புதன், 9 ஏப்ரல், 2014

ஆதிபகவன் - உலகின் முதல் உழவன் !

முன்னுரை:

ஆதிபகவன் யார் என்ற கட்டுரையின் தொடர்ச்சியாக இரண்டாம் பாகமாக இக் கட்டுரை வெளிவருகிறது. ஆதிபகவன் யார் என்ற கட்டுரையில், ஆதிபகவன் என்ற சொல்லுக்குப் பதிலாக ஆதியகவன் என்ற சொல்லை பாடபேதமாகக் கொண்டு அச் சொல்லுக்கு 'காரண அறிவானவன்' என்ற பொருள் கொண்டு, இறைவன் காரண அறிவின் வடிவினனாய் இருக்கிறான் என்று வள்ளுவர் கூறுவதாக உரை கூறப்பட்டது. இனி, இக் கட்டுரையில் இந்த ஆதிபகவன் என்ற சொல்லை வேறொரு புதிய கோணத்தில் இருந்து ஆய்வுசெய்து புதியதோர் உரைவிளக்கம் முன்வைக்கப்படுகிறது. அப்படியானால், முன்னர் கூறப்பட்ட விளக்க உரை தவறா? என்று நினைத்தல் வேண்டற்பாலது. ஏனெனில், வள்ளுவரால் எழுதப்பட்ட உண்மையான திருக்குறள் ஒலைச்சுவடிகளை யாரும் இதுவரை கண்டதில்லை. இந் நிலையில், தற்போது கிடைத்து இருக்கும் குறள்களில் பாடபேதங்கள் இருப்பதற்கு வாய்ப்புகள் மிக அதிகம். ஆகவே, கூடியவரை மிகப் பொருத்தமாக உள்ள பாடபேதங்களைக் கண்டறிந்து அவற்றின் அடிப்படையில் குறளுக்குப் புதிய கருத்துக்களை முன்வைப்பதில் தவறில்லை. மேலும், ஏனைய கட்டுரைகளைப் போலவே, இக் கட்டுரையும் வள்ளுவரின் நுண்மாண் நுழைபுலத்திற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கும் என்பதிலும் ஐயமில்லை.

ஆதிபகவன் - யார்?

திருக்குறளின் முதல் குறளில் வருகின்ற இந்த ஆதிபகவன் என்ற சொல்லைப் பற்றிப் பல ஆண்டுகளாக பல அறிஞர்கள் ஆய்வுமேற்கொண்டு வருகின்றனர். ஒவ்வொருவரும் அவரவர் புலமைக்கு ஏற்றவாறு அவரவர் கருத்துக்களை முன்வைக்கின்றனர். இருப்பினும், இக் கருத்துக்களால் திருவள்ளுவரின் மாட்சி மேம்படுத்தப்படுகிறதா இல்லையா என்பதே கேள்வி. இதுகாறும் இக் குறளுக்கு உரைக்கப்பட்ட விளக்கங்கள் எவையும் வள்ளுவரின் மாண்புக்கு அணிசேர்க்கவில்லை. காரணம், இவ் விளக்கங்கள் அனைத்தும் திருவள்ளுவரை ஏதேனும் ஒரு சமயத்தை சார்ந்தவராகவே காட்ட முற்படுகின்றன. உலகப் பொதுமறை என்று போற்றப்படும் ஒரு நூலாகிய திருக்குறளில் குறிப்பிட்ட சமயம் சார்ந்த கருத்துக்கள் மலிந்து கிடக்குமானால், அது எங்ஙனம் உலகப் பொதுமறையாகத் திகழ முடியும்?. எனவே, இந்த ஆதிபகவன் என்ற சொல்லானது எந்த ஒரு குறிப்பிட்ட சமய சார்புமின்றி, அனைத்து சமய மக்களுக்குப் பொதுவானதாகவும், அனைவராலும் அறியப்பட்ட ஒரு பொதுப்பண்பினை குறிப்பிடுவதாயும் இருக்க வேண்டும் என்பது தெளிவாகிறது. அப்படிப்பட்ட ஒரு பண்பான காரண அறிவு என்பதைப் பற்றித்தான் ஆதிபகவன் யார் என்ற கட்டுரையில் கண்டோம். இக் கட்டுரையிலும் அப்படியானதோர் பொதுப்பண்பினையே காண இருக்கிறோம்.

ஆதிபகவன் - திருத்தமும் புதிய விளக்கமும்:

இக் கட்டுரையில் ஆதிபகவன் என்ற சொல்லுக்குப் பாடபேதமாக 'ஆதிபகலன்' என்ற சொல் முன்வைக்கப்படுகிறது.

இதில் வரும் 'பகல்' என்பதற்கு 'ஏர்நுகம்' என்பது பொருள். 'பகலன்' என்பது ஏர்நுகத்தை உடையவன் அதாவது உழவன் என்று பொருள். மேலும்,

ஆதி என்பதற்கு முதல் என்பது பொருள். ஆக,

ஆதிபகலன் = முதல் உழவன்.

இதன்படி, இக் குறளுக்கான புதிய விளக்கமானது:

எழுத்துக்கள் எல்லாம் அகரத்தையே முதல் எழுத்தாகக் கொண்டுள்ளன. அதைப்போல இவ் உலகமானது இறைவனையே முதல் உழவனாகக் கொண்டுள்ளது.


நிறுவுதல்:

மேற்காணும் புதிய கருத்தினை ஆதாரங்களுடன் இங்கே நிறுவலாம்.  நாம் ஏற்கெனவே கண்டதைப் போல, திருக்குறளானது முதன்முதலில் திருவள்ளுவரால் ஓலைச்சுவடியில் எழுதப்பட்டு பல்வேறு தட்பவெப்ப நிலைகளில் சிக்குண்டு சிதிலமடைந்து எழுத்துருக்கள் மாறுபட்டு பின்னர் அது பல படிகளாக ஓலைச்சுவடிகளில் எழுதப்பட்டு இப்போது ஒருவகையாக நமக்குக் கிடைத்துள்ளது. மேலும், எந்த ஒரு மிகப்பழைய ஓலைச்சுவடியையும் படிக்கும்போது 'ல' கர 'வ' கர வேறுபாடு காண்பது மிக நுட்பமான திறமை வாய்ந்த செயலாகும். வரிவடிவத்தில் மிகவும் ஒத்துப் போகின்ற இந்த இரண்டு எழுத்துருக்கள் படிப்போரின் கண்ணை மிக எளிதாக ஏமாற்றிவிடும். அவ் வகையில், ஆதிபகவன் என்பது ஆதிபகலனாக எழுதப்பட்டிருப்பதற்கு வாய்ப்புக்கள் மிக அதிகம்.

இனி, பகல் என்ற சொல் எவ்வாறு ஏர்நுகத்தைக் குறிக்கும் என்பதைக் காணலாம்.

பகல் - புதிய பொருள்:

பகுதல் என்ற வினையின் அடிப்படையில் தோன்றிய சொல்லே பகலாகும். பகுதல் என்பதற்கு கூராதல் என்ற பொருளுமுண்டு. சான்று: பகுவாய் நாரை = கூர்வாய் நாரை.

பகுதல் அதாவது கூராதல் என்ற வினையின் அடிப்படையில் தோன்றிய பிற சொற்கள் கீழே தரப்பட்டுள்ளன.

பகழி = கூர்மையான அம்பு.
பகர் / பகரம் / பகல் = கூர்மையான ஒளிக்கதிர்.
பகலாணி = நுகத்துக் கூராணி.
பகம் = கூரிய அலகுடைய கொக்கு.

இவற்றை சென்னைத் தமிழகராதியிலும் காணலாம்.

பகலாணி என்றும் பகல் என்றும் அறியப்படும் நுகத்தின் கூராணியே நுகத்தின் முதன்மைப் பொருளாகும். இதுவே நிலத்தைக் கிழித்து உழுவதற்கு உதவுவதாகும்.

முடிவுரை:

சுழன்றும் ஏர் பின்னது உலகம் என்று உழவுத்தொழிலின் இன்றியமையாமையை அறிந்த வள்ளுவர் உழவரின் சிறப்பை உலகோர்க்கு எடுத்துக்கூறவே உழவரின் பெருமையினை கடவுள் வாழ்த்தில் அதுவும் முதல் பாடலிலேயே பாடி இருக்கிறார் என்றால் மிகையாகாது. காரணம், உழவுத்தொழில் இன்றியமையாதது மட்டுமின்றி சமயம் சாராதது. உலகோர் அனைவருக்கும் பொதுவானது. முதல் பாடலில் இறைவனை உலகின் முதல் உழவன் என்று குறிப்பிட்ட வள்ளுவர் 8 ஆம் பாடலில் அறவாழி அந்தணன் அதாவது அறத்தையே கலப்பையாகக் கொண்ட உழவன் என்று இறைவனைப் பாடுகிறார். இதைப் பற்றி அறவாழி அந்தணன் என்ற கட்டுரையில் விரிவாகக் காணலாம். கூரிய எழுத்தாணியால் இயற்றப்படும் எழுத்துக்கள் அனைத்திற்கும் அகரமே தலைமையாகும்.  அதைப்போல உழவே தலையாகக் கொண்ட இவ் உலகிற்கு இறைவனே முதல் உழவனாவான் என்கிறார். இறைவனை உழவனாக உருவகித்ததில் இருந்து இறைவனின் ஆக்கல், காத்தல், அழித்தல் ஆகிய மூன்று வினைகளையும் முதல் பாட்டிலேயே உணர்த்திவிடுகிறார் வள்ளுவர். என்னே வள்ளுவரின் நுண்மாண் நுழைபுலம்!

1 கருத்து:

  1. ஆதி பகவன் என்பதை சமயம் சார்ந்த பொருள் உரைக்குமாறு கூறப்பட்டிருக்க வாய்ப்பில்லை. இந்த உலகம் தோன்றியதற்கு அடிப்படை சூரியன் மட்டுமே என்பதனை நாம் உணரவேண்டும். எனவே வள்ளுவரும் அதனையே குறிப்பிட்டு இருப்பார். மேலும் 2000 வருடங்களுக்கு முன்பு மதப் பிரிவினைகள் இருந்திருக்க வாய்ப்பில்லை.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களைத் தமிழில் தட்டச்சு செய்யும் வழி:
வலப்பக்கத்தில் உள்ள பகுதியில் தமிழ் ஒலிகளை ஆங்கில எழுத்துக்களில் அசசடித்து நகல் செய்து இங்கே ஒட்டலாம்.