புதன், 31 மே, 2017

கண்ணும் கண்சார்ந்த இடமும் -பகுதி 8 ( சங்க இலக்கியத்தில் கேசாதிபாதம் உண்டா? )

முன்னுரை:
கண்ணும் கண்சார்ந்த இடமும் என்ற ஆய்வுக் கட்டுரையின் முதல் ஆறு பகுதிகளில் அல்குல் முதல் வயிறு வரையிலான பெயர்ச்சொற்கள் குறிக்கும் பெண்களின் பல்வேறு உடல் உறுப்புக்களைப் பற்றிக் கண்டோம். இவற்றுள் முலையும் கொங்கையும் பெண்களின் மார்பகத்தை மிகச்சில இடங்களில் மட்டுமே குறிக்கும் என்றும் பெரும்பாலான இடங்களில் கண்களையே குறிக்கும் என்றும் கண்டோம். இதற்கு ஆதாரமாக, சங்ககாலப் பெண்கள் மேலாடை அணிந்து தமது மார்பகங்களை மறைத்து இருந்தனர் என்று ஏழாம் பகுதியில் பல சான்றுகளுடன் விரிவாகக் கண்டோம். இந்நிலையில், பொருநராற்றுப்படையில் கேசாதிபாதமாகப் பாடப்பட்டிருக்கும் பெண் உறுப்புக்கள் தொடர்பான சில பெயர்ச்சொற்களைச் சுட்டிக்காட்டி, அவை பெண்களின் அந்தரங்க உறுப்புக்களையே சுட்டுகின்றன என்று சிலர் வாதிடுகின்றனர். இவர்களது கருத்து எவ்வளவு தவறானது என்பதை இக் கட்டுரையில் பல ஆதாரங்களுடன் விரிவாகக் காணலாம்.

உறுப்புப் பெயர்களும் உணர்த்தும் பொருட்களும்:

இன்றைய தமிழ் அகராதிகள் பெண்களின் உடல் உறுப்புக்கள் தொடர்பாகக் கூறியிருக்கும் பொருட்களையும் அவை கூறாமல் விட்ட புதிய பொருட்களையும் கீழே அட்டவணையில் காணலாம்.



வ. உறுப்புப் அகராதிகள் காட்டும் அகராதிகள் காட்டாத
எண் பெயர் பொருட்கள் புதிய பொருட்கள்
1 அல்குல் பெண்குறி, இடுப்பு நெற்றி
2 அளகம் தலைமயிர் கண்ணிமை
3 ஆகம் உடல், மார்பகம் கண், கண்ணிமை
4 இறை கை, முன்கை கண்ணிமை
5 எயிறு பல் கண், கடைக்கண் ஈறு
6 ஓதி தலைமயிர் கண்ணிமை
7 கதுப்பு கன்னம், தலைமயிர் கண்ணிமை
8 குறங்கு தொடை கண்ணிமை
9 கூந்தல் தலைமயிர் கண்ணிமை
10 கொங்கை மார்பகம் கண், கண்ணிமை
11 சிறுபுறம் முதுகு, பிடர் கண், கண்ணிமை, கன்னம்
12 தோள் கையின் மேல் பகுதி கண், கண்விளிம்பு
13 நுசுப்பு இடுப்பு கண்ணிமை
14 நுதல் நெற்றி கண், கண்ணிமை
15 மருங்குல் இடுப்பு, வயிறு, உடல் கண், கண்ணிமை
16 முகம் தலையின் முன்பகுதி கண்
17 முறுவல் பல், சிரிப்பு கண்
18 முலை மார்பகம் கண், கண்ணிமை
19 மேனி உடல் கண், கண்ணிமை
20 வயிறு தொப்புள் உள்ள பகுதி கண், கண்ணிமை
   

பெண்களின் கண்களையும் கண்சார்ந்த இடங்களையும் குறிப்பதற்கு மட்டும் எத்தனைப் பெயர்களை பழந்தமிழ்ப் புலவர்கள் பயன்படுத்தி உள்ளனர் பாருங்கள். தமிழ் இலக்கணத்தில் இதனை ' ஒருபொருட் பன்மொழி ' என்று கூறுவர். பெண்களின் கண் மற்றும் கண்சார்ந்த இடங்களைக் குறிப்பதான ஒருபொருட் பன்மொழிகளும் அவற்றின் உவமை விளக்கங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

கண்: பெண்களின் கண்களைக் குறிப்பதற்கு மட்டும் ஆகம், எயிறு, கொங்கை, சிறுபுறம், தோள், நுதல், மருங்குல், முகம், முறுவல், முலை, மேனி, வயிறு என்று 12 வகையான பெயர்ச்சொற்களைப் பயன்படுத்தியுள்ளனர் புலவர்கள். அதுமட்டுமின்றி, வெண்ணிற ஒளிவீசும் பெண்களின் கண்விழிகளை நிலவுடனும் கடல்முத்துடனும் ஒளிவீசும் மணிகளுடனும் ஒப்பிடுவர். உருண்டு திரண்ட அவரது விழிகளின் மேல் கண்ணிமையில் வண்ணங்களைத் தீட்டி அழகுசெய்திருக்கும்போது அவரது கண்களை மூங்கில்காயுடனும் பனைநுங்குடனும் தென்னையின் இளநீர்க்காயுடனும் கலசத்துடனும் குங்குமச்சிமிழுடனும் தெப்பத்துடனும் ஒப்பிடுவர்.

கண்ணிமை: பெண்களின் கண்ணிமைகளைக் குறிப்பதற்கு மட்டும் அளகம், ஆகம், இறை, ஓதி, கதுப்பு, குறங்கு, கூந்தல், கொங்கை, சிறுபுறம், நுசுப்பு, நுதல், மருங்குல், முலை, மேனி, வயிறு என்று 15 வகையான பெயர்ச்சொற்களைப் பழந்தமிழ்ப் புலவர்கள் பயன்படுத்தி உள்ளனர். பெண்கள் மெல்லிய வரிகளை உடைய தமது இமைகளைக் கருப்புமையினால் பூசி இருக்கும்போது அவற்றைக் கார்மேகங்களுக்கும் யானையின் துதிக்கைக்கும் ஒப்பிடுவர்.  வண்ண மைகளாலோ சந்தன குங்குமத்தாலோ பூசியிருக்கும்போது அவற்றை வேங்கை, முல்லை, தாமரை முதலான பல்வேறு பூக்களின் இதழ்களுக்கும் பூங்கொடிகளுக்கும் மயில்தோகைக்கும் நத்தைகளின் வண்ணவண்ண மேலோட்டிற்கும் செவ்வானத்திற்கும் ஒப்பிடுவர். இவரது கண்ணிமைகள் மிகவும் மெலிந்திருப்பதால் இவற்றை நீர்க்குமிழிகளுடன் ஒப்பிடுவதும் வழக்கமே. வண்ணங்களைத் துறந்த இமைகள் ஆங்காங்கே வெளுத்திருக்கும்போது அவற்றை மரல்செடியின் இலைகளுக்கும் முழுமையாக வெளுத்திருக்கும்போது அவற்றை வெண்ணிறச் சிப்பிகளுக்கும் ஒப்பிடுவர். இமைகளில் உள்ள முடிகள் நரைத்திருக்கும்போது அவற்றை மீன்முள்ளுடனும் கொக்கின் தூவியுடனும் ஒப்பிடுவர்.

கடைக்கண்: பெண்களின் கடைக்கண்ணை எயிறு என்ற சொல்லால் குறித்தனர் புலவர். இமைகளில் மைபூசி கடைக்கண் ஈற்றில் கூரிய வரியினை எழுதியிருக்கும்போது அவற்றை முல்லை, முருக்கம் போன்ற மலர்களின் மொட்டுக்களுடனும் கிளி, நாரை போன்றவற்றின் தலையுடனும் ஒப்பிடுவர். மகிழ்ச்சியினால் கடைக்கண்ணில் இருந்து வழியும் கண்ணீரின் சுவையினை அமிழ்தம், நெல்லிக்காய், நுங்கு போன்றவற்றுடன் ஒப்பிடுவர்.  

நெற்றி: பெண்களின் நெற்றியினைக் குறிக்க அல்குல் என்ற சொல்லைப் பயன்படுத்தினர் புலவர். வண்ண வண்ணப் புள்ளிகளால் அழகுசெய்யப்பட்ட நெற்றியினை பாம்பின் படப்பொறியுடனும் வளைந்த வரிகளால் அழகு செய்திருக்கும்போது அவற்றைக் கடல்அலைகளுடனும் ஒப்பிடுவர். பல வண்ண மாலைகளை அணிந்திருக்கும் நெற்றியினைத் தேரின் நடுவில் உள்ள தட்டுடனும் ஆலவட்டத்துடனும் பூக்கூடையுடனும் ஒப்பிடுவர்.

பெண்களின் கண் மற்றும் கண்சார்ந்த இடங்களைக் குறிக்கப் புலவர்கள் பயன்படுத்திய மேற்கண்ட பல்வேறு சொற்களை ஒருபொருட் பன்மொழி என்று அறியாமல் இவை அனைத்தையும் பெண்களின் பல்வேறு உறுப்புக்களைக் குறிக்கப் பயன்படுத்தி உள்ளனர் என்று தவறாகக் கருதியதன் விளைவே சங்க இலக்கியத்தில் 'கேசாதிபாதம்' என்னும் உத்தி உள்ளது என்று இவர்கள் வாதிடுவதற்கு அடிகோலியது எனலாம்.

கேசாதிபாதம்:

தற்போதைய அழகியல் பெயர்வைப்பு முறைகளுள் ஒன்றுதான் கேசாதிபாதம் என்று கூறப்படுவதாகும். இதனை கேசம் + ஆதி + பாதம் என்று மூன்றாகப் பிரித்து ' முடிமுதலடி அழகியல் ' என்று தமிழ்ப்படுத்திக் கூறலாம். ஒரு பெண்ணுடைய உடலுறுப்புக்களின் அழகினைப் புகழ்ந்து பாடும்போது, அவரது தலைமுடியில் இருந்து துவங்கி அவரது அடி வரையிலும் உள்ள உறுப்புக்களை மேலிருந்து கீழாக வரிசையாக வருமாறு ஒவ்வொன்றாக அமைத்துப் பாடுவதை ' முடிமுதலடி அழகியல் ' என்று கூறுவர்.

முடிமுதல் அழகியல் என்பது சிற்றிலக்கியத்தைச் சேர்ந்த ஒரு இலக்கிய வகையாகும். வடமொழியில் பிரபந்தம் என்று அழைக்கப்படுவதே தமிழில் சிற்றிலக்கியம் என்று கூறப்படுகிறது. பிரபந்தம் என்ற சொல்லாகட்டும்; கேசாதிபாதம் என்ற சொல்லாகட்டும்; இரண்டுமே தமிழ்ச் சொற்கள் அல்லாத நிலையில், இவை இரண்டும் தமிழ் இலக்கியத்திற்கு மிகவும் பிற்காலத்தியவை என்று சொல்லாமலே விளங்கும் !

சங்க இலக்கியத்தில் கேசாதிபாதம் உண்டா?
முடிமுதலடி அழகியல் ஆகிய கேசாதிபாதம் என்னும் இலக்கிய வகை பற்றி தமிழின் மூத்த இலக்கண நூல்களான தொல்காப்பியமோ நன்னூலோ குறிப்பிடவில்லை. சங்க இலக்கியங்களில் இந்த இலக்கியவகை பயின்று வந்திருந்தால், தொல்காப்பியமோ நன்னூலோ கண்டிப்பாக அதைப் பற்றிக் கூறியிருக்கும். ஆனால், இந்த இலக்கண நூல்களில் முடிமுதலடி அழகியல் பற்றிய சிறுகுறிப்பு கூட இல்லை.!!!

சங்க இலக்கியங்களில் கேசாதிபாதம் ஆகிய முடிமுதலடி அழகியல் முறை பின்பற்றப்படவில்லை என்பதற்கு இதுவொன்றே சான்றாக அமையும். இருந்தாலும் பொருநராற்றுப்படையில் இருந்து சில பாடல்வரிகளை எடுத்துக்காட்டி அதில் கேசாதிபாத முறை பின்பற்றப் பட்டிருப்பதாகக் கூறுவார் உளர். இதுபற்றி ஆய்வுசெய்ததில், இந்தப் பொருநராற்றுப்படையில் காணப்படுகின்ற குறிப்பிட்ட சில வரிகள் அதன் ஆசிரியரால் எழுதப்பட்ட வரிசைமுறையில் இருந்து வேண்டுமென்றே பின்னாளில் வரிசை மாற்றி அமைக்கப்பட்டு இருக்கிறது என்பது தெரிய வந்தது. அதாவது, சங்க இலக்கியத்தில் கேசாதிபாத உத்தி கையாளப் பட்டுள்ளது என்று எடுத்துக் காட்டுவதற்காகவே இதை யாரோ செய்திருக்கிறார்கள். பொருநராற்றுப் படையில் வரும் அந்த சில வரிகளின் வரிசைமுறை செயற்கையானவை என்பதை உறுதிப்படுத்தும் முன்னர் பத்துப்பாட்டில் பெண்களின் உறுப்புப்பெயர்கள் எவ்வாறு அமைந்துள்ளன என்று காணவேண்டிய தேவை இருப்பதால் முதலில் அதைக் காணலாம்.

பத்துப்பாட்டில் உறுப்புப்பெயர் வரிசைமுறை:

பத்துப்பாட்டு நூல்களை ஆய்வு செய்ததில், திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, மதுரைக்காஞ்சி மற்றும் நெடுநல்வாடையில் பெண்களின் உறுப்புப்பெயர்கள் தொடர்ச்சியாக இடம்பெறுகின்ற பல வரிகள் இருப்பது கண்டறியப்பட்டது. அவை பற்றிய தகவல்கள் கீழே தொகுத்துத் தரப்பட்டுள்ளன.

1. திருமுருகாற்றுப்படையில் சூரர மகளிரின் உறுப்பு அழகியல் பற்றி வரி எண் 13 லிருந்து 41 வரை கூறுகிறது. இதில் கூறப்பட்டுள்ள உறுப்புப் பெயர்களின் அமைப்புமுறை பின்வருமாறு: அடி, நுசுப்பு, தோள், அல்குல், மேனி, ஓதி, நுதல், காது, ஆகம், முலை ஆக மொத்தம் 10 பெயர்ச்சொற்கள். இப் பெயர்ச்சொற்களின் அமைப்புமுறையினை நோக்கினால் எவ்வித வரிசைமுறையும் பின்பற்றப்படவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.

2. சிறுபாணாற்றுப்படையில் விறலியரின் அழகியல் பற்றி வரி எண் 13 லிருந்து 32 வரை கூறுகிறது. இதில் கூறப்பட்டுள்ள உறுப்புப் பெயர்களின் வரிசைமுறை பின்வருமாறு: கதுப்பு, அடி, குறங்கு, ஓதி, முலை, எயிறு, நுதல் ஆக மொத்தம் 7 பெயர்ச்சொற்கள். இப் பெயர்ச்சொற்களின் அமைப்புமுறையினை நோக்கினால் எவ்வித வரிசைமுறையும் பின்பற்றப்படவில்லை என்பதைத் தெளிவாக அறியலாம். 

3. மதுரைக்காஞ்சியில் பெண்களின் உறுப்பு அழகியல் பற்றி வரி எண் 410 முதல் 418 வரை கூறுகிறது. இதில் கூறப்பட்டுள்ள உறுப்புப் பெயர்களின் வரிசைமுறை பின்வருமாறு: கண், எயிறு, வாய், இறை, தோள், முலை, கூந்தல் ஆக மொத்தம் 7 பெயர்ச்சொற்கள். இப் பெயர்ச்சொற்களின் அமைப்புமுறையினை நோக்கினால் எவ்வித வரிசைமுறையும் பின்பற்றப்படவில்லை என்பது தெளிவு.

4. நெடுநல்வாடையில் பெண்களின் உறுப்பு அழகியல் பற்றி வரி எண் 136 முதல் 151 வரை கூறுகிறது. இதில் கூறப்பட்டுள்ள உறுப்புப் பெயர்களின் வரிசைமுறை பின்வருமாறு: முலை, ஆகம், நுதல், ஓதி, கண், காது, முன்கை, விரல், அல்குல், மேனி, தோள், முலை, நுசுப்பு, அடி ஆக மொத்தம் 13 பெயர்ச்சொற்கள். ( முலை என்ற சொல் இருமுறை வந்திருக்கிறது.). இப் பெயர்ச்சொற்களின் அமைப்புமுறையினை நோக்கினால் எவ்வித வரிசைமுறையும் பின்பற்றப்படவில்லை என்பது உள்ளங்கை நெல்லிக்கனி எனத் தெரிகிறது.

5. பொருநராற்றுப்படையில் பாடினியின் உறுப்பு அழகியல் பற்றி வரி எண் 25 லிருந்து 42 வரை கூறுகிறது. இதில் கூறப்பட்டுள்ள உறுப்புப் பெயர்களின் அமைப்புமுறை பின்வருமாறு: கூந்தல், நுதல், புருவம், கண், வாய், பல், காது, கழுத்து, தோள், முன்கை, விரல், உகிர், ஆகம், முலை, கொப்பூழ், நடு, அல்குல், குறங்கு, தாள், அடி ஆக மொத்தம் 20 பெயர்ச்சொற்கள். இப் பெயர்ச்சொற்களின் அமைப்புமுறையினை நோக்கினால், இவை இச்சொற்களுக்கான தற்போதைய பொருள்களின் அடிப்படையில் மிகச் சரியான வரிசைமுறையில் அமைக்கப்பட்டிருப்பதை அறியலாம்.

பொருநராற்றுப்படையில் கேசாதிபாதம் இல்லை:

பொருநராற்றுப்படையில் பெண்களின் உறுப்புப்பெயர்கள் கேசாதிபாத அதாவது முடிமுதலடி அழகியல் அமைப்புமுறைப்படிப் பாடப்பெறவில்லை என்பதைக் கீழ்க்காணும் கருத்துக்களின் அடிப்படையில் நிறுவலாம்.

1. பொருநராற்றுப்படையில் சிலவரிகளின் வரிசைமுறை செயற்கையானவை:

மேலே கண்டவாறு, ஆற்றுப்படை நூல்களில் திருமுருகாற்றுப்படையிலும் சிறுபாணாற்றுப்படையிலும் பெண்களின் உறுப்புப் பெயர்கள் எவ்வித வரிசைமுறையிலும் அமைக்கப்பெறாது பாடப்பெற்றிருக்க, ஏறத்தாழ ஒரே காலகட்டத்தில் இயற்றப்பட்ட ஒரேமாதிரியான அமைப்புமுடைய பொருநராற்றுப்படையில் மட்டும் வரிசைமுறையில் அமைத்துப் பாடப்பெற்றிருப்பது முரணாகத் தோன்றுகிறது. இப்பாட்டில் வரும் சில வரிகளின் வரிசைமுறை செயற்கையானவை என்று கூறுவதற்கு இதுவே அடிப்படையாக அமைகிறது.

2. பொருநராற்றுப்படையில் வரும் உறுப்புப்பெயர்கள் ஒருபெண்ணுக்குரியவை அல்ல:

திருமுருகாற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, மதுரைக்காஞ்சி மற்றும் நெடுநல்வாடையில் வரும் பெண்களின் உறுப்புப்பெயர்கள் ஒரேஒரு பெண்ணுக்கானவை அல்ல. திருமுருகாற்றுப்படையானது சூரரமகளிர் பற்றியும், சிறுபாணாற்றுப்படையானது விறலியரைப் பற்றியும் மதுரைக்காஞ்சியும் நெடுநல்வாடையும் பல பெண்களைப் பற்றியும் பேசுகிறது. இந்நிலையில் பொருநராற்றுப்படை மட்டும் பாடினி என்று ஒரே ஒரு பெண்ணைப் பற்றி மட்டும் கூறுமா?. என்ற கேள்வி எழுகிறது. ஆய்வுசெய்ததில், பொருநராற்றுப்படையும் ஏனைய நூல்களைப் போலவே பாடினி என்று ஒரே ஒரு பெண்ணை மட்டும் பாடவில்லை. உண்மையில் அக் கூட்டத்தில் பல பாடினிகள் இருந்தனர் என்பதனை ' ஆடு பசி உழந்த நின் இரும் பேர் ஒக்கலொடு ' என்ற 61 ஆவது வரி விளக்கிநிற்கிறது. அத்துடன், பாடினி என்ற சொல்லானது ஒருபெண்ணை மட்டுமின்றி பல பெண்களைக் குறிக்கவும் பயன்படுத்தப் பட்டுள்ளது. சான்றாக, புறநானூற்றுப் பாடல் 361 ல் ' புரி மாலையர் பாடினிக்குப் பொலம் தாமரைப்பூ பாணரொடு ' என்ற சொற்றொடரில் பாடினி என்ற சொல்லானது பலரைக் குறிக்கப் பயன்பட்டுள்ளதை அறிந்துகொள்ளலாம். மேலும் 'பாடினியர்' என்ற தனிச்சொல்லாடலும் சங்க இலக்கியங்களில் இல்லை. இதிலிருந்து, பொருநராற்றுப்படையில் வரும் பெண்களின் உறுப்புப்பெயர்கள் ஒரே பெண்ணைக் குறிக்காமல் பல பெண்களைக் குறித்து வருபவையே என்பது உறுதியாகிறது.

முடிவுரை:

கேசாதிபாதம் எனப்படும் முடிமுதலடி அழகியல் உத்தியானது ஒரே பெண்ணைப் பாடுவதை அதாவது அவளது உறுப்புக்களின் அழகினை முடிமுதல் அடிவரையிலுமாக வரிசையாக வருமாறு அமைத்துப் பாடுவதனை அடிப்படையாகக் கொண்டது. ஆனால், பொருநராற்றுப் படையிலும் சரி ஏனை பத்துப்பாட்டு நூல்களிலும் சரி, உறுப்புப் பெயர்கள் ஒரே பெண்ணைப் பற்றிக் கூறாமல் பல்வேறு பெண்களைப் பற்றியே கூறுகிறது என்று மேலே கண்டோம். மேற்கண்ட கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு பார்க்கும்போது, பொருநராற்றுப்படையில் வரும் பெண்களின் உறுப்புப் பெயர்கள் கேசாதிபாத முறையில் அமைத்துப் பாடப்பெறவில்லை என்பதும் அப் பெயர்ச்சொற்கள் பெண்களின் அந்தரங்க உறுப்புக்களைக் குறித்து வரவில்லை என்பதும் உறுதிசெய்யப்படுகிறது.



............. தொடரும்........

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்களைத் தமிழில் தட்டச்சு செய்யும் வழி:
வலப்பக்கத்தில் உள்ள பகுதியில் தமிழ் ஒலிகளை ஆங்கில எழுத்துக்களில் அசசடித்து நகல் செய்து இங்கே ஒட்டலாம்.