செவ்வாய், 8 நவம்பர், 2016

இமயமலையும் தமிழர்களும் - பகுதி 2

முன்னுரை:

இமயமலையும் தமிழர்களும் என்ற ஆய்வுக் கட்டுரையின் இரண்டாம் பகுதியான இக் கட்டுரையில் மேலும் சில சான்றுகளை விரிவாகக் காணலாம். 


சங்க இலக்கியமும் இமயமலையும்: சான்று: 2

சுடர் சினம் தணிந்து குன்றம் சேர
நிறை பறை குருகு இனம் விசும்பு உகந்து ஒழுக
எல்லை பைபய கழிப்பி முல்லை
அரும்பு வாய் அவிழும் பெரும் புன் மாலை
இன்றும் வருவது ஆயின் நன்றும்           
அறிவேன் வாழி தோழி அறியேன்
ஞெமை ஓங்கு உயர் வரை இமையத்து உச்சி
வாஅன் இழிதரும் வயங்கு வெள் அருவி
கங்கை அம் பேர் யாற்று கரை இறந்து இழிதரும்
சிறை அடு கடும் புனல் அன்ன என்       
நிறை அடு காமம் நீந்தும் ஆறே - நற். 369

வரி விளக்கம்:

சுடர் சினம் தணிந்து குன்றம் சேர = கதிரவன் கடுமை குறைந்து மலைக்குப் பின்செல்ல
நிறை பறை குருகு இனம் = கூட்டமாகப் பறக்கும் நாரை இனமானது
விசும்பு உகந்து ஒழுக = வானில் மகிழ்ச்சியுடன் பறந்துசெல்ல
எல்லை பைபய கழிப்பி = பகலும் மென்மெலக் கழிந்து
முல்லை அரும்பு வாய் அவிழும் = முல்லை அரும்புகள் மலர்கின்ற
பெரும் புன் மாலை = பெரும் துன்பத்தைத் தருவதாகிய மாலைப்பொழுது
இன்றும் வருவது ஆயின் = இன்றும் வருவதே ஆயினும்         
நன்றும் அறிவேன் = அதனை நான் நன்கு அறிவேன்
வாழி தோழி அறியேன் = என் தோழியே நான் அறியேன்
ஞெமை ஓங்கு உயர் வரை = ஞெமை மரங்கள் உயர்ந்தோங்கி வளர்ந்திருக்கும்
இமையத்து உச்சி வயங்கு = இமயமலையினது உச்சியில் தோன்றி
வெள் அருவி இழிதரும் வாஅன் = வெண்ணிற அருவிபோல விழுகின்ற மழைநீரானது
கங்கை அம் பேர் யாற்று = கங்கை எனும் பெரிய ஆற்றின்
கரை இறந்து இழிதரும் = கரையினைக் கடந்து பாய்தலால் உண்டான
சிறை அடு கடும் புனல் அன்ன = அணை கடந்த பெருவெள்ளம் போல
என் நிறை அடு காமம் = எனது நிறையழித்துப் பெருகும் காதல்வெள்ளத்தை
நீந்தும் ஆறே - கடக்கும் வழியினையே.

பொருள் விளக்கம்:

என் தோழியே ! கதிரவன் தனது கடுமை தணிந்து மலைக்குப் பின்செல்லவும் கூட்டமாகப் பறக்கும் நாரை இனமானது மகிழ்ச்சியுடன் வானில் பறந்து செல்லவுமாக பகற்பொழுதானது மெல்லமெல்லக் கழிந்து முல்லை அரும்புகள் மலர்ந்து எனக்குப் பெரும் துன்பத்தைத் தருவதாகிய மாலைப்பொழுது இன்றும் வருமென்பதனை நான் நன்கு அறிவேன். ஆனால், ஞெமை மரங்கள் உயர்ந்தோங்கி வளர்ந்திருக்கும் இமயமலையினது உச்சியில் தோன்றி வெண்ணிற அருவிபோல விழுகின்ற மழைநீரானது கங்கை எனும் பெரிய ஆற்றின் கரையினைக் கடந்து பாய்தலால் உண்டான அணை கடந்த பெருவெள்ளம் போல எனது நிறையழித்துப் பெருகும் காதல்வெள்ளத்தைக் கடக்கும் வழியினை நான் அறியேன்.

மேல் விளக்கம்:

இப்பாடல் மாலைநேர இயற்கை நிகழ்வுகளை மிக அருமையாக விவரிக்கிறது. கதிரவன் மலைக்குப் பின்னால் சென்று மறைதலையும் பறவைகள் கூட்டம் கூட்டமாகப் பறந்தவாறு தமது கூடுகளுக்குத் திரும்புவதையும் முல்லைக் கொடியின் மலர் அரும்புகள் மெதுவாக மலர்வதையும் மிக அழகாக நம் கண்முன்னே கொண்டுவந்து நிறுத்துகிறார் புலவர். இந் நிகழ்வுகளை நாம் மனதிற்குள் நினைத்துப் பார்க்கும்போது இன்புற்று மகிழ்வோம் இல்லையா?. ஆனால் இப் பாடலில் வரும் தலைவிக்கோ இவை பெரும் துன்பத்தைத் தருகின்றனவாம். ஏன்?. தலைவனைப் பிரிந்து வாடும் தலைவிக்குத் தலைவனின் காதல் பார்வையே அன்றி வேறெதுவும் இன்பம் தராது இல்லையா?. " பறவைகள் தம் துணையுடன் கூடுகளுக்குத் திரும்பும் இந்த மாலைநேரத்தில் நான் மட்டும் எனது காதலர் இன்றி தனித்து இருக்கிறேனே; முல்லை அரும்புகள் மலர்ந்து ஒளிவீச எனது கண்கள் மட்டும் அழுகையினால் ஒளியிழந்து வாடி இருக்கின்றனவே " என்றெல்லாம் அவளை ஏங்க வைக்கிறது இந்த மாலைப்பொழுது. இந்த நிகழ்வுகள் யாவும் ஒவ்வொரு நாளும் மாலைப்பொழுது வந்துவிட்டால் இயற்கையாகவே நடைபெறுபவை தான். இதைக் காதலியும் நன்கு அறிவாள். ஆனால் அவளால் அறியமுடியாத ஒன்று உண்டென்றால் அது அவளது காதலன் திரும்பிவரும் பொழுதினைத் தான்.

இப் பாடலில் பல உவமை நயங்கள் உண்டு. ஒவ்வொரு நாளும் காதலனின் வரவுக்காக ஏங்கி ஏங்கி அவளது உள்ளத்தில் காதலனைக் காணும் ஆவல் பெருகுகிறது. இந்த ஆவல் பல்கிப்பெருகிக் கட்டற்ற ஒரு வெள்ளமாக மாறத் துவங்குகிறது. அது எப்படி இருக்கிறதென்றால், இமையமலையில் பெய்த மழைநீரானது அருவிபோல விழுந்து பல ஓடைகளாக மாறி அமைதியாக இருந்த கங்கை ஆற்றின் கரையினை உடைத்துக் கொண்டு பாய, அந் நீர்ப்பெருக்கினால் கங்கை ஆற்றில் ஏற்பட்ட பெருவெள்ளம் போல இருக்கிறதாம். காதலியின் மனமானது, காதலனுடன் சேர்ந்திருக்கும் பொழுது கங்கை ஆற்று ஒழுக்கம் போல அமைதியாக இருந்ததென்றும், காதலனின் பிரிவுக்குப் பின்னர், அது கங்கை ஆற்று வெள்ளம் போலக் கலக்கமுறத் துவங்கியது என்றும் கூறுகிறார் புலவர். காதலியின் கலக்கத்திற்குக் காரணம் காதலனின் மேல் அவள் வைத்திருக்கும் அன்பு தான். அவருக்கு என்ன ஆயிற்றோ?. ஏன் இன்னும் வரவில்லை? எப்போது வருவாரோ தெரியவில்லையே ! என்று கவலைகள் ஒவ்வொன்றாய் அவள் மனதில் தோன்றுகின்றன. இந்தக் கவலைகளை இமயமலையில் பெய்த மழைநீரால் தோன்றிய ஓடைகளுடன் ஒப்பிட்டுக் கூறுகிறார். மனதிலே ஒவ்வொரு கவலையாகக் கூடும்போது அது முடிவில் பெரும் மனக்கலக்கத்தை ஏற்படுத்தும் அல்லவா?. இதனை கங்கை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்குடன் ஒப்பிட்டுக் கூறுகிறார்.

இப்பாடலில் வரும் தலைவியானவள், இமையமலையில் பெய்யும் மழையைப் பற்றியும் அதனால் கங்கை ஆற்றில் உண்டாகும் வெள்ளப்பெருக்கு பற்றியும் விரிவாகக் கூறுவதிலிருந்து இம் மக்கள் இமையமலைப் பகுதியில் தான் வாழ்ந்திருக்க வேண்டும் என்பது தெளிவாகத் தெரிகிறது. அவ்வகையில், இமயமலையில் தமிழர்கள் வாழ்ந்தனர் என்னும் கூற்றுக்கு அரணாக இப் பாடலையும் கொள்ளலாம்.

சங்க இலக்கியமும் இமயமலையும்: சான்று: 3

முன் உள்ளுவோனை பின் உள்ளினேனே
ஆழ்க என் உள்ளம் போழ்க என் நாவே
பாழ் ஊர் கிணற்றின் தூர்க என் செவியே
நரந்தை நறும் புல் மேய்ந்த கவரி
குவளை பைம் சுனை பருகி அயல
தகர தண் நிழல் பிணையொடு வதியும்
வட திசையதுவே வான் தோய் இமயம்
தென் திசை ஆஅய் குடி இன்று ஆயின்
பிறழ்வது-மன்னோ இ மலர் தலை உலகே - புறம். 132

வரி விளக்கம்:

முன் உள்ளுவோனை = முதலில் நினைத்துப்பார்க்க வேண்டியவனை
பின் உள்ளினேனே = பின்னால் நினைத்துப்பார்த்தேனே
ஆழ்க என் உள்ளம் = எனது அறிவு மறைந்துபோகட்டும்
போழ்க என் நாவே = எனது நாக்கு பிளந்து போகட்டும்
பாழ் ஊர் கிணற்றின் = பாழடைந்த ஊரிலுள்ள கிணறு போல
தூர்க என் செவியே = எனது காதுகள் தூர்ந்து போகட்டும்
நரந்தை நறும் புல் மேய்ந்த கவரி = நரந்தைப் புல்லை மேய்ந்த கவரி மானானது
குவளை பைம் சுனை பருகி அயல = குவளை மலர் பூத்த சுனையில் நீரினைப் பருகி அருகிலுள்ள
தகர தண் நிழல் பிணையொடு வதியும் = தகர மரத்தின் குளிர்ந்த நிழலில் தனது துணையுடன் தங்குகின்ற
வட திசையதுவே வான் தோய் இமயம் = மேகங்கள் தவழும் இமயமலையானது வடதிசையில் இருக்க
தென் திசை ஆஅய் குடி இன்று ஆயின் = தென்திசையில் ஆய்குடி இல்லை என்றால்
பிறழ்வது மன்னோ இ மலர்தலை உலகே = பரந்த இவ் உலகத்தின் நிலைமாறுவது உண்மையே.

பொருள் விளக்கம்:

முதலில் நினைத்துப்பார்க்க வேண்டியவனைப் பின்னால் நினைத்துப்பார்த்தேனே. ஐயகோ ! எனது அறிவு மறைந்துபோகட்டும். எனது நாக்கு பிளந்து போகட்டும். பாழடைந்த ஊரிலுள்ள கிணறு போல எனது காதுகள் தூர்ந்து போகட்டும். நரந்தைப் புல்லை மேய்ந்த கவரி மானானது குவளை மலர் பூத்த சுனையில் நீரினைப் பருகி அருகிலுள்ள தகர மரத்தின் குளிர்ந்த நிழலில் தனது துணையுடன் தங்குகின்ற மேகங்கள் தவழும் இமயமலையானது வடதிசையில் இருக்க தென்திசையில் ஆய்குடி மட்டும் இல்லை என்றால் பரந்த இவ் உலகத்தின் நிலைமாறுவது உண்மையே.

மேல் விளக்கம்:

ஆய்க்குடியைச் சேர்ந்த மன்னன் ஆய் அண்டிரனைப் புகழ்வதாக இப் பாடலை இயற்றியுள்ளார் புலவர் உறையூர் ஏணிச்சேரி முடமோசியார். ' வடக்கு வளர்கிறது; தெற்கு தேய்கிறது ' என்று ஒரு சொலவடை உண்டு. இது புவியியலைப் பொறுத்தமட்டிலும் உண்மையே. இந்தியாவின் வடக்கில் உள்ள இமயமலையானது வளர்ந்து கொண்டே இருப்பதாகப் புவியியல் வல்லுநர்களும் ஒப்புக்கொள்கிறார்கள். தெற்கில் இருக்கும் பரந்த நிலப்பரப்பில் வாழும் மக்கள் நிலத்தினை வெட்டியும் தகர்த்தும் அதனைத் தேய்த்துக்கொண்டே செல்கின்றனர். இப்படி ஒருபுறம் வளர்ந்துகொண்டே இருக்க, இன்னொரு புறம் தேய்ந்துகொண்டே இருந்தால் இந்தியத் துணைக்கண்டத்தின் சமநிலை பாதிக்கப்படுமே என்ற அச்சம் ஏற்படுவது இயற்கைதான். ஆனால், இதுபோன்ற அச்சம் சங்ககாலத்திலேயே இப் புலவருக்கு ஏற்பட்டிருக்கிறது. அதைத்தான் இப்பாட்டில் சொல்லி இருக்கிறார். எப்படி?.

வடக்கில் இருக்கும் இமயமலையானது வளம் மிக்கதாய் இருந்திருக்கிறது. அங்கே நீர் வளம், உணவு வளம், கனிம வளம் என்று அனைத்து வளங்களும் ஒருகாலத்திலே இருந்திருக்கிறது. அங்கே நரந்தைப் புற்கள் மிகுதியாக வளர்ந்திருக்கின்றன. நறுமணமும் சுவையும் மிக்க இப் புற்களை உண்ட மான் கூட்டமானது அங்கிருந்த சுனைகளிலே நீரினைப் பருகி அருகிலிருந்த தகர மரங்களின் நிழலில் தங்கி இளைப்பாறுகின்றன. இந்தத் தகர மரங்களும் நறுமணப் பொருள்களைத் தருபவையே. தகர மரங்களில் இருந்து தயாரிக்கப்பட்ட சாந்தினை பெண்கள் நறுமணத்திற்காகப் பயன்படுத்துவதனை இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. அதுமட்டுமின்றி, நறுமணம் வீசும் பன்மலர்ச் சோலைகளும் இமயமலையில் உண்டு என்று முன்னர் கட்டுரையில் கண்டோம். இப்படி நறுமணத்திற்குப் புகழ்பெற்ற இடமாக ஒருகாலத்தில் இமயமலை இருந்திருக்கிறது.

வடக்கில் இமயமலையானது பல வளங்களுக்கும் நறுமணத்திற்கும் புகழ்பெற்று விளங்கும்போது அதற்கு இணையாக தெற்கில் ஒரு இடம் இருந்தாக வேண்டுமே. அப்போதுதானே சமநிலை நிலவும். அந்த இடம் எது?. அதுதான் ஆய்க்குடி என்கிறார் புலவர். இமயமலையினைப் போலவே ஆய்க்குடியும் பல வளங்களை உடையதே. காரணம், நீர்வளமும் உணவு வளமும் மிக்க ஆய்க்குடியானது பழனிமலையின் அடிவாரத்தில் அமைந்திருக்கிறது. பொதியில் மலை என்றும் பொதிகை மலையென்றும் அழைக்கப்படுவதான பழனிமலையின் அடிவாரத்தில் கடம்ப மரங்கள் அதிகமாக உள்ளன. இம் மரங்களின் பூக்கள் இனிய நறுமணம் மிக்கவை. பலவிதமான நறுமணப் பொருட்கள் தயாரிக்க இவை பயன்படுத்தப்படுகின்றன. ஆக, வடக்கில் இமயமலையைப் போலவே தெற்கில் பழனிமலையும் வளம் மிக்கதாய் நறுமணத்திற்குப் புகழ் பெற்றதாய் அக் காலத்தில் விளங்கி இருக்கிறது. இதை இப்பாடலில் நேரடியாகச் சொல்லாமல் மறைமுகமாக அறியவைக்கிறார் புலவர்.

வடக்கில் முப்பெரும் வேந்தர்கள் ஆட்சிபுரிய, தெற்கில் ஆய் போன்ற சிற்றரசர்கள் ஆட்சிபுரிந்திருக்க வேண்டும். பேரரசர்களிடம் பரிசில் பெறமுடியாமல் வருந்திய புலவர் ஆய் அண்டிரனைப் பற்றிப் பின்னரே அறிந்துகொள்கிறார். முதலிலேயே அவனை அறிந்துகொள்ளாமல் போனதற்காக தனது அறிவினை மறைந்துபோகட்டும் என்கிறார்; அவனைப் பாடாமல் போனதற்காக தனது நாக்கினைப் பிளந்துபோகட்டும் என்கிறார்; அவனது புகழைக் கேட்காமல் போனதற்காக தனது காதுகள் தூர்ந்து போகட்டும் என்கிறார். இந்தியாவில் உள்ள மற்ற மலைகளைக் காட்டிலும் உயரத்திலும் புகழிலும் இமயமலையே முதன்மை என்றாலும் அதற்கு ஒருசற்றும் குறையாத புகழுடையது ஆய் அண்டிரனின் பழனிமலை என்கிறார் புலவர். இல்லை என்று வந்தோருக்கு உணவினையும் பொருளையும் யானைகளையும் இன்முகத்துடன் வழங்கி இமயத்துக்கு நிகரான புகழ்பெற்றவன் ஆய் அண்டிரன் என்று இம் மன்னனைப் புகழ்ந்து பல பாடல்களைப் பாடியிருக்கிறார் இப்புலவர்.

புலவருடைய காலத்தில் தமிழ் மன்னர்களின் ஆட்சியானது வடக்கே இமயம் முதலாக தெற்கே பழனிமலை ஆய்க்குடி வரையிலும் பரவி இருந்தது என்ற கருத்து இப்பாட்டின் மூலம் தெரிய வருகிறது. அவ்வகையில் இமயமலையில் தமிழர்கள் வாழ்ந்தனர் என்ற கருத்துக்கு இப்பாடலையும் ஒரு சான்றாகக் கொள்ளலாம்.

.... தொடரும்.....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்களைத் தமிழில் தட்டச்சு செய்யும் வழி:
வலப்பக்கத்தில் உள்ள பகுதியில் தமிழ் ஒலிகளை ஆங்கில எழுத்துக்களில் அசசடித்து நகல் செய்து இங்கே ஒட்டலாம்.