மாறுகிறது. இந்த மாற்றத்திற்கு ஊன்றுகோலாய் இருப்பது புவி ஈர்ப்பு விசை தான். அதைப்போல மனிதர்கள் நிலத்தால் இனத்தால் மொழியால் பிரிந்திருந்தாலும் அன்பு என்னும் ஈர்ப்பு விசையினால் ஒன்றாக்கப் பட்டால் மனித ஆற்றல் வலிமை பெறும். ஒற்றுமையால் வலிமை பெற்ற மனித ஆற்றலை விதியினால் அசைக்க முடியாது. இது எப்படி?. மீண்டும் பாடலில் இருந்தே சான்று பார்ப்போம்.

பாறைகள் தனித்தனியாய் இருக்கும் போது அவற்றை மிக எளிதாக ஒரு காட்டாறு இடம்பெயர்த்து விடும். ஆனால் அதே பாறைகள் ஓரிடத்தில் குழுமி நெருக்கமாக இருந்தால் அவற்றில் ஒன்றைக் கூட காட்டாற்றினால் அசைக்க முடியாது. மாறாக, அது பாறைகளைச் சுற்றிச் செல்லும். காரணம், ஒற்றுமையினால் விளைந்த பேராற்றல். அதைப்போல மனிதர்கள் பிரிவுற்று இருக்கும் பொழுது வலிமை குறைந்தவர்களாகத் தான் இருப்பர். ஒன்றாகச் சேரும்பொழுது விதி கூட இந்த மனித ஆற்றலுக்கு முன் வளைந்து கொடுக்கும். இதைச் சில நடைமுறை எடுத்துக்காட்டுக்களுடன் காணலாம்.

ஒருவருக்கு வாழ்வில் நன்மையும் தீமையும் வறுமையும் செல்வமும் இன்பமும் துன்பமும் விதிவசத்தால் தான் வருகின்றது என்று முன்னர் கண்டோம். ஆனால் மக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் அன்பு பூண்டொழுகும் பொழுது அங்கு தீமையில்லை; வறுமையில்லை; துன்பமுமில்லை. ஏனென்றால் ஒருவருக்கொருவர் அன்பு பூண்டபின், பிறருக்குத் தீமை செய்யமாட்டார்; ஒருவருக்கு வறுமையோ துன்பமோ விளைந்தால் ஓடோடிச் சென்று அவர் வறுமையினைக் களைவார்; அவரது துன்பத்தினைத் துடைப்பார் அன்றோ!. இவ்வாறு மனிதரின் ஒற்றுமை என்னும் பேராற்றலுக்கு முன்னால் விதியின் வலிமை குன்றத் துவங்கி விடும். சுருங்கச் சொன்னால் மனிதருக்கிடையிலான இடைவெளி கூடக்கூட விதி வலிமை பெறும்; குறையக் குறைய விதி வலியிழக்கும். மனிதம் வெல்லும்.!. இதற்கான முதல் படி அனைத்து ஊர்களையும் தம் ஊராக நினைத்து வளங்களைப் பகிர்ந்து கொள்ளுதலும் அனைத்து மக்களையும் தமது உறவினராகப் பேணுதலுமே.

இதைக் கருத்தில் கொண்டே புலவர் கூறினார்: யாதும் ஊரே யாவரும் கேளிர். என்ன அவர் கூற்று சரிதானே?.

சனி, 12 அக்டோபர், 2013

தீதும் நன்றும் - பகுதி 1 ( யாதும் ஊரே ! )

அந்தக் கல்மண்டபத்தின் கருவறையினை பெரியது என்று சொல்ல முடியாது. நான்கு பேர் படுத்தால் புரண்டு படுக்க முடியாத அளவுக்கு சிறியது தான். அந்த உச்சி வெயில் வேளையில் அவர் கருவறையின் நடுவில் கண்மூடி அமர்ந்திருந்தார். கருவறையில் இருந்த ஒரு சிறிய சாளரத்தின் வழியாக உள்ளே நுழைந்த வெயில் கருவறையினை வெளிச்சம் போட்டுக் காட்டியது. கருவறையின் ஒரு மூலையில் ஒரு பாத்திரம் மட்டுமே கிடந்தது.

அவர் திடீரென்று கண் திறந்து பார்த்தார். பசி அவரது வயிற்றைப் பதம் பார்த்திருக்க வேண்டும். ஒட்டிப் போன வயிறுடன் அவர் இருந்தாலும் அவரது கண்களில் ஒரு ஒளி தெரிந்தது. அவரது உடல் அவருக்கு அகவை 60 க்கு மேலிருக்கலாம் என்று கூறினாலும் அவரது ஒளி வீசும் கண்கள் அவரை இளமையாகவே காட்டின. இடுப்புக்குக் கீழ் ஒரே ஒரு நூலாடை அணிந்திருந்தார். இன்னொரு நூலாடையின் மேல் அவர் அமர்ந்திருந்தார். அது அவரது மேலாடையாகவும் இருக்கலாம்.

இப்போது அவரது கண்கள் எதையோ தேடின.

இங்கே தானே வைத்திருந்தேன். எங்கே போயிருக்கும்?

பசிக்கும் வயிறுடன் மெல்ல எழுந்து கருவறையினை விட்டு வெளியில் முன் மண்டபத்திற்கு வந்தார். அங்கும் யாரையும் காணவில்லை.

அட, எங்கே போயிருக்கும் அவை? யார் எடுத்துச் சென்றிருப்பர்?.

முன் மண்டபத்தினையும் விட்டு நிலத்தில் கால் பதித்து மண்டபத்தின் அருகில் இருந்த அந்த அரச மரத்தடிக்கு வந்தார். அந்த அரச மரம் நல்ல உயரத்தில் நன்கு பரந்து விரிந்து வளர்ந்திருந்தது. தலையை மெல்ல உயர்த்தி மரத்தை நோக்கினார். மரக் கிளைகளில் ஒரு சில குரங்குகள் தென்பட்டன. அவற்றை உற்றுப் பார்த்தபோது ஒரு குரங்கின் கையில் கொய்யாக் கனிகளும் இன்னொன்றின் கையில் மாங்கனியும் இருப்பதைக் கண்டார்.

ஓ நீங்கள் தானா அப் பழங்களை எடுத்துச் சென்றது. பரவாயில்லை. உங்களுக்கும் பசிக்கும் தானே. சாப்பிடுங்கள். நான் கீழே இறங்கி சாரலில் இருந்து பழங்களைப் பறித்து வருகிறேன்.

எண்ணியவர் கீழே சாரலை நோக்கினார். அது மிக மிக ஆழத்தில் இருந்தது. ஆம், அவர் இருந்த கல் மண்டபம் அந்த மலையின் உச்சியில் இருந்தது. பூங்குன்றம் என்பது அம் மலையின் பெயர். பெயருக்கேற்றவாறே அம் மலையில் பல்வகையான பூக்களின் மணம் கமழ்ந்தவாறு இருக்கும். இப்போது கோடை காலமாதலால் பூக்கள் இன்றி சில மரங்கள் தங்கள் இலைகளையும் உதிர்த்துவிட்டு கூடாகக் காட்சியளித்தன.

அவர் கீழே இறங்கத் துவங்கிய நொடியில் திடீரென்று அவ்விடத்தை இருள் சூழ்வது போலத் தோன்றியது. ஆம், அங்கிருந்த மேகங்கள் எல்லாம் ஒன்று கூடி மலை உச்சிக்கு வந்து நின்றன.

ஓ மழை வரப் போகிறது போலும். இனி நாம் இப்போதைக்கு இறங்கிச் செல்ல முடியாது.

எண்ணியவர் அண்ணாந்து மேகங்களைப் பார்த்தார். நச்சென்று அவரது முகத்தில் விழுந்தது ஒரு மழைத் துளி.

கோடையின் வெப்பத்தால் வெப்புண்டு கிடந்த அவரது முகத்தில் மழைத்துளி விழுந்ததும் அவரது உடல் புல்லரித்தது. உடன் குளிர் காற்று வீசத் துவங்கியது. முன் மண்டபத்தின் மேல் ஏறி நின்று கொண்டு கீழே பார்த்தார்.

மலைச்சாரலின் முடிவில் ஒருபுறம் ஒரு சிறிய ஆறு ஓடிக் கொண்டிருந்தது. ஓடிக்கொண்டிருந்தது என்பதை விட தேங்கி இருந்தது என்று சொல்லலாம். சிறிதளவே நீர் இருந்த போதிலும் அதிலும் ஒரு சிலர் படகோட்டிக் கொண்டும் மீன் பிடித்துக் கொண்டும் இருந்தார்கள். ஆற்றுக்கு அந்தப் பக்கமாக இன்னொரு மலை இருந்தது. ஆனால் அதில் மரங்கள் மிகக் குறைவாகவும் கற்கள் நிறைந்தும் இருந்தன. பெரிய பெரிய பாறைகள் ஆங்காங்கே வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டது போல் இருந்தன. இந்த இரண்டு மலைகளுக்கும் இடையில் தான் அந்த ஆறு மிக மெதுவாக ஓடிக் கொண்டிருந்தது.

திடீரென மின்னல் வெட்டியது. அவ்வளவு தான், வானமே பொத்துக் கொண்டதோ என்று நினைக்கும் அளவுக்கு பெரும் மழை பொழியத் துவங்கி விட்டது. இப்போது மண்டபத்தைச் சுற்றியிருந்த எதையும் அவரால் பார்க்க இயலவில்லை. ஏன் அந்த மரம் கூடத் தெரியாத அளவுக்கு வலுவான மழை பெய்து கொண்டிருந்தது. இடியும் மின்னலும் மாறிமாறி ஏற்பட்டு அந்த இடத்தின் அமைதியைக் குலைத்து ஒருவித அச்சத்தை உருவாக்கிக் கொண்டிருந்தன.

அவர் அமைதியாய் முன் மண்டபத்தில் அமர்ந்து கொண்டு சிந்திக்கலானார்.

பாவம், இந்த குரங்குகளின் நிலை என்ன ஆகுமோ தெரியவில்லையே! இந்த பயங்கரமான மழையில் சிக்கிக் கொண்ட இவை இனி உயிர் தப்புமா? கடவுளே.

அவரது உடல் பசிக்காக ஏங்கினாலும் மனம் குரங்குகளின் நிலைக்காக வருந்தியது. மனம் பின்னோக்கிச் சென்றது.

இளம் வயதில் இல்வாழ்க்கையில் இருந்தபோது மனைவி, அவருக்குப் பலவகையான பழங்களை அருகிலிருந்து ஊட்டிய பொழுதுகளை எண்ணிப் பார்த்தார். அப்போது என் மனம் களிப்புற்று இருந்ததா? எண்ணிப் பார்த்தார். ம்கூம். இல்லை. இப்போது துறவு வாழ்க்கையில் உண்ண உணவின்றி பசியால் உழலும் இக் கணத்தில் என் மனம் துன்புறுகிறதா? இல்லை. ஆனால், இதோ இந்த உடல் தான் எதையாவது உண்ணத் தா என்று கேட்கிறது. ஒருநாளைக்கு ஒருவேளை உணவு தானே. அதுவும் பழங்கள் மட்டும் தானே. அதையேனும் கொடுக்கக் கூடாதா என்று ஏங்குகிறது. அது பாட்டுக்குக் கேட்டுக் கொண்டிருக்கட்டும். நாம் நமது வேலையினைக் கவனிப்போம்.

இப்போது அவர் கண்களை மூடிக் கொண்டார். உடலின் தேவையைப் புறந்தள்ளி விட்டு சூழலை முற்றிலும் மறந்துவிட்டு ஓகநிலையில் ஆழ்ந்தார். எவ்வளவு நேரம் அவ்வாறு இருந்தாரோ அவருக்குத் தெரியாது. கண்களைத் திறந்து பார்த்தார். இப்போது மழை விட்டிருந்தது. வானம் தெளிந்திருந்தது.

அருகிலிருந்த மரத்தைப் பார்த்தவர் துணுக்குற்றார். மரத்தில் இருந்த பல கிளைகள் முறிந்து தொங்கிக் கொண்டிருந்தன. குரங்குகளைக் காணவில்லை. அடடா, என்ன ஆயிற்றோ அவைகளுக்கு? பாவம்!.

அருகில் இருந்த மலையைப் பார்த்தவர் இன்னும் ஆச்சர்யமடைந்தார். அங்கிருந்த பாறைகளில் பலவற்றைக் காணவில்லை. ஒருசில இடம் பெயர்ந்திருந்தன.

ஓ மிக வலுவான மழை பெய்துள்ளதோ?. இந்த மலையின் கோலத்தையே மாற்றி அமைத்து விட்டதே இந்த மழை.

எண்ணிக் கொண்டே கீழே இருந்த ஆற்றைப் பார்த்தவர் அரண்டு போனார். அமைதியாக இருந்த அந்த ஆறு இப்போது காட்டாறாக மாறி இருந்தது. பல மரக்கிளைகள் அந்த ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டன. அங்கிருந்த எந்த ஒரு படகினையும் இப்போது காணமுடியவில்லை. ஒருவேளை அப் படகுகள் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டிருக்குமோ? என்று எண்ணிக் கொண்டிருந்த பொழுதே அவரது எண்ணம் சரிதான் என்று மெய்ப்பிப்பதைப் போல ஒரு படகு அந்த ஆற்றில் பயங்கரமாக புரண்டு புரண்டு வந்து கொண்டிருந்தது. ஆற்றின் வேகத்துடன் ஈடு கொடுக்க முடியாமல் மூழ்குவதும் எழும்புவதுமாய் இருந்த அதன் நிலை அவரது மனதினை என்னமோ செய்தது. அப்போது......

கதிரவன் மேற்கில் மறையத் துவங்கினான்.

அவரது மனதில் ஒரு பாடல் உதிக்கத் துவங்கியது.


                      ............................... தொடரும்.