ஞாயிறு, 30 ஏப்ரல், 2017

கண்ணும் கண்சார்ந்த இடமும் - பகுதி 3 ( எயிறு - ஓதி - கதுப்பு - குறங்கு )

முன்னுரை:

கண்ணும் கண்சார்ந்த இடமும் என்ற கட்டுரையின் மூன்றாம் பகுதியான இதில் எயிறு, ஓதி, கதுப்பு, குறங்கு ஆகிய சொற்களைப் பற்றிக் காணலாம்.
 
எயிறு:

எயிறு என்ற சொல்லானது பெண்களைப் பொருத்தமட்டில் அவர்களது கண்ணையும் கடைக்கண் ஈற்றினையும் குறிக்கவே பெரிதும் பயன்படுத்தப் பட்டுள்ளது. பெண்களின் கண்கள் உருண்டு திரண்டு வெண்ணிற ஒளி வீசுவதால் அவற்றை முத்துடன் ஒப்பிட்டுக் கூறுவது புலவர்களின் வழக்கமே.

இலங்கு முத்து உறைக்கும் எயிறு - ஐங்கு.-185

பெண்கள் தமது கண்களுக்கு அழகுசெய்யும்போது கடைக்கண் ஈற்றினையும் கூரிதாக நீட்டி வரைவது வழக்கம். வெண்மை நிறத்தில் வரையப்பட்ட கூரிய கடைக்கண் ஈற்றினை முல்லை மலர்களின் கூரிய மொக்குகளுடன் ஒப்பிட்டுக் கூறும் பாடல்வரிகள் கீழே:

முல்லைத் தொகு முகை இலங்கு எயிறாக - குறு.-126
எயிறு ஏய்க்கும் தண் அருவி நறு முல்லை - கலி.-31

கடைக்கண் ஈற்றில் கூரிதாக வரையும்போது வெண்மை நிறம் மட்டுமின்றி செம்மை நிறத்திலும் பூசுவது வழக்கம். இதனை முருக்க மலரின் சிவந்த கூரிய மொக்குகளுடன் ஒப்பிடும் பாடல் கீழே:

குவி முகை முருக்கின் கூர்நுனை வை எயிற்று - அக.-317

கடைக்கண்ணில் கூரிய வரியினை வரைவதுடன் மைகொண்டு பூசுவதும் பெண்களின் வழக்கமே. இப்படிப் பூசப்பட்ட இடத்தினைத் துவர்வாய் என்று குறிப்பிடுகிறது இலக்கியம்.

எயிறு கெழு துவர் வாய் - ஐங்கு.-185, அகம் - 27,29,62
முள் எயிற்றுத் துவர் வாய் - அக.-39,179,385, குறு- 26

பொருளீட்ட வேண்டி தன்னைப் பிரிந்துசென்ற காதலனை மறுபடியும் காணும்போது காதலியின் கடைக்கண்களில் மகிழ்ச்சி மிகுதியினால் ஆனந்தக் கண்ணீர் துளிர்க்கும். மகிழ்ச்சியினால் தோன்றும் இக் கண்ணீர் உப்புக் கரிக்காமல் இன்சுவையாக இருக்கும். இக்கண்ணீரின் சுவையினை அமிழ்தம், நெல்லிக்காய், நுங்கு போன்றவற்றின் சுவையுடன் ஒப்பிட்டுப் பல பாடல்களில் புலவர்கள் பாடியுள்ளனர்.

ஊறுநீர் அமிழ்து ஏய்க்கும் எயிற்றாய் ..... - கலி.-20
மூவாப் பசுங்காய் நீரினும் இனிய ஆகிக் கூர் எயிற்று அமிழ்தம் ஊறும் - அக. - 335
நுங்கின் இன்சேறு இகுதரும் எயிற்றின் - சிறுபாண்.-28

மகிழ்ச்சியினால் அரும்பிய கண்ணீரைத் துடைக்கும்போது கடைக்கண்ணில் வரையப்பட்டிருக்கும் கூரிய வரியானது கசங்கி அழிந்துவிடும். அதைக் காணுகின்ற காதலன் அவ்வரியினைத் தானே திருத்தி வரைய ஆசைப்படுவதாகக் காதலியிடம் கூறும் பாடல்கள் பல. இதனை எயிறு உண்ணல் என்று குறிப்பிடுகிறது இலக்கியம்.

மழைக்கண் கலுழ்தலின் .... இலங்கு எயிறு உண்கு என - நற். - 17
நின் கூர் எயிறு உண்கு என - நற். - 204

சிவந்த விரல்களால் கண்களைக் கசக்கி அழுததினால் கடைக்கண்ணில் வரைந்திருந்த வண்ண வரியின் கூர்நுனை மழுங்கியதாகக் கீழ்வரும் பாடல் கூறுகிறது.

சிவந்த மெல்விரல் திருகுபு கூர் நுனை மழுகிய எயிற்றள் - அக.-176

பெண்கள் தொடர்ந்து தமது கண்களைக் கசக்கி அழும்போது வெப்பத்தினால் கடைக்கண்கள் தீப்போல சிவந்து தோன்றும். இதைப் படம்பிடித்துக் காட்டும் இலக்கிய வரிகள் கீழே:

....எயிறு தீ பிறப்பத் திருகி நடுங்குதும்
பிரியின் யாம் கடும் பனி உழந்தே - அகம். 217

எயிறு என்னும் சொல்லின் வேர் எய் என்பதாகும். இது நீண்ட கூரிய முனையினை உடைய முள், அம்பு போன்றவற்றைக் குறிக்கும். அவ்வகையில் எயிறு என்பது முதல்நிலையில் யானைகளின் கூரிய தந்தம், காட்டுப்பன்றிகளின் கொம்பு போன்றவற்றைக் குறித்து வந்தது. இரண்டாம் நிலையில் பெண்கள் தமது கடைக்கண் ஈற்றில் வரைகின்ற கூரிய வரியினைக் குறிக்கவும் மூன்றாம் நிலையில் நாய், பூனை, பாம்பு போன்றவற்றின் கூர்மையான உட்புறக் கோரைப்பற்களைக் குறிக்கவும் பயன்படலாயிற்று. எயிறு பற்றி மேலதிக தகவல்களை அறிந்துகொள்ள எயிறு என்றால் என்ன? என்ற ஆய்வுக் கட்டுரையினைப் படிக்கலாம்.

ஓதி:

ஓதி என்னும் சொல்லானது பெண்களின் கண்ணிமையினைக் குறிக்கப் பயன்பட்ட சொல்லாகும். மெல்லிய வரிகளையுடைய தமது கண்ணிமைகளுக்குப் பெண்கள் இளஞ்சிவப்பு நிறத்தில் மைபூசியிருக்கும்போது பார்ப்பதற்கு அது வாழைப்பூவின் இதழ் போலவே தோன்றும். இதைப் பற்றிக் கூறும் பாடல்வரிகள் கீழே:

வாழைப்பூ என பொலிந்த ஓதி - சிறுபாண்: 22
வாழை ஈன்ற வை ஏந்து கொழு முகை மெல் இயல் மகளிர் ஓதி அன்ன
பூவொடு துயல் வரும் - நற் - 225

பெண்கள் தமது கண்ணிமைகளில் சுணங்கு எனப்படுகின்ற பூந்தாதுக்களை அப்பியும் அழகுசெய்வர் என்று கண்டோம். இதைப்பற்றிக் கூறும் பாடல் வரி கீழே:

பொன் பொதிந்தன்ன சுணங்கின் இருஞ்சூழ் ஓதி - நற் - 275

பெண்கள் தமது கண்ணிமைகளின் மேல் மைபூசி அழகுசெய்யும்போது காக்காய்ப்பொன் (மைக்கா) போன்ற ஒளிரும் பொருட்களைக் கலந்தும் பூசுவர். அப்படிப் பூசப்பட்ட பின்னர், அந்த இமைகளை மூடித் திறக்கும்போது மின்னல் ஒன்று வெட்டுவதைப் போலத் தோன்றும். இதைப் பற்றிக் கூறும் பாடல் வரிகள் கீழே:

மின் நேர் ஓதிப் பின்னுப்பிணி விடவே. அகம் - 236
மின் நேர் ஓதி இவளொடு நாளை - நற் - 340

பெண்கள் தமது கண்ணிமையின்மேல் சிறுகோல் அதாவது ஈர்க்குச்சியின் உதவியால் மையினை ஈர்த்துப் பூசி அலங்கரிப்பது வழக்கம். இதனைக் குறிப்பிடுகின்ற பல பாடல்களில் சில மட்டும் கீழே தரப்பட்டுள்ளன.

மை ஈர் ஓதி மடவீர்! நும் வாய் - அகம் - 49
மை ஈர் ஓதி மடவோய்! யானும்நின் அகம் - 389
மை ஈர் ஓதி பெரு மடத்தகையே - நற் -29
மை ஈர் ஓதி மாண் நலம் தொலைவே - நற் -57

இப் பாடல்களில் வரும் ஓதி என்பதற்குக் கண்ணிமை என்ற பொருள் தவிர வேறெதுவும் பொருந்தாது. காரணம், பழந்தமிப் பெண்கள் தமது கண்ணிமையில் மட்டுமே மை கொண்டு பூசுவர். ஓதி பற்றி மேலதிக தகவல் அறிய கதுப்பு - ஓதி - நுசுப்பு என்ற ஆய்வுக் கட்டுரையினைப் படிக்கலாம்.

கதுப்பு:

கதுப்பு என்னும் சொல்லானது பெண்களின் கண்ணிமையினைக் குறித்துப் பல இடங்களில் பயின்று வந்துள்ளது. பெண்களின் மையுண்ட கண்ணிமைகள் வேல் போலும் அகற்சியுடனும் கூர்மையுடனும் இருப்பதைக் கூறும் பாடல்வரி:

மறவர் வேல் என விரிந்த கதுப்பின் - நற் 86/2

கண்ணிமைக்கு அழகுசெய்யும்போது மயில்தோகையில் உள்ள கண்போல பலவண்ணங்களில் மைபூசுவதும் உண்டு. இதைப்பற்றிக் கூறும் பாடல்வரி கீழே:

கணம் கொள் தோகையின் கதுப்பு இகுத்து அசைஇ - மலை 44

பெண்கள் தமது கண்ணிமைகளைப் பல வண்ணங்களால் மட்டுமின்றி கரிய நிற மையினாலும் பூசினர். இப்படிக் கருநிற மையால் பூசப்பட்ட கண்ணிமையினை கரிய மேகத்துடன் ஒப்பிட்டுக் கீழ்க்காணும் பாடல்கள் கூறுகின்றன.

புயல் புரை கதுப்பு அகம் உளரிய வளியும் - பரி 21/49
கால்வீழ்த்தன்று நின் கதுப்பு உறழ் புயலே - அகம் 323/13

பெண்களின் கருமை பூசிய கண்ணிமைகளையும் கார்மேகத்தையும் புலவர்கள் ஒப்பிட்டுப் பாடுவதற்குக் கீழ்க்காணும் காரணங்களைச் சொல்லலாம்.

கண்ணிமைகள் கார்மேகம்போல கருமை நிறத்தையும் வடிவத்தையும் கொண்டிருத்தல்
இமைகளை மூடித்திறக்கும்போது மேகத்தின் மின்னலைப் போல ஒளிவீசுதல்.
மேகத்தின் அடியிலிருந்து மழைபொழிவதைப் போலக் கண்ணிமைகளின் கீழிருந்து கண்ணீர் வடிதல்.

பெண்கள் தமது கதுப்பு ஆகிய கண்ணிமைக்கு மைபூசும்போது சந்தனம், தகரம் போன்ற நறுமணப் பொருட்களையும் கூட்டிப் பூசுவர். இப்படிப் பூசுவதால் கண்ணிமைகள் குளிர்ச்சியும் நறுமணமும் ஒளியும் கொண்டு அழகுடன் விளங்கும். இவற்றைத் தண் நறும் கதுப்பு என்று இலக்கியம் கூறுகிறது.

தண் நறும் கதுப்பில் புணர்ந்தோர் புனைந்த என் - அகம் 391/6
தகரம் நாறும் தண் நறும் கதுப்பின் புது மண மகடூஉ அயினிய கடி நகர் - அகம் 141/13,14

இப்படி நறுமணமும் குளிர்ச்சியும் ஒளியும் கொண்டுவிளங்குகின்ற மெல்லிய இதழ் போன்ற கண்ணிமைகளைக் கொன்றை, முல்லை போன்ற பூக்களின் இதழ்களுடன் ஒப்பிட்டுக் கூறுவதும் புலவர்களின் வழக்கமே. இதைப்பற்றிய சில பாடல்வரிகள்.

கதுப்பின் தோன்றும் புது பூங் கொன்றை - குறு 21/3
முகைவாய் திறந்த நகைவாய் முல்லை கடிமகள் கதுப்பின் நாறி - அகம் - 244
காண் இனி தோட்டார் கதுப்பின் என் தோழி அவரொடு - கலி 117/10
தோட்டார் கதுப்பினாள் தோள் - குறள் 1105

கதுப்பு பற்றிய மேலதிகத் தகவல்களை அறிந்துகொள்ள கதுப்பு - ஓதி - நுசுப்பு என்ற ஆய்வுக் கட்டுரையினைப் படிக்கலாம்.

குறங்கு:

குறங்கு என்ற சொல்லானது பெண்களைப் பொறுத்தமட்டில் கண்ணிமையினைக் குறிக்கவே பயன்படுத்தப் பட்டுள்ளது. பெண்களின் மெல்லிய கண்ணிமைகளில் பலருக்கு இயற்கையாகவே மெல்லிய சில வரிகள் செறிந்து காணப்படும். இக் கண்ணிமைகளைக் கருநிறத்தில் மைபூசி அழகுசெய்யும்போது அவை காண்பதற்கு யானையின் துதிக்கையில் உள்ள வரிகளைப் போலத் தோன்றும். இதைப்பற்றிக் கூறும் பாடல்வரிகள் கீழே:

இரும் பிடி தட கையின் செறிந்து திரள் குறங்கின் -  பொருந.
இரும் பிடி தட கையின் சேர்ந்து உடன் செறிந்த குறங்கின் - சிறுபாண்.
பிடி கை போலும் திரள் குறங்கின்  – சிந்தா-1/353

பெண்கள் வரிகளையுடைய தமது கண்ணிமைகளில் இளஞ்சிவப்பு நிறத்தில் மைபூசி அழகுசெய்திருக்கும்போது பார்ப்பதற்கு அவை வாழைமரத்தில் பூத்திருக்கின்ற வாழைப்பூக்களின் இதழ்களைப் போலவே தோன்றும். இதைப்பற்றி ஓதி என்ற கட்டுரையிலும் கண்டிருக்கிறோம். இங்கேயும் சில பாடல்வரிகள் சான்றாகக் கொடுக்கப்பட்டுள்ளன.

மங்கையர் குறங்கு என வகுத்த வாழைகள் – கம்பரா. அயோத். 2/37
குறங்கு என மால் வரை ஒழுகிய வாழை  - சிறுபாண்.
இரு குறங்கின் பிறங்கிய வாழையில் குருகுறங்கும் – கம்பரா. 15/41

பெண்கள் கண்ணிமைகளின்மேல் வண்ணப் புள்ளிகளை வரைந்தும் அழகுசெய்வர். இப்புள்ளிகளைத் தித்தி என்றும் திதலை என்றும் இலக்கியம் கூறுகிறது. இப்படி புள்ளிகள் வரையப்பட்ட ஒரு பெண்ணின் இமைகளின்மேல் ஆலமரத்தின் விழுது ஒன்று தவறுதலாக உரசி அதன் அழகினைக் கெடுத்துவிடுகிறது. இதைப்பற்றிக் கூறும் சங்கப் பாடல் ஒன்று கீழே தரப்பட்டுள்ளது.

கல் அறை கவாஅன் அத்த ஆலத்து அலந்தலை நெடு வீழ்
தித்தி குறங்கில் திருந்த உரிஞ வளை உடை முன்கை அளைஇ கிளைய
பயில் இரும் பிணையல் பசும் காழ் கோவை அகல் அமை அல்குல் பற்றி
கூந்தல் ஆடு மயில் பீலியின் பொங்க நன்றும் - அகம் -385

மேலே காணும் அகநானூற்றுப் பாடல் தலைவியை தலைவன் எவ்வாறெல்லாம் அழகுசெய்து மகிழ்ந்தான் என்பதை விவரிக்கிறது. தலைவியானவள் தலைவனுடன் நடந்துவரும் பொழுது, வழியில் இருந்த ஆலமரத்தில் இருந்து தொங்கிக் கொண்டிருந்த  விழுதுகளின் மேல் தெரியாமல் மோதுகிறாள். இதனால் தலைவியின் நெற்றியில் அணிந்திருந்த அணிகலன்கள் நிலைகுலைந்தன; வண்ணப் பொட்டுகளால் வரையப்பட்டு அழகாக இருந்த கண்ணிமைகள் பாழாயின. இதனால் மனமுடைந்து தலைவி வருத்தமுறுவதைக் கண்ட தலைவன், தலைவியின் கண்ணிமைகளை மயில் தோகையில் இருக்கும் கண்களைப் போலத் தோன்றுமாறு மைபூசி அழகுசெய்கிறான். அதுமட்டுமின்றி, சிறிய பூமாலையினையும் மணிக்கோவையினையும் அவளது நெற்றியில் அணிவித்து அவளை மகிழச் செய்கிறான்.

பெண்களின் கண்ணிமைக்குக் குறங்கு என்று ஏன் பெயர்வந்தது என்று காணலாம். குறுகிய அங்கம் = குறு + அங்கம் = குறங்கம் என்பதே குறங்கு எனத் திரிந்து வழங்கியிருக்கலாம். காரணம், பெண்களின் புற உடல் உறுப்புக்களில் குறுகிய உறுப்பாக அடிக்கடி புலவர்களால் பாடப்படுவது இந்த ‘ கண்ணிமை ‘ யே ஆகும். இக் கண்ணிமைக்கு நுசுப்பு, ஓதி, கூந்தல், மேனி, கதுப்பு எனப் பல பெயர்களும் உண்டு என்று முன்னர் பல கட்டுரைகளில் கண்டோம். புலவர்கள் கண்ணிமையைப் பாடும்பொழுது, அதன் நுட்பத்தன்மையை அதாவது குறுகிய தன்மையைக் குறிப்பிட்டு, நுணுகிய நுசுப்பு, ஒடுங்கு ஈர் ஓதி என்றெல்லாம் பாடுவது வழக்கம். குறங்கு பற்றிய மேலதிகத் தகவல்களை அறிந்துகொள்ள குறங்கு என்றால் என்ன என்ற ஆய்வுக்கட்டுரையினைப் படிக்கலாம்.

........... தொடரும்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்களைத் தமிழில் தட்டச்சு செய்யும் வழி:
வலப்பக்கத்தில் உள்ள பகுதியில் தமிழ் ஒலிகளை ஆங்கில எழுத்துக்களில் அசசடித்து நகல் செய்து இங்கே ஒட்டலாம்.