வெள்ளி, 9 ஜூன், 2017

முச்சி என்றால் என்ன? ( கண்ணாமுச்சி ரே... ரே...)

முன்னுரை:

சங்ககாலம் தொட்டு பலகாலங்களாகப் பயன்படுத்தப்பட்டு வந்து தற்போது பயன்பாட்டில் இல்லாத பல தமிழ்ச் சொற்களுள் ஒன்றாக 'முச்சி' என்ற சொல்லைக் கூறலாம். இச் சொல்லுக்குப் பல பொருட்களை இன்றைய தமிழ் அகராதிகள் கூறியிருந்தாலும் இப் பொருட்களில் எதுவுமே பொருந்தாத நிலை சில இலக்கியப் பாடல்களில் காணப்படுகிறது. இது இச்சொல்லுக்குப் புதிய பொருள் இருப்பதையே காட்டுகிறது. இச் சொல்லுக்கான புதிய பொருள் என்ன என்றும் அது எவ்வாறு பொருந்தும் என்றும் இக் கட்டுரையில் ஆதாரங்களுடன் காணலாம்.

முச்சி - அகராதி காட்டும் பொருட்கள்:

தற்போதைய தமிழ் அகராதிகள் முச்சி என்னும் சொல்லுக்குக் கீழ்க்காணும் பொருட்களைக் காட்டுகின்றன.

முச்சி¹ mucci , n. < உச்சி. [M. mucci.] 1. Crown of head; தலையுச்சி. மகளை . . . முச்சி மோந்து (சூளா. இரதநூ. 102). 2. Tuft of hair on the head; கொண்டை முடி. இவள் போதவிழ் முச்சி யூதும் வண்டே (ஐங்குறு. 93). 3. Crest; சூட்டு. வாகையொண்பூப் புரையு முச்சிய தோகை (பரிபா. 14, 7). , n. < Hind. mōcī. 1. Stationer, one who serves out stationery in a public office; கச்சேரிகளில் உத்தியோகஸ்தர்க்கு எழுதுமை கருவி முதலியன சித்தஞ்செய்து கொடுக் கும் வேலையாள். (C. G.) 2. One who works in leather; தோல்வினைஞன். (C. G.) 3. Sheath-maker; உறைகாரன். (அக. நி.) 4. See முச்சியன், 1. (M. M.) 5. Painter; வர்ணக்காரன். (W.)

அகராதிப் பொருட்கள் பொருந்தா இடங்கள்:

தற்போதைய தமிழ் அகராதிகள் காட்டும் மேற்காணும் பொருட்களுள் எதுவுமே பொருந்தாத சில இலக்கியப் பாடல்களை இங்கே காணலாம்.

முச்சியும் மண்ணுறுத்தலும்:

பெண்கள் தமது முச்சி எனும் உறுப்பில் மண்ணுறுக்கும் செய்தியினைக் கீழ்க்காணும் பாடல்வரிகள் காட்டுகின்றன.

....மகர பகு வாய் தாழ மண்ணுறுத்து
துவர முடித்த துகள் அறும் முச்சி .. - திரு. 25

இப்பாடலில் வரும் மண்ணுறுத்தல் என்பது சாந்து முதலானவற்றைப் பூசுதல் என்ற பொருளைத் தருவதாகும். சூரர மகளிர் தமது முச்சி எனும் உறுப்பில் மகரமீன் போலும் பிளந்த வாயினையுடைய உருவத்தைத் தாழ்வாகப் பிசிரில்லாமல் சாந்துகொண்டு பூசி வரைந்திருந்ததனை மேற்காணும் பாடல்வரிகள் விளக்குகின்றன. இப்பாடலில் வரும் முச்சி என்பதற்கு கொண்டைமுடி, தலையுச்சி, சூட்டு முதலாக எப்பொருளைக் கொண்டாலும் அப்பொருள் பாடலுடன் பொருந்தாமல் நிற்பதனை அறியலாம். காரணம், கொண்டைமுடி, தலையுச்சி, சூட்டு போன்ற எதிலும் சாந்துகொண்டு பூசி வரையமாட்டார்கள். இதிலிருந்து, இப் பாடல்வரிகளில் வரும் முச்சி என்பதற்கு மேற்காட்டிய அகராதிப் பொருட்கள் நீங்கலாக வேறு ஒரு பொருள் இருப்பது உறுதியாகிறது.

முச்சியும் அல்குலும்:

பெண்கள் தமது முச்சியின் மேல் புரளுமாறு அல்குலில் மாலை அணிந்த செய்தியினைக் கீழ்க்காணும் அகநானூற்றுப் பாடல் வரிகள் கூறுகின்றன.

...வணர் சுரி முச்சி முழுதும் மன் புரள
ஐது அகல் அல்குல் கவின் பெற புனைந்த
பல் குழை தொடலை .... - அகம். 390

இப்பாடலில் வரும் அல்குல் என்பதற்கு இடுப்பு என்றும் முச்சி என்பதற்கு கொண்டைமுடி என்றும் பொருள்கொண்டு ' வளைந்து சுருண்ட கொண்டைமுடி முழுவதும் மாலை அணிந்த அவளது இடுப்பிலே புரண்டது ' என்று விளக்கம் கூறுகின்றனர். இவ் விளக்கம் பொருந்துமா என்றால் பொருந்தாது. முதல்காரணம், முச்சி என்பதற்குக் கொண்டையாகப் போடப்பட்ட தலைமயிரையே அகராதிகள் காட்டுகின்ற நிலையில், கொண்டைமயிர் அப்பெண்ணின் இடுப்புவரையில் தாழ்ந்து புரள்வது என்பது சாத்தியமற்றதும் நல்ல நகைச்சுவையும் ஆகும். இரண்டாவது காரணம், எந்தப் பெண்ணும் மாலையினை தொடுத்துத் தனது இடுப்பில் கட்டிக் கொள்ளமாட்டாள். இதைப்பற்றி அழகின் மறுபெயர் அல்குல் என்ற கட்டுரையில் விளக்கமாகக் காணலாம். இதிலிருந்து, இப்பாடலில் வரும் அல்குல் என்பது இடுப்பைக் குறிக்காது என்பதையும் முச்சி என்பது கொண்டைமுடியினைக் குறிக்காது என்பதையும் அறிந்துகொள்ளலாம்.

முச்சியும் அளிப்பும்:

காதலனின் பிரிவினால் மனநோய்கொண்டு வாடும் பெண்ணொருத்திக்குப் பேய் பிடித்திருக்குமோ என்று கருதி அதனை அவளிடமிருந்து ஓட்டுவதற்கு வேலனை அழைத்துவந்து முயற்சிசெய்த செய்தியினைக் கீழ்க்காணும் பாடல்வரிகள் கூறுகின்றன.

....பெயல் ஆனாதே வானம் பெயலொடு       
மின்னு நிமிர்ந்து அன்ன வேலன் வந்து என
பின்னு விடு முச்சி அளிப்பு ஆனாதே... - நற். 51

இப்பாடலில் வரும் அளிப்பு என்பதற்குக் காப்பாற்றுதல் என்றும் முச்சி என்பதற்குக் கொண்டைமுடி என்றும் பொருள்கொண்டு ' வேலன் வந்து வெறியாட்டுதலால் கொண்டைமுடியில் அணிந்திருந்த பூக்களைக் காப்பாற்ற இயலவில்லையே ' என்று தலைவி வருந்துவதாக விளக்கம் கூறுகின்றனர். இவ் விளக்கம் பொருந்துமா என்றால் பொருந்தாது. முதற்காரணம், தலைவியானவள் தனது கொண்டைமுடியில் பூக்களை அணிந்திருந்தாள் என்று எந்தக் குறிப்பும் இப்பாடலில் இல்லை. இரண்டாவது காரணம், ஆனாமை என்பதற்கு நீங்காமை, கெடாமை என்றுதான் அகராதிகள் பொருள்கூறி இருக்கின்றன. அதன்படி, 'அளிப்பு ஆனாதே' என்பதற்கு ' காப்பாற்றுதல் கெடாது' அதாவது 'காப்பாற்ற முடியும்' என்றுதான் பொருள்வருமே ஒழிய ' காப்பாற்ற முடியாதே' என்று பொருள்வரவில்லை. அதுமட்டுமின்றி, தலைவன் வரும்வரை தலைவி தனது தலையில் சூடிய பூக்களை ஏன் காப்பாற்றி வைக்கவேண்டும்?. வாடிப்போன பூக்களைக் காட்டுவதற்கு அவள் ஏன் ஏங்கவேண்டும்?. எந்த ஒரு பெண்ணும் அப்படிச் செய்ய விரும்ப மாட்டார் என்பதால் இவ் விளக்கம் முற்றிலும் பொருந்தாமல் போவதுடன் முச்சி என்பதற்கு வேறொரு பொருள் இருக்கிறது என்ற உண்மையையும் அறிந்துகொள்ளலாம்.

முச்சி - புதிய பொருள் என்ன?

முச்சி என்பதற்கு அகராதிகள் காட்டாத புதிய பொருள்:

கண்ணிமை ஆகும்.

முச்சி - பெயர்க் காரணம்:

முச்சி என்பதற்குக் கண்ணிமை என்ற பொருள் எவ்வாறு பொருந்தும் என்பதைக் கீழே காணலாம்.

முச்சுதல் என்பதற்கு மூடுதல் என்ற பொருள் உண்டென்று அகராதிகள் காட்டுகின்றன.

முச்சு-தல் muccu- , 5 v. tr. cf. மூய்-. [T. mūyu, K. Tu. muccu.] 1. To cover; மூடுதல். தாட்செருப்புலகெலாந் தோன் முச்சுந் தரம்போல் (ஞானவ��. மாவலி. 8). 2. cf. முற்று-. To make; செய்தல். முச்சியே மரக்கோவை முயற்சியால் (சிவ தரு. பாவ. 81).

கண்களை மூட உதவுவதால் கண் இமைகளுக்கு முச்சி என்ற பெயர் ஏற்பட்டது எனலாம். அதாவது,

முச்சுதல்  ------> முச்சி.
(வினை)        ( வினையால் அணையும் பெயர் )

இப்போது நாம் அன்றாடம் புழங்கிவருவதான ' கண்ணாமுச்சி ' ஆட்டமானது கண்களை மூடிக்கொண்டு அல்லது கண்களுக்கு மறைவாக இருந்துகொண்டு ஆடும் விளையாட்டு ஆகும். முச்சு என்ற சொல் பொதுவாக மூடுதலைக் குறித்தாலும் வாயை மூடுதல், காதுகளை மூடுதல் என்ற பொருளில் பயன்படாமல் 'கண்ணாமுச்சி' அதாவது கண்களை மூடுதல் என்ற பொருளில் மட்டுமே புழக்கத்தில் இருப்பது கண்ணுக்கும் முச்சிக்குமான தொடர்பினைத் தெற்றெனத் தாங்கி நிற்பதனை அறியலாம்.

நிறுவுதல்:

முச்சி என்பதற்குக் கண்ணிமை என்ற பொருள் எவ்வாறு பொருந்தும் என்பதனை இன்னும் பல சான்றுகளுடனும் விளக்கங்களுடனும் விரிவாகக் காணலாம்.

இற்றைத் தமிழ் அகராதிகள் முச்சி என்னும் சொல்லுக்கு ' தோல்வினைஞன், உறைகாரன், வர்ணக்காரன் ' என்ற பொருட்களைக் கூறி இருப்பதனை மேலே கண்டோம். இம் மூன்று பொருட்களையும் ஒன்றுசேர்த்து நோக்குமிடத்து, முச்சியானது ஒரு தோல்வகையினது என்றும் அது உறையினைப் போல மூட உதவுவது என்றும் அதில் பல வண்ணங்கள் பூசப்படும் என்றும் தெரிய வருகிறது. இம் மூன்று பண்புகளையும் உடைய உறுப்பு எதுவென்று கேட்டால் கிடைக்கும் ஒரே விடை கண்ணிமை தான் !. காரணம், கண்ணிமை என்பது மெல்லிய தோல் என்பதுடன் அது கண்களை மூட உதவுவது என்பதுடன் அதில் பெண்கள் பல வண்ணங்களைப் பூசி மகிழ்வர் என்பதும் அனைவரும் அறிந்ததே. இனி, இலக்கியங்களில் இருந்தும் சில சான்றுகளைக் காணலாம்.

கண்ணிமைகளின் பண்புகள்:

பெண்களின் முச்சியாகிய கண்ணிமைகளைப் பற்றிக் கூறுமிடத்து, தண், நறும் என்ற அடைச்சொற்கள் அதனுடன் முன்னொட்டாக இணைந்து சில இடங்களில் வருகின்றன. அவை கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

தகரம் மண்ணிய தண் நறு முச்சி.. - அகம். 393
தண் நறு முச்சி புனைய அவனொடு.. - அகம். 221

இப்பாடல்களில் வரும் தண் என்பது குளிர்ச்சியையும் நறும் என்பது நறுமணத்தையும் குறிக்கும். தண் நறு முச்சி என்பது குளிர்ச்சியும் நறுமணமும் பொருந்திய இமைகள் என்று விளக்கம் பெறும். பெண்கள் தமது இமைகளை எப்போதும் குளிர்ச்சியாகவும் நறுமணத்துடனும் வைத்திருக்க சந்தனம், தகரம் போன்ற குளிர்ச்சியும் நறுமணமும் கொண்ட பொருட்களைச் சாந்துடன் கூட்டிப் பூசுவது வழக்கம். இவற்றைப் பெண்கள் தலைமயிரில் பூசிக்கொள்ள விரும்புவதில்லை. காரணம், இவற்றைத் தலைமயிரில் பூசினால் உலர்ந்தபின் தலைமயிரினை நீர்கொண்டு முழுவதும் கழுவி முடியினை நன்கு உலர்த்த வேண்டும். சரியாக உலர்த்தாவிட்டால் தலைவலியும் சளியும் பிடித்துக் கொண்டுவிடும். இப்படியான தொல்லைகள் இருப்பதால் தலைமயிரில் பூசிக்கொள்ள பெண்கள் விரும்பமாட்டார்கள். ஆனால் இமைகளில் பூசிக்கொள்வதும் எளிது; உலர்த்துதலும் எளிது; கழுவுதலும் எளிது. ஒருநாளில் எத்துணைமுறை வேண்டுமானாலும் பூசலாம்; கழுவலாம்; உலர்த்தலாம். கண்ணிமைகளில் சாந்தினைப் பூசுவது பற்றி இலக்கியங்கள் கூறுவதனைக் கீழே தொடர்ந்து காணலாம்.

கண்ணிமைகளும் சாந்தும்:

பெண்கள் தமது கண்ணிமைகளின்மேல் வண்ணவண்ணச் சாந்துகளைப் பூசி வரைவர் என்று பல ஆய்வுக் கட்டுரைகளில் முன்னர் கண்டுள்ளோம். அதைப்போல தமது முச்சி ஆகிய இமைகளின்மேலும் சாந்துகொண்டு பூசி அழகுசெய்திருந்த செய்தியினைக் கீழ்க்காணும் பாடல்வரிகள் கூறுகின்றன.

....மகரப் பகுவாய் தாழ மண்ணுறுத்து
துவர முடித்த துகள் அறும் முச்சி .. - திரு. 25

மகரமீன் போல பிளந்தவாயுடைய மீன்உருவத்தைச் சிறிதுகூடத் துகள் அதாவது பிசிர் இல்லாமல் இமைகளின்மேல் வரைந்திருந்தனர் என்று இவ் வரிகள் கூறுகின்றன. இமைகளின்மேல் சாந்துகொண்டு பூசி அழகுசெய்யும்போது துகளுடன் அதாவது பிசிருடன் பூசினால் அவை உலர உலர உதிர்ந்து விடும். இதைப் பற்றிக் கூறும் கலித்தொகைப் பாடல்வரிகள் கீழே தரப்பட்டுள்ளன.

...என் மகன் மேல் முதிர் பூண் முலை பொருத
ஏதிலாள் முச்சி உதிர் துகள் உக்க நின் ஆடை.... - கலி. 81

பரத்தையினது இமைகளின்மேல் பூசியிருந்த சாந்தின் துகள்களானவை அவளைப் புணர்ந்தபோது ஆடையில் உதிர்ந்து விட்டதனை இவ் வரிகள் விளக்கி நிற்கின்றன. தகரம் எனப்படும் நறுமணப் பொருளைக்கூட்டி இமைகளின்மேல் சாந்துகொண்டு பூசியிருந்ததனைக் கீழ்க்காணும் பாடல்வரி கூறுகிறது.

தகரம் மண்ணிய தண் நறு முச்சி.. - அகம். 393

கண்ணீரும் மழைநீரும்:

காதலனைப் பிரிந்து துயருற்று வாடும் தலைவியின் நிலைமையினை வான்மழையுடன் ஒப்பிட்டுக் கூறும் நற்றிணைப் பாடல்வரிகள் கீழே:

யாங்கு செய்வாம்கொல் தோழி ஓங்கு கழை
காம்பு உடை விடரகம் சிலம்ப பாம்பு உடன்று
ஓங்கு வரை மிளிர ஆட்டி வீங்கு செலல்
கடும் குரல் ஏறொடு கனை துளி தலைஇ
பெயல் ஆனாதே வானம் பெயலொடு       
மின்னு நிமிர்ந்து அன்ன வேலன் வந்து என
பின்னு விடு முச்சி அளிப்பு ஆனாதே
பெரும் தண் குளவி குழைத்த பா அடி
இரும் சேறு ஆடிய நுதல கொல் களிறு
பேதை ஆசினி ஒசித்த               
வீ ததர் வேங்கைய மலை கிழவோற்கே  - நற். 51

பொருள்: மூங்கில் மரங்கள் நிறைந்த மலைமீது பட்டு எதிரொலிக்குமாறு இடியிடித்தும் மின்னியும் பெயத் துவங்கிய மழை விடாமல் இன்னும் பெய்கிறது. அந்த மின்னலைப் போல ஒளிவீசுகின்ற வேலினை உடைய வேலனும் வெறியாட்டிற்கு வந்துவிட்டான். வேங்கைப் பூக்கள் மலர்ந்திருக்கும் அந்த மலைநாட்டில் முல்லைக்கொடிகளை மிதித்துச் சிதைத்தும் பலாமரத்தினை மோதி முறித்தும் திரிகின்றது மதங்கொண்ட யானை ஒன்று. தலைமீது சேற்றினை வாரியிறைத்துப் பூசிக்கொண்டு திரிகின்ற அந்த மதயானை வாழும் மலைநாட்டில் இருக்கும் எனது தலைவனோ இன்னும் என்னைக் காண வராததால் எனது கண்களில் இருந்து வரும் கண்ணீரும் அந்த மழையினைப் போல நின்ற பாடில்லையே.

இப்பாடலில் வரும் முச்சி என்பது கண்ணிமையினையும் அளிப்பு என்பது குழைவு / குழைதல் என்ற அகராதிப் பொருளையும் குறிக்கும். காதலனை நினைத்து வருந்தி கண்கலங்கி அழுவதால் கண்ணிமைகளும் குழைந்து அதாவது கசங்கிப் பாழாயின. மழையானது நிற்காமல் எப்படி விட்டுவிட்டுப் பெய்ததோ அதைப்போல அவளது அழுகையும் நிற்காமல் விட்டுவிட்டுத் தொடர்ந்தது என்பதனை அழகான உவமையாக இப்பாடல் படம்பிடித்துக் காட்டுகிறது.

கண்ணிமைகளும் பூக்களும்:

பெண்கள் தமது அல்குல் பகுதியில் அதாவது கண்களுக்கு மேலாக இருக்கும் நெற்றிப் பகுதியில் பலவிதமான மாலைகளைக் கட்டி அழகுசெய்வர் என்று அழகின் மறுபெயர் அல்குல் என்ற ஆய்வுக் கட்டுரையில் விரிவாகக் கண்டோம். அப்படிக் கட்டித் தொங்கவிடப்படும் மாலைகளில் சில பூக்கள் கண்ணிமைகளின்மேல் படுவதும் புரளுவதும் உண்டு. இதைப் பற்றிக் கூறுகின்ற பாடல் வரிகள் கீழே தரப்பட்டுள்ளன. 

.... வணர் சுரி முச்சி முழுதும் மன் புரள
ஐது அகல் அல்குல் கவின் பெற புனைந்த
பல் குழை தொடலை ஒல்குவயின் ஒல்கி .. - அகம். 390

பொருள்: வளைந்தும் சுருங்கியும் இருந்த கண்ணிமைகளின்மீது முழுவதுமாய்ப் புரளுமாறு அகன்ற நெற்றியிலே அழகாகப் புனைந்த நெய்தல் மலர்மாலையினை அணிந்து....

இன்னொரு பெண்ணானவள் தனது இமைகளில் சாந்தினைப் பூசாமல் வெறும் வரிகளை மட்டும் வரைந்து அழகு செய்திருக்கிறாள். அத்துடன் கள் வடியும் பூக்களை தனது நெற்றியில் இமைகளுக்கு மேலாக அணிந்திருக்கிறாள். இதைப்பற்றிய பாடல்வரிகள் கீழே:

பின்னொடு முடித்த மண்ணா முச்சி
நெய் கனி வீழ் குழல் அகப்பட தைஇ.. - அகம். 73

பொருள்: வெறும் வரிகளை மட்டும் வரைந்து சாந்து ஏதும் பூசாமல் தேன் முதிர்ந்து வழியும் குழல் போன்ற பூக்களை இமைகளுக்கு மேலாக அணிந்து...

இப்பாடலில் வரும் நெய் என்பது தேனையும் குழல் என்பது குழல்போன்ற மலரினையும் குறிக்கும். மேலும் இப்பாடலில் வரும் பின் / பின்னு என்பது வரியினைக் குறிக்கும். இதைப்பற்றி அதிக தகவல்களைத் தெரிந்துகொள்ள பெண்களின் கூந்தலுக்கு இயற்கையில் மணமுண்டா என்ற ஆய்வுக் கட்டுரையினைப் படிக்கலாம். 

முடிவுரை:

முச்சி என்பதற்கு அகராதிகள் கூறும் பொருட்கள் நீங்கலாக கண்ணிமை என்ற பொருளும் உண்டு என்று மேலே பல ஆதாரங்களுடன் கண்டோம். முச்சி என்பது குழந்தைகளைப் பொறுத்தமட்டில் அவரது தலைமயிரைக் குறிக்கப் பயன்படுத்தப் பட்டுள்ளது. குழந்தைகளின் தலைமுடி நன்கு வளர்வதற்கு ஐயவி எனப்படும் வெண்சிறுகடுகினை அரைத்து எண்ணையுடன் சேர்த்துத் தலைமயிரில் பூசுவார்கள். இதைப்பற்றிய செய்தியினைக் கீழ்க்காணும் மணிமேகலைப் பாடல்வரிகள் கூறுகின்றன.

..... ஐயவி அப்பிய நெய்அணி முச்சி
மயிர்ப்புறம் சுற்றிய கயிற்கடை முக்காழ்
பொலம்பிறைச் சென்னி நலம்பெறத் தாழ
செவ்வாய்க் குதலை மெய்பெறா மழலை.. - மலர்வனம் புக்ககாதை.

.................. தமிழ் வாழ்க !......................

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்களைத் தமிழில் தட்டச்சு செய்யும் வழி:
வலப்பக்கத்தில் உள்ள பகுதியில் தமிழ் ஒலிகளை ஆங்கில எழுத்துக்களில் அசசடித்து நகல் செய்து இங்கே ஒட்டலாம்.