திங்கள், 30 மார்ச், 2015

அன்பும் என்பும்

முன்னுரை:

திருக்குறளில் அன்புடைமை அதிகாரத்தில் அன்பின் சிறப்பினைப் பற்றி விளக்க வந்த வள்ளுவர், அந்த அதிகாரத்தின் பல குறள்களில் என்பு அதாவது எலும்பைப் பற்றியும் கூறியுள்ளார். வள்ளுவர் ஏன் எலும்பினைப் பற்றிக் கூறினார்?. எலும்புக்கும் அன்புக்கும் என்ன தொடர்பு? என்பதைப் பற்றி இக் கட்டுரையில் விரிவாகக் காணலாம்.

அன்புடையார் எலும்பையும் தருவர்:

அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு. - 72

இதன் பொருள்: உள்ளத்தில் கொஞ்சம்கூட அன்பில்லாதவர்கள் பிறருக்கு இம்மியளவும் கொடுத்து உதவமாட்டார்கள். உள்ளத்தில் அன்பு நிறைந்தவர்கள் தம் எலும்பைக் கேட்டால்கூட தம்மை அழித்துக்கொண்டு தந்துவிடுவார்கள்.

இக் குறளில் அன்பின் இரண்டு விளிம்பு நிலைகளைக் கூறியிருக்கிறார் வள்ளுவர். ஒன்று, அன்பே இல்லாத நிலை. இந்நிலையில் உள்ளோர் யாருக்கும் உதவி செய்ய மாட்டார்கள். இன்னொன்று, அன்பே முழுவடிவாய் இருக்கும் நிலை. இந்நிலையில் உள்ளோர் தேவைப்பட்டால் பிறருக்காகத் தமது இன்னுயிரையும் மாய்த்துக் கொள்வர். ஆனால், இந்த இரண்டு விளிம்பு நிலைகளுக்கிடையில் தான் பெரும்பாலான மக்கள் இருக்கிறார்கள். இவர்களுக்கு பிறரிடத்தில் அன்பு செய்யத் தெரியும். ஆனாலும் சில காரணங்களால் அன்பு காட்டத் தயங்குகிறார்கள்.

பொதுவாக, அன்பு என்பது ஒரு அக உணர்வாகும். இவ் உணர்வு வெளிப்படுத்தப் பட்டால் ஒழிய பிறருக்குத் தெரியாது. அதை மறைத்து வைக்கவும் முடியாது. அன்புடையவர்களைக் கண்டதும் அது கண்ணீராய் வெளிப்பட்டு விடும். இதைத்தான் கீழ்க்காணும் குறளில் சொல்கிறார் வள்ளுவர்.

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
புன்கணீர் பூசல் தரும். - 71

அதேபோல, நம் உடம்பில் உள்ள எலும்பும் ஒரு அகத்துறுப்பாகும். இதை நாம் வெளிப்படுத்திக்காட்ட முடியுமா?. சாதாரணமாக முடியாது. ஆனால் அன்பினை வெளிப்படுத்திக் காட்ட வல்லவர்களால் தம் எலும்பினையும் வெளிக்காட்ட இயலும். அதாவது தம்மை அழித்துகொண்டுகூட தமது எலும்பினை வெளிப்படுத்திக் காட்ட வல்லவர் இவர்கள். இதிலிருந்து, அகத்துணர்வான அன்பினை அகத்துறுப்பான எலும்புடன் வள்ளுவர் ஒப்பீடு செய்திருப்பதாக அறிய முடிகிறது. இக் கருத்தினை உறுதி செய்ய அடுத்த குறளைப் பார்ப்போம்.

அன்பே ஆருயிரே :

அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு
என்போடு இயைந்த தொடர்பு. - 73

இதன் பொருள்: உடலுக்கு எலும்புடன் என்ன தொடர்போ அதுவே ஆருயிர்க்கு அன்புடன் உள்ள தொடர்பாகும்.

இக் குறளில் வரும் ஆருயிர்க்கு என்ற சொல் இரண்டு இடங்களில் இருவகையான பொருட்களில் வருகிறது. இதன் பொருளை அறிய குறளை கீழ்க்காணுமாறு பிரித்துக் கொள்ளவேண்டும்.

ஆருயிர்க்கு அன்போடு இயைந்த வழக்கென்ப
ஆருயிர்க்கு என்போடு இயைந்த தொடர்பு.

முதல்வரியில் வரும் ஆருயிர் என்பது நேரடியாக உயிரைக் குறிக்கும்.
இரண்டாவது வரியில் வரும் ஆருயிர் என்பது ஆகுபெயராய் உயிர் தங்கியிருப்பதான உடலைக் குறிக்கும்.

முதலில், உடலுக்கும் எலும்புக்கும் என்ன தொடர்பு என்று காணலாம். உடலில் எவ்வளவுதான் சதை இருந்தாலும் அதற்கு வலிமை சேர்ப்பதே இந்த எலும்பு தான். எலும்பு இல்லாவிட்டால் நம்மால் நிற்கவோ நடக்கவோ ஏன் சரியாக உட்காரவோ கூட முடியாதன்றோ.! அதுமட்டுமில்லாமல் நமது உடலுக்கு ஒரு வடிவத்தையும் நமது முகத்திற்கு அழகையும் கொடுப்பது கூட இந்த எலும்பு தான். மொத்தத்தில் நமது உடலில் எலும்புகளே இல்லாவிட்டால் நாம் ஒரு சதைக்கோளம் தான்.

ஆக, எலும்புகள் இல்லாவிட்டால் நமது உடலின் இயக்கம் பெரும் பாதிப்புக்குள்ளாகும் என்பது மறுக்கமுடியாத உண்மை. இதைப்போலத்தான் அன்பு இல்லாவிட்டால் உயிரின் இயக்கம் பாதிக்கப்படும் என்கிறார் வள்ளுவர். இது எவ்வாறெனில்,

நமது உயிரை உடலுடன் பிணித்து வைக்கும் ஆற்றல் அன்புக்கு மட்டுமே உண்டு. அன்பு குறையக் குறைய இந்த பிணைப்பு வலுவிழக்கும். ஒருகட்டத்தில் அன்பில்லாமல் போக உயிர் உடலைவிட்டுப் பிரிந்துவிடும். இந்த அன்பினைத்தான் சிவம் என்கிறார் சித்தரான திருமூலர். சிவம் இல்லாவிட்டால் சீவனும் (உயிர்) இருக்காது.

இக் குறளின் மூலம் அன்பினை நேரடியாகவே எலும்புடன் ஒப்பிட்டுக் கூறியிருப்பதை அறியலாம்.

அன்பில்லாதவர் எலும்பற்றவரே:

என்பி லதனை வெயில்போலக் காயுமே
அன்பி லதனை அறம். - 77

இதன் பொருள்: எலும்பில்லாத புழுவினை வெயில் வாட்டுவதைப் போல அன்பில்லாதவர்களை அறம் தண்டிக்கும்.

இக் குறளில் அன்பில்லாதவர்களை எலும்பற்ற புழு போன்றவற்றுடன் ஒப்பிட்டுக் கூறியுள்ளார் வள்ளுவர். எலும்பில்லாத புழு நிழலில் இருக்கும்வரை நன்றாக இருக்கும். அதுவே அறியாமல் வெயிலுக்கு வந்துவிட்டால், வெயிலின் உறைப்பைத் தாங்கமாட்டாமல் சுருண்டு இறந்துவிடும். அதைப் போல உள்ளத்தில் சிறிதும் அன்பில்லாதவர்களை அறம் கண்டிப்பாக ஒருநாள் தண்டிக்கும். அதாவது, இந்த அறம், கதிரவனின் வெயில் போல எங்கும் பரவிக் கிடப்பதாய், நேரம் வரும்வரை காத்திருந்து, அவனைக் கொல்லும் என்கிறார். இக் குறளின் மூலமும் வள்ளுவர், அன்பினை எலும்புடன் ஒப்பிட்டுக் கூறியிருப்பதை அறியலாம்.

இதே கருத்தைத்தான் வேறுவிதமாக கீழ்க்காணும் குறளில் கூறுகிறார் வள்ளுவர்.

அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
வற்றல் மரந்தளிர்த் தற்று. - 78

இதன் பொருள்: அன்பில்லாதவர்கள் உயிர் வாழ்தலென்பது, வறண்ட பாலைநிலத்தில் வற்றிய மரங்கள் துளிர்ப்பது போல அரிதான ஒன்றாகும்.

அதாவது, அன்பில்லாதவர்களின் உள்ளத்தினை இங்கே வறண்ட பாலைநிலமாக உருவகப் படுத்துகிறார். பாலைவன மணலில் மழை பெய்தாலும் நீர் தங்காது என்பதால், அங்கே மரங்கள் துளிர்க்க இயலாது. அதைப்போல, அன்பில்லாதவர்களின் நெஞ்சத்தில், பிறர் அவர்மீது காட்டும் பாசமும் புறக்கணிக்கப்படுவதால், அவரது உயிர் நீண்ட நாள் நிலைத்திராது.

புறத்துறுப்பும் அகத்துறுப்பும்:

புறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும் யாக்கை
அகத்துறுப்பு அன்பி லவர்க்கு. - 79

இதன் பொருள்: உடலின் அகத்துறுப்பாகிய அன்பு இல்லாவிட்டால் உடலின் புறத்துறுப்புக்களால் ஒருபயனுமில்லை.

இக் குறளில் அன்பினை உடலின் அகத்துறுப்பு என்று கூறுகிறார். ஆனால், உடலின் அகத்துறுப்பு எலும்பு என்று முன்னர் குறள்களில் கண்டோம். இதிலிருந்து அன்பினையும் எலும்பினையும் வள்ளுவர் ஒன்றாகவே நோக்குவதை அறியமுடிகிறது. அதாவது அன்புதான் எலும்பின் வடிவாக உடலுக்குள் இருந்து உடலுக்கு உறுதியைத் தந்து நலமுடன் வாழ வழிசெய்கிறது. இந்த அன்பு என்னும் அளப்பரிய ஆற்றல் எலும்புக்குள் இல்லாவிட்டால், எலும்புகள் இருந்தாலும் வலிமையற்றவையே. அதனால், இந்த எலும்பைச் சார்ந்து இயங்குகின்ற புறத்துறுப்புக்களாகிய கைகளும் கால்களும் இயங்குவதற்கான வலிமையின்றி பயனற்றுக் கிடக்கும். மொத்தத்தில் அன்பில்லாதவன் உயிரோடிருந்தாலும் அவன் ஒரு நடைபிணமாகவே கருதப்படுவான். இதே கருத்தினை வேறு விதமாக அடுத்த குறளில் வலியுறுத்துகிறார்.
.

அன்பின் வழியது உயிர்நிலை:

அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு. - 80

இதன் பொருள்: உயிரானது, அன்பையே அடிப்படையாகக் கொண்டு இயங்குவதால், அன்பில்லாதவர்கள் வெறும் எலும்பு தோலினால் ஆன நடைப்பிணமே ஆவர்.

இதையே கவிதை நடையில் சொன்னால்,

உடலைச் செதுக்குவது
உணவாக இருந்தாலும்
உயிரைச் செதுக்குவது
உள்ளத்தில் அன்பொன்றே.

ஆம், உணவு உண்பதால் மட்டும் ஒருவரது உடல் வலிமை பெறுவதில்லை. உடல் வலிமை பெற எலும்புக்குள் அன்பின் ஆற்றல் பாயவேண்டும். அவ் ஆற்றல் இல்லாவிட்டால் அவரது உடல் வெறும் எலும்பினைத் தோலால் மூடிய ஒரு உயிரற்ற பிணத்தையே ஒக்கும்.


முடிவுரை:

இதுவரை கண்டவற்றில் இருந்து வள்ளுவர் அன்பு எனப்படுவது, எலும்புக்குள் மின்சாரம் போல பாய்ந்து இயங்குகின்ற ஓர் ஆற்றல் என்று கூறியிருப்பதை அறியலாம். இந்த ஆற்றல் எலும்புக்குள் பாய்ந்து கொண்டிருக்கும்வரை மட்டுமே உடல் வலிமையுடன் இருக்கும். இந்த ஆற்றல் தடைபட்டால், அதாவது உயிர்களின் மேல் அன்பு குறையுமானால், உடல் வலிமை குன்றும். நாளடைவில் உடலின் இயக்கமும் குன்றும். முடிவில், கவனிப்பார் யாருமின்றி இறக்க நேரிடும். இதைத்தான் குறள் 237 ல் கூறுகிறார்.

புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை
இகழ்வாரை நோவது எவன்.

நெஞ்சில் சிறிதும் அன்பின்றி வாழ்ந்து இப்போது துன்பமுற்றுக் கொண்டிருப்பவர்கள், தம்மைத்தாம் அதற்காக நொந்துகொள்ளாமல், தம்நிலையினைக் கண்டு இரக்கம் கொள்ளாமல் செல்லும் பிறரை ஏன் நொந்துகொள்ளவேண்டும்? என்று கேட்கிறார்.

இதில் அனைவருக்குமான ஒரு எச்சரிக்கையும் இருக்கிறது. அதாவது, பிறர் மீது அன்பு காட்டாமல் வாழ்பவர்கள், தம் மீதும் அன்பு காட்ட யாருமின்றி துன்புறுவர் என்கிறார்.

எனவே, வாழும்காலத்தில் அனைவரிடத்திலும் அன்புடன் நடந்துகொள்வோம்!. பதிலுக்கு அன்பினைப் பெற்று மகிழ்வோம்.!!

வெள்ளி, 13 மார்ச், 2015

திருக்குறளில் பள்ளி ( சுத்தம் சோறு போடும் )

குறள்:

கழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்றால் சான்றோர்
குழாஅத்துப் பேதை புகல்.    840:

தற்போதைய விளக்க உரைகள்:

கலைஞர் உரை: அறிஞர்கள் கூடியுள்ள மன்றத்தில் ஒரு முட்டாள் நுழைவது என்பது, அசுத்தத்தை மிதித்த காலைக் கழுவாமலே படுக்கையில் வைப்பதைப் போன்றது.

மு.வ உரை: சான்றோரின் கூட்டத்தில் பேதை புகுதல், ஒருவன் தூய்மையில்லாதவற்றை மிதித்துக் கழுவாதக் காலைப் படுக்கையில் வைத்தாற் போன்றது.

சாலமன்பாப்பையா உரை: சான்றோர் கூடியிருக்கும் இடத்துள் அறிவற்றவன் நுழைவது, கழுவாத காலைப் படுக்கைமேல் வைத்தது போலாகும்.

உரைத் தவறுகள்:

மேற்காணும் உரைகள் யாவுமே ஒரே கருத்தையே வலியுறுத்துகின்றன. அதாவது, சான்றோரது அவையில் பேதை புகுவது அசுத்தமான காலை படுக்கையில் வைப்பது போன்றதாகும் என்று கூறப்பட்டுள்ளது. இவ் விளக்கம் பொருத்தமானதா என்றால் இல்லை என்றே கூறலாம். காரணம், ஒப்புமை பொருந்தி வரவில்லை. இதைப் பற்றிக் கீழே விரிவாகக் காணலாம்.

இக் குறளில் இரண்டு கருத்துக்கள் ஒப்பீடு செய்யப்பட்டுள்ளன. ஒன்று சான்றோர் அவைக்குள் பேதை நுழையும் செயல். இன்னொன்று படுக்கையில் அசுத்தமான காலை வைக்கும் செயல். இந்த இரண்டு கருத்துக்களையும் ஒப்பிட முடியுமா என்றால் முடியாது. காரணம், இந்த இரண்டு செயல்களின் விளைவுகளும் வெவ்வேறானவை. ஒப்பிட முடியாதவை. இவற்றை ஒப்பிட வேண்டுமென்றால் முதலில் இவற்றின் விளைவுகள் என்ன என்று காணவேண்டும். முதலில் சான்றோரது அவைக்குள் பேதை நுழைந்தால் என்ன ஆகும் என்று காணலாம்.

சான்றோர்கள் அவையில் ஒன்று கூடி ஒரு பொருளைப் பற்றி அலசி ஆராய்ந்து கொண்டிருந்தனர். அப்போது ஒரு ஒழுக்கமில்லாத முட்டாள் அந்த அவைக்குள் அவசரமாக நுழைந்துவிட்டான். நுழைந்ததும் சும்மா இராமல் எதைஎதையோ உளறுகிறான். இதனால் விவாதம் நின்றுவிட்டது. ஒருவேளை அவன் உளறாமல் அங்கு அமைதியாக இருந்துகொண்டு விவாதத்தைக் கேட்டிருப்பானேயானால் அவனுக்கு நல்ல பயன் கிட்டியிருக்கும். ஆனால் அவன் பேதையாயிற்றே!. அதனால் அவன் நன்மையை விடுத்துத் தீமையையே நாடுகிறான் குறள் 831 ல் கூறியுள்ளபடி.

பேதைமை என்பதொன்று யாதெனின் ஏதங்கொண்டு
ஊதியம் போக விடல்.

அவன் செய்கையைக் கண்ட சான்றோர்கள் அவனைக் கடிந்துகொண்டு அவையை விட்டு வெளியேறக் கூறுகின்றனர். ஆயினும் பேதை ஆகிய அவன் அடங்காதவனாய் எதையும் பேணாதவனாய் தனது செயல்களுக்கு வெட்கப்படாதவனாய் தொடர்ந்து செய்கிறான் குறள் 833 ல் கூறியுள்ளபடி.

நாணாமை நாடாமை நாரின்மை யாதொன்றும்
பேணாமை பேதை தொழில்.

அவர்கள் சான்றோர்கள் ஆதலால் அவனைத் தண்டிக்க இயலாமல் மனம் வருந்தியபடி அந்த அவையினை விட்டு வெளியேறுகின்றனர். ஆக, சான்றோரது அவைக்குள் பேதை நுழையும் செயலின் விளைவு சான்றோர்கள் அவையினை விட்டு வெளியேறுதலாகும்.

அடுத்தது, படுக்கையில் அசிங்கமான காலை வைத்தால் என்ன ஆகும்?. படுக்கை நாசமாகும். அவ்வளவுதான். இதற்காக யாரும் மனம் வருந்தியபடி வெளியேற மாட்டார்கள். ஆக, படுக்கையில் அசிங்கமான கால் வைக்கும் செயலின் விளைவு படுக்கை அசிங்கமாதலாகும்.

இப்போது இந்த இரண்டு செயல்களின் விளைவுகளையும் ( வெளியேற்றம், நாசம் ) ஒப்பிட முடியுமா என்றால் முடியாது. காரணம், இவை இரண்டுக்கும் பொருந்திவரக் கூடிய அம்சங்கள் எவையுமில்லை. ஒப்பீடு செய்யவே முடியாத இவ் இரண்டினை இக் குறளுக்கு விளக்கமாகக் கூறியிருப்பதில் இருந்து இவ் விளக்கங்கள் தவறு என்று அறியலாம். இத் தவறான விளக்கங்களுக்குக் காரணம், பள்ளி என்ற சொல்லுக்குக் கொள்ளப்பட்ட தவறான பொருளே ஆகும். இதன் சரியான பொருளைப் பற்றிக் கீழே காணலாம்.

பள்ளி - சரியான பொருள்:

இக் குறளில் வரும் பள்ளி என்ற சொல்லுக்கு இன்றைய அகராதிகள் கீழ்க்காணும் பல்வேறு பொருட்களைக் கூறுகின்றன.

 பள்ளி paḷḷi
, n. < palli. [K. paḷḷi.] 1. Place; இடம். சொல்லிய பள்ளி நிலையின வாயினும் (தொல். எழுத். 100). 2. Hamlet, small village; சிற்றூர். (பிங்.) 3. Herdsmen's village; இடைச் சேரி. காவும் பள்ளியும் (மலைபடு. 451). 4. Town; நகரம். (பிங்.) 5. Hermitage, cell of a recluse; முனிவராச்சிரமம். மாதவி மாதவர் பள்ளியு ளடைந்த தும் (மணி. 18, 8). 6. Temple, place of worship, especially of Jains and Buddhists; சைன பௌத் தக் கோயில். புத்தர் நோன்பியர் பள்ளியுள்ளுறை (திவ். பெரியதி. 2, 1, 5). 7. Palace; anything belonging to royalty; அரசருக்குரிய அரண்மனை முதலியன. பள்ளித்தேவாரம். 8. Workshop; வேலைக்களம். தச்சன் வினைபடு பள்ளி (களவழி. 15). 9. Sleeping place or bed; மக்கட்படுக்கை. கழாஅக் கால் பள்ளியுள் வைத்தற்றால் (குறள், 840). 10. Sleep; தூக்கம். (கலித். 121.) 11. Sleeping place of animals; விலங்குதுயிலிடம். (பிங்.). 12. School; பள்ளிக்கூடம். பள்ளியி லோதி வந்ததன் சிறுவன் (திவ். பெரியதி. 2, 3, 8). 13. Room, chamber; அறை. (அக. நி.) 14. Alms-house; அறச்சாலை. (W.) 15. Enclosure; சாலை. புதுப்பூம் பள்ளி (புற நா. 33). 16. The Vaṉṉiya caste; வன்னியசாதி. 17. See பள்ளத்தி. Tinn. 18. Petty rulers; குறும்பர். ராஜாக்கள் போகப் பள்ளிகள் வந்து புகுரு மாபோலே (திவ். இயற். திருவிருத். 40, வ்யா. 235). n. [M. paḷḷi.] Christian church; கிறிஸ்தவக் கோயில். சவேரியார் கோயிற் பள்ளி.

மேற்காண்பவற்றுள் இக் குறளுக்குப் பொருந்திவருவதான பொருள் அறச்சாலை என்பதேயாகும். இங்கு அறச்சாலை என்பது அன்னதானம் செய்யப்படும் இடமாகும்.

திருந்திய விளக்கம்:

பள்ளி என்பதற்கு அறச்சாலை என்ற புதிய பொருளின் அடிப்படையில், இனி இக்குறளுக்கான திருந்திய பொருள் இதுதான்:

சான்றோரது அவைக்குள் பேதை புகும் செயலானது, (தூய்மை பேணப்படும் இடமாகிய) அன்னதானக் கூடத்திற்குள் அசிங்கமான காலுடன் ஒருவன் நுழைந்துவரும் செயலுக்கு ஒப்பாகும்.

நிறுவுதல்:

இந்தப் புதிய விளக்கம் எவ்வாறு பொருந்தும் என்று இங்கே காணலாம். சான்றோரது அவைக்குள் பேதை புகுவதால் ஏற்படும் விளைவினை மேலே கண்டோம். அதைப் போல அன்னதானக் கூடத்திற்குள் அசிங்கமான காலுடன் ஒருவன் நுழைந்து வந்தால் என்ன ஆகும் என்று காணலாம்.

அறச்செயல்களில் யாவற்றிலும் தலையாயது, பிறர் பசி போக்குவதாகும். அதிலும் தமது பசியைப் பொறுத்துக்கொண்டு பிறர் பசியை போக்குவோரே இவ் உலகில் தவ வலிமை மிக்கவர் என்கிறார் வள்ளுவர்.

ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் அப்பசியை
மாற்றுவார் ஆற்றலின் பின். - 225

மேலும் ஒருவர் தனது செல்வத்தைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளும் வழி, பிறரது பசியை போக்குவதே என்கிறார்.

அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி. - 226

மேலும் தன்னிடத்துள்ள உணவினைப் பிறருடன் பகிர்ந்துகொண்டு உண்பவனை பசிப்பிணி தீண்டவே தீண்டாது என்கிறார்.

பாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னும்
தீப்பிணி தீண்டல் அரிது. - 227

இப்படி பிறர் பசி தீர்ப்பதான அறச்செயலே வள்ளுவர் காலத்தில் மிகச் சிறந்த அறமாகக் கருதப்பட்டதால் பல அறச்சாலைகளும் அவர் காலத்தில் இருந்திருக்க வேண்டும். பெரும் செல்வந்தர்களால் நடத்தப்பட்டு வந்த இந்த அறச்சாலைகள், வறியவர்கள், வழிப்போக்கர்கள், ஆதரவற்றோர் போன்ற பலரின் பசியினை ஆற்றிவந்தன. இந்த அன்னதானக் கூடங்களில் தூய்மை மிக இன்றியமையாததாகக் கருதப்பட்டது. அதாவது, இக் கூடங்களுக்குள் நுழையும் முன்னர், மக்கள் தமது உடல் மற்றும் கைகால்களைத் தூய்மை செய்துகொண்டு வந்து, வரிசையாக அமர்ந்து உண்பர். இதன் அடிப்படையில் தான் ' சுத்தம் சோறு போடும் ' என்ற பழமொழியும் உருவாகியிருக்க வேண்டும். அதாவது சுத்தமாக இருந்தால் தான் உண்ண சோறு கிடைக்கும் என்பது இதன் பொருள்.. மேலும் இக் கூடங்களில் உணவு பரிமாறப்படும் இடத்திலும் தூய்மை பேணப்படும். காரணம், சுற்றுப்புறம் தூய்மையாக இல்லாவிட்டால் உணவுப் பொருட்கள் கெட்டுப் போகும்.

இந்நிலையில், அசிங்கத்தை மிதித்துவிட்டு வந்த ஒருவன், பசி மிகுதியால் அவசரப்பட்டுக் கைகால்களைக் கூடக் கழுவாமல் அப்படியே அன்னதானக் கூடத்திற்குள் நுழைந்துவந்தால் என்ன ஆகும்?.

அன்னதானக் கூடம் அசுத்தமடைவதால், அங்கே உணவு உண்டுகொண்டிருப்போர் அனைவரும் அந்த அசிங்கத்தைக் கண்டு மனம் அருவெறுப்புற்று மேற்கொண்டு உண்ணமுடியாமல் வருந்தி எழுந்துசென்று விடுவர் அன்றோ!.

இந் நிகழ்ச்சியைத் தான் வள்ளுவர் சான்றோரது அவைக்குள் பேதை புகும் செயலுடன் இக் குறளில் ஒப்பிட்டுக் கூறியுள்ளார். காரணம், இவ் இரண்டு செயல்களின் விளைவும் ஒன்றே ஆகும். அதாவது மனம் வருந்தி வெளியேறுதல். அதுமட்டுமின்றி, இவ் இரண்டு செயல்கள் நடைபெறும் இடமும் ஒன்றேயாகும். அதாவது மக்கள் கூடும் இடம். ஒன்று, சான்றோர் கூடும் அவை. மற்றொன்று, மக்கள் கூடி உண்ணும் அன்னதானக் கூடம். இப்படி செயலாலும் (விளைவாலும்) இடத்தாலும் பெரிதும் பொருந்தி வருகின்ற வகையில் இக் குறளில் உவமைகளை அமைத்துப் பாடிய ஐயனின் நுண்மாண் நுழைபுலம் எண்ணி எண்ணி வியக்கத்தக்கதே!
======================  வாழ்க தமிழ்!========================