சனி, 26 ஆகஸ்ட், 2017

பதொமியும் சொற்பொருள் ஆய்வுகளும்

முன்னுரை:

பதொமியும் சொற்பொருள் ஆய்வுகளும் என்ற இக் கட்டுரையில் சொல்-பொருள் ஆய்வுகளை மேற்கொள்வதற்கான புதிய அணுகுமுறை விளக்கப்படுகிறது. இதுபோன்ற அணுகுமுறை பிறவகையான ஆய்வுகளில் ஏற்கெனவே புழக்கத்தில் இருந்திருக்கலாம். ஆனால், சொல்-பொருள் ஆய்வில் இந்த அணுகுமுறையானது இப்போதுதான் முதன்முதலில் பயன்பாட்டில் வருகிறது. இப் புதிய அணுகுமுறையினால் பழந்தமிழ்ச் சொற்களின் உண்மையான பொருட்களை எளிதில் இனங்கண்டு அறிய முடிகிறது. இந்த அணுகுமுறையானது பதொமி என்ற காரணப்பெயரால் இக்கட்டுரையில் குறிப்பிடப் பட்டிருக்கிறது.

பதொமி என்பது என்ன?.

பதொமி - பகுத்தல், தொகுத்தல், மிகுத்தல் ஆகிய மூன்று வினைகளை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்டப் புதியதோர் ஆய்வு அணுகுமுறை ஆகும். இம் மூன்று வினைச்சொற்களின் முதலெழுத்தினை வரிசைமுறைப்படி ஒன்றாகச் சேர்த்து உருவாக்கப்பட்ட பெயரே பதொமி ஆகும். இனி இவ் வினைகள் ஒவ்வொன்றுக்குமான விளக்கங்களைக் கீழே காணலாம்.

1. பகுத்தல்:

பகுத்தல் என்பது ஒரு பொருள்சார்ந்த அனைத்தையும் பல்வேறு பிரிவுகளின் கீழ் பிரித்து வைத்தலாகும். அவ்வகையில், பெண்களின் உடல் உறுப்புக்களைக் குறிப்பதான சொல் ஒவ்வொன்றையும், அவ் உறுப்பு குறித்து இலக்கியங்களில் கூறப்பட்டுள்ள உவமைகள், அவ் உறுப்புக்களில் அணியப்படும் அணிகள் மற்றும் அவ் உறுப்புக்களில் மேற்கொள்ளப்படும் செயல்பாடுகள் ஆகிய மூன்று பிரிவுகளாகப் பிரித்துக் கீழே காணலாம்.

அல்குல்:

உவமைகள்: நல்லபாம்பின் படப்பொறி, தேர்த்தட்டு, கடலலை, பொன் ஆலவட்டம், பூக்கூடை.
அணிகள்: பூமாலை, மேகலை, துகில்.
செயல்பாடுகள்: பசத்தல், திதலை / தித்தி வரைதல், வரி ஓவியம் வரைதல்.

அளகம்:

உவமைகள்: கார்மேகம், கருவண்டு, வில்.
அணிகள்: பூமாலை, பாரம்.
செயல்பாடுகள்: பூந்தாதுக்களைப் பூசுதல், மைபூசுதல்.

ஆகம்:

உவமைகள்: பூமொக்குகள்.
அணிகள்: இல்லை.
செயல்பாடுகள்: பூந்தாதுக்களைப் பூசுதல், பசத்தல், மைபூசுதல், சந்தனத்தால் வரைதல், நீர் ஊறுதல்.

இறை:

உவமைகள்: இல்லை.
அணிகள்: வளை, தொடி.
செயல்பாடுகள்: வளைநெகிழ்தல், இமைத்தல், மைபூசுதல், தீப்பிறத்தல்.

எயிறு:

உவமைகள்: முத்து, முல்லை, முருக்கம் மலர்மொட்டுக்கள்.
அணிகள்: இல்லை.
செயல்பாடுகள்: நீர் ஊறுதல், மைபூசுதல், தீப்பிறத்தல்.

ஐம்பால்:

உவமைகள்: கார்மேகம், அறல், நீலமணி, கருவண்டு.
அணிகள்: பூமாலை.
செயல்பாடுகள்: மைபூசுதல்.

ஓதி:

உவமைகள்: வாழைப்பூ, மின்னல்.
அணிகள்: பூமாலை.
செயல்பாடுகள்: பூந்தாதுக்களைப் பூசுதல், மைபூசுதல், ஒளிர்தல்.

கதுப்பு:

உவமைகள்: வேல், மயில்தோகை, கார்மேகம், பூவிதழ்.
அணிகள்: பூமாலை.
செயல்பாடுகள்: நறுமணப் பொருட்களைப் பூசுதல்.

குறங்கு:

உவமைகள்: வாழைப்பூ, யானைத்துதிக்கை.
அணிகள்: பூமாலை.
செயல்பாடுகள்: தித்தி, திதலை வரைதல்.

கூந்தல்:

உவமைகள்: கார்மேகம், யானைத்துதிக்கை, அறல், மரல் இலை, மயில்தோகை, செவ்வானம்.
அணிகள்: பூமாலை.
செயல்பாடுகள்: நறுமணப் பொருட்களைப் பூசுதல்.

கூழை:

உவமைகள்: நீலமணி.
அணிகள்: பூமாலை.
செயல்பாடுகள்: நறுமணப்பொருட்களைப் பூசுதல்.

கொங்கை:

உவமைகள்: நிலா, குங்குமச்சிமிழ், இளநீர்க்காய், பொற்கலசம்.
அணிகள்: பாரம்.
செயல்பாடுகள்: சந்தன குங்குமம் பூசுதல், பசத்தல், நீர் ஊறுதல், தீப்பிறத்தல்.

சிறுபுறம்:

உவமைகள்: யானைத்துதிக்கை, அறல்.
அணிகள்: பூமாலை.
செயல்பாடுகள்: மைபூசுதல்.

தோள்:

உவமைகள்: தெப்பம், மூங்கில் காய்.
அணிகள்: வளை, தொடி.
செயல்பாடுகள்: பூந்தாதுக்களைப் பூசுதல், பசத்தல், வளைநெகிழ்தல், மைபூசுதல்.

நுசுப்பு:

உவமைகள்: மின்னல், தாவரக்கொடி, நூலிழை.
அணிகள்: பூமாலை.
செயல்பாடுகள்: பூந்தாதுக்களைப் பூசுதல், மைபூசுதல், ஒளிர்தல்.

நுதல்:

உவமைகள்: நிலா, விண்மீன், வில்.
அணிகள்: பூமாலை.
செயல்பாடுகள்: பசத்தல், ஒளிர்தல், மைபூசுதல்.

மருங்குல்:

உவமைகள்: மின்னல், தாவரக்கொடி, நூலிழை.
அணிகள்: பூமாலை.
செயல்பாடுகள்: மைபூசுதல், ஒளிர்தல்.

முகம்:

உவமைகள்: நிலா, பளிங்கு, அனிச்சமலர்.
அணிகள்: இல்லை.
செயல்பாடுகள்: பசத்தல், ஒளிர்தல்.

முச்சி:

உவமைகள்: இல்லை.
அணிகள்: பூமாலை.
செயல்பாடுகள்: நறுமணப் பொருட்களைப் பூசுதல்.

முறுவல்:

உவமைகள்: முத்து, முல்லை மலர்மொக்கு, மூங்கில் காய், நிலா, மணி.
அணிகள்: இல்லை.
செயல்பாடுகள்: ஒளிர்தல்.

முலை:

உவமைகள்: மலர்மொக்குகள், பனைநுங்கு, முத்து, நீர்க்குமிழி, குங்குமச்சிமிழ்.
அணிகள்: பூமாலை, பாரம், துகில்.
செயல்பாடுகள்: பூந்தாதுக்களைப் பூசுதல், பசத்தல், மைபூசுதல், குங்கும சந்தனத்தால் எழுதுதல், தீப்பிறத்தல், நீர் ஊறுதல்.

மேனி:

உவமைகள்: மா இலை, மணி, பூவிதழ், மின்னல், செவ்வானம்.
அணிகள்: இல்லை.
செயல்பாடுகள்: பசத்தல், பூந்தாதுக்களைப் பூசுதல், ஒளிர்தல்.

வயிறு:

உவமைகள்: யாழ்ப்பத்தல், ஆல இலை.
அணிகள்: இல்லை.
செயல்பாடுகள்: திதலை, தித்தி வரைதல், கசக்குதல்.

2. தொகுத்தல்:

தொகுத்தல் என்பது தொடர்புடைய ஊர்/பகுதிகளை ஒரு குடையின் கீழ் கொண்டுவந்து ஆள்வதைப் போல, ஒரு பிரிவின் கீழ் தொடர்புடைய உறுப்புக்களைக் கொண்டுவருதல் ஆகும். அவ்வகையில் இங்கே, பெண்களின் உடல் உறுப்புக்கள் தொடர்பான சொற்களை, உவமைகள் என்னும் பிரிவின் கீழ், இயற்கைசார் பொருட்கள், தாவரம்சார் பொருட்கள், விலங்குசார் பொருட்கள் மற்றும் செயற்கைசார் பொருட்கள் என்று நான்கு வகைகளாகத் தொகுத்தும், செயல்பாடுகள் என்னும் பிரிவின் கீழ் இயற்கை வினையுறுதல் மற்றும் செயற்கை வினையுறுதல் என்று இரண்டு வகைகளாகத் தொகுத்தும், அணிகள் என்னும் பிரிவின் கீழ் தனியாகத் தொகுத்தும் காணலாம்.

(1) உவமைகள்:

அ. இயற்கைசார் பொருட்கள்:

1. செவ்வானம் - கூந்தல், மேனி.
2. கார்மேகம் - அளகம், ஐம்பால், கதுப்பு, கூந்தல்.
3. மின்னல் - ஓதி, நுசுப்பு, மருங்குல், மேனி.
4. நிலா - கொங்கை, நுதல், முகம், முறுவல்.
5. விண்மீன் - நுதல்.
6. கடல் அலை - அல்குல்
7. மழைநீர்க் குமிழி - முலை.

ஆ. தாவரம்சார் பொருட்கள்:

8. மா இலை - மேனி.
9. ஆல இலை - வயிறு.
10. மரல் இலை - கூந்தல்.
11. பூமொக்கு - ஆகம், எயிறு, முறுவல், முலை.
12. பூவிதழ் - கதுப்பு, மேனி.
13. அனிச்சமலர் - முகம்.
14. வாழைப்பூ - ஓதி, குறங்கு.
15. நுங்கு / இளநீர்க்காய் - கொங்கை, முலை.
16. மூங்கில் காய் - தோள், முறுவல்.
17. தாவரக்கொடி - நுசுப்பு, மருங்குல்.

இ. விலங்குசார் பொருட்கள்:

18. நல்லபாம்பின் படப்பொறி - அல்குல்.
19. கருவண்டு - அளகம், ஐம்பால்.
20. முத்து - எயிறு, முறுவல், முலை.
21. அறல் - ஐம்பால், கூந்தல், சிறுபுறம்.
22. பளிங்கு / மணி - ஐம்பால், கூழை, முகம், முறுவல், மேனி.
23. மயில்தோகை - கதுப்பு, கூந்தல்.
24. யானைத்துதிக்கை - குறங்கு, கூந்தல், சிறுபுறம்.

ஈ. செயற்கைசார் பொருட்கள்:

25. தேர்த்தட்டு - அல்குல்
26. பொன் ஆலவட்டம் - அல்குல்
27. பூக்கூடை - அல்குல்
28. வில் - அளகம், நுதல்.
29. வேல் - கதுப்பு.
30. குங்குமச்சிமிழ் - கொங்கை, முலை.
31. பொற்கலசம் - கொங்கை.
32. தெப்பம் / புணை - தோள்
33. யாழ்ப்பத்தல் - வயிறு.

(2) செயல்பாடுகள்:

அ. இயற்கை வினையுறுதல்:

1. பசத்தல் - அல்குல், ஆகம், கொங்கை, தோள், நுதல், முகம், முலை, மேனி.
2. தீப்பிறத்தல் - இறை, எயிறு, கொங்கை, முலை.
3. நீர் ஊறுதல் - எயிறு, கொங்கை, முலை, ஆகம்.
4. இமைத்தல் - இறை.
5. கசக்குதல் - வயிறு.
6. வளைநெகிழ்தல் - இறை, தோள்.

ஆ. செயற்கை வினையுறுதல்:

7. திதலை / தித்தி வரைதல் - அல்குல், குறங்கு, வயிறு.
8. பூந்தாதுக்களைப் பூசுதல் - அளகம், ஆகம், ஓதி, தோள், நுசுப்பு, முலை, மேனி.
9. மைகொண்டு பூசுதல் / வரைதல் - அல்குல், அளகம், ஆகம், இறை, எயிறு, ஐம்பால், ஓதி, சிறுபுறம், தோள், நுசுப்பு, நுதல், மருங்குல், முலை.
10. சந்தன / குங்குமம் பூசுதல் - ஆகம், கொங்கை, முலை.
11. நறுமணப் பொருட்களைப் பூசுதல் - கதுப்பு, கூந்தல், கூழை, முச்சி.
12. ஒளிர்தல் - ஓதி, நுசுப்பு, நுதல், மருங்குல், முகம், முறுவல், மேனி.

(3) அணிகள்:

பூமாலை: அல்குல், அளகம், ஐம்பால், ஓதி, கதுப்பு, குறங்கு, கூந்தல், கூழை, சிறுபுறம், நுசுப்பு, நுதல், மருங்குல், முச்சி, முலை.
மேகலை - அல்குல்.
துகில் - அல்குல், முலை.
பாரம் - அளகம், கொங்கை, முலை.
தொடி / வளை - இறை, தோள்.

3. மிகுத்தல்:

மிகுத்தல் என்பது இங்கே மேம்படச்செய்தல் என்னும் பொருளில் வந்துள்ளது. அதாவது, பகுத்தும் தொகுத்தும் மேலே கண்டவற்றை ஆய்வுசெய்து கருத்துக்களை மேம்படச்செய்தல். அவ்வகையில் இங்கே சிலவற்றை மட்டும் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டு முடிபுகளைக் காணலாம்.

1. உவமைகளின் கீழ்வரும் விலங்குசார் பொருட்களில் யானைத்துதிக்கையும் ஒன்றாகும். இதனைக் குறங்கு, கூந்தல், சிறுபுறம் ஆகிய மூன்று வகையான உறுப்புக்களுடன் உவமைப்படுத்தி இலக்கியங்கள் கூறியுள்ளன. இந்நிலையில், இந்த மூன்று பொருட்களுமே யானைத்துதிக்கையுடன் ஏதேனும் ஒருவகையில் ஒப்புமை கொண்டிருக்க வேண்டும் என்பது விதியாகும்!. இப்போது யானையின் துதிக்கையினை எடுத்துக்கொண்டால், அதன் சிறப்புக்கள் என்னென்ன?. (1) வரிகளை உடையது, (2) துளை உடையது. கருப்பு நிறத்தினைத் துதிக்கையின் சிறப்புப் பண்பாகக் கொள்ளமுடியாது. காரணம், யானையின் துதிக்கை மட்டுமல்ல, கால், உடல், வால், காது, முதுகு என்று அனைத்துமே கருப்பு நிறம் தான். இந்நிலையில்,

>கூந்தல் என்பதைத் தலைமயிராகக் கொண்டால், அதற்கும் துதிக்கைக்கும் ஒத்த பண்புள்ளதா?. ஒன்றுமில்லை.
>குறங்கு என்பதைத் தொடையாகக் கொண்டால், அதற்கும் துதிக்கைக்கும் ஒத்த பண்புள்ளதா?. ஒன்றுமில்லை.
>சிறுபுறம் என்பதை பிடர்/முதுகாகக் கொண்டால், அதற்கும் துதிக்கைக்கும் ஒத்த பண்புள்ளதா?. ஒன்றுமில்லை.
    
ஆய்வுசெய்ததில், இந்த மூன்று சொற்களுமே அதாவது கூந்தல், குறங்கு, சிறுபுறம் ஆகிய மூன்றுமே ஒரே பொருளைத் தான் குறித்து வந்துள்ளன. அப்பொருளானது யானையின் துதிக்கையினைப் போல பல வரிகளையோ துளையினையோ இவ் இரண்டையுமோ கொண்டிருக்க வேண்டும். யானையின் துதிக்கையினைப் போல துளையினை உடையதான நீண்ட உறுப்பு எதுவும் பெண்களுக்கு இல்லை என்பது அனைவரும் அறிந்த ஒன்றேயாகும். அதேசமயம், பெண்களின் கண்ணிமைகளின்மேல் பல வரிகள் இயற்கையாகவே அமைந்திருப்பதனைக் கண்டிருக்கிறோம். இந்த வரிகளைத் தான் யானையின் துதிக்கையில் இருக்கும் வரிகளுடன் ஒப்பிட்டுப் புலவர்கள் பாடியிருக்க வேண்டும். இதிலிருந்து, கூந்தல், குறங்கு, சிறுபுறம் ஆகிய சொற்களுக்குக் கண்ணிமை என்ற புதிய பொருளும் இருந்திருக்கவேண்டும் என்பது தெரியவருகிறது.

2. உவமைகளின் கீழ்வரும் இயற்கைசார் பொருட்களில் நிலாவும் ஒன்றாகும். இதனைக் கொங்கை, நுதல், முகம், முறுவல் ஆகிய நான்கு வகையான உறுப்புக்களுடன் உவமைப்படுத்தி இலக்கியங்கள் கூறியுள்ளன. இந்நிலையில், இந்த நான்கு பொருட்களுமே நிலவுடன் ஏதேனும் ஒருவகையில் ஒப்புமை கொண்டிருக்க வேண்டும் என்பது விதியாகும்!. இப்போது நிலவினை எடுத்துக்கொண்டால், அதன் சிறப்புக்கள் என்னென்ன?. (1) வெண்ணிற ஒளி வீசுவது. வட்டவடிவத்தினை நிலவின் சிறப்பாகக் கொள்ளமுடியாது. காரணம், கதிரவனும் கூட வட்டவடிவமாகவே அறியப்படுகிறான். இந்நிலையில்,

>கொங்கை என்பதை மார்பகங்களாகக் கொண்டால், அது வெண்ணிற ஒளி வீசுமா?. வீசாது.
>நுதல் என்பதை நெற்றியாகக் கொண்டால், அது வெண்ணிற ஒளி வீசுமா?. வீசாது.
>முகம் என்பதைத் தலையின் முன்பகுதியாகக் கொண்டால், அது வெண்ணிற ஒளி வீசுமா?. வீசாது.
>முறுவல் என்பதைப் பல்லாகக் கொண்டால், அது வெண்ணிற ஒளி வீசுமா?. வீசாது.
    
ஆய்வுசெய்ததில், இந்த நான்கு சொற்களுமே அதாவது கொங்கை, நுதல், முகம், முறுவல் ஆகிய நான்குமே ஒரே பொருளைத் தான் குறித்து வந்துள்ளன. அப்பொருளானது நிலவினைப் போல வெண்ணிற ஒளி வீசும் தன்மை கொண்டிருக்க வேண்டும். பெண்களின் பல்வேறு உடல் உறுப்புக்களில் அவரது கண்விழிகள் மட்டுமே இயற்கையாகவே வெண்ணிற ஒளிவீசுவதனைக் கண்டிருக்கிறோம். நிலவொளியைக் கண்டு அதனழகில் மதிமயங்குவதைப் போல பெண்களின் விழியொளியைக் கண்டு மயங்காத ஆடவருண்டோ?. அதுமட்டுமின்றி, நிலவில் களங்கம் இருப்பதைப் போல பெண்களின் விழிகளிலும் கருநிறக் கண்மணி உண்டு. எனவே, இக் கண்களைத் தான் வெள்ளொளி வீசும் நிலவுடன் ஒப்பிட்டுப் புலவர்கள் பாடியிருக்க வேண்டும். இதிலிருந்து, கொங்கை, நுதல், முகம், முறுவல் ஆகிய சொற்களுக்குக் கண்விழி என்ற புதிய பொருளும் இருந்திருக்கவேண்டும் என்பது தெரியவருகிறது

3. செயல்பாடுகளின் கீழ்வரும் இயற்கை வினையுறுதலில் தீப்பிறத்தல் என்ற வினையும் வருகிறது. இவ் வினையினை இறை, எயிறு, கொங்கை, முலை ஆகிய உறுப்புக்களுடன் தொடர்புறுத்தி இலக்கியங்கள் கூறியுள்ளன. இந்நிலையில், இந்த நான்கு உறுப்புக்களுமே தீ அல்லது வெப்பத்தினை ஏதேனும் ஒருவகையில் தோற்றுவிப்பனவாக இருக்க வேண்டும் என்பது விதியாகும்!. உடல் உறுப்புக்களில் தீயோ வெப்பமோ மிக்குத் தோன்றியிருப்பதை அதனில் காணப்படும் செம்மை நிறமே காட்டிவிடும். இந்நிலையில்,

>இறை என்பதை முன்கையாகக் கொண்டால், இதில் தீ / வெப்பத்தினால் செந்நிறம் தோன்றுமா?. தோன்றாது.
>எயிறு என்பதைப் பல்லாகக் கொண்டால், இதில் தீ / வெப்பத்தினால் செந்நிறம் தோன்றுமா?. தோன்றாது.
>கொங்கை என்பதை மார்பகங்களாகக் கொண்டால், இதில் தீ / வெப்பத்தினால் செந்நிறம் தோன்றுமா?. தோன்றாது.
>முலை என்பதை மார்பகங்களாகக் கொண்டால், இதில் தீ / வெப்பத்தினால் செந்நிறம் தோன்றுமா?. தோன்றாது.
    
ஆய்வுசெய்ததில், இந்த நான்கு சொற்களுமே அதாவது இறை, எயிறு, கொங்கை, முலை ஆகிய நான்குமே ஒரே உறுப்பினைத் தான் குறித்து வந்துள்ளன. அவ் உறுப்பானது தீ / வெப்பத்தினால் பாதிக்கப்பட்டுச் செந்நிறம் கொள்வதாய் இருக்க வேண்டும். பெண்களின் பல்வேறு உடல் உறுப்புக்களில் அவரது கண்விழிகள் மட்டுமே தீ  / வெப்பத்தினால் பாதிக்கப்பட்டுச் சிவந்து போவதனைக் கண்டிருக்கிறோம். அளவிறந்த துன்பம், அழுகை, சினம், நீராடல் போன்றவற்றாலும் புற வெப்பத்தினாலும் ஏனை உறுப்புக்களைக் காட்டிலும் கண்விழிகளே மிகவும் எளிதில் பாதிப்படைந்து சிவந்து விடுகின்றன. எனவே, இக் கண்களைத் தான் தீப்பிறத்தல் வினையுடன் தொடர்புறுத்திப் புலவர்கள் பாடியிருக்க வேண்டும். இதிலிருந்து, இறை, எயிறு, கொங்கை, முலை ஆகிய சொற்களுக்குக் கண்விழி என்ற புதிய பொருளும் இருந்திருக்கவேண்டும் என்பது தெரியவருகிறது.

4. செயல்பாடுகளின் கீழ்வரும் செயற்கை வினையுறுதலில் பூந்தாதுக்களைப் பூசுதல் என்ற வினையும் வருகிறது. இவ் வினையினை அளகம், ஆகம், ஓதி, தோள், நுசுப்பு, முலை, மேனி ஆகிய உறுப்புக்களுடன் தொடர்புறுத்தி இலக்கியங்கள் கூறியுள்ளன. பெண்கள் சுணங்கு எனப்படும் பூந்தாதுக்களை ஏன் தங்களது உறுப்புக்களின்மேல் பூசிக்கொள்ள வேண்டும்?. இரண்டு காரணங்கள் இருக்கலாம். (1). பூந்தாதுக்களின் நறுமணம் (2) பூந்தாதுக்களின் வண்ணம். அழகிய வண்ணமும் நறுமணமும் மிக்க பூந்தாதுக்களைத் தங்களது உறுப்புக்களின்மேல் பூசி அழகுசெய்து கொள்வது பெண்களின் பழக்கம். ஆனால், இதில் ஒரு சிக்கல் இருக்கிறது. பூந்தாதுக்களில் உள்ள தேனைக் குடிக்க விரும்பி வண்டுகள் அவற்றை மொய்த்தவாறு சுற்றிச்சுற்றி வரும். அதிகமான தாதுக்கள் என்றால் அதிகமான வண்டுகள் மொய்த்துத் தொல்லை கொடுக்குமல்லவா?. எனவே, வண்டுகளின் தொல்லையினைக் குறைத்துக்கொள்ள, பூந்தாதுக்களை மிகப் பெரிய பரப்பில் பூசிக்கொள்ளாமல் மிகச்சிறிய அளவிலான பரப்பிலேயே பூசி அழகுசெய்வர். ஆக, பூந்தாதுக்களைப் பூசி அழகுசெய்கின்ற உறுப்புக்கள் சிறியதாக இருக்கவேண்டும் என்பது எழுதப்படாத விதியாகும்!. இந்நிலையில்,

அளகமும் ஓதியும் தலைமயிரைக் குறிப்பதாகக் கொண்டால், இவை மிகப்பெரிய பரப்புடையவை ஆதலால் அவற்றில் பூந்தாதுக்களைப் பூசமாட்டார்கள்.
ஆகமும் முலையும் மார்பகங்களைக் குறிப்பதாகக் கொண்டால், இவற்றில் வண்டுகள் மொய்த்துத் தொல்லை கொடுப்பதனை விரும்ப மாட்டார்கள்.
தோள் என்பதை புஜமாகக் கொண்டால், இவையும் பெரிய பரப்புடையவை என்பதால் இவற்றில் பூந்தாதுக்களைப் பூசமாட்டார்கள்.
நுசுப்பு என்பதை இடுப்பாகக் கொண்டால், இதுவும் மிகப் பெரிய பரப்புடையது என்பதால் இதில் பூந்தாதுக்களைப் பூசமாட்டார்கள்.
மேனி என்பதை உடலாகக் கொண்டால், இதுவே மிகப் பெரிய பரப்புடையது என்பதால் இதில் பூந்தாதுக்களைப் பூசமாட்டார்கள்.
    
ஆய்வுசெய்ததில், இச் சொற்கள் அனைத்துமே அதாவது அளகம், ஆகம், ஓதி, தோள், நுசுப்பு, முலை, மேனி ஆகிய யாவுமே ஒரே உறுப்பினைத் தான் குறித்து வந்துள்ளன. அவ் உறுப்பானது மிகச்சிறிய பரப்பினைக் கொண்டதாக இருக்க வேண்டும். அப்படிப் பார்த்தால், அவ் உறுப்பானது மூக்காகவோ காதாகவோ கண்ணிமையாகவோ இருக்க வாய்ப்புண்டு. ஆனால், அவ் உறுப்பு துளையில்லாததாகவும் இருக்கவேண்டும். ஏனென்றால், துளையிருந்தால் வண்டுகள் மொய்க்கும்போது துளைக்குள் சென்றுவிடும் ஆபத்து இருக்கிறது. இதனடிப்படையில், மிச்சிறிய உறுப்பானதும் துளையற்றதுமாகிய கண்ணிமைகளே பூந்தாதுக்களைப் பூசி அழகு செய்வதற்கு ஏற்ற இடமாகப் பெண்களால் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. புலவர்களும் இக் கண்ணிமைகளைத் தான் பூந்தாதுக்களைப் பூசும் வினையுடன் தொடர்புறுத்திப் பாடியிருக்க வேண்டும். இதிலிருந்து, அளகம், ஆகம், ஓதி, தோள், நுசுப்பு, முலை, மேனி ஆகிய சொற்களுக்குக் கண்ணிமை என்ற புதிய பொருளும் இருந்திருக்கவேண்டும் என்பது தெரியவருகிறது.

முடிவுரை:

பதொமி என்ற இப் புதிய ஆய்வு அணுகுமுறையினால் பல பழந்தமிழ்ச் சொற்களுக்கு இன்றைய தமிழ் அகராதிகள் கூறியிருக்கும் பொருட்கள் பொருந்தாமல் போவதையும் அச் சொற்களுக்கான பொருந்தக்கூடிய புதிய பொருட்கள் எவை என்பதை அறிந்துகொள்ளவும் முடிவதை மேலே கண்டோம். இம் முறையினைப் பயன்படுத்தி இதேபோல ஏனைச் சொற்களுக்கும் புதிய பொருட்களைக் கண்டறியலாம்.

செவ்வாய், 15 ஆகஸ்ட், 2017

தமிழகப் பெண்கள் பூச்சூடுதல் - அன்றும் இன்றும்

முன்னுரை:

பூக்களை விரும்பி அணியாத பெண்களே இவ் உலகில் இல்லை எனலாம். கணினிக் காலமான தற்காலத்தில் மல்லிகை, முல்லை, பிச்சி, கனகாம்பரம், ரோசா, செம்பருத்தி முதலான பல்வேறு பூக்களைச் சாதிமத வேறுபாடின்றி தமிழ்ப் பெண்கள் தமது தலையில் சூடுவதை அன்றாடம் பார்க்கிறோம். அதுமட்டுமின்றி, இயற்கையான பூக்களுக்குப் போட்டியாக பலவகையான நெகிழிப்பூக்கள் இக்காலத்தில் தலைதூக்கியிருந்தாலும் அவற்றில் நறுமணம் இன்மையால் பலரும் இயற்கைப் பூக்களையே விரும்பிச் சூடுகின்றனர்.

அன்றியும், தற்காலத்தில் தமிழகப் பெண்கள் பூச்சூடுவதைக் கவனித்துப் பார்த்தோமானால், பெரும்பான்மையோர் தமது தலையின் பின்புறத்திலேயே பூக்களைச் சூடுவதை அறியலாம். இதைப் பார்க்கும்போது, இப்படி இவர்கள் தமது பின்னந்தலையில் உள்ள தலைமயிரில் பூக்களை அணிவதன் காரணம் என்ன?. இதுதான் பெண்கள் பூக்களைச் சூடிக்கொள்ளும் பொதுவான நடைமுறையா?. சங்ககாலம் தொட்டு இன்றுவரை தமிழ்ப் பெண்கள் இப்படித்தான் பூச்சூடினார்களா?. என்பது போன்ற கேள்விகள் எழுகிறது. இக் கேள்விகளுக்கான விடைகளைக் கண்டறியும் பொருட்டு சங்கால இலக்கியங்களை ஆய்வுக்கு உட்படுத்தியதில், பல புதிய தகவல்கள் கிடைத்தன. அவற்றை விளக்கமாகப் பின்வரும் பகுதிகளில் காணலாம்.

சங்க இலக்கியங்களில் பூக்கள்:

சங்க இலக்கியங்களில் பூக்கள் என்றாலே 'குறிஞ்சிப்பாட்டு' தான் முதலில் நினைவுக்கு வரும். சங்ககாலப் புலவரான கபிலர் தமது ' குறிஞ்சிப்பாட்டு ' என்னும் நூலில் 99 வகையான பூக்களைப் பற்றிக் குறிப்பிடுவதாகச் சொல்லப்படுகிறது. உண்மையில் அவர் நூற்றுக்கும் மேற்பட்ட பூக்களை அதில் குறிப்பிடுகிறார். ஆனால், வரி எண் 62 முதல் 96 வரையிலும் தொடர்ச்சியாக அவர் குறிப்பிடுகின்ற பூக்களின் தொகையை மட்டும் கணக்கில் எடுத்துக்கொண்டால், மொத்தம் 99 பூக்கள் வருகின்றன. இப் பூக்களின் எண்ணிக்கையைக் கணக்கிடும்பொழுது, 

> குறிஞ்சிப்பாட்டின் 96 ஆவது வரியில் வரும் அரக்கு, புழகு ஆகிய இரண்டு பூக்களின் பெயர்களும் கணக்கில் கொள்ளப்பட்டுள்ளன.

> நெய்தல்பூ இரண்டு இடங்களில் ( குலைநெய்தல், நீள்நெய்தல் ) வந்தாலும்  ஒரே பூவாகக் கொள்ளப்பட்டுள்ளது.

> மாம்பூ இரண்டு இடங்களில் ( தேமா, கலிமா ) வந்தாலும் ஒரே பூவாகக் கொள்ளப்பட்டுள்ளது.

இனி, அந்த 99 வகையான பூக்களின் பெயர்களையும் கீழே காணலாம்.

செங்காந்தள், ஆம்பல், அனிச்சம், குவளை, குறிஞ்சி, வெட்சி, செங்கோடு, வேரி, மா, மணிச்சிகை, உந்தூழ், கூவிளம், எறுழம், சுள்ளி, கூவிரம், வடவனம், வாகை, குடசம், எருவை, செருவிளை, கருவிளை, பயினி, வானி, குரவம், பசும்பிடி, வகுளம், காயா, ஆவிரை, வேரல், சூரல், பூளை, கண்ணி, குருகிலை, மருதம், கோங்கம், போங்கம், திலகம், பாதிரி, செருந்தி, அதிரல், சண்பகம், கரந்தை, குளவி, தில்லை, பாலை, முல்லை, குல்லை, பிடவம், சிறுமாரோடம், வாழை, வள்ளி, நெய்தல், தாழை, தளவம், தாமரை, ஞாழல், மௌவல், கொகுடி, சேடல், செம்மல், சிறுசெங்குரலி, கோடல், கைதை, நறுவழை, காஞ்சி, பாங்கர், மராம், தணக்கம், ஈங்கை, இலவம், கொன்றை, அடும்பு, ஆத்தி, அவரை, பகன்றை, பலாசம், பிண்டி, வஞ்சி, பித்திகம், சிந்துவாரம், தும்பை, துழாய், தோன்றி, நந்தி, நறவம், புன்னாகம், பாரம், பீரம், குருக்கத்தி, ஆரம், காழ்வை, புன்னை, நரந்தம், நாகம், நள்ளிருள்நாறி, குருந்தம், வேங்கை, அரக்கு, புழகு.

இந்த 99 வகையான பூக்களைத் தவிர, செயலை, தகரம், அகில், கடம்பு போன்ற மரங்களின் பெயர்களும் பாட்டில் ஆங்காங்கே குறிப்பிடப்பட்டுள்ளன.

சங்ககாலப் பெண்கள் சூடிய பூக்கள்:

சங்ககாலத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பூக்கும் தாவரங்கள் இருந்தன என்னும் கருத்தினை மேலே அறிந்துகொண்டோம். இவற்றில் அனைத்து வகையான பூக்களையும் சங்ககாலப் பெண்கள் சூடினார்களா என்றால் இல்லை. சங்காலப் பெண்கள் சூடிய சில பூக்களின் பெயர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

கொடிப்பூக்கள்: முல்லை, அதிரல், தளவம், வயலை.

கோட்டுப்பூக்கள்: காந்தள், மராம், தும்பை, வேங்கை, ஞாழல், புன்கம், செயலை, நொச்சி, பாதிரி, காஞ்சி, ஆவிரை, கோங்கு, தாழை.

நீர்ப்பூக்கள்: தாமரை, ஆம்பல், குவளை, நெய்தல், நீலம்.

சங்ககாலப் பெண்கள் இப்பூக்கள் ஒவ்வொன்றையும் தனித்தனியாகவோ பிற பூக்களுடன் கலந்தோ இலைகளுடன் கலந்தோ தொடுத்து அணிவதுண்டு. இவ்வாறு தொடுத்து அணியப்பட்ட பூக்களை, மாலை, தார், கண்ணி, பிணையல், தோடு, அலரி, தொடை, தொடலை, தழை, கோதை, காழ் போன்ற பல பெயர்களால் சங்கப் புலவர்கள் குறித்துள்ளனர்.

சங்ககாலப் பெண்கள் பூச்சூடிய இடங்கள்:

சங்ககாலத்தில் பெண்கள் தமது விருப்பத்திற்குரிய பூக்களைத் தமது உடலில் அணிந்து மகிழ்ந்திருந்த இடங்களாகக் கீழ்க்காண்பவற்றைச் சங்க இலக்கியங்கள் சுட்டுகின்றன.

1. நுதல். சான்று: ..... தண்கமழ் புதுமலர் நாறும் நறுநுதற்கே - அகம். 238.

2. அல்குல். சான்று: ..... பெருந்தண் மாத்தழை இருந்த அல்குல் .... - அகம். 230

3. முலை. சான்று: ... களரி ஆவிரைக் கிளர்பூங் கோதை
                    வண்ண மார்பின் வனமுலைத் துயல்வர... - அகம். 301
      
4. கூந்தல். சான்று: .... தண்நறு நெய்தல் நாறும் பின்இருங் கூந்தல்... - ஐங்கு. 173

5. கதுப்பு. சான்று: .... முல்லைப் பெருந்தார் கமழும் விருந்தொலி கதுப்பின்.. - அகம்.314

6. முச்சி. சான்று:.... மராஅத்துத் தேம்பாய் மெல்லிணர் தளிரொடு கொண்டு நின்
                   தண்நறு முச்சி புனைய, - அகம்.221

7. கூழை. சான்று: ... கண்ணேர் இதழ தண்நறுங் குவளை
                    குறுந்தொடர் அடைச்சிய நறும்பல் கூழை.. - அகம்.358

8. ஓதி. சான்று  :...  வேங்கைத் தண்கமழ் புதுமலர் நாறும் அஞ்சில் ஓதி... - அகம்.365       

9. ஐம்பால். சான்று: ...அணி மலர் முண்டகத்து ஆய் பூங்கோதை
                     மணி மருள் ஐம்பால் வண்டு படத் தைஇ ... - நற். 245

பூச்சூடிய இடமும் காரணமும்:

மேற்காணும் 9 இடங்களில், நுதல் என்பதற்கு நெற்றி என்றும் அல்குல் என்பதற்குப் பெண்களின் இடுப்பு / பெண்குறி என்றும் முலை என்பதற்குப் பெண்களின் மார்பகம் என்றும் கூந்தல், கதுப்பு, முச்சி, கூழை, ஓதி, ஐம்பால் ஆகிய சொற்களுக்குப் பெண்களின் தலைமயிர் என்றும் இற்றைத் தமிழ் அகராதிகள் பொருள் உரைக்கின்றன. அகராதிகள் காட்டும் பொருட்களின் அடிப்படையில் பார்த்தால், சங்ககாலப் பெண்கள் பூக்களைத் தமது

> நெற்றியில் அணிந்தனர் என்றும்
> இடுப்பு / பெண்குறியில் அணிந்தனர் என்றும்
> மார்பகங்களில் அணிந்தனர் என்றும்
> தலைமயிரில் அணிந்தனர் என்றும்

தெரியவருகிறது. இவற்றுள், பெண்கள் பூக்களைத் தமது நெற்றியில் சூடுவதற்கோ தலைமயிரில் சூடிக்கொள்வதற்கோ ஒரு காரணம் இருக்கிறது. அதுமட்டுமின்றி, இன்றும் பல பெண்கள் நெற்றியிலும் தலைமயிரிலும் பூச்சூடிக் கொள்வதைப் பார்க்கிறோம். இதைப்பற்றி விளக்கமாகப் பின்னர் பார்க்கலாம். ஆனால், இடுப்பிலோ பெண்குறியிலோ மார்பகங்களின் மீதோ பெண்கள் பூச்சூடிக் கொள்ள ஒரு காரணமும் இருப்பதாகத் தெரியவில்லை. இக்காலத்தில் கூட அப்படி யாரும் அணிவதில்லை. எனவே, சங்ககாலப் பெண்கள் பூச்சூடியிருக்க வாய்ப்புள்ள இடங்களாக அமைகின்ற ' நெற்றி ' மற்றும் 'தலைமயிர்' ஆகிய இரண்டில் எது பொருத்தமான இடம் என்பதைப் பற்றியும் அதற்கான காரணங்களைப் பற்றியும் பின்வரும் பகுதிகளில் விரிவாகக் காணலாம்.

சங்ககாலப் பெண்கள் பூச்சூடியது நெற்றியே:

சங்ககாலப் பெண்கள் பூச்சூடிய இடங்களாகக் கருதப்பட்ட நெற்றி, தலைமயிர் ஆகிய இரண்டு இடங்களையும் ஆய்வு செய்ததில் நெற்றியே மிகப் பொருத்தமான இடம் என்பது உறுதிசெய்யப்பட்டது. இக் கருத்தானது கீழ்க்காணும் ஆதாரங்களின் அடிப்படையில் நிறுவப்பட்டுள்ளது.

1. நுதலில் பூச்சூடுதல்
2. அல்குலில் பூச்சூடுதல்
3. வண்டுகள் பூக்களை மொய்த்தல்
4. வண்டுகளும் முயக்கமும்

இவ் ஆதாரங்களைப் பற்றித் தனித்தனியே விரிவாகக் காணலாம்.

நுதலில் பூச்சூடுதல்:

முதல் சான்றாக நுதல் என்பதைப் பற்றிக் காணலாம். சங்ககாலப் பெண்கள் தமது 'நுதல்' எனும் உறுப்பில் பூக்களை அணிந்திருந்ததைப் பற்றி ஏராளமான பாடல்கள் உள்ளன. அவற்றில் சில மட்டும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

.... காந்தள் மென்பிணி முகை அவிழ்ந்து அலர்ந்த
தண்கமழ் புதுமலர் நாறும் நறுநுதற்கே - அகம். 238

,,, தீம்பெரும் பைஞ்சுனைப் பூத்த
தேம்கமழ் புதுமலர் நாறும் இவள் நுதலே    - அகம். 78

....'சினையொண் காந்தள் நாறும் நறுநுதல் .....- அகம்.338

சங்ககாலப் பெண்களின் நுதலில் காந்தளும் நெய்தலும் தோன்றி மணந்ததை மேற்காணும் பாடல் வரிகள் நமக்கு நினைவூட்டுகின்றன. இப்பாடல்களில் வரும் நாறுதல் என்பதற்கு மணத்தல் எனினும் தோன்றுதல் எனினும் பொருந்தக்கூடியதே. இவ் இரண்டு பொருட்களையுமே அகராதிகள் காட்டுகின்றன. மேலும் இப்பாடல்களில் வரும் நுதல் என்பதற்குத் தற்கால அகராதிகள் 'நெற்றி' என்ற பொருளையே பெரிதும் பரிந்துரைக்கின்றன. ஆனால், இப்பாடல்களில் வரும் நுதல் என்பதற்கு 'கண் , கண்ணிமை ' ஆகிய புதிய பொருட்களும் உண்டென்று ' நுதலும் நுதலப்படாத கருத்துக்களும் ' என்ற ஆய்வுக்கட்டுரையில் முன்னரே கண்டுள்ளோம்.

இந்நிலையில், இப்பாடல்களில் வரும் 'நுதல்' என்ற சொல்லுக்கு 'நெற்றி' என்று பொருள்கொண்டாலும் சரி, 'கண், கண்ணிமை' என்று பொருள் கொண்டாலும் சரி, இரண்டுமே பொருந்தக்கூடியதே. காரணம், பெண்கள் தமது கண்ணிமைகளுக்கு மேலாக இருக்கும் நெற்றிப்பகுதியில் தான் பூக்களை அணிவது வழக்கம்.

அல்குலில் பூச்சூடுதல்:

இரண்டாவது சான்றாக, அல்குல் என்னும் சொல்லைப் பற்றிக் காணலாம். சங்ககாலத் தமிழ்ப்பெண்கள் தங்களது அல்குல் என்ற பகுதியிலும் பூக்களை விரும்பி அணிந்திருந்த செய்திகளை ஏராளமான சங்கப்பாடல்கள் கூறுகின்றன. அவற்றிலிருந்து சில பாடல்களை மட்டும் சான்றாகக் கீழே காணலாம்.

.....சிறுகருநெய்தல் கண்போல் மாமலர்ப்
பெருந்தண் மாத்தழை இருந்த அல்குல் .... - அகம். 230

கருங்கால் வேங்கைச் செம்பூம் பிணையல்
ஐதுஏந்து அல்குல் யாம் அணிந்து உவக்கும் ....- அகம்.345

வயல்மலர் ஆம்பல் கயில் அமை
நுடங்குதலைத் திதலை அல்குல் .... - ஐங்கு.72

மேற்காணும் பாடல்களில் பெண்கள் தமது அல்குலில் நெய்தல், வேங்கை, ஆம்பல் போன்ற மலர்களைத் தொடுத்து அணிந்திருந்த செய்திகள் கூறப்பட்டுள்ளன. இப்பாடல்களில் வரும் அல்குல் என்பது பெண்களின் இடுப்பு அல்லது பெண்குறியைக் குறிக்காது என்றும் அவர்களது நெற்றியினையே குறிக்கும் என்றும் 'அழகின் மறுபெயர் அல்குல் ' என்ற ஆய்வுக்கட்டுரையில் முன்னரே பல ஆதாரங்களுடன் விரிவாகக் கண்டுள்ளோம்.

பெண்கள் தமது நெற்றிப்பகுதியில் பூமாலைகளைத் தாழ்வாக அணிந்திருக்கும்போது அவை கண்ணிமைகளின் மேலாக அசைவதும் புரள்வதும் உண்டு. இவை பற்றிய செய்திகளைக் கூறும் பாடல்கள் கீழே:

வயல்மலர் ஆம்பல் கயில்அமை நுடங்குதலைத்
திதலை அல்குல் துயல்வரும் கூந்தல் .... - ஐங்கு.72

நெற்றியில் அணிந்திருந்த ஆம்பல்மலர் மாலையானது கூந்தல் ஆகிய இமைகளுக்கு மேலாக அசைவதைப் பற்றி மேற்காணும் பாடல் கூறுகிறது. பல்வகையான மலர்களைக் கொண்டு அழகாகத் தொடுத்த மாலையானது நெற்றியின் மேலிருந்தவாறு முச்சி ஆகிய இமைகளின்மேல் முழுவதுமாகப் புரண்டு புரண்டு அசைந்ததைப் பற்றிக் கீழ்க்காணும் பாடல் கூறுகிறது.

.... வணர்சுரி முச்சி முழுதுமன் புரள   
ஐதகல் அல்குல் கவின்பெறப் புனைந்த
பல்குழைத் தொடலை ..... - அகம்.390

இப்பாடல்களில் வரும் கூந்தல், முச்சி ஆகியவை பெண்களின் கண்ணிமைகளையும் குறிக்கும் என்று பெண்களின் கூந்தலுக்கு இயற்கையில் மணமுண்டா?, முச்சி என்றால் என்ன?. ஆகிய கட்டுரைகளில் முன்னரே கண்டுள்ளோம்.

வண்டுகள் பூக்களை மொய்த்தல்:

மூன்றாவதாக வந்தாலும் இதுவே மிக இன்றியமையாத சான்றாக விளங்குகிறது. பெண்கள் தமது உடலின் எந்த இடத்தில் பூக்களைச் சூடினாலும் அதில் உள்ள தேனைக் குடிக்க வண்டுகள் மொய்த்த செய்திகள் ஏராளமாக சங்ககாலப் புலவர்களால் பதிவுசெய்யப்பட்டுள்ளன. இவற்றுள் சில சான்றுகளை மட்டும் விளக்கமாகக் காணலாம்.

சான்று ஒன்று:

பெண்கள் தமது நுதலில் பூக்களை விரும்பி அணிந்தனர் என்று மேலே கண்டோம். அப்படி அணியும்போது அப் பூக்களில் உள்ள தேனைக் குடிக்க விரும்பி வண்டுகளும் சுரும்புகளும் அவரது நுதல் ஆகிய நெற்றி அல்லது கண் பகுதியினை மொய்த்தன. இதைப்பற்றிக் கூறுகின்ற சில இலக்கியப் பாடல்கள் கீழே தரப்பட்டுள்ளன.

.... காந்தள் நாறும் வண்டிமிர் சுடர்நுதல் குறுமகள் .... - ஐங்கு. 254
... சுறவுவாய் அமைத்த சுரும்புசூழ் சுடர்நுதல்... - பெரும்பாண்.
.....சுரும்பு இமிர் சுடர்நுதல் நோக்கி ..... - நற். 245

இப்பாடல்களில் வரும் நுதல் என்னும் சொல்லுக்கு நெற்றி என்று அகராதிப் பொருளைக் கொண்டாலும் சரி, கண் / கண்ணிமை என்ற புதிய பொருட்களைக் கொண்டாலும் சரி, பெண்கள் அப் பகுதியில் அணிந்திருந்த பூக்களை வண்டுகள் ஒலித்தவாறு மொய்த்தன என்ற செய்தி உறுதியாகிறது.

சான்று இரண்டு:

அடுத்து கூந்தல் என்னும் சொல்லைப் பற்றிக் காணலாம். சங்ககாலப் பெண்கள் தமது கூந்தலில் பூச்சூடியதைப் பற்றி ஏராளமான பாடல்கள் குறிப்பிடுகின்றன. கூந்தல் என்பதற்குப் பொதுவாக 'தலைமயிர்' என்ற பொருளையே அகராதிகள் குறித்தாலும் அச்சொல் பெண்களின் கண்ணிமையினையும் குறிக்கும் என்று முன்னர் கண்டுள்ளோம். இந்நிலையில், பெண்கள் தாம் விரும்பிய பூக்களைத் தமது தலையின் பின்புறத்தில் உள்ள தலைமயிரில் சூடினார்களா இல்லை கண்ணிமைகளுக்கு மேலாக உள்ள நெற்றிப் பகுதியில் சூடினார்களா என்ற ஐயம் எழுகிறது. இவ் இரண்டில் சரியான விடையினைக் கண்டறியும் முன்னர் கீழ்க்காணும் சில பாடல்களைக் காணலாம்.

.. அரும்புஅற மலர்ந்த ஆய்பூ மராஅத்துச்
சுரும்புசூழ் அலரி தைஇ வேய்ந்த நின்
தேம்பாய் கூந்தல் குறும்பல மொசிக்கும்
வண்டுகடிந்து ஓம்பல் தேற்றாய்... - அகம். 257

இப்பாடலில் தலைவியானவள் மராமரத்தின் மலர்களை மாலையாகக் கட்டித் தனது கூந்தலில் அணிந்திருக்கிறாள். அந்த மலர்களில் இருக்கும் தேனைக்குடிக்க வண்டுகள் அவற்றை மொய்க்கின்றன. அப்படி மொய்க்கின்ற வண்டுகளைத் தனது கைகளை வீசிவீசி விரட்டித் தோற்றுப்போகிறாள். இதுதான் இப்பாடல் வரிகள் கூறுகின்ற செய்தியாகும். இப்பாடலில் வரும் கூந்தல் என்பது பின்னந்தலை மயிராக இருந்தால், அவள் தனது பின்னந்தலையில் பூச்சூடி இருந்தாள் என்று பொருள்படும். அதேசமயம், பின்னந்தலையில் சூடி இருக்கும் பூக்களை வண்டுகள் மொய்த்தால் அவளுக்கு ஒரு பாதிப்பும் இல்லை என்பதால் கைகளை வீசிவீசி அவ் வண்டுகளை விரட்டத் தேவையில்லை என்பதுடன் கைகளைப் பின்னால் கொண்டுசென்று அவற்றை விரட்டவும் முடியாது. ஆனால் இப்பாடலோ, தலைவியானவள் தனது கைகளை வீசி வண்டுகளை விரட்டித் தோற்றுப்போன செய்தியைக் கூறுகிறது. இதிலிருந்து, அவள் அந்த மலர்மாலையினை கண்ணிமைகளுக்கு மேலாகத் தனது நெற்றியில் தான் அணிந்திருக்க வேண்டும் என்பதும் அந்த மலர்மாலையினை மொய்த்த வண்டுகளையே அவள் விரட்டுவதற்காக முயன்று தோற்றாள் என்பதும் தெள்ளத் தெளிவாகிறது.

சான்று மூன்று:

அடுத்து, சங்ககாலத்தில் முதலிரவின்போது புதுமனைவியின் நாணம் பற்றிக் கீழ்க்காணும் அகநானூற்றுப்பாடல் கூறுவதைப் பார்க்கலாம்.

.... உவர்நீங்கு கற்பின் எம் உயிர் உடம்படுவி!
முருங்காக் கலிங்கம் முழுவதும் வளைஇப்,   
பெரும்புழுக்குற்ற நின் பிறைநுதல் பொறிவியர்   
உறுவளி ஆற்றச் சிறுவரை திற' என
ஆர்வ நெஞ்சமொடு போர்வை வவ்வலின்   
உறைகழி வாளின் உருவுபெயர்ந்து இமைப்ப,   
மறைதிறன் அறியாள் ஆகி, ஒய்யென   
நாணினள் இறைஞ்சியோளே பேணிப்   
பரூஉப்பகை ஆம்பற் குரூஉத்தொடை நீவிச்   
சுரும்பிமிர் ஆய்மலர் வேய்ந்த
இரும்பல் கூந்தல் இருள்மறை ஒளித்தே - அகம். 136

முதலிரவின்போது மனைவியானவள் தனது சேலையினால் முழுவதும் தன்னை மறைத்து முகத்தையும் மூடியநிலையில் அமர்ந்திருக்கிறாள். ' உனக்கு வியர்த்திருக்கும்; காற்று வரட்டும் சிறிதே திறப்பாய் ' என்று கூறியவாறு அவளது முகத்தைக் காணும் ஆவலுடன் அவளது முகத்திரையினை மிகச்சிறிதே தூக்குகிறான் கணவன். உறையிலிருந்து உருவிய வாளினைப் போல ஒளிவீசுகின்ற அவளது கண்களைப் பார்க்கிறான். அவளோ தனது கண்களை மறைக்கும் வழியேதும் அறியாதவளாய் நாணத்தால் தலைகவிழவும், நெற்றியில் அணிந்திருந்த வண்டூதும் ஆம்பல் பூமாலை தாழ்ந்து இமைகளை அழுத்தவும் கண்களை மூடிக்கொள்கிறாள்.

இப்பாடலில் வரும் கூந்தல் என்பதற்குத் தலைமயிர் என்று பொருள்கொண்டால், அவள் ஆம்பல் பூமாலையினைத் தனது பின்னந்தலை மயிரில் அணிந்திருந்ததாகப் பொருள்படும். ஆனால், உண்மையிலேயே அவள் தனது பின்னந்தலைமயிரில் பூமாலை அணிந்திருந்தால், அவள் தனது உடல் முழுவதையும் ஆடைகொண்டு மூடிமறைத்திருந்த நிலையில் (பார்க்க: முருங்காக் கலிங்கம் முழுவதும் வளைஇ ) , அப் பூமாலையினை அவளது கணவன் கண்டிருக்க முடியாது. கண்டிருக்கவே முடியாது எனும்போது அதைப்பற்றிப் பேசவோ அதில் வண்டுகள் ஊதியதைப் பற்றிக் கூறவோ அவனால் இயலாது. மேலும், கூந்தல் என்பதற்குத் தலைமயிர் என்று பொருள்கொண்டால், வெட்கத்தினால் அவள் தனது பின்னந்தலை மயிரை முன்னால் எடுத்துப் போட்டுக்கொண்டுத் தனது கண்களை மறைத்ததாகப் (பார்க்க: இரும்பல் கூந்தல் இருள்மறை ஒளித்தே ) பொருள்வரும். ஆனால் எந்த ஒரு பெண்ணும் அவ்வாறு செய்யமாட்டார் குறிப்பாக மங்கலநாளாகிய மணநாளன்று யாரும் செய்யமாட்டார். இதிலிருந்து இப்பாடலில் வரும் கூந்தல் என்பது தலைமயிரைக் குறிக்காமல் கண்ணிமையைக் குறித்தே வந்துள்ளது என்பதும் அவள் பூமாலை அணிந்திருந்த இடம் நெற்றியே என்பதும் உறுதிசெய்யப்படுகிறது.

சான்று நான்கு:

அடுத்து கதுப்பு பற்றிக் காணலாம். பெண்கள் தமது கதுப்பிலும் பூக்களை அணிவது வழக்கம் என்று முன்னர் கண்டோம். கீழே வரும் ஐங்குறுநூற்றுப் பாடலை இன்னுமொரு சான்றாகக் கொள்ளலாம்.

.....புலிப்பொறி வேங்கைப் பொன்னிணர் கொய்துநின்
கதுப்பு அயல் அணியும் அளவை பைபய... - ஐங்கு.396

இப் பாடலில் வரும் கதுப்பு என்பதற்குக் ' கண்ணிமை ' என்ற பொருளும் உண்டென்று ' கதுப்பு - ஓதி - நுசுப்பு ' என்ற ஆய்வுக் கட்டுரையில் முன்னர் கண்டோம். வேங்கை மரத்தில் இருந்து பொன்போன்ற மலர்ச்சரத்தினைக் கொய்து தனது கண்ணிமைக்கு அருகில் இருப்பதான நெற்றியில் அணிந்தாள் என்று இப்பாடல் கூறுகிறது. அவள் பூக்களை அணிந்திருந்த இடம் 'நெற்றியே' என்பதற்குக் ' கதுப்பு அயல் ' என்ற சொல்லாடலே போதுமான சான்றாகும்.

சான்று ஐந்து:

வண்டுகளும் சுரும்புகளும் ஞிமிறுகளும் தாம் நெற்றியில் அணிந்திருந்த பூக்களைத் தொடர்ந்து விடாமல் மொய்த்ததால் கடுப்பாகிய இளம்பெண்கள் என்னென்ன செய்தார்கள் என்பதை ஒரு சங்ககால ஓவியம்போல கண்முன்னால் நிறுத்துகின்றன கீழ்க்காணும் கலித்தொகையின் 92 ஆம் பாடலின் வரிகள்.

.... ஒருத்தி, கணம் கொண்டு அவை மூசக், கை ஆற்றாள், பூண்ட
மணம் கமழ் கோதை பரிபு கொண்டு ஓச்சி
வணங்கு காழ் வங்கம் புகும்;

( பொருள்: வண்டுகள் கூட்டமாக மொய்க்கவும் அவற்றைக் கைகளால் விரட்ட இயலாதவளாக இறுதியில் தான் நெற்றியில் அணிந்திருந்த மணம் வீசும் பூமாலையினைப் பிடுங்கி எறிந்துவிட்டு வளைந்த மரக்கழிகளால் செய்யப்பட்ட மரக்கலத்தில் புகுந்தாள் ஒருத்தி. )

ஒருத்தி, இறந்த களியான் இதழ் மறைந்த கண்ணள்,
பறந்தவை மூசக் கடிவாள், கடியும்
இடம் தேற்றாள் சோர்ந்தனள் கை;

(பொருள்: சுரும்புகள் அளவிறந்து மொய்த்தலால் கண்களை இமைகளால் மூடியவள் பறந்துகொண்டிருந்த வண்டுகளைத் தனது கைகளால் விரட்ட முனைந்து விரட்டும் இடம் அறியாமல் தோற்றுக் கை சோர்ந்தாள் ஒருத்தி. )

ஆங்க, கடி காவில் கால் ஒற்ற, ஒல்கி ஒசியாக்
கொடி கொடி தம்மில் பிணங்கியவை போல்,
தெரி இழை ஆர்ப்ப மயங்கி இரிவுற்றார் வண்டிற்கு
வண்டலவர்; கண்டேன், யான்;

(பொருள்: மணம் வீசுகின்ற சோலையிலே காற்று வீச, அங்கிருந்த கொடிகள் அசைந்து ஒன்றுக்கொன்று தமக்குள் பின்னிக்கொண்டவை போல, பெண்கள் தமது நெற்றியில் அணிந்திருந்த பூமாலைகளும் இழைகளும் அசைந்து ஒன்றுக்கொன்று பின்னிக்கொள்ள, தம்மை விடாது மொய்த்து அலைக்கழிக்கின்ற வண்டுகளைக் கண்டு அஞ்சி ஓடினர். )

சான்று ஆறு:

அடுத்து பரிபாடல் காட்டும் காட்சி ஒன்றினையும் சான்றாகக் காணலாம்.

.... கண்டார்க்குத் தாக்கு அணங்கு, இக் காரிகை; காண்மின்:
பண்டாரம், காமன் படை, உவள் கண்; காண்மின்:
நீல நெய்தல் கோதையவர் விலக்க நில்லாது,
பூ ஊது வண்டினம் யாழ் கொண்ட கொளை கேண்மின். 125 - பரிபாடல்.

பொருள்: காண்பவர்க்கு அணங்காகும் இப்பெண்ணைப் பாருங்கள்; செல்வக் கிடங்கு போலும் காமனின் படை போலும் தோன்றும் அப் பெண்ணின் கண்ணைப் பாருங்கள். நீலமும் நெய்தலும் தொடுத்து நெற்றியில் அணிந்திருந்த மாலையினை வண்டுகள் மொய்க்கவும் அவற்றை அவர்கள் விலக்கவும் விலகாமல் மீண்டும் மொய்க்கின்ற அவ் வண்டுகளின் யாழ்போன்ற ஒலியினைக் கேளுங்கள். 

வண்டுகளும் முயக்கமும்:

பெண்கள் தமது நெற்றியில் அணிந்த பூக்களின் மீது வண்டுகள் மொய்த்தலால் எவ்வளவு துன்பத்திற்கு ஆளானார்கள் என்று மேலே கண்டோம். அதுமட்டுமின்றி, பெண்கள் தமது கூந்தல், முலை, கதுப்பு, ஓதி, முச்சி, கூழை, ஐம்பால் என்று பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுவதான இமைகளின்மேல் நெற்றியில் பூக்களை அணிந்தவாறு தமது காதலருடன் இரவில் முயங்கி இருக்கும்போது கூட வண்டுகள் அவர்களை மொய்க்கத் தவறவில்லை. கீழ்க்காணும் கலித்தொகை வரிகள் காட்டும் செய்தியைப் பார்க்கலாம்.

.... வீங்கு நீர் அவிழ் நீலம் பகர்பவர் வயல் கொண்ட   
ஞாங்கர் மலர் சூழ்தந்து, ஊர் புகுந்த வரி வண்டு,   
ஓங்கு உயர் எழில் யானைக் கனை கடாம் கமழ் நாற்றம்   
ஆங்கு அவை விருந்து ஆற்றப், பகல் அல்கிக், கங்குலான்,
வீங்கு இறை வடுக் கொள, வீழுநர்ப் புணர்ந்தவர்   
தேம் கமழ் கதுப்பின் உள் அரும்பு அவிழ் நறு முல்லைப்
பாய்ந்து ஊதிப் படர் தீர்ந்து ... - கலி.66

பொருள்: ...காலையிலே வயலில் பூத்திருந்த நீலமலர்களை ஊதியபின்னர் ஊருக்குள் புகுந்த வண்டுகள், யானையின் நாற்றம் மிக்க மதநீரைப் பருகி பகலெல்லாம் கழித்த பின்னர் இரவிலே காதலில் வீழும் இருவருக்கிடையே சென்று காதலியானவள் தனது நெற்றியில் புதிதாகக் கட்டி அணிந்திருந்த முல்லைப் பூக்களையும் விடாமல் பாய்ந்து ஊதி....

இப்படிக் காதலர்கள் முயங்கி இருக்கும்போதும் அவர்களுக்குத் தொல்லை கொடுத்தன தும்பிகளும் வண்டுகளும். இப்படித் தொல்லை கொடுத்தாலும் தமது முயக்கத்தில் இருந்து சிறிதும் விலகாமல் இருக்க வேண்டும் என்றே பெண்கள் விரும்பினர். இதைப்பற்றிக் கூறும் அகநானூற்றுப் பாடல் கீழே:

வண்டு இடைபடாஅ முயக்கமும் தண்டா காதலும் தலைநாள் போன்மே - அகம் 332/14,15

முயக்கம் என்றால் என்ன என்பதைப் பற்றி மேலும் விரிவாக அறிந்துகொள்ள 'சங்ககால முதலிரவும் காதலர் தினமும்', 'திருக்குறளில் முயக்கம்' , 'போகப்பொருளா பெண்கள்?' ஆகிய கட்டுரைகளைப் படிக்கலாம்.

முடிவுரை:

இதுவரை கண்ட சான்றுகளில் இருந்து சங்ககாலத்தில் பெண்கள் தமது நெற்றிப் பகுதியில் தான் பெரும்பாலும் பூக்களைச் சூடினர் என்பது உறுதிசெய்யப்படுகிறது. காதலன் காதலியின் நெற்றிப் பகுதியில் மணம் வீசும் பூக்களைச் சூட மையுண்ட அழகான இமைகளுக்கு மேலாக இருந்துகொண்டு அவை அசைவதைக் காண்பதில் காதலருக்குத் தனி இன்பம் தான் போலும். மூக்கிற்கு ஒரு நறுமணமும் தொடர்ந்து கிடைப்பதுடன் முகமானது இன்னும் பொலிவுடன் தோன்றும்.

நெற்றியில் பூக்களை அணிவதில் இவ்வளவு இன்பங்கள் இருந்தாலும் வண்டுகளினால் துன்பங்கள் இல்லாமல் இல்லை. இரவு பகல் என்றும் பாராமல் வண்டுகள் நெற்றியில் அணிந்த பூக்களை மொய்த்துத் தொல்லை கொடுத்தமையால் நாளடைவில் இப் பழக்கம் குறைந்து வழக்கற்றுப் போயிருக்க வேண்டும். அதற்காகப் பூக்களை அணியாமல் பெண்களால் இருக்கமுடியாதே. அதனால் வேறு வழியின்றி தலையின் பின்புற மயிரில் பூக்களைச் சூடிக் கொள்ளலாயினர். இப் புதிய பழக்கம் எப்போதிருந்து தோன்றியது என்பதை அறுதியிட்டுச் சொல்ல முடியாது. ஆனால், முதன்முதலில் தமிழ்ப் பெண்கள் தமது இமைகளுக்கு மேலாக நெற்றியில் தான் பூக்களை அணிந்தனர் என்னும் கருத்தானது ஆணித்தரமாக இக்கட்டுரையின் மூலம் உறுதிசெய்யப்படுகிறது.

சனி, 12 ஆகஸ்ட், 2017

திருமறைக்காடு - ஊரும் பெயரும் - இலக்கிய ஆய்வு

முன்னுரை:

'திருமறைக்காடு' - வேதாரண்யம் என்று வடமொழியில் பெயர் மாற்றம் செய்யப்பட்டுப் பல காலமாக வழக்கத்தில் இருந்துவருகின்ற சிவ வழிபாட்டுடன் தொடர்புடையதோர் இடம் ஆகும். சைவசமயக் குரவர்களான அப்பர், சுந்தரர், திருஞான சம்பந்தரால் பாடல்பெற்ற கோயில் இது. தமிழ்நாட்டில் தற்போதைய நாகப்பட்டினம் மாவட்டத்தில் கடலோரத்தில் அமைந்திருப்பதான இவ் ஊரைப் பற்றி பக்தி இலக்கியங்களில் கூறப்பட்டிருக்கின்ற செய்திகளையும் இவ் ஊருக்குத் 'திருமறைக்காடு' என்ற பெயர் ஏன் ஏற்பட்டது என்பதைப் பற்றியும் இக் கட்டுரையில் நாம் விரிவாகக் காணலாம்.

பக்தி இலக்கியத்தில் திருமறைக்காடு:

சைவசமய பக்தி இலக்கியமான தேவாரத்தில் அப்பர், சுந்தரர், திருஞான சம்பந்தர் ஆகியோர் திருமறைக்காட்டில் எழுந்தருளி இருக்கின்ற சிவபெருமானைப் பற்றி மொத்தம் நூறு பாடல்களைப் பாடியுள்ளனர். இவர்கள் ஒவ்வொருவரும் மறைக்காட்டினைப் பற்றிப் பாடியுள்ள பாடல்களின் எண்ணிக்கை கீழே:

திருஞானசம்பந்தர் 40 பாடல்கள்
திருநாவுக்கரசர் 50 பாடல்கள்
சுந்தரர் 10 பாடல்கள்

இவர்களது பாடல்களில் இருந்து அக்காலத்தில் மறைக்காட்டிற்கு 'மறைவனம்' மற்றும் 'வேதவனம்' என்ற பெயர்களும் இருந்தன என்னும் செய்தி பெறப்படுகிறது. மறைக்காட்டினைப் பற்றி இவர்கள் குறிப்பிடும்போது கீழ்க்காணும் பலவிதமான அடைமொழிகளைக் கொடுத்தே குறிப்பிட்டுள்ளனர்.

திருமறைக்காடு, எழில்மறைக்காடு, அணிமறைக்காடு,
முதுமறைக்காடு, தொன்மறைக்காடு,
மாமறைக்காடு, நான்மறைக்காடு.

இனி இவர்களது பாடல்களில் மறைக்காட்டின் இயற்கையும் இயல்பும் எப்படிச் சொல்லப்பட்டுள்ளது என்பதைக் காணலாம்.

மறைக்காட்டின் இயற்கை:

திருமறைக்காட்டின் இயற்கையினைப் பற்றித் தேவார மூவர் பாடியுள்ள பாடல்களில் இருந்து பெறப்பட்ட செய்திகளைக் கீழ்க்காணும் தலைப்புக்களின்கீழ்த் தொகுத்துக் காணலாம்.

1. கடல்வளம்
2. மண்வளம்
3. பிறவளம்

1. மறைக்காட்டின் கடல்வளம்:

திருமறைக்காடானது வங்கக் கடலோரம் அமைந்திருப்பதால் கடல்வளங்கள் மிக்கிருந்தது. கடல் அலைகள் ஒதுக்கிய முத்துக்கள் பகலிலும் ஒளிவீச அவ்வொளியானது கதிரொளியையும் விஞ்சியதாம். முத்துக்கள் மட்டுமின்றி ஏராளமான சங்குகளும் சலஞ்சலங்களும் வலம்புரிகளும் பவளங்களும் மிக்கிருந்தது மறைக்காட்டின் கடற்கரை.

மறைக்காட்டில் அடிக்கடி உயரமான அலைகள் சீற்றமுடன் எழுவதாக இன்றளவும் செய்திகளைப் பார்க்கிறோம். இந் நிகழ்வுகள் இக் காலத்தில் மட்டுமல்ல தேவார காலத்திலும் நடந்துள்ளன. நீரைத் தேக்கிவைத்திருக்கின்ற பெரும்பரப்புடைய அணையினைப் போன்ற மேகக்கூட்டங்களைத் தழுவவிரும்பிய கடலலைகள் மலைபோல் உயர்ந்து எழுந்தனவாம். மலைக்குன்று போல உயரமாய் எழுகின்ற கடல் அலைகள் கரையில் குவித்துவைத்த முத்துக்களை வில்போன்று வளைந்திருப்பதும் கொடிபோல மெலிந்திருப்பதுமான இமைகளை உடைய இளம்பெண்கள் கவர்ந்து சென்றனராம்.

சங்குகளும் முத்துக்களும் பவளங்களும் மிக்கதான கடலலைகள் பெரும் ஓதமாக தகரமரங்களும் தாழைகளும் ஞாழல்களும் வளர்ந்திருக்கும் கழிமுகச் சோலைக்குள் புகும்போது மகரம், சுறவம் போன்ற மீன்கள் கடற்கரையில் தெறித்து வீழும். மீன்வளம் மிக்கிருந்தபடியால் ஏராளமான மரக்கலங்கள் மறைக்காட்டின் கடலில் இயங்கியவண்ணம் இருந்தன.

தென்னைமரங்களும் பனைமரங்களும் தமது கனிகளை உதிர்த்துக் கிடந்த மணற்பரப்பிலே சங்குகளும் சிப்பிகளும் வலம்புரிகளும் மிகுதியாகக் குவிந்திருந்ததால் உயர்ந்த பாய்மரங்களுடன் கூடிய மரக்கலங்கள் தடம்மாறிக் கவிழ்ந்து கிடந்த நிலையானது அவையும் சிவபெருமானை வணங்குவதைப் போல இருந்ததாம்.

செப்புக்காசு போன்ற நிறத்ததுவும் கருமை நிறத்ததுவும் பொன் நிறத்ததுவுமாகிய பல்வேறு வகையான முத்துக்களை நீண்ட கடல்நீரின்மேல் வலையினை வீசி அள்ளிக் குவித்த வலைவாணர்கள் அவற்றை விலைபேசி விற்றனர். 

2. மறைக்காட்டின் மண் வளம்:

கருநிற மேகக்கூட்டங்கள் எப்போதும் தவழ்வதான பல சோலைகளை உடையது மறைக்காடு. இச் சோலைகளில் கடம்பம், குரவம், குருக்கத்தி, புன்னை, ஞாழல் போன்ற மரங்கள் நிறைந்திருந்தன. இம்மரங்களில் பூத்திருந்த மலர்களில் இருந்த தேனை உண்ட வண்டுகள் யாழ்போல இசைத்தபடி எங்கும் திரிந்தன. நிழல் மிக்க சோலைகளிலே வண்டுகள் ஒலிக்கப் பூத்திருந்த மாதவிப் பூக்களைத் தழுவியதால் அங்கு வீசிய தென்றலும் மணம் மிக்கிருந்தது.

கடற்கழிகளிலும் கடலை அடுத்த பகுதிகளிலும் நெய்தலும், ஆம்பலும், தாழைகளும் ஏராளமாய்ப் பூத்துக் குலுங்கின. கடல்நீரின் நடுநடுவே இருந்த கழிமுகப் பகுதிகளில் தாழைகள் பூத்து மணம் வீச அவற்றின் நடுநடுவே வெண் நாரைகள் தலையைத் தூக்கிப் பார்க்கின்ற தன்மையது மறைக்காடு. அறியாமை மிக்க வெண்நாரை ஒன்று தனக்குப் பக்கத்தில் இருந்த தாழையின் மலர்மொக்கினைத் தனது பெண்துணையென்று கருதித் தழுவியதாம். அதுமட்டுமின்றி, தாழைகள் பூத்திருந்த சோலையில் இருந்த சிறியவழியின் வழியாகச் செல்லும் குட்டிக் குரங்குகள் அடுத்திருந்த வாழைத்தோப்பில் இருந்து வாழைக்கனிகளைப் பறித்து உண்ணுமாம்.

திருமறைக்காட்டில் பரந்த வயல்வெளிகளில் செந்நெல் விளைந்தன. இவ் வயல்களில் தேங்கியிருந்த நீரில் மீன்கள் துள்ளிவிளையாடின. தென்னைமரங்களும் பனைமரங்களும் தமது கனிகளை கடற்கரையின் பரந்த மணற்பரப்பிலே உதிர்த்திருந்தன. 

3. மறைக்காட்டின் பிறவளங்கள்:

தேவாரப் பாடல்களில் இருந்து திருமறைக்காடானது அக்காலத்தில் கல்விவளத்திலும் இசைவளத்திலும் மிக்கிருந்ததாக அறியப்படுகிறது. பொருளுடைய இனிய தமிழ்ச்சொற்களைத் தேர்ந்தெடுத்துப் பெண்கள் பாடவும் அதைச் செவிமடுத்த ஆண்கள் பல்வேறு திசைகளிலும் அப்படியே கூற பெரும் இசைப்பயிற்சியை உடையதாய் இருந்தது மறைக்காடு. அதுமட்டுமின்றி, தேர்த்திருவிழாவின்போது உயர்ந்த மாடங்கள் நிறைந்த தெருக்களிலே தேர் அசைந்துவரும்போது சங்குகள் முழக்கப்படவும் முரசுகள் அறையப்படவும் நறுமணப்பூக்களை அணிந்த பெண்கள் ஒவ்வொருநாளும் நல்ல இசைப்பாடல்களைப் பாடவும் ஆக பல்வேறு ஒலிகளால் நிறைந்து இருந்தது மறைக்காடு.

இசைவளத்தில் மட்டுமல்ல பொருள்வளத்திலும் மனவளத்திலும் மிக்கிருந்தது மறைக்காடு. திருவிழாக்கள் செல்வச்செழிப்புடன் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டன. பொருட்செல்வம் மிக்கிருந்தாலும், மறைக்காட்டு மக்கள் மரங்களைப் போல பலனை எதிர்பாராமல் பிறருக்குக் கொடுத்துதவினர். மக்களின் பல்வேறு துயர்களை ஒழிக்க நினைத்து, அறம் செய்வதனை விரும்பி, அறிஞர்கள் வறுமையில் இருந்து விடுபடுதலை மதித்துப் பெரும்பொருள் தந்து உதவுகின்ற நல்லவர்கள் நிறைந்திருந்தது மறைக்காடு.

மறைக்காட்டுச் சிவன் கோவிலும் வழிபாடும்;

இதுவரை மறைக்காட்டின் இயற்கை வளங்களைக் கண்டோம். இனி, மறைக்காட்டில் எழுந்தருளி இருக்கின்ற இறைவனாகிய சிவபெருமானின் திருக்கோவிலைப் பற்றியும் அங்கு நடந்த வழிபாடுகளைப் பற்றியும் தேவாரப் பாடல்கள் கூறுகின்ற செய்திகளைப் பார்க்கலாம்.

மறைக்காட்டு இறைவனின் திருக்கோவிலானது கடலுக்கு மிக அருகிலேயே அமைந்திருந்தபடியால், கோவிலைச் சுற்றிலும் மலைபோல உயரமான சுற்றுச்சுவர்கள் அமைக்கப்பட்டிருந்தன. அதுமட்டுமின்றி, கோவிலைச் சுற்றிலும் ஏராளமான மரங்களும் இயற்கை அரணாக நிறைந்திருந்தன.

மறைக்காட்டில் இரவிலும் பகலிலும் பக்தர்கள் இறைவனை வணங்கினர். ஒலிக்கின்ற கடலினைத் தியானித்தவாறு சிவன் கோவிலைப் பெண்கள் வலம்வந்து வணங்கினர். உலகமே தூங்கும் பொழுதிலும் தூக்கமின்றி இறைவனைப் போற்றியவாறு வலம்வருகின்ற மனத்தூய்மை கொண்டோர் நிறைந்தது மறைக்காடு. இப்படிப் பல மெய்யன்புடைய பக்தர்களும் சித்தர்களும் நிறைந்தது மறைக்காடு.

அதுமட்டுமின்றி, மலர்மறையவன் ஆகிய பிரம்மனும் சிவபெருமானை மறையோதி வழிபட்டான். நான்மறைகளும் சிவனை வழிபட்டன. வானவர்களும் மாதவர்களும் சிவபெருமானை வழிபட்டனர். வேதங்கள் பல காலங்களாகத் தொடர்ந்து மலர்களைச் சொரிந்து சிவபெருமானின் பாதங்களைப் போற்றி வழிபட்டன. பலகோடி உருத்திரர்களும் தங்கள் தலைவன் என்று சிவபெருமானை வாழ்த்திப் பாடினர். வேதங்கள் சிவபெருமானின் திருவடியில் பலவித நறுமணப் பூக்களைச் சொரிந்து அலையோசையினால் வாழ்த்திப் போற்றின.

மறைக்காடா மரைக்காடா?:

மறைக்காடு என்ற ஊர்ப்பெயர் குறித்து இரண்டு விதமான கருத்துக்கள் நிலவுகின்றன. மறைக்காடு என்னும் பெயரில் வரும் மறை என்பது வேதங்களைக் குறிக்கும் என்பதே பெரும்பான்மையோர் கருத்தாகும். ஆனால் ஒருசிலர், மறைக்காடு என்னும் பெயரே தவறானது என்றும் உண்மையில் மரைக்காடு என்பதே சரி என்றும் இவ் ஊரில் மரைகள் அதாவது மான்களும் குதிரைகளும் ஏராளமாக வாழ்ந்ததால் தான் இவ் ஊருக்கு மரைக்காடு என்ற பெயர் உண்டானது என்றும் கருதுகின்றனர். உண்மையில் இந்த இரண்டாவது கருத்து அதாவது மரைக்காடு என்பது தவறானதாகும். இதற்கான காரணங்கள் கீழே காட்டப்பட்டுள்ளன.

1. மறைக்காட்டின் இயற்கை வளங்களைப் பற்றி மிக விரிவாக மேலே கண்டோம். மறைக்காட்டின் இயற்கையினைப் பற்றிப் பாடிய தேவார மூவர்களில் ஒருவர்கூட தமது பாடல்களில் அங்கு வாழ்ந்த மான்களைப் பற்றியோ குதிரைகளைப் பற்றியோ குறிப்பிடவில்லை.

2. உண்மையிலேயே மான்களும் குதிரைகளும் மறைக்காட்டில் அதிகமாக வாழ்ந்திருந்தால், அதன் காரணத்தாலேயே அவ் ஊருக்கு அப்பெயர் ஏற்பட்டிருந்தால் அதனைக் கண்டிப்பாகப் பாடல்களில் சுட்டிக் காட்டியிருப்பார்கள். ஆனால் ஒரு பாடலில் கூட அதற்கான குறிப்புக்கள் இல்லை.

3. மறைக்காட்டிற்கு 'வேதவனம்' என்ற பெயரும் இருந்ததாகப் பல பாடல்களில் இருந்து அறியமுடிகிறது. இதிலிருந்து, இவ் ஊர்ப்பெயரில் வரும் மறை என்பது வேதத்தைக் குறித்து வந்துள்ளதே அன்றி அதற்கும் மரைக்கும் சிறிதும் தொடர்பில்லை என்பது உறுதிசெய்யப்படுகிறது.

மறைக்காடு - பெயர்க் காரணம்:

மறைக்காடு என்ற பெயர் அவ் ஊருக்கு ஏற்பட என்ன காரணம் என்பதை இங்கே காணலாம். மறைக்காடு பற்றித் தேவார மூவர் பாடியுள்ள பாடல்களில் இருந்து கீழ்க்காணும் கருத்துக்கள் பெறப்பட்டுள்ளன.

1. வேதங்கள் பல காலங்களாகத் தொடர்ந்து மலர்களைச் சொரிந்து சிவபெருமானின் பாதங்களைப் போற்றி வழிபட்டன.
  ( ஆதாரம்: இரண்டாம் திருமுறை: திருமறைக்காடு: 6 ஆவது பாடல் )

..... பலகாலங்கள் வேதங்கள் பாதங்கள் போற்றி
மலரால் வழிபாடுசெய் மாமறைக்காடா - தேவா. 2/6

2. வேதங்கள் சிவபெருமானின் திருவடியில் பலவித நறுமணப் பூக்களைச் சொரிந்து அலையோசையினால் வாழ்த்திப் போற்றின.  ( ஆதாரம்: இரண்டாம் திருமுறை: திருமறைக்காடு: 10 ஆவது பாடல் )

.... வேதம் பல ஓமம் வியந்து அடிபோற்ற
ஓதம் உலவும் மறைக்காட்டில் உறைவாய் - தேவா. 2/10

இப்பாடலில் வரும் ஓமம் என்பது ஓமத்தீயினையோ ஓமப்புகையினையோ குறித்து வரவில்லை; மாறாக, ஓமப்புகையினைப் போல எங்கும் பரந்து மணம் வீசுவதான நறுமணம் கமழும் பூக்களைக் குறித்தே வந்துள்ளது. சான்றாக, நறுமணம் வீசுவதால் கற்பூரவல்லிக்கு ஓமவல்லி என்ற பெயரும் உண்டு. ஓமத்திரவியம், ஓமப்பொடி ஆகியவை அப் பொருளின் வாசனையால் உண்டான பெயர்கள்.

மேற்காணும் கருத்துக்களை ஆராய்ந்து பார்க்குமிடத்து, வேதங்கள் மரங்களின் வடிவாகக் கோவிலைச் சுற்றிநின்று பூக்களைச் சொரிந்து அலையோசையினால் வாழ்த்தி வழிபட்டன என்னும் கருத்தினை எளிதாக அறிந்துகொள்ளலாம். உண்மை என்னவெனில், கோவிலைச் சுற்றி இருந்த காட்டுமரங்கள் கடல்நீரைத் தடுத்தது மட்டுமின்றி கடல்அலைகளின் ஆரவாரத்தினை உள்வாங்கிப் பெருக்கி 'ஓம்' என்பதைப் போல ஒரு ஒலியினை எப்போதும் ஒலித்துக் கொண்டிருந்தன. இது சில இயற்கைச் சூழ்நிலைகளில் நடக்கக்கூடிய ஒன்றேயாகும். மக்கள் இந்த மரங்களுக்கிடையில் செல்லும்போது 'ஓம்' என்பதைப் போல ஒரு ஒலி கேட்டுக்கொண்டிருந்தபடியால், இந்த மரங்கள் வேதம் ஓதுவாகக் கருதி ' மறையினை ஓதும் காடு ' என்ற பொருளில் அவ் ஊருக்கு 'மறைக்காடு' என்ற பெயர் சூட்டினர். அதுவே பின்னாளில் வேதங்களே மரங்களாக மாறிநின்று இறைவனைப் போற்றுகின்றன என்பதாகப் புரிந்துகொள்ளப்பட்டு விட்டது. இயற்கை நிகழ்வுகளை இறைவன்மேல் சார்த்திக் கூறுவதுடன் நின்றுவிடாமல் பின்னர் அதைப் புராணமாக்குவதும் மக்களின் இயல்புதான் என்பதற்கு மறைக்காடு ஒரு நல்ல சான்றாகும்.