வெள்ளி, 14 ஜூலை, 2017

கண்ணும் கண்சார்ந்த இடமும் - 9 ( பெண்களின் கண்களைப் பூவிழி என்பதேன்? )

முன்னுரை:

கண்ணும் கண்சார்ந்த இடமும் என்ற ஆய்வுக் கட்டுரையின் முதல் ஆறு பகுதிகளில் அல்குல் முதல் வயிறு வரையிலான பல்வேறு பெயர்ச் சொற்கள் குறிக்கின்ற பெண்களின் உடல் உறுப்புக்களைப் பற்றி அறிந்துகொண்டோம். இவற்றில் பெண்களின் கண்களைப் பூக்களுடன் உவமைப்படுத்திப் புலவர்கள் பாடிய பாடல்கள் பலவற்றையும் கண்டோம். சங்ககாலப் புலவர்கள் பெண்களின் கண்களைப் பூக்களுடன் உவமைப்படுத்தி ஏராளமான பாடல்களில் பாடுவதற்கான காரணங்கள் என்னவென்று இக் கட்டுரையில் விரிவாகக் காணலாம்.

பெண்களின் கண்களும் பூக்களும்:

சங்ககாலப் புலவர்கள் பெண்களின் கண்களோடு உவமைப்படுத்திப் பாடியுள்ள பல்வேறு பூக்களில் குவளை, நெய்தல், நீலம், பீரம், கருவிளை, கொன்றை, வேங்கை, காந்தள் போன்றவற்றைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். பெண்கள் தமது கணவர் அல்லது காதலருடன் கூடி மகிழ்ந்திருக்கும்போது அவர்களது மையிட்டு அழகுசெய்யப்பட்ட கண்ணிமைகளை அப்போதுதான் பூத்திருக்கும் அழகிய மலர்களுடன் ஒப்பிட்டுப் பாடுவது புலவர்களின் வழக்கம். சான்றாகச் சில பாடல்வரிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

... நெய்தல் கூம்புவிடு நிகர்மலர் அன்ன
ஏந்துஎழில் மழைக்கண் எம் காதலி குணனே!    - அகம். 83

....குவளை எதிர் மலர்ப் பிணையல் அன்ன
இவள் அரி மதர் மழைக்கண் ... - நற். 160

அதேசமயம், பெண்கள் தமது கணவரை / காதலரைப் பிரிந்தநிலையில் அழுதுகொண்டிருக்கும்போது அவர்களது மை அழிந்த அழகற்றக் கண்ணிமைகளை மழைநீரில் நன்றாக நனைந்து நீர்சொட்டிக் கொண்டிருக்கின்ற பூவிதழ்களுடன் ஒப்பிட்டுப் பாடுவதும் இலக்கிய வழக்கமே. சான்றாகச் சில பாடல்வரிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

குவளை மாரி மாமலர் பெயற்கு ஏற்றன்ன
நீரொடு நிறைந்த பேரமர் மழைக்கண் .... - அகம். 395

....பெயல் உறு மலரின் கண்பனி வார
ஈங்கிவள் உழக்கும் ..... - அகம். 307

கண்ணும் மலரும் - ஒப்பீட்டுக்கான காரணங்கள்:

பெண்களின் கண்ணிமைகளைப் பூவிதழ்களுடன் ஒப்பிட்டுப் புலவர்கள் பாடியதற்கான காரணங்கள் எவை என்று கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

1. மென்மை உடையதாயிருத்தல்
2. வண்ணம் பூசியிருத்தல்
3. நறுமணம் கமழுதல்
4. பூந்தாதுக்களைக் கொண்டிருத்தல்
5. வண்டுகள் மொய்த்தல்

இக் காரணங்கள் ஒவ்வொன்றையும் தனித்தனியே விரிவாகக் காணலாம்.

1. மென்மை / நுட்பத் தன்மை:

பொதுவாகக் கண்ணிமைகள் என்றாலே மென்மை / நுட்பத் தன்மை உடையவை தான் என்று அனைவரும் அறிவோம். இவை மென்மையாக இருப்பதால்தான் நம்மால் இமைகளைச் சுருக்கி விரிக்க முடிகிறது. பெண்களின் கண்ணிமைகள் எவ்வளவு மெல்லியவை என்றால் அவை ஆடையிலுள்ள சிறு நூலின் அளவிலான தடிமன் கொண்டவை; சில மென் கொடிகளின் தடிமன் கொண்டவை. அதனால் தான் இவற்றை நுட்பத் தன்மை கொண்டவை என்று இலக்கியங்கள் கூறுகின்றன. கண்ணிமைகளின் கொடி மற்றும் நூல் போன்ற தடிமன் அல்லது நுட்பத் தன்மை பற்றிப்பேசும் சில பாடல் வரிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

நூல்போன்ற நுட்பம்:

துகில் நூலின் வாய்த்த நுண் கேழ் நுசுப்பின் மடவீர் - சிந்தா: 2346
நூல் ஒக்கும் மருங்குலாள் - கம்ப. கிட்.13/46
இழை புரை மருங்குல் - கம்ப. சுந்தர. 3/88

கொடிபோன்ற நுட்பம்:

குறவர் மட மகள் கொடி போல் நுசுப்பின் - திரு -101
கொடி மருங்குல் விறலியருமே - புறம்.139
வள்ளி மருங்குல் வயங்கு இழை அணிய - புறம். 316

பெண்களின் கண்ணிமைகளைக் குறிப்பதான மருங்குல், நுசுப்பு போன்றவை நுட்பத்தன்மை வாய்ந்த மெல்லிய இதழ்களாக இருப்பதால் தான் அவற்றைப் பூக்களின் இதழ்களுடன் ஒப்பிட்டுப் புலவர்கள் பாடியுள்ளனர். பெண்களின் மெல்லிய கண்ணிமைகளைப் பூவிதழ்களுடன் ஒப்பிட்டுக் கூறுகின்ற சில பாடல்வரிகள் மட்டும் சான்றாகக் கீழே தரப்பட்டுள்ளன.

நுணங்கிய நுசுப்பின் நுண்கேழ் மாமைப்
பொன்வீ வேங்கைப் புதுமலர் புரைய - அகம் - 318

..... முது நீர் இலஞ்சிப் பூத்த குவளை
எதிர் மலர்ப் பிணையல் அன்ன இவள்
அரி மதர் மழைக்கண் காணா ஊங்கே - நற். 160

... நெய்தல் கூம்புவிடு நிகர்மலர் அன்ன
ஏந்துஎழில் மழைக்கண் எம் காதலி குணனே!    - அகம். 83

மேற்காணும் பாடல்கள் பெண்களின் மையுண்ட கண்ணிமைகளை வேங்கை, குவளை, நெய்தல் மலர்களுடன் ஒப்பிட்டுக் கூறுகின்றன. பெண்களது கண்ணிமைகளின் நுட்பத்தன்மையை விளக்குமிடத்துச் சில புலவர்கள் ஒருபடி மேலே போய், ' இவரது கண்ணிமைகள் எவ்வளவு மெல்லியவை என்றால், சிறிய பூமாலையினை அதன்மேல் அணிந்தாலும் அதன் பாரம் தாங்காமல் முரிந்துவிடும் ' என்று கீழ்க்காணும் பாடல்களில் கூறுவதைப் பாருங்கள்.

பூமாலை சூடின் பொறை ஆற்றா நுண் மருங்குல் - சிந்தா: 7/1699
முல்லை அம் சூட்டு வேயின் முரிந்து போம் நுசுப்பின் நல்லார் - சிந்தா:13 3119/3

இப்பாடல்களில் வரும் மருங்குலும் நுசுப்பும் பெண்களின் இடுப்பினை அன்றி அவரது கண்ணிமைகளையே குறிக்கும் என்று மருங்குல் என்றால் என்ன?, கதுப்பு - ஓதி - நுசுப்பு ஆகிய கட்டுரைகளில் ஏற்கெனவே ஆதாரங்களுடன் கண்டுள்ளோம்.

2. வண்ணம் உடைமை:

பெண்கள் தமது கண்ணிமைகளுக்குப் பல வண்ணங்களில் மைபூசி அழகுசெய்வர் என்று முன்னர் ஏராளமான கட்டுரைகளில் கண்டுள்ளோம். இவ் வண்ணங்களில் சிவப்பும் மஞ்சளும் மிக அதிகமாகப் பயன்படுத்தப் பட்டிருக்கின்றன. கருமையும் நீலமும் கூடப் பரவலாகப் பயன்படுத்தப் பட்டுள்ளன. பெண்கள் தமது கண்ணிமைகளில் பூசியுள்ள வண்ணத்திற்கேற்ப அவரது இமைகளைப் பூக்களுடன் ஒப்பிட்டுப் பாடுவது புலவர்களின் வழக்கம். சான்றாக,

... குவளை நாண்மலர் புரையும் உண்கண் ... - அகம். 179

இப்பாடலில் தலைவியானவள் தனது இமைகளைக் குவளை மலர்களின் வண்ணத்தில் ( செம்மை அல்லது கருமை ) மைதீட்டி அழகுசெய்திருந்ததால், அவற்றைக் குவளை மலர்களுடன் ஒப்பிட்டுக் கூறுகிறார் புலவர். மேலும் சில பாடல்வரிகள் கீழே சான்றாகக் கொடுக்கப்பட்டுள்ளன.

... முற்று எழில் நீல மலர் என உற்ற
இரும்பு ஈர் வடி அன்ன உண்கட்கும்.. - கலி. 64

... வண்டுவாய் திறந்த வாங்குகழி நெய்தல்
போது புறங்கொடுத்த உண்கண் ..... - அகம். 130

நுணங்கிய நுசுப்பின் நுண்கேழ் மாமைப்
பொன்வீ வேங்கைப் புதுமலர் புரைய - அகம் - 318

இப்பாடல்களில் வரும் உண்கண், நுண்கேழ் மாமை ஆகியவை பெண்களின் கண்ணிமைகள் மையுண்ட நிலையில் இருந்ததனைக் காட்டுகின்றன. பெண்கள் அழும்போது வண்ண மையணிந்து அழகுடன் விளங்கும் தமது கண்ணிமைகளைக் கசக்குவதாலும் கண்ணீர் படுவதாலும் அவரது இமைகளில் தீட்டிய மை அழிந்து இமைகளின் அழகு கெட்டுவிடும். இந்நிலையில் இக் கண்ணிமைகளை, மழைநீரில் நன்கு நனைந்து நீர்சொட்டிக் கொண்டிருப்பதும் தனது இயல்பான வண்ணத்தில் இருந்து வெளிறிப்போனதுமான பூவிதழ்களுடனும் வாடிய பூவிதழ்களுடனும் ஒப்பிட்டுப் புலவர்கள் ஏராளமான பாடல்களைப் பாடியுள்ளனர். அவற்றில் சிலவற்றை மேலே கண்டோம். மேலும் சில பாடல்வரிகள் சான்றாகக் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

... அகல்அறை நெடுஞ்சுனை துவலையின் மலர்ந்த
தண்கமழ் நீலம் போலக் கண்பனி கலுழ்ந்தன ... - அகம். 143

.... வளிபொரத் துயல்வரும் தளிபொழி மலரின்   
கண்பனி ஆகத்து உறைப்பக் கண் பசந்து ... - அகம். 146

திதலை மாமை தளிர்வனப்பு அழுங்கப்
புதலிவர் பீரின் எதிர்மலர் கடுப்பப்
பசலை பாய்ந்த நுதலேன் ஆகி
எழுதெழில் மழைக்கண் கலுழ... - அகம். 135

3. நறுமணம் உடைமை:

பெண்கள் தமது கண்ணிமைகளுக்குப் பல வண்ணங்களில் மைதீட்டி அழகுசெய்யும்போது வண்ணச் சாந்துடன் சந்தனம், தகரம், மான்மதச்சாந்து (கத்தூரி/நாவி), அகில் முதலான நறுமணப் பொருட்களையும் கூட்டி அரைத்துப் பூசுவர் என்று முன்னர் பல கட்டுரைகளில் கண்டுள்ளோம். இவ்வாறு நறுமணப் பொருட்களைக் கலந்து இமைகளின்மேல் பூசுவதன் மூலம் கண்களுக்கு வெகு அருகில் உள்ள மூக்கிற்கு இனிய நறுமணமானது தொடர்ச்சியாகக் கிடைக்கும். 

பெண்கள் தமது இமைகளின்மேல் நறுமணப் பொருள்களைக் கூட்டிப் பூசிய செய்தியினைக் கூறுகின்ற சில பாடல்வரிகள் கீழே சான்றாகக் கொடுக்கப்பட்டுள்ளன.

... பொறிவரிச் சிறைய வண்டினம் மொய்ப்பச்
சாந்தம் நாறும் நறியோள் கூந்தல் ... - ஐங்கு. 240

...நாவி விரி கூழை இள நவ்வியர் துயின்றார்- கம்ப.அயோ.5/10

.... பெரும் தண் சாந்தம் வகை சேர் ஐம்பால்
தகைபெற வாரி புலர்விடத்து உதிர்த்த துகள் படு கூழை .. - நற். 140

தகரம் மண்ணிய தண் நறு முச்சி.. - அகம். 393

இப்பாடல்களில் வரும் கூந்தல், கூழை, ஐம்பால், முச்சி ஆகியவை பெண்களின் கண்ணிமைகளைக் குறிக்கும் என்று முன்னர் பல ஆய்வுக் கட்டுரைகளில் ஆதாரங்களுடன் கண்டுள்ளோம்.

4. பூந்தாதுக்களைக் கொண்டிருத்தல்:
பெண்கள் தமது கண்ணிமைகளுக்கு அழகுசெய்யும்போது சுணங்கு எனப்படுவதான பூந்தாதுக்களையும் இமைகளின் மேல் அப்பி அழகுசெய்வர் என்று முன்னர் பல ஆய்வுக் கட்டுரைகளில் கண்டுள்ளோம். அப்படிப் பூசும்போது பூந்தாதுக்களை இமைகளின்மேல் தூவி விட்டாற்போல ஆங்காங்கே ஒட்டி அழகுசெய்வர். இதைப் பற்றிக் கூறுகின்ற சில பாடல்வரிகள் மட்டும் சான்றாகக் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

விதிர்த்து விட்டன்ன அம் நுண் சுணங்கின்
ஐம்பால் வகுத்த கூந்தல் .. - நற்.160

.... மாயவள் மேனி போல் தளிர் ஈன அம் மேனித்
தாய சுணங்கு போல் தளிர் மிசைத் தாது உக, ... - கலி.35

மேற்காணும் கலித்தொகைப் பாடலில் பெண்ணின் மையுண்ட கண்ணிமையினைப் போல வேங்கை மரத்தில் இலைக் கொழுந்து தோன்ற, அக் கண்ணிமையின் மேல் தூவிவிட்ட பூந்தாதுக்களைப் போல கொழுந்திலையின்மேல் வேங்கைப் பூவின் தாதுக்கள் பரவலாக உதிர்ந்திருந்த செய்தி அழகான உவமையுடன் கூறப்பட்டுள்ளது. இளம்பெண்கள் சேர்ந்து விளையாடியபோது வண்டல் மணலில் பாவை போன்று செய்திருக்க, அதன்மேல் ஞாழலின் சிறிய பூக்கள் பரவலாக உதிர்ந்திருந்தன. இதனை அப் பெண்களின் மையுண்ட கண்ணிமையின்மேல் பரவலாகத் தூவியிருந்த பூந்தாதுக்களுடன் ஒப்பிட்டுக் கீழ்க்காணும் பாடலில் கூறுவதைப் பாருங்கள்.

சிறு வீ ஞாழல் தேன் தோய் ஒள் இணர்
நேர் இழை மகளிர் வார் மணல் இழைத்த
வண்டற் பாவை வன முலை முற்றத்து
ஒண் பொறிச் சுணங்கின் ஐது படத் தாஅம் .. - நற்.191

பெண்களின் சுணங்கணிந்த கண்ணிமைகளைப் புலவர்கள் பெரும்பாலும் வேங்கைப் பூவிற்கு உவமையாகவே கூறியுள்ளனர். சான்றாகச் சில பாடல்வரிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

நாகிள வேங்கையின் கதிர்த்துஒளி திகழும்
நுண்பல் சுணங்கின் மாக்கண் .... - புறம்.352

.... வேங்கை வென்ற சுணங்கின் தேம்பாய் கூந்தல்.... - ஐங்கு. 324

.... வேங்கை ஊழுறு நறுவீ கடுப்பக் கேழ்கொள
ஆகத்து அரும்பிய மாசுஅறு சுணங்கினள் ... - அகம். 174

.... பொன்வீ வேங்கைப் புதுமலர் புரைய
நன்னிறத் தெழுந்த சுணங்கணி வனமுலை ... அகம். 318

... ஓதி நளிச்சினை வேங்கை நாண்மலர் நச்சிக்
களிச்சுரும் பரற்றுஞ் சுணங்கின் .... - சிறுபாண்.

மேற்கண்ட பாடல்வரிகளில் இருந்து, பெண்கள் பூந்தாதுக்களைக் கொண்டு தமது கண், மேனி, முலை, கூந்தல், ஆகம், ஓதி ஆகியவற்றை அழகுசெய்திருந்ததனை அறிந்துகொள்ள முடியும். அத்துடன் பெண்கள் தமது தோள்களையும் கூட பூந்தாதுக்களால் அழகுசெய்திருந்ததனைக் கீழ்க்காணும் பாடல்வரிகளில் இருந்து அறிந்துகொள்ளலாம்.

பரந்த சுணங்கின் பணைத் தோளாள் பண்பு    .. - கலி.141
பணைத் தோள் அரும்பிய சுணங்கின்.. - நற்.262

பெண்களின் சுணங்கணிந்த கண், மேனி, முலை, கூந்தல், ஆகம், ஓதி, தோள் ஆகியவற்றை வேங்கை முதலான பூக்களுடன் ஒப்பிட்டுக் கூறியிருப்பதில் இருந்து, மேனி, முலை, கூந்தல், ஆகம், ஓதி, தோள் ஆகியவை பெண்களின் மையுண்ட கண்இமைகளையும் குறிக்கும் என்பதைத் தெள்ளிதின் அறிந்து கொள்ளலாம். பெண்கள் பூந்தாதுக்களையே அன்றி தாதுக்களைப் போலத் தோன்றுகின்ற வண்ணவண்ணப் பொட்டுக்களாலும் தமது இமைகளை அழகுசெய்வர். இப் பொட்டுக்களைத் தித்தி என்றும் திதலை என்றும் இலக்கியங்கள் கூறும். இவை பற்றி விரிவாகத் தித்தியும் திதலையும் என்ற ஆய்வுக் கட்டுரையில் காணலாம். வண்டுகள் குடைதலால் இளந்தளிரின்மேல் பூந்தாதுக்கள் உதிர்ந்து பரவியிருப்பதைப் போல மையுண்ட கண்ணிமையின்மேல் அழகிய பல வண்ணப் பொட்டுக்களை வரைந்து அழகுசெய்திருந்ததினைப் பற்றிக் கூறும் ஒரு பாடல் சான்றாகக் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

..... மென்சிறை வண்டின் தண்கமழ் பூந்துணர்
தாதுஇன் துவலை தளிர்வார்த் தன்ன
அம்கலுழ் மாமை கிளைஇய,
நுண்பல் தித்தி மாஅயோளே - அகம். 41

5. வண்டுகள் மொய்த்தல்:

பொதுவாக வண்டுகளும் தும்பிகளும் சுரும்புகளும் ஞிமிறுகளும் பூக்களை நாடிச்சென்று அவற்றில் இருக்கும் மகரந்தங்களில் இருப்பதான தேனை உண்பது இயற்கையே. பூக்களின் ஒளிமிக்க வண்ணங்களாலும் அவற்றின் மணத்தினாலும் கவரப்படுகின்ற இவை, மகரந்தங்கள் எங்கிருந்தாலும் அவற்றில் உள்ள தேனை உண்ணச் சுற்றிச்சுற்றி வரும் போலும். பெண்கள் தமது கண்ணிமைகளை ஒளிமிக்க வண்ண மைகொண்டு பூசியிருப்பதாலும் அதன்மேல் பூந்தாதுக்களைக் கொண்டு அப்பி இருப்பதாலும் வண்டினங்கள் அவரது கண்ணிமைகளைப் பூக்கள் என்று கருதி அதன்மேல் உள்ள பூந்தாதுக்களைக் குடைந்து அதில் இருக்கும் தேனை உண்ணப் பாய்ந்துவரும். இதைப்பற்றி ஏராளமான பாடல்களில் புலவர்கள் பாடியிருக்கின்றனர். அவற்றில் சிலவற்றை மட்டும் சான்றாகக் கீழே காணலாம்.

.. தெண்நீர் ஆய்சுனை நிகர்மலர் போன்ம் என நசைஇ
வீதேர் பறவை விழையும்
போதார் கூந்தல் நம் காதலி கண்ணே - அகம். 371

கண்டிகும் அல்லமோ கொண்க நின் கேளே
உண்கண் வண்டினம் மொய்ப்பத்
தெண்கடல் பெருந்திரை மூழ்குவோளே. - ஐங்கு. 126

......பல் வரி இன வண்டு புதிது உண்ணும் பருவத்துத்,
தொல் கவின் தொலைந்த என் தட மென் தோள் உள்ளுவார்! .... - கலி.26

முடிவுரை:

சங்ககாலப் பெண்களின் மையுண்ட கண்ணிமைகளானவை பூக்களைப் போலவே மென்மை, வண்ணம், நறுமணம் மற்றும் பூந்தாதுக்களைக் கொண்டிருந்ததாலும் தேன் உண்ணும் வண்டுகளால் மொய்க்கப்பட்டதாலும் இவரது கண்ணிமைகளைப் பூவிதழ்களுடன் ஒப்பிட்டுச் சங்ககாலப் புலவர்கள் பல பாடல்களில் பாடினர் என்பதை மேலே பல ஆதாரங்களுடன் அறிந்துகொண்டோம். பெண்களின் விழிகளைப் பூக்களுடன் உவமைப்படுத்திக் கூறுகின்ற வழக்கம் சங்ககாலத்தில் மட்டுமல்ல இன்றும்கூட இருக்கிறது என்பதனை ' பூவிழி, மலர்விழி ' போன்ற பெயர்களே பறைசாற்றி நிற்கின்றன. சரி, பெண்களின் மையுண்ட கண்களைப் பூக்களாக நினைத்து வண்டினங்கள் பாய்ந்தால் என்ன ஆகும்?. இதைப்பற்றி விரிவாக அடுத்த கட்டுரையில் காணலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்களைத் தமிழில் தட்டச்சு செய்யும் வழி:
வலப்பக்கத்தில் உள்ள பகுதியில் தமிழ் ஒலிகளை ஆங்கில எழுத்துக்களில் அசசடித்து நகல் செய்து இங்கே ஒட்டலாம்.