புதன், 21 டிசம்பர், 2016

வயிறு என்றால் என்ன? ( யாழும் வயிறும் )

முன்னுரை:

சங்கத் தமிழ் இலக்கியங்கள் தொட்டு இன்றுவரையிலும் பயன்படுத்தப்பட்டு வரும் பல தமிழ்ச்சொற்களுள் ' வயிறு' என்ற சொல்லும் ஒன்று. இச்சொல்லுக்கு இன்றைய தமிழ் அகராதிகள் பல பொருட்களைக் கூறினாலும், இப் பொருட்களில் எவையும் பொருந்தாத நிலை பல பாடல்களில் காணப்படுகின்றது. இது இச்சொல்லுக்குப் புதியதோர் பொருள் இருப்பதையே காட்டுகின்றது. இச்சொல் உணர்த்தும் புதிய பொருள் என்ன என்பதைப் பற்றி இக் கட்டுரையில் விரிவாகக் காணலாம்.

வயிறு - தற்கால அகராதிகள் காட்டும் பொருட்கள்:

வயிறு என்பதற்கு இன்றைய தமிழ் அகராதிகள் காட்டும் பொருட்கள் கீழே:

 வயிறு vayiṟu , n. cf. வயின். [K. basiṟu.] 1. Belly, stomach, paunch; உதரம். உணவு . . . சிறிது வயிற்றுக்கு மீயப்படும் (குறள், 412). 2. Womb; கருப்பப் பை. பத்துமாதம் வயிற்றிற் சுமந்து பெற்ற பிள்ளை. (W.) 3. Centre, heart, as of a tree; நடுவிடம். கடல் வயிறு கலக்கினையே (சிலப். 17, முன்னிலைப்பரவல், 1). 4. Interior, inner space; உள்ளிடம். வயிற்றிற்கொண்டு நின்றொரு மூவுலகும் (திவ். திருவாய். 8, 7, 9). 5. Mind; மனம். (திவ். திருவாய். 8, 7, 9.)

பொருள் பொருந்தா இடங்கள்:

வயிறு என்ற சொல்லுக்கு இன்றைய அகராதிகள் காட்டும் பொருட்களில் எதுவுமே பொருந்தாத சில இடங்களை மட்டும் கீழே விரிவாகக் காணலாம்.

பொதுவாக, ஆண்கள் அதிகம் உண்பதால் அவர்களின் உதரமானது சற்று மேடுதட்டி இருக்கும். ஆனால், பெண்கள் குறைந்த அளவே உண்பதால் அவர்களின் உதரமோ செதுக்கப்பட்டதைப் போல மிகச் சரியாக இருக்கும். இது இக்காலத்துக்கு மட்டுமின்றி சங்ககாலத்துக்கும் பொருந்தும். ஆனால், கீழ்க்காணும் பெருங்கதைப் பாடலில் பெண்களின் வயிற்றினை யாழ் கருவியின் பத்தர் என்ற உறுப்புடன் ஒப்புமையாகக் கூறியிருக்கிறார்கள்.

செங்கோட்டு யாழின் பத்தர் அன்ன
மெத்தென் அம் வயிற்று - பெருங்.உஞ்சை.40

பொதுவாக, யாழ் கருவியின் பத்தர் என்ற உறுப்பானது நன்கு உருண்டு திரண்டு தேங்காய்மூடி போல் புடைத்த வடிவத்தில் இருக்கும். மேலே உள்ள படத்தில் புடைத்தது போலத் தோன்றும் யாழின் கீழ்ப்பாகமே பத்தர் ஆகும். இதனைப் பத்தல் என்றும் கூறுவர். இந்நிலையில், பெண்களின் உதரத்தினை அதாவது செதுக்கி வைத்தாற்போன்ற அவரது உடலின் மையப்பகுதியினை குவிந்தநிலையில் அறியப்படும் யாழின் பத்தருடன் ஒப்பீடு செய்தால் அது எவ்விதத்திலும் பொருந்தாது அல்லவா?. ஏனென்றால், யாழின் பத்தரோ குவிநிலை கொண்டது; பெண்களின் உதரமோ குவிநிலை அற்றது. ஆக, இப்பாடலில் வரும் வயிறு என்ற சொல் உதரம் என்ற பொருளில் வரவில்லை என்பது உறுதியாகிறது.

அடுத்து, பெண்களின் வயிற்றினை ஆலமரத்து இலையுடன் உவமைப்படுத்திக் கூறுகிறது கீழ்க்காணும் கம்பராமாயணப் பாடலொன்று.

ஆல் இலை அன்ன வயிற்றினை
பெய் வளை தளிரால் பிசையும் - கம்ப.அயோத்.4

ஆலமரத்தின் இலை போன்ற தனது வயிற்றினை வளைபெய்த தனது தளிர்போன்ற கைகளால் பிசைந்தாள் என்று மேற்காணும் பாடல் கூறுகிறது. இப்பாடலில் வரும் வயிறு என்ற சொல்லுக்கு உதரம் என்ற பொருள் பொருந்துமா என்றால் பொருந்தாது. காரணம், ஆல இலையின் வடிவத்திற்கும் உதரத்துக்கும் ஒரு பொருத்தமும் கிடையாது.

அடுத்து, பெண்கள் அழும்போது தமது வயிற்றினை அதுக்குவதாகக் கீழ்க்காணும் பாடல்களில் கூறுகின்றனர்.

வேல் நெடும் கண் நீர் மல்க
ஆகுலத்து அரிவையர் அம் வயிறு அதுக்கினார் - சிந்தா: 1104

பூம் தெரிவையர் ஆ தகாது என கலங்கி
அம் வயிறு அதுக்கினார் - சிந்தா: 1106

இப் பாடல்களில் வரும் அதுக்குதல் என்பதற்கு அமுக்குதல், பிசைதல் என்ற பொருளுண்டு. இப் பாடல்களில் வரும் வயிறு என்பதற்கு உதரம் என்று பொருள்கொண்டால், பெண்கள் அழும்போது தமது கைகளால் தமது உதரத்தினை அமுக்குவதாகவோ பிசைவதாகவோப் பொருள்கொள்ள நேரிடும். ஆனால், உண்மையிலேயே எந்த ஒரு பெண்ணும் வருந்தி அழும்போது தனது கைகளால் தனது உதரத்தினைப் பிசையவோ அமுக்கவோ மாட்டாள். அப்படிச் செய்தால் அது மேலும் அவளுக்கு வலியை உண்டாக்கும் என்பதுடன் அவ்வாறு அவள் செய்யவேண்டிய தேவையுமில்லை. எனவே இப்பாடல்களில் வரும் வயிறு என்பதற்கு உதரம் என்று பொருள்கொள்வது பொருந்தாது என்பது உறுதியாகிறது.

அடுத்து, பெண்களின் வயிற்றில் காணப்பட்ட மயிர் ஒழுங்கின் அழகினைப் பாராட்டிக் கூறுகின்றன கீழ்க்காணும் பாடல்கள்.

......எய்யா இளம் சூல் செய்யோள் அம் வயிற்று
ஐது மயிர் ஒழுகிய தோற்றம் போல
பொல்லம் பொத்திய பொதியுறு போர்வை - பொருந.

......அரு மணி பூணினாள் தன் அம் வயிறு அணிந்த கோல
திரு மயிர் ஒழுக்கம் வந்து என் திண் நிறை கவர்ந்தது அன்றே - சிந்தா: 2061

இப் பாடல்களில் வரும் வயிறு எனப்படுவதற்கு உதரம் என்ற பொருள் பொருந்துமா என்றால் பொருந்தாது. காரணம், பொதுவாகவே எந்தவொரு பெண்ணின் உதரத்திலும் மயிர் காணப்படாது என்பதுடன் அப்படியே அரிதினும் அரிதாகக் காணப்பட்டாலும் அதைப் பிறர் காணத்தக்க வகையில் பெண்கள் காட்டமாட்டார்கள். இந்நிலையில், மேற்காணும் பாடல்கள் அம் மயிரினை அழகானது என்று பாராட்டிக் கூறுவதிலிருந்து, வயிறு என்பது இங்கே உதரம் என்ற பொருளைக் குறித்து வரவில்லை என்பது உறுதியாகிறது.

இதுவரை கண்டவற்றில் இருந்து, வயிறு என்ற சொல்லுக்கு அகராதிகள் காட்டும் பொருட்கள் நீங்கலாக புதிய பொருளும் உண்டென்று தெரிகிறது. இதைப் பற்றிக் கீழே விரிவாகக் காணலாம்.

வயிறு - புதிய பொருள்(கள்) என்ன?

வயிறு என்ற சொல் குறிக்கும் புதிய பொருட்கள்

கண் மற்றும் கண்ணிமை ஆகும்.

நிறுவுதல்:

வயிறு என்ற சொல் எவ்வாறு கண் மற்றும் கண்ணிமைகளைக் குறிக்கும் என்பதனை இங்கே ஆதாரங்களுடன் விரிவாகக் கண்டு நிறுவலாம்.

பெண்கள் தமது கண்ணிமைகளைப் பல வண்ணங்களில் மைதீட்டி அழகுசெய்வர் என்று முன்னர் பல கட்டுரைகளில் கண்டுள்ளோம். பசுமை நிறத்தில் மைதீட்டிய ஒரு பெண்ணின் கண்ணிமைகள் பார்ப்பதற்கு ஆலமரத்தின் பசிய இலை போன்று தோன்றியதாகக் கீழ்க்காணும் பாடல் கூறுகிறது.

ஆல் இலை அன்ன வயிற்றினை
பெய் வளை தளிரால் பிசையும் - கம்ப.அயோத்.4

ஆலமரத்தின் இலைப் போலத் தோன்றிய தனது கண்ணிமைகளை வளைபெய்த தனது தளிர்க்கரங்களால் பிசைந்தாள் என்று மேற்காணும் பாடல் கூறுகிறது. பொதுவாக, பெண்கள் கண்கலங்கி அழும்போது தனது இமைகளைக் கைகளால் பிசைவர் அல்லது கசக்குவர் என்பது உலகறிந்த செய்திதான். இதே கருத்தினைத்தான் கீழ்க்காணும் பாடல்களும் உறுதிசெய்கின்றன.

வேல் நெடும் கண் நீர் மல்க
ஆகுலத்து அரிவையர் அம் வயிறு அதுக்கினார் - சிந்தா: 1104

பூம் தெரிவையர் ஆ தகாது என கலங்கி
அம் வயிறு அதுக்கினார் - சிந்தா: 1106

இப் பாடல்களில் வரும் வயிறு அதுக்குதல் என்பது இமைகளைப் பிசைதல் என்ற பொருளில் வந்துள்ளது. அதுக்குதல் என்ற சொல்லினைப் போலவே அலைத்தல் என்ற சொல்லுடன் சேர்ந்து ' வயிறு அலைத்தல் ' என்ற சொல்லாடல் பல இடங்களில் பயின்று வந்துள்ளது. சில இடங்கள் மட்டும் சான்றுக்குக் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. 

இல் எழு வயலை ஈற்று ஆ தின்று என
பந்து நிலத்து எறிந்து பாவை நீக்கி
அம் வயிறு அலைத்த என் செய்வினை குறுமகள் - நற்.179

(பொருள்: வீட்டில் வளர்த்த வயலைக் கொடியினை கன்றுபோட்ட பசு தின்றுவிட்டதற்காக வருந்தி பந்து விளையாடுவதையும் பாவை விளையாட்டையும் துறந்து தனது அழகிய கண்களைக் கசக்கி அழுத எனது சிறிய மகள்...)

.... விரலே பாஅய் அம் வயிறு அலைத்தலின் ஆனாது       
ஆடு மழை தவழும் கோடு உயர் பொதியில்
ஓங்கு இரும் சிலம்பில் பூத்த
காந்தள் அம் கொழு முகை போன்றன சிவந்தே - நற். 379

( பொருள்: கண்ணீர் ஒழுகும் தனது அழகிய கண்களைத் தொடர்ந்து கசக்கியதால் மேகங்கள் தவழும் பொதிகை மலையின் உச்சியில் பூத்த செங்காந்தள் மலர்மொட்டுக்களைப் போல அவளது விரல்கள் சிவந்து காணப்பட்டன..)

.....செறி தொடி தெளிர்ப்ப வீசி சிறிது அவண்
உலமந்து வருகம் சென்மோ தோழி
ஒளிறு வாள் தானை கொற்ற செழியன்
வெளிறு இல் கற்பின் மண்டு அமர் அடுதொறும்
களிறு பெறு வல்சி பாணன் எறியும்
தண்ணுமை கண்ணின் அலைஇயர் தன் வயிறே. - அகம். 106

(பொருள்: வா என் தோழியே !. மைசெறிந்த நமது கண்ணிமைகள் ஒளிவீசுமாறு பார்த்து சிறிதுநேரம் அவளிடத்தில் அலப்பறை செய்துவிட்டு வருவோம். இதைக்காணும் அவளது கண்கள், ஒளிரும் வாட்படையினை உடைய செழியனின் போர்க்களத்திலே யானையினை உடைய பாணன் கோல்கொண்டு அடிக்கும் தண்ணுமைப் பறையின் கண்களைப் போல இடையறாது கலங்கி வருந்துவதாகட்டும்...)

' வயிறு அலைத்தல் ' என்ற சொல்லாடலானது ' அழுதவாறு கண்களைக் கசக்குதல் ' என்ற பொருளில் கம்பராமாயணத்தில் மட்டும் ஏராளமான இடங்களில் பயின்று வந்துள்ளது. கீழே சில பாடல்வரிகள் மட்டும் சான்றாகக் கொடுக்கப்பட்டுள்ளன.

எயினர் வாழ் சீறூர் அப்பு மாரியின் இரியல் போக்கி
வயின்வயின் எயிற்றி மாதர் வயிறு அலைத்து ஓட ஓடி - கம்ப.பால.1
வந்தானை முகம் நோக்கி வயிறு அலைத்து மழை கண்ணீர் - கம்ப.ஆரண்.6
தோன்றலும் தொல் நகர் அரக்கர் தோகையர்
ஏன்று எதிர் வயிறு அலைத்து இரங்கி ஏங்கினார் - கம்ப. ஆரண்.10
வான நாடியர் வயிறு அலைத்து அழுது கண் மழை நீர் - யுத்3:22 199/1

பெண்கள் பெருந்துயரத்தில் அழும்போது தமது முகத்தைக் கைகளால் அடித்துக்கொண்டும் அழுவார்கள். தமது கணவனின் இறப்பு, மக்களின் இழப்பு போன்ற பெருந்துயர நிகழ்வுகளில் இவ்வாறு அவர்கள் செய்வது வழக்கம். இருகைகளாலும் முகத்தில் அடித்துக்கொள்ளும்போது அது பெரும்பாலும் கண்களையே வருத்துவதால் இதனையும் வயிறு அலைத்தல் என்ற சொல்லால் குறிப்பிட்டனர் எனலாம். இப்படி கண்களின்மேல் அடித்துக்கொள்ளும் ' வயிறு அலைத்தல் ' பற்றிய சில பாடல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

குயில் தலத்திடை உற்றது ஓர் கொள்கையாள்
வயிறு அலைத்து விழுந்து மயங்கினாள் - கம்ப.ஆரண்.12
மயன் மகள் வயிறு அலைத்து அலறி மாழ்கினாள் - சுந்:10 48/4
வாள் இணை நெடும் கண் மாதர் வயிறு அலைத்து அலறி மாழ்க - சுந்:11 8/3
வயிறு அலைத்து ஓடி வந்து கொழுநர்மேல் மகளிர் மாழ்கி - யுத்3:22 29/1
அடித்தாள் முலைமேல் வயிறு அலைத்தாள் அழுதாள் தொழுதாள் அனல் வீழ்ந்த - யுத்3:23 8/1

திதலையும் வயிறும்:

பெண்கள் தமது கண்ணிமைகளை அழகுசெய்யும்போது பல வடிவங்களிலும் வண்ணங்களிலும் வரைந்து அழகுசெய்வர். அருகில் உள்ள படம் இதற்கொரு சான்றாகும். அப்படி அழகுசெய்யும்போது இமைகளின்மேல் புள்ளிகளை வரைந்தும் அழகுசெய்வர். இந்தப் புள்ளிகளையே திதலை என்றும் தித்தி என்றும் புலவர்கள் குறித்தனர். இதுபற்றி திதலையும் தித்தியும் என்ற ஆய்வுக் கட்டுரையில் மேலதிக தகவல்கள் பெறலாம். கண்ணிமைகளில் திதலை வரைந்திருப்பதைப் பேசும் பாடல்கள் சில கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

புதல்வன் பயந்த திதலை அம் வயிற்று
வால் இழை மகளிர் நால்வர் கூடி ... - அகம்.86

( பொருள்: இமைகளில் அழகுற திதலைப் புள்ளிகளை வரைந்தும் ஒளிவீசும் அணிகளை அணிந்தவருமான கருவுற்ற பெண்கள் நால்வர் ஒன்றுகூடி ..... )

வரி கிளர் பணை தோள் வயிறு அணி திதலை
அரியலாட்டியர் - அகம். 245

( பொருள்: மைகொண்டு வட்டமாய் வரிவரைந்த பருத்த கண்விளிம்பும் கண்ணிமையில் வரைந்த திதலைப் புள்ளிகளையும் உடைய கள்விற்கும் பெண்டிர்.....)

புதல்வரை ஒழிந்து யாம் போந்தனமே என
அதிர்வனர் நடுங்கி அழலின் உயிர்த்து
திதலை அம் வயிறு அங்கையின் அதுக்கி - பெருங்.உஞ்சை.44

( பொருள்: பிள்ளைகளை விட்டுவிட்டு நாம் வந்துவிட்டோமே என்று அதிர்ச்சியால் பெரிதும் நடுங்கிப் பெருமூச்செறிந்துக் கண்கலங்கித் திதலை அணிந்த தமது கண்களைக் கைகளால் கசக்கி....)

யாழின் பத்தரும் வயிறும்:

பெண்களின் வயிற்றினை யாழின் பத்தர் என்னும் உறுப்புடன் உவமைப்படுத்திப் புலவர்கள் பாடியிருப்பதனை மேலே கண்டோம். இங்கே யாழின் பல்வேறு உறுப்புக்களைப் பற்றியும் அவற்றுள் பத்தர் ஆகிய உறுப்பு எவ்வாறு பெண்களின் கண்ணுக்கு உவமையாகும் என்றும் காண்போம்.

யாழின் பல்வேறு உறுப்புக்கள் பற்றிக் கீழ்க்காணும் சிலப்பதிகாரப் பாடல் வரி கூறுகிறது.

பத்தரும் கோடும் ஆணியும் நரம்பும் என்று
இத்திறத்து குற்றம் நீங்கிய யாழ் - சிலப்.கானல்வரி.

யாழின் உறுப்புக்களை பத்தர், கோடு, ஆணி, நரம்பு என்று நால்வகையாகக் கூறுகிறது மேற்காணும் பாடல். இந்த நால்வகை உறுப்புக்களும் எப்படி இருக்கும் என்பதனைக் கீழ்க்காணும் பொருநராற்றுப்படைப் பாடல் வரிகள் மிக அழகாக உவமைகளுடன் விளக்குகிறது.

அறாஅ யாணர் அகன் தலை பேர் ஊர்
சாறு கழி வழி நாள் சோறு நசையுறாது       
வேறு புலம் முன்னிய விரகு அறி பொருந
குளப்பு வழி அன்ன கவடு படு பத்தல்       
விளக்கு அழல் உருவின் விசியுறு பச்சை
எய்யா இளம் சூல் செய்யோள் அம் வயிற்று
ஐது மயிர் ஒழுகிய தோற்றம் போல
பொல்லம் பொத்திய பொதியுறு போர்வை
அளை வாழ் அலவன் கண் கண்டு அன்ன
துளை வாய் தூர்ந்த துரப்பு அமை ஆணி
எண் நாள் திங்கள் வடிவிற்று ஆகி       
அண்நா இல்லா அமைவரு வறு வாய்       
பாம்பு அணந்து அன்ன ஓங்கு இரு மருப்பின்
மாயோள் முன்கை ஆய் தொடி கடுக்கும்       
கண்கூடு இருக்கை திண் பிணி திவவின்
ஆய் தினை அரிசி அவையல் அன்ன
வேய்வை போகிய விரல் உளர் நரம்பின் .... - பொருந.

வரிவிளக்கம்:

அறாஅ யாணர் அகன் தலை பேர் ஊர் = வற்றாத வளம்கொண்ட அந்தப் பெரிய ஊரில்
சாறு கழி வழி நாள் சோறு நசையுறாது = விழா முடிந்த மறுநாளும் உண்ணும் விருப்பமின்றி   
வேறு புலம் முன்னிய விரகு அறி பொருந = வேறிடம் நோக்கிச் செல்லும் திறமை மிக்க பொருநனே !
குளப்பு வழி அன்ன கவடு படு பத்தல் = மான் குளம்பின் அச்சு போன்ற பிளவுடைய பத்தலையும்       
விளக்கு அழல் உருவின் விசியுறு பச்சை = விளக்குச்சுடர் போல வண்ணங்கொண்ட இழுத்துக்கட்டிய தோலையும்
எய்யா இளம் சூல் செய்யோள் அம் வயிற்று = கருவுற்றிருக்கும் அழகிய பெண்ணுடைய கண்ணிமையில் இருக்கும்
ஐது மயிர் ஒழுகிய தோற்றம் போல = அழகிய மயிர்களின் தோற்றத்தினைப் போல
பொல்லம் பொத்திய பொதியுறு போர்வை = பொல்லத்துடன் சேர்த்துப் பொருத்திய போர்வையும்
அளை வாழ் அலவன் கண் கண்டு அன்ன = வளையில் வாழும் நண்டின் கண்களைப் போலத்தோன்றும்
துளை வாய் தூர்ந்த துரப்பு அமை ஆணி = துளைக்குள் செலுத்திய முடுக்கத்தக்க ஆணிகளும்
எண் நாள் திங்கள் வடிவிற்று ஆகி = எட்டாம்பிறை போன்று வளைந்த வடிவினதாய்   
அண்நா இல்லா அமைவரு வறு வாய் =     உள்நாக்கு இல்லாத வெற்று வாயுடையதோர்
பாம்பு அணந்து அன்ன ஓங்கு இரு மருப்பின் = பாம்பு நிமிர்ந்ததைப் போல ஓங்கிய கோட்டினையும்
மாயோள் முன்கை ஆய் தொடி கடுக்கும்    = அழகிய பெண்ணின் கைவளைபோலத் தோன்றுவதும்   
கண்கூடு இருக்கை = பத்தலுடன் கோடு ஒன்றுகூடும் இடத்தில் இருப்பதுமான
திண் பிணி திவவின் = வலிமையாகப் பிணிக்கின்ற வளையத்தினையும்
ஆய் தினை அரிசி அவையல் அன்ன = தினையரிசி மாவினால் செய்த இடியாப்ப இழைபோலத் தோன்றுவதும்
வேய்வை போகிய விரல் உளர் நரம்பின் = துளைக்குள் செலுத்தப்பட்டு விரலால் மீட்டப்படுவதுமான நரம்புகளையும்

பொருள் விளக்கம்:

வற்றாத வளம்கொண்ட அந்தப் பெரிய ஊரில் விழா முடிந்த மறுநாளும் உண்ணும் விருப்பமின்றி வேறிடம் நோக்கிச் செல்லும் திறமை மிக்க பொருநனே ! மான் குளம்பின் அச்சு போன்ற பிளவுடைய பத்தலையும் விளக்குச்சுடர் போல வண்ணங்கொண்ட இழுத்துக்கட்டிய தோலையும் கருவுற்றிருக்கும் அழகிய பெண்ணுடைய கண்ணிமையில் இருக்கும் அழகிய மயிர்களின் தோற்றத்தினைப் போலத் தோன்றுகின்ற பொல்லத்துடன் சேர்த்துப் பொருத்திய போர்வையும் வளையில் வாழும் நண்டின் கண்களைப்போலத் தோன்றுவதும் துளைக்குள் செலுத்தப்பட்டதுமான முடுக்கத்தக்க ஆணிகளும் எட்டாம்பிறை போன்று வளைந்த வடிவினதாய்     உள்நாக்கு இல்லாத வெற்று வாயுடையதோர் பாம்பு நிமிர்ந்ததைப் போலத்தோன்றும் ஓங்கிய கோட்டினையும் அழகிய பெண்ணின் கைவளைபோலத் தோன்றுவதும் பத்தலுடன் கோடு ஒன்றுகூடும் இடத்தில் இருப்பதுமான வலிமையாகப் பிணிக்கின்ற வளையத்தினையும் தினையரிசி மாவினால் செய்த இடியாப்ப இழைபோலத் தோன்றுவதும் துளைக்குள் செலுத்தப்பட்டு விரலால் மீட்டப்படுவதுமான நரம்புகளையும்......

மேல் விளக்கம்:

ஒரு சொல்லுக்கான சரியான பொருளைப் புரிந்துகொள்ள உவமையினைப் போல உதவிசெய்யும் அணி எதுவுமில்லை. உவமையணி மட்டும் இல்லாதிருந்தால் பல சங்கத் தமிழ்ச் சொற்களை நம்மால் சரியாகப் புரிந்துகொள்ள முடியாமலே போயிருக்கும் என்பது மறுக்கமுடியாத உண்மை. இதையெல்லாம் உணர்ந்துதான் சங்கப் புலவர்கள் ஒவ்வொரு பொருளுக்கும் கூடுமானவரைக்கும் உவமைகூறிப் பாடல் இயற்றியிருக்க வேண்டும். அவ்வகையில், இந்தப் பாடலில் பயின்று வரும் பல சொற்களைப் புரிந்துகொள்ள பல உவமைகளை அமைத்துப் பாடியிருக்கிறார் புலவர். அந்த உவமைகள் ஒவ்வொன்றையும் தனித்தனியே பார்த்துப் புரிந்துகொள்ள முயல்வோம்.

முதலில் யாழ் கருவியின் அடிப்படை உறுப்பான பத்தல் பற்றிப் பேசுகிறார். இது எப்படி இருக்கும்?. புலவர் வெறுமனே பத்தல் என்று கூறியிருந்தால் பத்தல் எவ்வாறு இருக்கும் என்று தெரியாமல் போயிருக்கும். ஆனால் புலவர் இங்கே பத்தலை மானின் குளம்புத் தடத்துடன் ஒப்பிடுகிறார். அருகில் மான் குளம்பின் தடம் காட்டப்பட்டுள்ளது. நடுவில் சிறிய பிளவினை உடையதாய் கண் வடிவத்தில் மான் குளம்பின் தடம் இருப்பதிலிருந்து பத்தலும் கண்வடிவத்தில் தான் இருக்கும் என்று தெரியவருகிறது. இதனால் தான் பத்தலுடன் கண்ணை உவமைப்படுத்திக் கீழ்க்காணும் பாடலும் கூறுகிறது.

செங்கோட்டு யாழின் பத்தர் அன்ன
மெத்தென் அம் வயிற்று - பெருங்.உஞ்சை.40

அடுத்து இந்தப் பத்தலுக்கு மேலாக அதனை மூடியிருக்கும் தோல் பற்றிப் பேசுகிறார். இத் தோலானது பத்தலின் மேல்விளிம்புடன் நன்கு இழுத்துக் கட்டப்பட்டிருக்கிறது. இது பார்ப்பதற்கு விளக்குச்சுடர் போல செவ்வண்ணத்தில் இருப்பதாகக் கூறுகிறார் புலவர். பத்தலின் வயிறு போன்ற அடிப்பகுதியினை போர்வையால் மூடி அடிப்பகுதியின் நடுவில் இருக்கும் கவட்டுடன் சேர்த்து அதனைப் பொருத்தியிருக்கிறார்கள். இது பார்ப்பதற்கு கருவுற்ற பெண்ணின் அழகிய கண்ணிமைகளில் இருக்கும் அழகிய மயிர்களின் ஒழுக்கம் போலத் தோன்றுகிறதாம். இது எப்படியென்றால், பத்தலின் குவிந்த அடிப்பகுதியானது பெண்ணின் திரண்ட கண்களைப் போன்றும் அதை மூடியிருக்கின்ற வண்ணத்துணியானது அப்பெண்ணின் மையுண்ட இமைகளைப் போலவும் பத்தலின் கவட்டில் இருக்கும் பொல்லம் ஆகிய கருநிற விரல் போன்ற அமைப்புக்கள் இமைகளில் உள்ள கருமயிர் போலவும் இருப்பதாகக் கூறுகிறார். என்ன ஒரு உவமை !


அடுத்து யாழின் சிறிய உறுப்புக்களான ஆணிகளைப் பற்றிப் பேசுகிறார். இந்த ஆணிகள் தலையில் முடுக்கும் அமைப்புடன் வட்டவடிவில் பார்ப்பதற்கு நண்டின் நீண்ட கண்களைப் போன்று தோன்றுகிறது புலவருக்கு. அருகில் நண்டின் கண்கள் படம் காட்டப்பட்டுள்ளது.


ஆணிகளை அடுத்து வருவது அவற்றைத் தாங்கிநிற்கும் கோடு என்றும் மருப்பு என்றும் கூறப்படும் யாழின் தண்டு. இந்தக் கோடானது எட்டாம்பிறைச் சந்திரனைப் போல அரைவட்ட வடிவில் வளைந்திருக்கிறது என்கிறார் புலவர். அத்துடன் நிற்காமல் இது பார்ப்பதற்கு உள்நாக்கு இல்லாத ஒரு பாம்பு தலைநிமிர்ந்து பார்ப்பதைப் போல இருக்கிறதாம் புலவருக்கு. இதிலிருந்து இத் தண்டின் ஒரு முனையானது பத்தலின் ஓரத்தில் ஒருபுறமாகப் பொருத்தப்பட்டிருந்தது என்பதையும் இன்னொரு முனையானது சீறும்பாம்பின் வாய்போல பிளந்திருந்தது என்பதனையும் அறிந்துகொள்ள முடிகிறது. 

இதனை அடுத்து வருவது திவவு என்று அறியப்படும் உறுப்பு. திவவு என்பதற்கு யாழ்நரம்புக் கட்டு என்று பொருள்கூறுவாருளர். இது தவறானதாகும். இப்பாடலில் வரும் திவவு என்பது நரம்புக் கட்டினைக் குறிக்காது. திவவு என்பது ஒரு வளையம் ஆகும். இந்த வளையமானது பத்தலும் தண்டும் ஒன்றுகூடும் இடத்தில் பொருத்தப்பட்டு இருக்கும். நரம்புகளில் விறைப்புத்தன்மையினை கூட்டும்போது தண்டுப்பகுதி முன்னால் வளைந்து சாய்ந்துவிடாமல் இருக்கும்விதமாக அதனை இறுக்கமாகப் பத்தலுடன் பிணித்துக்கொள்கிறது. இது பார்ப்பதற்கு அழகிய பெண்ணொருத்தி முன்கையில் அணிந்திருக்கும் வளையலைப் போல இருக்கிறது என்று புலவர் கூறுவதிலிருந்தே திவவு என்பதும் ஒரு வளையம் போன்ற உறுப்பினையே குறிக்கும் என்பதைப் புரிந்துகொள்ளலாம். திவவு பற்றி விரிவாக வேறு ஒரு கட்டுரையில் காணலாம்.

திவவினை அடுத்து யாழ் நரம்புகளைப் பற்றிச் சொல்கிறார் புலவர். யாழின் நரம்புகளைப் பார்க்கும்போது அவருக்குத் தினையரிசி மாவினால் செய்த இடியாப்பம் நினைவுக்கு வந்துவிட்டது. தினை அரிசியினை நன்கு ஊறவைத்து மாவாக அரைத்தபின் அதை இடியாப்ப உரலுக்குள் இட்டுப் பிழியும்போது கம்பிபோன்ற இழைகள் கீழே விழும். இந்த இடியாப்ப இழைகளைப் போலத் தோன்றும் யாழின் நரம்புகள் தண்டின் மேல்பகுதியில் உள்ள துளைகள் வழியாகச் செலுத்தப்பட்டு முடுக்கு ஆணிகளுடன் பிணிக்கப்பட்டிருக்கும். ஆணிகளை முடுக்குவதன் மூலம் நரம்புகளில் விறைப்புத் தன்மையை ஏற்றவோ இறக்கவோ செய்யலாம். 

முடிவுரை:

இதுவரை கண்டவற்றில் இருந்து, வயிறு என்னும் சொல்லுக்கு அகராதிகள் காட்டும் பொருட்கள் நீங்கலாக, கண் மற்றும் கண்ணிமை ஆகிய பொருட்களும் உண்டென்று அறிந்தோம். சங்க காலத்தில் யாழின் வடிவமைப்பு எவ்வாறு இருந்தது என்றும் கண்டோம். யாழுக்கும் வயிறுக்கும் என்ன தொடர்பு என்பதைப் பற்றியும் அறிந்தோம். இந்த யாழினை மீட்டித்தான் பொருநர்கள் தம் வயிற்றை நிரப்பினர் என்று நினைக்கும்போது மனம் கொஞ்சம் கனக்கத்தான் செய்கிறது.

திங்கள், 12 டிசம்பர், 2016

திதலையும் தித்தியும்

முன்னுரை:

சங்கத்தமிழ்ப் புலவர்கள் இலக்கியங்களில் பயன்படுத்திய பல சொற்களுக்கு இன்றைய அகராதிகள் எப்படியெல்லாம் தவறான பொருட்களைக் கூறியிருக்கின்றன என்று ' தமிழ் அகராதிகளின் குற்றங்களும் குறைகளும் ' என்ற கட்டுரையில் மிக விரிவாகக் கண்டோம்.  அவ்வகையில் திதலை, தித்தி ஆகிய சங்கத் தமிழ்ச்சொற்கள் தமது பொருளில் எவ்வாறு மாற்றம் அடைந்துள்ளன என்பதனைப் பற்றி இக்கட்டுரையில் ஆதாரங்களுடன் விரிவாகக் காணலாம்.

திதலை, தித்தி - தற்போதைய அகராதிப் பொருட்கள்:
திதலை, தித்தி ஆகிய சொற்களுக்கு இற்றைத் தமிழ் அகராதிகள் காட்டும் பொருட்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

திதலை titalai , n. perh. sita. 1. cf. sidhma. Yellow spots on the skin, considered beautiful in women; தேமல். பொன்னுரை கடுக்குந் திதலையர் (திருமுரு. 145). 2. Pale complexion of women after confinement; ஈன்ற பெண்களுக் குள்ளவெளுப்புநிறம். ஈன்றவ டிதலைபோல் (கலித். 32).

தித்தி² titti , n. < தித்தி-. [K. sihi.] 1. Sweetness; தித்திப்பு. தித்திப்பனங்கட்டி. (W.) 2. cf. திற்றி. Light food; சிறுதீனி. (J.) 3. Date palm; பேரீந்து. (W.) 4. Pleasure; இன்பம். (அக. நி.) 5. cf. sidhman. Yellow spreading spots on the body; தேமல். கோதையூரலந் தித்தி (பதிற்றுப். 52, 17). 6. Common bottle-flower. See குரா. (யாழ். அக.), n. < தித்தி onom. 1. (Mus.) Two syllables sung to a tune, signifying time- measure; தாளச்சதி. தித்தி யறுத்தும் (திருப்பு. 417). 2. Monkey; குரங்கு. (அக. நி.) n. < dṛti. [T. K. M. Tu. titti.] 1. Bellows; துருத்தி. வாயுவேற்றித் தித்திவாய்ச் செம்மில் (யசோதர. 4, 12). 2. Purse, leather bag; தோற்பை. Loc. 3. A kind of flute or pipe; ஒரு வகை வாத்தியம். தித்திசிறு முகவீணை (குற்றா. தல. தருமசாமி. 54). n. perh. dīpti. cf. தித்தியம். A sacrificial pit; வேள்விக்குண்டம். (W.)

பொருள் பொருந்தா இடங்கள்:

முதலில் திதலை என்ற சொல்லை மட்டும் தனியே எடுத்துக்கொண்டு, தேமல் என்ற அகராதிப் பொருள் அதற்குப் பொருந்துமா என்று பார்ப்போம். பொதுவாக, தேமல் என்பது ஒருவகை தோல்நோயே ஆகும். தேமல் என்பது வெள்ளை நிறத்தில் மட்டுமின்றி வேறு நிறத்திலும் தோன்றும். இதில் பலவகைகள் உண்டென்றாலும் அனைத்துமே நோயினால் உருவாவதே. இது உடலில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் என்றில்லாமல் எந்த இடத்தில் வேண்டுமானாலும் தோன்றலாம். எந்தவகைத் தேமல் ஆனாலும் அது யாருக்கும் அழகு சேர்க்காது. பார்ப்பவர்க்கு அருவருப்பையே தரும். இந்நிலையில், அதன் அழகினை யாரும் புகழ்ந்து பாடமாட்டார்கள். ஆனால், காதலியின் திதலை அழகினைப் பாராட்டுவதாகக் கீழ்க்காணும் பாடல்கள் கூறுகின்றன.

திதலை அல்குலும் பல பாராட்டி - நற் 84/2
திதலை அல்குல் நலம் பாராட்டிய - நற் 307/4

அல்குல் பகுதியில் இருந்த திதலையினைப் பாராட்டியதாக மேற்காணும் பாடல் வரிகள் கூறுகின்றன. இதிலிருந்து, திதலை என்பது தேமலாக இருக்க முடியாது என்பது உறுதியாகிறது. காரணம் நாம் மேலே கண்டபடி, நோயின் விளைவாகிய தேமலைக் கண்டு வருந்துவார்களேயன்றி யாரும் புகழ்ந்து பாராட்ட மாட்டார்கள். திதலை என்பது அழகு மிக்கது என்பதனை கீழ்க்காணும் பாடல்களும் மறைமுகமாகக் கூறுகின்றன.

திதலை அல்குல் அம் வரி வாடவும் - அகம் 183/2
திதலை அல்குல் வரியும் வாடின - அகம் 227/2

திதலை என்பது அழகிய வரிவடிவத்தில் இருக்கும் என்பதுடன் அவை வாடுவதுமுண்டு அதாவது தமது அழகு கெடுவதுமுண்டு என்று மேற்காணும் வரிகள் கூறுகின்றன. ஆனால், தோல்நோயான தேமலானது யாருக்கும் வரிவடிவத்தில் இருக்காது. ஆங்காங்கே திட்டுத்திட்டாக ஒழுங்கின்றி காணப்படும். எனவே திதலை என்பது ஒருபோதும் தேமலைக் குறிக்காது என்பதை உறுதிசெய்து கொள்ளலாம்.

அடுத்து, திதலை என்ற சொல் பயின்றுவரும் பாடல்களை ஆய்வுசெய்ததில், ஏறத்தாழ 18 இடங்களில் 'அல்குல் ' என்ற சொல்லுடன் சேர்ந்து ' திதலை அல்குல் ' என்றே பயின்று வந்துள்ளது. அப்பாடல் வரிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

திதலை அல்குல் பெரும் தோள் குறுமகட்கு - நற் 6/4
திதலை அல்குல் குறுமகள் - நற் 77/11
திதலை அல்குலும் பல பாராட்டி - நற் 84/2
திதலை அல்குல் நலம் பாராட்டிய - நற் 307/4
திதலை சில் பொறி அணிந்த பல் காழ் அல்குல் - நற் 133/3,4
திதலை அல்குல் தேமொழியாட்கே - நற் 161/12
கோடு ஏந்து அல்குல் அரும்பிய திதலை - நற் 198/6,7
திதலை அல்குல் முது பெண்டு ஆகி - நற் 370/6
திதலை அல்குல் என் மாமை கவினே - குறு 27/5
திதலை அல்குல் நின் மகள் - ஐங் 29/4
திதலை அல்குல் துயல்வரும் கூந்தல் - ஐங் 72/2
திதலை அல்குல் எம் காதலி - அகம் 54/21
நுதலும் தோளும் திதலை அல்குலும் - அகம் 119/1
திதலை அல்குல் அம் வரி வாடவும் - அகம் 183/2
திதலை அல்குல் குறுமகள் அவனொடு - அகம் 189/9
திதலை அல்குல் வரியும் வாடின - அகம் 227/2
திதலை அல்குல் தேம் கமழ் குழலியர் - சிலப்.மது 22/128
திதலை அல்குல் தேவியொடு மகிழ்ந்து - பெருங்.நரவாண 1/120

திதலை என்பது அல்குலுடன் பெரிதும் தொடர்புடையது என்பதையே மேற்காணும் பாடல்கள் கூறுகின்றன. இந்நிலையில், அல்குல் என்பதற்கு பெண்குறி என்றும் திதலை என்பதற்குத் தேமல் என்றும் பொருள்கொண்டு, திதலை அல்குல் என்பது பெண்குறிக்கு மேலாகவும் தொப்புளுக்குக் கீழாகவும் காணப்படும் தேமல் என்று கேவலமான பொருள் கூறுகின்றனர் இன்றைய உரையாசிரியர்கள்.

இத்தனைப் பாடல்களில் பாடுபொருளாக அல்குல் வந்திருப்பதிலிருந்தே அது பெண்குறி போல மறைவானதொரு உறுப்பல்ல என்பதை உணர்ந்திருக்க வேண்டும். தொப்புளும் அதற்குக் கீழே உள்ள தேமலும் தெரியுமாறு பெண்கள் ஆடை அணிந்தனர் என்றால் ஆடை அணியவேண்டிய தேவையே இல்லையே. ஆடை என்பதே மானத்தை மறைக்கத்தானே?. அதையே வெளிப்படையாகக் காட்டிவிட்டு பின் எதை மறைக்க வேண்டும்?. அதுமட்டுமல்ல, அக் காலத்துப் பெண்கள் தமது பெண்குறி மட்டுமல்லாது மார்பகங்களும் வெளிப்படையாகத் தெரியுமாறு ஆடை அணிந்தனர் என்று விளக்கம் கூறியுள்ளனர் இற்றை உரைகாரர்கள்.

திதலை அணிந்த தேம் கொள் மென் முலை - அகம் 26/13
திதலை மென்முலை தீம்பால் பிலிற்ற - நற் 380/3

இப் பாடல்களில் வரும் ' திதலை மென்முலை ' என்பதற்கு ' தேமல் மிகுந்த மார்பகம் ' என்று பொருள்கூறி இருக்கின்றனர். அப்படியானால், சங்கப் பெண்கள் தமது மார்பகங்களும் வெளியே தெரியுமாறு ஆடை அணிந்திருந்தனர் என்றுதானே பொருள் வருகிறது?. இற்றை உரையாசிரியர்கள் கூறும் விளக்கத்தினைப் படிப்பவர்கள் சங்ககாலத்தில் தமிழ்ப் பெண்கள் யாரும் மானத்தை மறைப்பதற்காக ஆடை அணிந்திருக்கவில்லை என்றே முடிவுகட்டி விடுவார்கள் அன்றோ !!!.

அடுத்து, தித்தி என்ற சொல்லை எடுத்துக்கொண்டால் அதையும் அல்குலுடனும் முலையுடனும் தொடர்புறுத்திக் கீழ்க்காணும் பாடல்கள் கூறுகின்றன.

தித்தி ஒழுகிய மெத்தென் அல்குலர் - பெருங். உஞ்ஞை 41/97
எதிர்த்த தித்தி ஏர் இள வன முலை - நற் 160/4
எதிர்த்த தித்தி முற்றா முலையள் - நற் 312/7

திதலை என்ற சொல்லுக்குச் சொன்னதைப் போலவே தித்தி என்ற சொல்லுக்கும் தேமல் என்ற பொருளைக்கொண்டு பெண்குறியின் மேலும் மார்பகத்திலும் தேமல் இருந்ததாக மேற்காணும் பாடல்வரிகளுக்கு உரைகூறியுள்ளனர். இதைவிடக் கொடுமையாக, பெண்கள் தமது தொடையினையும் காட்டிக்கொண்டு திரிந்ததாகக் கீழ்க்காணும் பாடல் வரிகளுக்கு உரைகூறியுள்ளனர்.

தித்தி குறங்கின் ஊழ் மாறு அலைப்ப - குறு 293/6
தித்தி குறங்கில் திருந்த உரிஞ - அகம் 385/10

மேற்காணும் பாடல்களில் வரும் குறங்கு என்பதற்கு தொடை என்றும் தித்தி என்பதற்கு தேமல் என்றும் பொருள்கொண்டு ' தித்தி குறங்கு ' என்பதற்கு ' தேமல் மிக்க தொடை ' என்று விளக்கம் கூறியுள்ளனர் இற்றை உரைகாரர்கள்.

ஆக, இந்த உரைகாரர்களைப் பொறுத்தமட்டில் சங்கப் பெண்கள் யாரும் தாம் மறைக்கவேண்டிய பெண்குறி, மார்பகம், தொடை என்று எதையுமே மறைக்காமல் தான் வாழ்ந்துவந்தனர் என்பது பொருளாகிறது. தமிழ் இலக்கியத்திற்கு இவர்களால் இயற்றப்பட்ட உரைகளில் இதுபோல தவறான மலிவான உரைகள் எவ்வளவு இருக்கும் என்று எண்ணிப் பாருங்கள்.!!!. சங்கத் தமிழ்ப் பெண்களின் மானத்தைக் கப்பலேற்றும் விதமாக தமிழ்ப் பண்பாட்டுக்கே ஒவ்வாத இப்படியொரு கேவலமான பொருளைக் கூற எப்படித்தான் முடிகிறதோ இவர்களுக்கு?. இது தமிழ்ப் பெண்களை இழிவுசெய்யும் நோக்கில் கூறப்பட்ட கருத்து மட்டுமின்றி தமிழ்ப் புலவர்களின் கண்ணியத்தையே கேள்விக்குறியாக்கி இருக்கிறது. இப்படி தமிழ்ப் பெண்களையும் தமிழ்ப் புலவர்களையும் அவமானப்படுத்துவதில் இவர்களுக்கு அப்படி என்னதான் மகிழ்ச்சியோ தெரியவில்லை.!!! இப்படி உரை எழுதியவர்களும் தமிழர்கள் தானே?. இதுபோன்று தவறான உரையினை எழுதுவதற்குப் பதிலாக ' இச்சொற்களுக்குச் சரியான பொருட்கள் விளங்கவில்லை. மேலாய்வு செய்யப்பட்ட பின்னர் இதனை முடிவுசெய்யலாம் ' என்று எழுதிவிட்டு ஒதுங்கி இருக்கலாமே. இதுபோன்ற தவறான உரைகளை எழுதும் முன்னர், தமிழ் இலக்கியம் படிக்கின்ற கல்லூரி மற்றும் பள்ளி மாணவ மாணவியரின் உள்ளத்தில் இது எத்தகைய தாக்கத்தினை ஏற்படுத்தும் என்பதைப் பற்றியோ தமிழ் இலக்கியம் படிக்கின்ற பிறமொழி பேசுவோர் தமிழ்ப் பண்பாட்டினைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்றோ சிறிதும் சிந்திக்காமல் உரை எழுதியிருப்பவர்களை என்ன தான் சொல்வது?.

இத்தகைய தவறான மலிவான உரைவிளக்கங்களுக்குக் காரணம், அல்குல், முலை, குறங்கு, திதலை, தித்தி போன்ற பல சொற்களுக்கு நிகண்டுகளும் அகராதிகளும் கூறியுள்ள பொருட்களை அப்படியே ஏற்றுக்கொண்டதே. எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு என்பதை மறந்து அகராதிப் பொருட்களை ஆய்வுசெய்யாமல் அவற்றின் அடிப்படையில் உரை இயற்றியது பெரும் தவறாகும். இனி, திதலை மற்றும் தித்தி ஆகிய சொற்களுக்கான சரியான பொருட்கள் எவை என்று காணலாம்.

திதலையும் தித்தியும் - புதிய பொருட்கள்:

திதலை என்பதும் தித்தி என்பதும் புள்ளி / பொட்டு என்றே பொருள்பெறும். இலக்கியப் பயன்பாட்டில்,

திதலை என்பது புருவங்களுக்கு மேலாக வரிவடிவத்தில் வைக்கப்பட்ட புள்ளி / பொட்டுக்களையும்

தித்தி என்பது கண்ணிமைகளின் மேலாக தெளித்துவிட்டாற்போல வைக்கப்பட்ட புள்ளி / பொட்டுக்களையும்

குறிக்கவே பெரும்பான்மை பயன்படுத்தப் பட்டுள்ளது. சில இடங்களில் அவ்வாறில்லாமல் மாறி இருப்பதுமுண்டு.

நிறுவுதல்:
திதலைக்கும் தித்திக்குமான புதிய பொருட்கள் எப்படி பொருந்தும் என்பதனை இங்கே பல ஆதாரங்களுடன் நிறுவலாம். முதலில் திதலை பற்றிக் காணலாம்.

திதலை என்னும் சொல்லானது 18 இடங்களில் அல்குல் என்ற சொல்லுடன் பயின்று வந்துள்ளதை மேலே கண்டோம். இந்த அல்குல் என்பது பெண்களின் நெற்றிப் பகுதியினை குறிப்பாக புருவங்களின் மேல் பகுதியினைக் குறிக்கும் என்று ' அழகின் மறுபெயர் அல்குல் என்ற ஆய்வுக் கட்டுரையில் விரிவாகப் பல ஆதாரங்களுடன் கண்டுள்ளோம். பெண்கள் தமது கண்ணிமைகளைப் பல வண்ண மைகொண்டு தீட்டி அழகுசெய்வர் என்று முன்னர் பல கட்டுரைகளில் கண்டுள்ளோம். அத்துடன், இந்த அல்குல் பகுதியிலும் அதாவது புருவங்களுக்கு மேலாகவும் பல வண்ணங்களில் சிறு புள்ளிகள் அல்லது பொட்டுக்களை வரிசையாக ஒருநேர்கோட்டில் வரைவார்கள். இப் பொட்டுக்களை ஒரு வரியாகவோ பல வரிகளாகவோ மைகொண்டு வரைவர். சிலர் மை கொண்டு வரையாமல் இயற்கையாகக் கிடைக்கின்ற வண்ணப் பூந்தாதுக்களை அப்படியே வரிசையாக ஒட்டிக்கொள்வார்கள். இவ்வாறு ஒட்டிய பூந்தாதுக்கள் சில நேரங்களில் உதிர்ந்து கீழே இருக்கும் கண்ணிமைகளின் மேல் படிந்திருப்பதுமுண்டு. மைதீட்டி அழகு செய்யப்பட்ட கண்ணிமைகளின் மேல் திதலையின் தாதுக்கள் உதிர்ந்துகிடக்கின்ற காட்சியினைக் கீழ்க்காணும் பாடல்கள் கூறுவதைக் காணலாம்.

மா ஈன்ற தளிர் மிசை மாயவள் திதலை போல்
ஆய் இதழ் பன் மலர் ஐய கொங்கு உறைத்தர - கலி 29

செந்நிற மாந்தளிரின் மேலாக மாம்பூக்களின் அழகிய தாதுக்கள் உதிர்ந்துகிடக்கின்ற காட்சியினை பெண்களின் செவ்வண்ணம் தீட்டிய கண்ணிமைகளின் மேலாக திதலையின் தாதுக்கள் உதிர்ந்து கிடக்கும் காட்சியுடன் ஒப்பிட்டுக் கூறுகிறார் புலவர். இதே உவமையினைக் கீழ்க்காணும் பாடலும் கூறுவதைப் பாருங்கள்.

ஈன்றவள் திதலை போல் ஈர் பெய்யும் தளிரொடும் - கலி 32

ஈனுதல் என்பதற்குக் கருவுயிர்த்தல் என்ற அகராதிப் பொருளும் உண்டு. அவ்வகையில், இப்பாடலில் வரும் ஈன்றவள் என்பது கருவுயிர்த்தவள் அதாவது சூல்நிறைந்த பெண்ணைக் குறிக்கும். சூல்நிறைந்த பெண்ணுக்கு ஏழு அல்லது ஒன்பதாம் திங்களில் தற்காலத்தில் வளைகாப்பு விழா நடத்தி மகிழ்விப்பர். இவ் விழாவின்போது, அப் பெண்ணை மிக அழகாக அலங்காரம் செய்வர். அதைப்போல அலங்காரம் செய்யப்பட்ட ஒரு சூல்நிறைந்த பெண்ணுடைய செவ்வண்ணம் பூசிய கண்ணிமைகளின் மேலாக உதிர்ந்துகிடக்கும் திதலைப் பொட்டுக்களைப் போல மஞ்சள் வண்ணப் பூந்தாதுக்கள் மாமரத்தின் செந்தளிர் இலைகளின்மேல் உதிர்ந்து கிடக்கின்றனவாம். இப்பாடலில் வரும் ஈர் என்பது நுண்மை என்னும் அகராதிப்பொருளில் நுண்ணிய பூந்தாதுக்களைக் குறிக்கும்.

பெண்கள் வரையும் திதலை வரிகள் பெரும்பாலும் பொன்வண்ணத்தில் தான் இருக்கும்போலும். அதனால்தான் இதனை மாம்பூக்களின் தாதுக்களுடன் ஒப்பிட்டு மேலுள்ள பாடல்கள் கூறுகின்றன. கீழுள்ள பாடலும் இதனை உறுதிசெய்கிறது.

பொன் உரை கடுக்கும் திதலையர் இன் நகை - திரு 145

பொன்னின் உரை அதாவது துகள்போலத் தோன்றும் திதலை என்று மேற்காணும் பாடல் கூறுகிறது. பெண்கள் தமது நெற்றிப் பகுதியில் திதலையினை வரையுமிடத்து ஈர்க்குச்சியைக் கொண்டு வரைவர் என்று கீழ்க்காணும் பாடல் கூறுகிறது.

ஈர்க்கின் அரும்பிய திதலையர் கூர் எயிற்று - மது 708

திதலை வரிகளின் அமைப்பினை இதைவிடத் தெளிவாகக் கூறமுடியுமா என்று தெரியவில்லை. திதலை வரிகள் எவ்வாறு இருக்கும் என்பதனை அழகான உவமையுடன் கீழ்க்காணும் பாடல் கூறுவதைப் பாருங்கள்.

கடல் கண்டு அன்ன கண் அகன் பரப்பின்
நிலம் பக வீழ்ந்த வேர் முதிர் கிழங்கின்
கழை கண்டு அன்ன தூம்பு உடை திரள் கால்
களிற்று செவி அன்ன பாசடை மருங்கில்
கழு நிவந்து அன்ன கொழு முகை இடையிடை
முறுவல் முகத்தின் பன் மலர் தயங்க
பூத்த தாமரை புள் இமிழ் பழனத்து
வேப்பு நனை அன்ன நெடும் கண் நீர் ஞெண்டு
இரை தேர் வெண்குருகு அஞ்சி அயலது
ஒலித்த பகன்றை இரும் சேற்று அள்ளல்
திதலையின் வரிப்ப ஓடி விரைந்து தன்
நீர் மலி மண் அளை செறியும் ஊர ... - அகம். 176

பொருள்: கடல்போலத் தோன்றும் பெரும்பரப்பில் நிலத்தினின்று பறிக்கப்பட்ட வேரில் முதிர்ந்த கிழங்குகளையும் மூங்கில்போலும் துளையினை உடைய தடித்த தண்டினையும் யானையின் காதுகளைப் போன்று பெரிய இலைகளையும் உடைய சேம்பின் தோட்டத்துக்கு அருகில் கழுமரம் போல உயரமாக வளர்ந்த பல மொட்டுகளும் முகம்போல மலர்ந்திருந்த பல தாமரை மலர்களும் நிறைந்திருந்த அந்த சேற்றுவயலில் வேப்பமரத்தின் மலர்மொக்குப் போன்ற கண்களை உடைய நீர்நண்டானது இரைதேடும் வெண்நாரைக்குப் பயந்து அருகில் வளர்ந்திருந்த பகன்றைமலர்களின் மீது திதலை வரிகளைப் போல சேற்றுப்புள்ளிகள் விழுமாறு ஓடி தனது வளைக்குள் சென்று ஒளிந்துகொள்ளும் ஊரனே.....

இப்பாடலில் தான் எத்தனை உவமைகள்.!!!. சேப்பங்கிழங்கின் தோட்டத்தினைக் கடலுக்கு உவமையாகவும் அதன் தண்டினை மூங்கிலுக்கு உவமையாகவும் அதன் இலையினை யானையின் காதுக்கு உவமையாகவும் தாமரையின் மலராத மொக்குகளை கழுமரத்திற்கு உவமையாகவும் மலர்ந்த மலர்களைப் பெண்களின் மகிழ்ச்சி நிறைந்த முகத்திற்கு ஒப்பாகவும் நண்டின் கண்களை வேப்பமரத்தின் மலர்மொக்குகளுக்கு உவமையாகவும் பகன்றைமலர்களின் மீது நண்டுகள் உருவாக்கிய சேற்றுப்புள்ளிகளைப் பெண்களின் திதலை வரிகளுக்கு உவமையாகவும்.... அடடா !. புலவர் ஒரு கலக்கு கலக்கிவிட்டார்.

பொதுவாக நண்டுகள் பக்கவாட்டு இயக்கம் உடையவை. இவை நகர்ந்து செல்லும் அழகே தனிதான். மணல்மீது இவை நகர்ந்துசெல்லும்போது உண்டாக்கும் சில வரிபோன்ற அமைப்புகளைப் படத்தில் பாருங்கள். சேற்றுவயலில் இருந்த நண்டுகள் நாரைக்குப் பயந்து உதிர்ந்துகிடக்கும் வெண்ணிறப் பகன்றை மலர்களின்மீது ஓடும்போது அவற்றின் கால்நுனிகளில் ஒட்டியிருந்த சேறானது புள்ளிகளாகப் படிந்து பல வரிகளை உருவாக்க, அவ் வரிகள் பார்ப்பதற்குப் பெண்களின் திதலை வரிகளைப் போலத் தோன்றியதாக இப் புலவர் கூறுகிறார்.

இன்னொரு புலவரோ, புருவங்களின் மேல் திதலை வரைந்திருந்த ஒரு தாயுடன் அவளது குழந்தை விளையாடும் காட்சியினை நம் கண்முன்னால் கொண்டுவருகிறார் கீழ்க்காணும் பாடலில்.

நெய்யும் குய்யும் ஆடி மெய்யொடு
மாசு பட்டன்றே கலிங்கமும் தோளும்
திதலை மென் முலை தீம் பால் பிலிற்ற
புதல்வன் புல்லி புனிறு நாறும்மே.... - நற். 380

தாய் தனது குழந்தைக்கு நெய்ச்சோறு ஊட்டியபோது அவளது முகத்தைத் தனது பிஞ்சுக்கைகளால் தடவியும் வாயிலிருந்து சோற்றினைத் துப்பியும் விளையாடுகிறது குழந்தை. இதனால் தாயின் கண்மை அணியும் இமையிலிருந்த திதலை வரிகளும் அழிந்து உடலும் ஆடையும் மாசுபடுகிறது. சோறு சாப்பிடாததால் பாலூட்ட முயல்கிறாள். அப்போதும் அது பாலைத் துப்பி விளையாடுகிறது. இதனால் அவளது உடலிலும் அவளது குழந்தையைப் போலவே ஒரு மணம் வீசுவதாகப் புலவர் கூறுகிறார். இப்பாடலில் வரும் திதலை என்பது திதலை வரிகளையும் முலை என்பது கண்ணிமைகளையும் குறிக்கும்.

அடுத்து, தித்தி என்னும் சொல்லுக்கான புதிய பொருள் எவ்வாறு பொருந்தும் என்று பார்ப்போம். தித்தி என்பது நுட்பமானதும் பலவாகிய தன்மையும் கொண்டது என்பதனைக் கீழ்க்காணும் பாடல்கள் கூறுகின்றன.

நுண் பல் தித்தி மாஅயோளே - நற் 157/10
நுண் பல் தித்தி மாஅயோயே - குறு 300/4
நுண் பல் தித்தி மாஅயோளே - அகம் 41/16

தித்தி என்பது கண்ணிமைகளின் மேல் ஆங்காங்கே வரையப்பட்டது / தெளிக்கப்பட்டதுபோன்ற நுண்ணிய பல புள்ளிகளைக் குறிக்கும். இதனைக் கீழ்க்காணும் பாடல்வரிகளால் அறியலாம்.

ஊரல் அம் தித்தி ஈர் இதழ் மழை கண் - பதி 52
ஊரல் அம் வாய் உருத்த தித்தி பேர் அமர் மழை கண் - அகம் 326

இப்பாடல்களில் வரும் ஊரல் என்பது சிப்பி என்னும் அகராதிப் பொருளைக் குறிக்கும். சிப்பிகளின் மேலோட்டில் காணப்படும் வண்ணப் புள்ளிகளைப் போல மைதீட்டப்பட்ட அழகிய இமைகளைக் கொண்ட கண் என்பது இவற்றின் பொருளாகும்.

முலை என்பது கண் / கண்ணிமையைக் குறிக்கும் என்றும் குறங்கு என்பது கண்ணிமையைக் குறிக்கும் என்றும் முன்னர் கட்டுரைகளில் விரிவாகக் கண்டுள்ளோம். பெண்கள் தமது முலையிலும் குறங்கிலும் அதாவது கண்ணிமைகளில் அழகிய புள்ளிகளை வரைந்திருந்ததையே கீழ்க்காணும் பாடல்கள் கூறுகின்றன.

எதிர்த்த தித்தி ஏர் இள வன முலை - நற் 160/4
எதிர்த்த தித்தி முற்றா முலையள் - நற் 312/7
தித்தி குறங்கின் ஊழ் மாறு அலைப்ப - குறு 293/6
தித்தி குறங்கில் திருந்த உரிஞ - அகம் 385/10

திதலையும் தித்தியும் வயிறும்:

திதலையும் தித்தியும் தேமல் என்ற பொருளைக் கொள்ளும் என்று உரைகாரர்கள் தவறாகக் கருதக் காரணம் என்னவென்று ஆய்ந்ததில், வயிறு என்ற சொல்லே அதற்குக் காரணம் என்று தெரியவந்தது.

பசலை பாய்ந்த திதலை தித்தி அசைந்த அம் வயிறு - உஞ்ஞை 43/128,129
திதலை அம் வயிறு அங்கையின் அதுக்கி - உஞ்ஞை 44/25
புதல்வன் பயந்த திதலை அம் வயிற்று - அகம் 86/11
வரி கிளர் பணை தோள் வயிறு அணி திதலை அரியலாட்டியர் - அகம் 245/8,9

மேலே உள்ள பாடல்களில் திதலையும் தித்தியும் வயிறு என்ற சொல்லுடன் சேர்ந்து வந்துள்ளதைக் காணலாம். இப் பாடல்களில் வரும் வயிறு என்ற சொல்லுக்கு அகராதிகள் காட்டுகின்ற 'உடலின் மையப்பகுதியாகிய உதரம்' என்று பொருள்கொண்டதே திதலைக்கும் தித்திக்கும் கருவுற்ற பெண்களுக்கு அடிவயிற்றில் தோன்றும் தேமல் என்ற பொருளைக் கொள்ள வைத்துவிட்டது என்று தோன்றுகிறது. உண்மையில், இப்பாடல்களில் வரும் வயிறு என்ற சொல்லானது கண்ணிமையினைக் குறிக்கும். பெண்கள் தமது இமைகளின்மேல் திதலை அல்லது தித்தியினை வரைவர் என்று மேலே கண்டோம். இதைப்பற்றிய முழுமையான ஆய்வுக் கட்டுரையினைத் தனியாக ஆதாரங்களுடன் காணலாம்.

முடிவுரை:

இதுகாறும் கண்டவற்றில் இருந்து, தித்தி என்பதோ திதலை என்பதோ தோல்நோயான தேமலைக் குறிக்காது என்பதனைக் கண்டோம். காரணம், புலவர்கள் எப்போதுமே அழகினைப் போற்றுபவர்கள். அந்த அழகு இயற்கையாக இருக்கலாம்; பெண்கள் கூட்டும் செயற்கை அழகாகவும் இருக்கலாம். ஆனால், அழகுணர்ச்சி கண்டிப்பாக இருக்கவேண்டும். அப்போதுதான் அதைப் பாடுவார்கள். இதில் மிகவும் அருமையாக சில விதிவிலக்குகள் இருக்கக்கூடும்.

இறுதியாக ஒரு வேண்டுகோள் !. இலக்கியங்களில் பயிலும் சொற்களின் பொருளைப் புரிந்துகொள்வதற்கு அவசரப்படுவது கூடாது. அவசரப்பட்டுப் புரிந்துகொள்ள முயன்றால் பொருள் தவறாகிப்போவது மட்டுமின்றி, புலவர்கள் பாடலை இயற்றிய உன்னத நோக்கத்தினை அறிந்துகொள்ள முடியாமலும் போய்விடக்கூடும். உயர்ந்ததோர் பண்பாட்டினை உலகுக்கேக் கற்றுக்கொடுத்தவன் சங்கத் தமிழன். அத்தகைய உயர்ந்த பண்பாட்டில் வந்தவனைப் பிறமொழியினர் தவறாகப் புரிந்துகொள்ளும் வகையில் தவறான உரைகளை இனியேனும் எழுதாமல் பரப்பாமல் இருப்பது நலம்.

வியாழன், 1 டிசம்பர், 2016

இமயமலையும் தமிழர்களும் - பகுதி 4

முன்னுரை:

இமயமலையில் தமிழர்கள் வாழ்ந்தனர் என்பதற்கு ஆதாரங்களாக மேலும் சில சான்றுகளை இங்கே விரிவாகக் காணலாம்.



சங்க இலக்கியமும் இமயமலையும்: சான்று: 6

வரை மருள் புணரி வான் பிசிர் உடைய
வளி பாய்ந்து அட்ட துளங்கு இரும் கமம் சூல்
நளி இரும் பரப்பின் மா கடல் முன்னி
அணங்கு உடை அவுணர் ஏமம் புணர்க்கும்
சூர் உடை முழுமுதல் தடிந்த பேர் இசை               
கடும் சின விறல் வேள் களிறு ஊர்ந்து ஆங்கு
செம் வாய் எஃகம் விலங்குநர் அறுப்ப
அரு நிறம் திறந்த புண் உமிழ் குருதியின்
மணி நிற இரும் கழி நீர் நிறம் பெயர்ந்து
மனால கலவை போல அரண் கொன்று               
முரண் மிகு சிறப்பின் உயர்ந்த ஊக்கலை
பலர் மொசிந்து ஓம்பிய திரள் பூ கடம்பின்
கடி உடை முழுமுதல் துமிய ஏஎய்
வென்று எறி முழங்கு பணை செய்த வெல் போர்
நார் அரி நறவின் ஆர மார்பின்                   
போர் அடு தானை சேரலாத
மார்பு மலி பைம் தார் ஓடையொடு விளங்கும்
வலன் உயர் மருப்பின் பழி தீர் யானை
பொலன் அணி எருத்தம் மேல்கொண்டு பொலிந்த நின்
பலர் புகழ் செல்வம் இனிது கண்டிகுமே               
கவிர் ததை சிலம்பில் துஞ்சும் கவரி
பரந்து இலங்கு அருவியொடு நரந்தம் கனவும்
ஆரியர் துவன்றிய பேர் இசை இமயம்
தென்னம் குமரியொடு ஆயிடை
மன் மீக்கூறுநர் மறம் தப கடந்தே    - பதிற். 11

வரி விளக்கம்:

வரை மருள் புணரி = மலைபோல எழுகின்ற உயரமான அலைகளையும்
வான் பிசிர் உடைய = தூறல் மழையினையும் உடையதாய்
வளி பாய்ந்து அட்ட = சூறைக்காற்றும் உடன்வீசி வருத்த
துளங்கு இரும் கமம் சூல் = இடியுடன் கூடிய கருமேகங்கள் சூழ்ந்திருந்த
நளி இரும் பரப்பின் மா கடல் முன்னி = குளிர்ச்சிமிக்க அந்த பெரிய கடலிலே பயணித்து
அணங்கு உடை அவுணர் ஏமம் புணர்க்கும் = பேய்போல் தோற்றமுடைய அவுணர்கள் காவல்காக்கின்ற
சூர் உடை முழுமுதல் தடிந்த பேர் இசை    = கொடிய தெய்வமேறிய மரத்தினைப் பிளந்து பெரும்புகழ்பெற்ற       
கடும் சின விறல் வேள் களிறு ஊர்ந்து ஆங்கு = கடுஞ்சினமும் வெற்றியுமுடைய முருகன் யானையின் மேலமர்ந்து வருவதைப் போல
செம் வாய் எஃகம் விலங்குநர் அறுப்ப = குருதி தோய்ந்த வாளினால் எதிர்ப்படுவோரை வெட்டவும்
அரு நிறம் திறந்த புண் உமிழ் குருதியின் = உடலில் உண்டான புண்ணில் இருந்து வழியும் குருதியால்
மணி நிற இரும் கழி நீர் நிறம் பெயர்ந்து = நீலமணி போன்ற கழிமுக நீரின் நிறம் மாறி
மனால கலவை போல அரண் கொன்று = குங்குமக் கலவை போல ஆகுமாறு காவலை அழித்த       
முரண் மிகு சிறப்பின் உயர்ந்த ஊக்கலை = சிறந்த வலிமைகொண்ட உயர்ந்த தலைவனே !
பலர் மொசிந்து ஓம்பிய திரள் பூ கடம்பின் = பலரும் மொய்த்துப் பாதுகாத்த திரண்ட பூக்களுடைய கடம்பமரத்தின்
கடி உடை முழுமுதல் துமிய ஏஎய் வென்று  = பூசைசெய்த அடிப்பகுதி வெட்டுறுமாறு தாக்கி வென்று
எறி முழங்கு பணை செய்த வெல் போர் = போரில் வெற்றிமுரசு கொட்டியவனும்
நார் அரி நறவின் = நாரினால் கட்டிய மாலையைப் போன்றதும் நறுமணம் மிக்கதுமான                
ஆர மார்பின்    = செங்கடம்ப மாலையை அணிந்தவனும்
போர் அடு தானை சேரலாத = போரில் வெல்கின்ற பெரும்படையினை உடையவனுமாகிய சேரலாதனே !
மார்பு மலி பைம் தார் = மார்பினை நிறைக்கும் அழகிய மாலையுடன்
ஓடையொடு விளங்கும் = ஓடை எனும் அணியினை அணிந்த
வலன் உயர் மருப்பின் பழி தீர் யானை = மேல்நோக்கிய தந்தங்களுடன் கூடிய குறையில்லாத யானையினது
பொலன் அணி எருத்தம் மேல்கொண்டு பொலிந்த = பொன் அணிந்த பிடரியின்மேல் அமர்ந்தவாறு விளங்கும்
நின் பலர் புகழ் செல்வம் = உன்னுடைய புகழ்மிக்க செல்வத்தால்            
கவிர் ததை சிலம்பில் துஞ்சும் கவரி = கவரிமானானது முருக்கமரங்கள் நிறைந்த சாரலில் தூங்கும்போதுகூட
பரந்து இலங்கு அருவியொடு நரந்தம் கனவும் = அருவிநீரையும் நரந்தப் புல்லையும் உண்பதாகக் கனவுகாண்கின்ற
ஆரியர் துவன்றிய பேர் இசை இமயம் = ஆரியர்கள் கூட்டமாக வாழ்கின்ற புகழ்பெற்ற இமயமலை முதலாக
தென்னம் குமரியொடு ஆயிடை = தெற்கிலே குமரியினை ஈறாகக் கொண்ட இடைநிலத்தில் உனது
மன் மீக்கூறுநர் மறம் தப = பெருமையினைப் புகழ்ந்தோரின் வறுமை ஒழிவதை
இனிது கண்டிகுமே கடந்தே = இனிதே கண்டவாறு கடந்துவந்தேன்.

பொருள் விளக்கம்:

மலைபோல எழுகின்ற உயரமான அலைகளையும் தூறல் மழையினையும் உடையதாய் சூறைக்காற்றும் உடன்வீசி வருத்த இடியுடன் கூடிய கருமேகங்கள் சூழ்ந்திருந்த குளிர்ச்சிமிக்க அந்த பெரிய கடலிலே பயணித்து குருதி தோய்ந்த வாளினால் எதிர்ப்படுவோரை வெட்டவும் உடலில் உண்டான புண்ணில் இருந்து வழியும் குருதியால் நீலமணி போன்ற கழிமுக நீரின் நிறம் மாறி குங்குமக் கலவை போல ஆகுமாறு காவலை அழித்த சிறந்த வலிமைகொண்ட உயர்ந்த தலைவனே! பலரும் மொய்த்துப் பாதுகாத்த திரண்ட பூக்களுடைய கடம்பமரத்தின் பூசைசெய்த அடிப்பகுதி வெட்டுறுமாறு தாக்கி வென்று போரில் வெற்றிமுரசு கொட்டியவனும் நாரினால் கட்டிய மாலையைப் போன்றதும் நறுமணம் மிக்கதுமான செங்கடம்ப மாலையை அணிந்தவனும் போரில் வெல்வதான பெரும்படையினை உடையவனுமாகிய சேரலாதனே ! பேய்போல் தோற்றமுடைய அவுணர்கள் காவல்காக்கின்ற கொடிய தெய்வமேறிய மரத்தினைப் பிளந்து பெரும்புகழ்பெற்ற கடுஞ்சினமும் வெற்றியுமுடைய முருகன் யானையின் மேலமர்ந்து வருவதைப் போல மார்பினை நிறைக்கும் அழகிய மாலையுடன் ஓடை எனும் அணியினை அணிந்த மேல்நோக்கிய தந்தங்களுடன் கூடிய குறையில்லாத யானையினது பொன் அணிந்த பிடரியின் மேலமர்ந்து விளங்கும் உன்னுடைய புகழ்மிக்க செல்வத்தால் கவரிமானானது முருக்கமரங்கள் நிறைந்த சாரலில் தூங்கும்போதுகூட அருவிநீரையும் நரந்தப் புல்லையும் உண்பதாகக் கனவுகாண்கின்ற ஆரியர்கள் கூட்டமாக வாழ்கின்ற புகழ்பெற்ற இமயமலை முதலாக தெற்கிலே குமரியினை ஈறாகக் கொண்ட இடைநிலத்தில் உனது பெருமையினைப் புகழ்ந்த புலவர்களின் வறுமை ஒழிவதை இனிதே கண்டவாறு கடந்துவந்தேன்.

மேல் விளக்கம்:

சேரலாதனின் வீரத்தினை விரிவாகக் கூறும் பாடல்களில் இதுவும் ஒன்றாகும். சேரலாதனின் படைகள் போர்புரிவதற்காகக் கப்பல்களில் பயணிக்கும்போது கடலின் நிலை எவ்வாறு இருந்தது என்பதனை நமது கண்முன்னே கொண்டுவந்து நிறுத்துகிறார் புலவர். கடல் கொந்தளித்ததோ என்று எண்ணும் அளவுக்கு மலை உயரத்திற்கு அலைகள் எழுகின்றனவாம்; புயல் காற்று வேறு வீசி கப்பல்களை அலைக்கழிக்கிறதாம்; பலத்த இடியுடன் மழையும் சேர்ந்துகொள்ள, கார்மேகங்கள் கூட்டம் கூட்டமாய் வானில் இருந்தவாறு கப்பல்களின் தள்ளாட்டத்தினை வேடிக்கை பார்க்கிறதாம். இப்படியொரு பயங்கரமான இயற்கை சீற்றத்திற்கு இடையில் உயிரைப் பணயம் வைத்து வங்கக் கடலில் பயணிப்பதற்கு ஒரு அசாத்திய துணிச்சல் வேண்டும் இல்லையா?. அது சேரலாதனிடம் நிறையவே இருக்கிறது என்று முதல் வரிகளிலேயே உணர்த்திவிடுகிறார் புலவர்.

அடுத்த வரிகளில் எதிரி நாட்டில் சேரன் நடத்திய வீர விளையாட்டினை விவரிக்கிறார். வங்கக் கடலில் பயணித்து எதிரி நாட்டு கடல் எல்லையைக் கடக்கும்போதே எதிரி வீரர்கள் தாக்குவதற்காக திரண்டு ஓடி வருகின்றனர். அப்படி எதிரில் வருவோர் அனைவரையும் தனது வாளினால் வெட்டிக்கொல்கிறான். வெட்டுண்டு இறந்து வீழ்வோரின் உடலில் இருந்து பெருகி வழியும் குருதியானது அருகில் இருந்த கடற்கழியின் நீரில் கலக்க, அது குங்குமக் கலவை போல செந்நிறமாய் மாறுகிறது. அடுத்து, சேரலாதனின் பார்வை எதிரிகள் தமது தெய்வம் போல பூசித்துவருகின்ற காவல் மரமான கடம்ப மரத்தினை நோக்கித் திரும்புகிறது. அம் மரத்தினை நெருங்க விடாமல் சுற்றிலும் காவல் காத்தவாறு ஏராளமான எதிரி வீரர்கள் இருக்கிறார்கள். அவர்கள் அனைவரையும் அழித்துவிட்டு, அந்தக் காவல் மரத்தினை அடியோடு வெட்டி வீசுகிறான். எதிர்த்தோர் அனைவரும் உயிரற்று மண்ணில் வீழ்ந்துகிடக்க, வெற்றி முரசு அடிக்கப்பட, தனக்குரிய யானையின் மேல் அமர்ந்தவாறு நாட்டுக்குள் செல்கிறான் சேரலாதன்.

போரில் ஈடுபடும்போது ஏற்படுகின்ற பழிகள் / குறைகள் அதாவது காயங்கள், வெட்டுக்கள் போன்ற எதுவும் இல்லாமல் பொன்னால் செய்த ஓடை என்னும் அணியினை அணிந்தவாறு மேல்நோக்கிய தந்தங்களுடன் கம்பீரமாக நடந்துசெல்லும் அந்த யானையின்மேல் மார்பில் மாலை அணிந்தவாறு வீற்றிருக்கும் சேரலாதனைக் கண்டதும் புலவருக்கு ஏனோ முருகனின் நினைப்பு வருகிறது. பதுமாசுரன் என்ற அரக்கர் தலைவனை முருகன் கொன்ற நிகழ்ச்சியினை நினைவுகூர்கிறார். பேய்போன்ற உருவமுடைய அரக்கர்களின் காவல் தெய்வமான பதுமாசுரன் முருகனுக்குப் பயந்து மாமரத்தில் சென்று ஒளிந்துவிடுகிறான். அம் மரத்தைச் சுற்றிலும் பல அரக்கர்கள் காவலாக இருக்க, அவர்கள் அனைவரையும் அழித்துவிட்டு, அம் மரத்தினையும் அடியோடு வெட்டிவீழ்த்தியபின், தனக்குரிய யானையின்மேல் அமர்ந்தவாறு பெரும்புகழுடன் முருகன் சென்றதனை இங்கு கூறியதன் மூலம், மலைநாட்டு மன்னனாம் சேரலாதனைக் குறிஞ்சிக் கிழவனாம் முருகனுடன் மறைமுகமாக உவமைப்படுத்துகிறார் புலவர்.

பொதுவாக தமிழ்ப் புலவர்கள், தமிழ் மன்னர்களின் வீரத்தை மட்டுமின்றி அவர்களின் ஈரத்தையும் அதாவது உதவிசெய்யும் பண்பினையும் மறக்காமல் போற்றுவார்கள். அவ்வகையில், இப் பாடலிலும் சேரலாதனின் கருணையினைப் போற்ற புலவர் மறக்கவில்லை. வடக்கில் இமயமலை முதலாக தெற்கில் குமரி வரையிலான இடைப்பட்ட பகுதி முழுவதும் சேரலாதனின் ஆட்சிக்குக் கீழ் இருந்ததாகவும், அப் பகுதியில் வாழ்ந்த புலவர்கள் சேரலாதனின் பெருமைகளைப் புகழ்ந்துகூறி வறுமைத் துன்பமே அறியாத வண்ணம் வாழ்ந்து வந்ததாகவும் கூறுகிறார். இப்படி பல்லோரும் புகழ்ந்து ஏத்துகின்ற சேரலாதனின் பெருஞ்செல்வம் தனது வறுமையினையும் போக்காதா என்ற புலவரின் ஏக்கம் இப்பாடலில் தொக்கிநிற்கிறது.

இப்பாடலில் வரும் ஆரம் என்பது செங்கடம்பு மரத்தினைக் குறிக்கும். கடம்ப மரத்தில் பலவகைகள் உண்டு. அவற்றுள் ஒன்று தான் ஆரம் என்றும் செங்கடம்பு என்றும் அழைக்கப்படும் சமுத்திரப்பழ மரமாகும். ஆங்கிலத்தில் இது barringtonia acutangula என்று அழைக்கப்படும். பேருக்கேற்றாற்போல இம் மரங்கள் கடற்கரையினை ஒட்டிய பகுதிகளில் தான் அதிகம் காணப்படுகின்றன. இம் மரத்தின் பூக்கள் மிக்க நறுமணம் கொண்டவை. அதுமட்டுமின்றி, நார்கொண்டு கட்டிய பூமாலையினைப் போல இம் மரத்தின் பூக்கள் இயற்கையாகவே ஒரு மலர்மாலையினைப் போல மரத்தில் இருந்து தொங்கிக் கொண்டிருக்கும் அழகே தனிதான். அருகில் இதன் படம் இணைக்கப்பட்டுள்ளது. முருகனுக்கு எப்படி இந்த செங்கடம்பு மலர்மாலையினைப் பிடிக்குமோ அதைப்போல சேரலாதனுக்கும் இந்த மாலையினைப் பிடித்திருப்பதில் வியப்பொன்றுமில்லை. காரணம், இம் மலரை அணிய நார்கொண்டு கட்டத்தேவையில்லை. மரத்தில் இருந்து அப்படியே இரண்டு மலர்ச்சரங்களைப் பறித்தெடுத்து முனைகளில் முடிச்சுபோட்டு கழுத்தில் மாலையாக அணிந்துகொள்ளலாம்.

இமயமலையினைப் பற்றிக் கூறுமிடத்து, ஆரியர்களைப் பற்றியும் கவரிமான்களைப் பற்றியும் கூறுகிறார். ஆரியர்கள் கூட்டம் கூட்டமாக இமயமலையின் வடக்குப் பகுதியில் வாழ்வதாகவும், மலைச்சாரலில் வாழும் கவரிமான்கள் முருக்கமரங்களின் நிழலில் தூங்கும்போதுகூட நரந்தம் எனப்படும் எலுமிச்சைப் புற்களை உண்டு அருவி நீரைப் பருகுவதாகக் கனவுகாண்பதாகவும் கூறுகிறார். உண்பதற்கு நறுமணம் மிக்க எலுமிச்சைப்புல், பருகுவதற்குச் சுவையான அருவிநீர், படுத்து உறங்குவதற்கு செம்பட்டுப் போன்ற முருக்கமலர்கள் தூவிய மெத்தை.. ஆகா, இந்தக் கவரி மான்களுக்குத்தான் என்ன ஒரு இனிமையான வாழ்க்கை இல்லையா?. கவரி மான்களுக்கு அமைந்த இதுபோன்றதோர் இனிய வாழ்க்கை சேரலாதனின் செல்வத்தால் தனக்கும் அமையவேண்டும் என்பதே புலவரின் ஆசை.  இமயமலையினைப் பற்றி விளக்கமான செய்திகளைக் கூறுவதால் இமயமலையில் தமிழர்கள் வாழ்ந்தனர் என்னும் கூற்றுக்கு அரணாக இந்தப் பாடலையும் ஒரு சான்றாகக் கொள்ளலாம் என்பது துணிபாகும்.

சங்க இலக்கியமும் இமயமலையும்: சான்று: 7
செய்குவம் கொல்லோ நல்வினை எனவே
ஐயம் அறாஅர் கசடு ஈண்டு காட்சி
நீங்கா நெஞ்சத்து துணிவு இல்லோரே
யானை வேட்டுவன் யானையும் பெறுமே
குறும்பூழ் வேட்டுவன் வறும் கையும் வருமே
அதனால் உயர்ந்த வேட்டத்து உயர்ந்திசினோர்க்கு
செய்வினை மருங்கின் எய்தல் உண்டு எனின்
தொய்யா உலகத்து நுகர்ச்சியும் கூடும்
தொய்யா உலகத்து நுகர்ச்சி இல் எனின்
மாறி பிறப்பின் இன்மையும் கூடும்
மாறி பிறவார் ஆயினும் இமயத்து
கோடு உயர்ந்து அன்ன தம் இசை நட்டு
தீது இல் யாக்கையொடு மாய்தல் தவ தலையே - புறம். 214

வரி விளக்கம்:
செய்குவம் கொல்லோ நல்வினை எனவே = ஆதலால் நல்ல செயல்களையே செய்வோமாக
ஐயம் அறாஅர் கசடு ஈண்டு காட்சி = நீங்காத ஐயங்களும் குற்றமுள்ள அறிவும்
நீங்கா நெஞ்சத்து துணிவு இல்லோரே = பொருந்திய உள்ளத்தில் உறுதியும் இல்லாதவர்களே
யானை வேட்டுவன் யானையும் பெறுமே = யானையை வேட்டையாடியவன் யானையுடன் வருவதும்
குறும்பூழ் வேட்டுவன் வறும் கையும் வருமே = காடையை வேட்டையாடியவன் வெறுங்கையுடன் வருவதும் உண்டு
அதனால் உயர்ந்த வேட்டத்து உயர்ந்திசினோர்க்கு = அதனால் உயர்ந்த நோக்கத்தினை உடைய பெரியோருக்கு
செய்வினை மருங்கின் எய்தல் உண்டு எனின் = செய்யும் வினைப்பயன் வழியாக அடையமுடிவதாக
தொய்யா உலகத்து நுகர்ச்சியும் கூடும் = குறையேதுமில்லா சொர்க்கவாழ்வும் கைகூடும்
தொய்யா உலகத்து நுகர்ச்சி இல் எனின் = குறையேதுமில்லா சொர்க்கவாழ்வு கைகூடாவிட்டாலும்
மாறி பிறப்பின் இன்மையும் கூடும் = மாறிமாறித் தோன்றுவதாகிய பிறப்பிலிருந்து விடுதலையும் கைகூடும்
மாறி பிறவார் ஆயினும் = மாறிப்பிறவாமல் மனிதராகவே பிறந்தார் என்றால்
இமயத்து கோடு உயர்ந்து அன்ன = இமயமலையின் உயரமான உச்சியைப் போல
தம் இசை நட்டு = தமது உயர்ந்த புகழினை நிறுவி
தீது இல் யாக்கையொடு = தீமை செய்யாத உடலினராய்
மாய்தல் தவ தலையே = இறப்பதே மிகச் சிறப்பானது.

பொருள் விளக்கம்:

நீங்காத ஐயங்களும் குற்றமுள்ள அறிவும் பொருந்திய உள்ளத்தில் உறுதியும் இல்லாதவர்களே ! யானையை வேட்டையாடியவன் வெற்றிபெற்று யானையுடன் வருவதும் உண்டு; காடையை வேட்டையாடியவன் தோல்வியுற்று வெறுங்கையுடன் வருவதும் உண்டு. அதனால் எப்போதும் உயர்ந்த நோக்கத்தினையே உடைய பெரியோருக்குச் செய்யும் வினைப்பயன் வழியாக அடையமுடிவதாகக் குறையேதுமில்லா சொர்க்கவாழ்வும் கைகூடும். ஒருவேளை குறையேதுமில்லா சொர்க்கவாழ்வு கைகூடாவிட்டாலும் மாறிமாறித் தோன்றுவதாகிய பிறப்பிலிருந்து விடுதலையும் கைகூடும். ஒருவேளை மாறிப்பிறவாமல் மனிதராகவே பிறந்துவிட்டார் என்றால் இமயமலையின் உயரமான உச்சியைப் போல தமது உயர்ந்த புகழினை நிறுவி யாருக்கும் தீமை செய்யாத உடலினராய் இறப்பதே மிகச் சிறப்பானது. ஆதலால் இனி நாம் நல்ல செயல்களையே செய்வோமாக !.

மேல் விளக்கம்:

வாழ்வியல் குறித்த அறிவுரைகளைத் தரும் பல புறநானூற்றுப் பாடல்களில் மிகச் சிறந்த பாடல் இதுவாகும். வாழ்க்கையில் எப்போதும் நல்ல செயல்களையே செய்யவேண்டியதன் தேவையினை மிகத் தெளிவாகச் சில சான்றுகளுடன் விளக்குகிறார் புலவர். அதேசமயம், ஒருவர் கெட்ட செயல்களை ஏன் செய்கிறார் என்பதற்கான காரணங்களையும் கூறுகிறார். நீங்காத ஐயங்கள், குற்றமுள்ள அறிவு, உள்ள உறுதியின்மை ஆகியவையே குற்றங்கள் செய்வதற்கான அடிப்படை என்று விளக்குகிறார்.

நீங்காத ஐயங்கள் என்றால் என்ன என்று முதலில் பார்ப்போம். நம்மாலும் பிறருக்கு நன்மை செய்யமுடியுமா?, நன்மை செய்வதால் நாம் ஏதாவது சிக்கலில் மாட்டிக்கொள்வோமா?. எப்படி பிறருக்கு நன்மையைச் செய்வது?. பிறருக்கு நன்மை செய்வதால் நமக்கேதும் பலனுண்டா?. - இதைப்போன்ற பல ஐயப்பாடுகள் நம்மில் பலர் மனதில் அடிக்கடி எழுவதுண்டு. இவற்றைக் கேள்விக்குரியாகவே என்றும் மனதில் பொதிந்துவைத்திருக்கக் கூடாது. இவற்றுக்கான விடைகளை முயன்று கண்டறிந்து தெளிவுபெற வேண்டும். அப்போதுதான் நாம் பிறருக்கு நன்மை செய்யவேண்டியதன் தேவையினைப் புரிந்துகொள்ள முடியும்.

அடுத்துவருவது குற்றமுள்ள அறிவு. தீமையை நன்மையாக அதாவது தவறாகப் புரிந்துகொள்கின்ற அறிவே குற்றமுள்ள அறிவாகும். தெளிவாகச் சொல்வதென்றால் பிறருக்குச் செய்யும் தீமையை தனக்குச் செய்யும் நன்மையாகப் புரிந்துகொள்வது. திருட்டு, கொலை, வழிப்பறி, மோசடி போன்றவை யாவும் பிறருக்குச் செய்யப்படும் தீமைகள். இவற்றைத் தனக்கு நன்மை தருபவையாக எண்ணச்செய்வது குற்றமுள்ள அறிவு. குற்றமுள்ள அறிவுடையவன் ஒருபோதும் பிறருக்கு நன்மை செய்யமாட்டான். இத்தகைய அறிவு ஒருவருக்குத் தோன்றக் காரணம் மேலே நாம் கண்ட நீங்காத ஐயங்களே. ஐயங்களைத் தீர்த்துக்கொள்ள முயலாமல் அப்படியே விட்டுவிடும்போது நன்மை செய்யவேண்டும் என்ற எண்ணமே தகர்ந்து தீமையினையே நன்மையாகக் கருதுகின்ற குற்றமுள்ள அறிவு தலையெடுக்கிறது.

அடுத்து வருவது உள்ளத்தில் உறுதியின்மை. நீங்காத ஐயங்களைத் தீர்த்துக்கொண்டு தெளிவாக உணர்ந்தாலும் தீமையினை விடுத்து நன்மையினைச் செய்ய உள்ளத்தில் உறுதி வேண்டும். உள்ள உறுதி இல்லாதவர்களால் தொடர்ந்து நன்மை செய்ய இயலாது. இப்படிப் பட்டவர்கள் ஒரு உந்துதலில் அல்லது ஒரு சூழ்நிலையில் நன்மை செய்வர். உந்துதல் விலகியதும் அல்லது சூழல் மாறியதும் மறுபடியும் தீமை செய்யத் தொடங்கிவிடுவர். எந்தச் சூழ்நிலையிலும் பிற உயிர்களுக்குத் தீமை செய்யாமல் இருப்பதற்கு நெஞ்சுரம் வேண்டும். நெஞ்சுரம் மிக்கவர்கள் தம் இன்னுயிர் போவதாயினும் பிறருக்குத் தீமை செய்யமாட்டார்கள். இதைப்பற்றி வள்ளுவரும் பல குறள்களில் விளக்கமாகக் கூறியிருக்கிறார்.

பிறருக்குத் தீமை செய்வது மிக எளிதானது; ஆனால் நன்மை செய்வது மிகக் கடினமானது என்னும் கருத்தினை விளக்குவதற்கு இரண்டு எடுத்துக்காட்டுக்களைக் கூறுகிறார் புலவர். செய்வதற்கு மிக எளிதானது என்று எண்ணி காடையினை வேட்டையாடச் சென்றவன் தோல்வியுற்று வெறுங்கையுடன் வருவதுண்டு. அதேசமயம், செய்வதற்குக் கடினமான வேலையாக இருந்தாலும் யானையை வேட்டையாடச் சென்றவன் வெற்றிபெற்று யானையுடன் வருவதுமுண்டு. ஆக, ஒரு வினையைச் செய்ய முற்படும்போது அது எளிதானதா கடினமானதா என்ற அடிப்படையில் வினையைத் தேர்ந்தெடுக்காமல் நோக்கத்தின் அடிப்படையில் தான் தெரிவுசெய்ய வேண்டும். செய்வதற்குக் கடினமாகவே இருந்தாலும் நமது செயல்களின் நோக்கம் உயர்வாகவே இருக்கவேண்டும். எந்தச் சூழ்நிலையிலும் பிறருக்குத் தீமை தராமல் நன்மை தரும் செயல்கள் எவையோ அவையே உயர்ந்த நோக்கம் கொண்டவை.

சரி, இவ்வளவு கடினங்களைச் சந்தித்து பிறருக்கு நன்மை செய்தால் என்ன பலன் கிடைக்கும்?. இக் கேள்விக்கும் விடை சொல்கிறார் புலவர். உயர்ந்த நோக்கமுடைய பெரியோரால் தொடர்ந்து செய்யப்படும் நற்செயல்களின் பயனாக அவர்களுக்குத் தொய்யா உலகமாகிய சொர்க்கத்தில் வாழ்வு கிடைக்கும் என்கிறார். ஒருவேளை சொர்க்கவாழ்வு கிட்டாமல் போனாலும் மாறிமாறிப் பிறப்பதாகிய இந்தப் பிறவித்தளையில் இருந்தேனும் விடுதலை கிடைக்கும் என்கிறார். ஒருவேளை பிறவித்தளையில் இருந்து விடுதலை கிட்டாமல் மறுபடியும் பிறக்க நேரிட்டால் அவர்கள் மனிதராகவே பிறப்பர் என்றும் அப்படிப் பிறந்தபோதும் அவர் தமது மன உறுதியினைக் கைவிடாமல் பிறருக்குத் தீமை செய்யாமல் தொடர்ந்து நன்மையே செய்யவேண்டும் என்கிறார். அப்படிச் செய்வதால் அவரது புகழானது உயரமான உச்சியினை உடைய இமயமலையைப் போல உயர்ந்து விளங்குவதுடன் இமயமலையானது உயரம் குன்றாமல் என்றும் வாழ்வதைப் போல அவர் தமது பூதவுடல் மறைந்தாலும் புகழுடலால் மண்ணில் என்றும் வாழலாம் என்கிறார்.

" பிறருக்கு எப்போதும் நன்மை செய்வதால் சொர்க்கவாழ்வு கிடைக்காமல் போகலாம்; பிறவித்தளையிலிருந்து விடுதலை கிட்டாமல் போகலாம்; ஆனால் இமயமலை போல என்றும் குன்றாத உயர்ந்த புகழுடன் மண்ணிலேயே வாழ்வது மட்டும் உறுதியாகும். எனவே இனி நாம் பிறருக்கு நன்மையே செய்வோமாக " என்று கூறித் தெளிவையும் உறுதியையும் ஏற்படுத்துகிற இப் புலவரின் நுண்மாண் நுழைபுலம் என்னே என்னே !!. இமயமலையில் தமிழர்கள் வாழ்ந்தனர் என்பதற்கு இப்பாடலையும் ஒரு சான்றாகக் கொள்வதில் தவறில்லை. 

........... தொடரும்............