வியாழன், 19 பிப்ரவரி, 2015

தசும்பு என்றால் என்ன?

முன்னுரை:

சங்க இலக்கியங்களில் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு இற்றைக் காலத்தில் வழக்கொழிந்து போன பல தமிழ்ச் சொற்களுள் தசும்பு என்ற சொல்லும் ஒன்று. இச் சொல்லுக்கு இன்றைய தமிழ் அகராதிகள் காட்டும் பல பொருட்களில் ஒன்று கூட பொருந்தாத பல இடங்கள் இலக்கியங்களில் காணப்படுகின்றன. இது இச் சொல்லுக்கு வேறொரு புதிய பொருள் இருக்கின்ற நிலையினையே காட்டுகின்றது. இக் கட்டுரையில் அந்தப் புதிய பொருள் என்ன என்பதைப் பற்றி ஆதாரங்களுடன் காணலாம்.

தசும்பு - தற்போதைய அகராதிகள் காட்டும் பொருட்கள்:

சென்னைத் தமிழ்ப் பேரகராதி:

தசும்பு tacumpu , n. cf. kusumbha. 1. Pot, waterpot; குடம். துணைபுண ராயமொடு தசும் புடன் றொலைச்சி (புறநா. 224, 2). 2. A big pot; மிடா. துளங்கு தசும்பு வாக்கிய பசும்பொதித் தேறல் (மலைபடு. 463). 3. Ornamental metallic pot set at the top of a tower; கோபுர விமானங்களின் உச்சிக் கலசம். சூழ்சுடர்ச் சிரத்து நன்மணித் தசும்பு தோன்ற லால் (கம்பரா. நகர. 26). 4. Gold; பொன். (அக. நி.)

வின்சுலோ அகராதி:

தசும்பு, (p. 538) [ tcumpu, ] s. A pot, a water pot, குடம். 2. A brass boiler, கொப்பரை. 3. Gold, பொன். (சது.)

சூடாமணி நிகண்டு

தசும்பு நற்குட மிடாவாம் - 34(10)

தசும்பு - சொல் பயிலும் இடங்கள்:

தசும்பு என்னும் சொல் இலக்கியத்தில் பயிலும் பல்வேறு இடங்களைக் கீழே காணலாம்.

சுடு மண் தசும்பின் மத்தம் தின்ற - நற் 84/6
நிறைந்து நெடிது இரா தசும்பின் வயிரியர் - பதி 43/34
துளங்கு தசும்பு வாக்கிய பசும் பொதி தேறல் - மலை 463
சாந்து புறத்து எறிந்த தசும்பு துளங்கு இருக்கை - பதி 42/11
துணை புணர் ஆயமொடு தசும்பு உடன் தொலைச்சி - புறம் 224/2
தீம் செறி தசும்பு தொலைச்சினன் - புறம் 239/16
தயிர் கொடு வந்த தசும்பும் நிறைய - புறம் 33/3
வேறு பட்ட உடையும் சேறுபட்ட தசும்பும்/கனவில் கண்டு ஆங்கு வருந்தாது நிற்ப - புறம் 377/18,19
தசும்பின் பொங்கிய திரள் புயத்து அரக்கர்-தம் தானை - கம்பரா. யுத்3:31 21/1
தசும்பின் நின்று இடை திரிந்திட மதி தகை அமிழ்தின் - கம்பரா.யுத்4:35 28/3
தசும்பினில் வாசம் ஊட்டி சார்த்திய தண்ணீர் என்ன - கம்பரா.யுத்1:8 17/3
சூழ் சுடர் சிரத்து நல் மணி தசும்பு தோன்றலால் - கம்பரா.பால:3 25/3
தசும்பு வேய்ந்தவர் ஒத்தவர் தமக்கு விண் தருவான் - கம்பரா.அயோ:10 36/2
தசும்பு உடை கனக நாஞ்சில் கடி மதில் தணித்து நோக்கா - கம்பரா.சுந்:1 77/1
தசும்பு இடை விரிந்தன என்னும் தாரைய - கம்பரா.யுத்1:6 41/1
உண்ணாதன கூர் நறவு உண்ட தசும்பு எண்ணாயிரம் ஆயினும் ஈகுவெனால் - கம்பரா.யுத்2:18 39/3,4
தசும்பு உடை கொடும் தேர்-தன்னை தட கையால் எடுத்து வீச - கம்பரா.யுத்2:18 232/2
தசும்பு நுண் நெடும் கோளொடு காலமும் சார - கம்பரா.யுத்3:22 162/4
தசும்பு-போல் உடைந்து ஒழியும் என்று அனைவரும் தளர - கம்பரா.யுத்4:37 107/3
தசும்புறு சயந்தனம் அரக்கர் தாள் தர - கம்பரா.ஆரண்:7 52/2
மிகுத்த நீல வான் மேகம் சூழ் விசும்பிடை தசும்பூடு உகுத்த செக்கரின் பிறை குலம் முளைத்தன ஒக்க - கம்பரா.யுத்4:35 13/3,4
நறை உடை தசும்பொடு நறிதின் வெந்த ஊன் - கம்பரா. யுத்2:16 101/1

(நன்றி: சங்கம்கன்கார்டன்ஸ்.காம்)


தசும்பு - பொருள் பொருந்தா இடங்கள்:

மேலே காணும் இலக்கியப் பாடல்களில், தசும்பு என்னும் சொல்லுக்கு அகராதிகள் கூறும் பொருட்களான குடம், மிடா(கொப்பரை), கலசம், பொன் ஆகியவற்றில் எதுவும் பொருந்திவராத சில இலக்கிய இடங்களை மட்டும் கீழே காணலாம்.

தீம் செறி தசும்பு தொலைச்சினன் - புறம் 239/16
வேறு பட்ட உடையும் சேறுபட்ட தசும்பும் கனவில் கண்டு ஆங்கு வருந்தாது நிற்ப - புறம் 377/18,19
நறை உடை தசும்பொடு நறிதின் வெந்த ஊன் - கம்பரா. யுத்2:16 101/1
உண்ணாதன கூர் நறவு உண்ட தசும்பு எண்ணாயிரம் ஆயினும் ஈகுவெனால் - கம்பரா.யுத்2:18 39/3,4

மேற்காணும் பாடல்வரிகளை நோக்கினால், தசும்பு என்பதற்கு கலசம், பொன் ஆகிய பொருட்கள் பொருந்தாது என்பது தெளிவாகிறது. காரணம், இப் பாடல்களில் வரும் தசும்பு என்பது ஒருவகைக் கள்ளுடைய பாத்திரம் என்பதை அறியமுடிகிறது. மேலும், இப் பாத்திரம், ஒரு குடமாகவோ கொப்பரையாகவோ இருக்க வாய்ப்புண்டா எனில் இல்லை என்றே கூறலாம். காரணம், விருந்தினர்களுக்கும் வீரர்களுக்கும் புத்துணர்வினை ஊட்டவேண்டி தனித்தனியே அளிக்கப்படும் இக் கள்ளினை யாரும் கொப்பரையிலோ குடத்திலோ ஊற்றிக் குடிக்கச்சொல்லிக் கொடுக்கமாட்டார்கள். அவ்வாறு செய்தால் அது நகைச்சுவை ஆகிவிடும். இதிலிருந்து தசும்பு என்பதற்கு அகராதிகள் கூறும் பொருட்களான குடம், கொப்பரை, பொன், கலசம் ஆகியவற்றைத் தவிர புதிய பொருள் ஒன்று உள்ளது என்பது தெளிவாகின்றது.

தசும்பு - புதிய பொருள் என்ன?

தசும்பு என்பதற்கு மேற்காணும் பாடல்வரிகளில் காணப்படும் புதிய பொருள் ' சொம்பு ' என்பதாகும்.

அடிப்பாகம் பெருத்துத் திரண்டு உருண்டையாகவும் மேல்பகுதியில் சிறிய வாயுடனும் விளங்கும் ஒரு கையடக்கப் பாத்திரமே சொம்பு ஆகும்.

சொம்பின் படம் அருகில் காட்டப்பட்டுள்ளது.

சொம்பில் மண்சொம்பு, பொன்சொம்பு, செப்புச்சொம்பு என்று பலவகைகள் உண்டு.

நிறுவுதல்:

தசும்பு என்பதற்கு சொம்பு என்ற புதிய பொருள் எவ்வாறு பொருந்தும் என்பதை சில ஆதாரங்களுடன் காணலாம்.

தசும்பு என்பது ஒருவகைக் கள்ளினையுடைய பாத்திரம் என்றும் அதில் விருந்தினர்களுக்கும் வீரர்களுக்கும் கள்ளினை ஊற்றித் தனித்தனியே வழங்குவார்கள் என்றும் மேலே  கண்டோம். அப்படி வழங்கப்படுவதைக் குடிக்க வேண்டுமென்றால், அது ஒரு கையடக்கப் பாத்திரமாகத் தான் இருக்கவேண்டும். மேலும், அப் பாத்திரம், தற்போதிய தம்ளர் போன்ற ஒரு பாத்திரமாகவும் இருக்கமுடியாது. காரணம், தம்ளரின் வடிவமைப்பாகும்.

தம்ளர் என்பது அடியில் சிறுத்தும் மேல்பகுதியில் பெருத்தும் அகன்ற வாயுடைய ஒரு பாத்திரமாகும். ஆனால், தசும்பு என்பது திரண்டு உருண்ட ஒரு வகைப் பாத்திரம் என்பதைக் கீழ்க் காணும் பாடல்வரியில் இருந்து அறியலாம்.

தசும்பின் பொங்கிய திரள் புயத்து அரக்கர்-தம் தானை - கம்பரா. யுத்3:31 21/1

தசும்பு போல வீங்கித் திரண்ட தோள்களை உடைய அரக்கர் என்று மேற்காணும் பாடலில் கூறுவதில் இருந்து,

தசும்பு என்பது,

தற்போதைய தம்ளர் போன்ற வடிவமைப்பினைப் பெற்ற பாத்திரமல்ல என்பதும்

அது தற்போது நாம் பயன்படுத்தி வருகின்ற சொம்பு போன்ற உருண்டு திரண்ட ஒருவகைப் பாத்திரமே என்பதும் உறுதியாகின்றது.

மேலும் இத் தசும்புகள் பெரும்பாலும் மண்ணால் செய்யப்பட்டு சுடப்பட்டவையே ஆகும் என்பதனைக் கீழ்க்காணும் பாடல்வரிகள் உணர்த்துகின்றன.

சுடு மண் தசும்பின் மத்தம் தின்ற - நற் 84/6
தசும்பு-போல் உடைந்து ஒழியும் என்று அனைவரும் தளர - கம்பரா.யுத்4:37 107/3

அதுமட்டுமின்றி, விருந்தினர்களுக்கும் வீரர்களுக்கும் கள்ளினை ஊற்றி வழங்க ஏதுவாக ஏராளமான புதிய சொம்புகளை வண்டிகளில் வைத்துக் கொண்டு வருவார்கள் என்று கீழ்க்காணும் பாடல்கள் கூறுகின்றன.

சாந்து புறத்து எறிந்த தசும்பு துளங்கு இருக்கை - பதி 42/11
தசும்பு உடை கொடும் தேர்-தன்னை தட கையால் எடுத்து வீச - கம்பரா.யுத்2:18 232/2
தசும்புறு சயந்தனம் அரக்கர் தாள் தர - கம்பரா.ஆரண்:7 52/2

மேலும், கோவில் கோபுரங்களின் உச்சியில் வைக்கப்படும் கலசங்களின் அமைப்பும் சொம்பு போலவே இருப்பதால் அதனையும் தசும்பு என்றே குறிப்பிட்டனர். இதற்குக் கீழ்க்காணும் பாடல்வரி சான்று பகர்கின்றது.

சூழ் சுடர் சிரத்து நல் மணி தசும்பு தோன்றலால் - கம்பரா.பால:3 25/3


முடிவுரை:

இதுவரை மேலே கண்டவற்றில் இருந்து தசும்பு என்பதற்கு சொம்பு என்பதே முதற்பொருள் என்பதனை அறியமுடிகிறது. மேலும், சங்க காலத்தில் தசும்பு என்று வழங்கப்பட்ட சொல்லே தற்போது நாம் வழங்கிக் கொண்டிருக்கும் சொம்பு என்ற சொல்லுக்கு மூலமாக இருக்கலாம் என்று தோன்றுகின்றது.