சனி, 26 ஆகஸ்ட், 2017

பதொமியும் சொற்பொருள் ஆய்வுகளும்

முன்னுரை:

பதொமியும் சொற்பொருள் ஆய்வுகளும் என்ற இக் கட்டுரையில் சொல்-பொருள் ஆய்வுகளை மேற்கொள்வதற்கான புதிய அணுகுமுறை விளக்கப்படுகிறது. இதுபோன்ற அணுகுமுறை பிறவகையான ஆய்வுகளில் ஏற்கெனவே புழக்கத்தில் இருந்திருக்கலாம். ஆனால், சொல்-பொருள் ஆய்வில் இந்த அணுகுமுறையானது இப்போதுதான் முதன்முதலில் பயன்பாட்டில் வருகிறது. இப் புதிய அணுகுமுறையினால் பழந்தமிழ்ச் சொற்களின் உண்மையான பொருட்களை எளிதில் இனங்கண்டு அறிய முடிகிறது. இந்த அணுகுமுறையானது பதொமி என்ற காரணப்பெயரால் இக்கட்டுரையில் குறிப்பிடப் பட்டிருக்கிறது.

பதொமி என்பது என்ன?.

பதொமி - பகுத்தல், தொகுத்தல், மிகுத்தல் ஆகிய மூன்று வினைகளை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்டப் புதியதோர் ஆய்வு அணுகுமுறை ஆகும். இம் மூன்று வினைச்சொற்களின் முதலெழுத்தினை வரிசைமுறைப்படி ஒன்றாகச் சேர்த்து உருவாக்கப்பட்ட பெயரே பதொமி ஆகும். இனி இவ் வினைகள் ஒவ்வொன்றுக்குமான விளக்கங்களைக் கீழே காணலாம்.

1. பகுத்தல்:

பகுத்தல் என்பது ஒரு பொருள்சார்ந்த அனைத்தையும் பல்வேறு பிரிவுகளின் கீழ் பிரித்து வைத்தலாகும். அவ்வகையில், பெண்களின் உடல் உறுப்புக்களைக் குறிப்பதான சொல் ஒவ்வொன்றையும், அவ் உறுப்பு குறித்து இலக்கியங்களில் கூறப்பட்டுள்ள உவமைகள், அவ் உறுப்புக்களில் அணியப்படும் அணிகள் மற்றும் அவ் உறுப்புக்களில் மேற்கொள்ளப்படும் செயல்பாடுகள் ஆகிய மூன்று பிரிவுகளாகப் பிரித்துக் கீழே காணலாம்.

அல்குல்:

உவமைகள்: நல்லபாம்பின் படப்பொறி, தேர்த்தட்டு, கடலலை, பொன் ஆலவட்டம், பூக்கூடை.
அணிகள்: பூமாலை, மேகலை, துகில்.
செயல்பாடுகள்: பசத்தல், திதலை / தித்தி வரைதல், வரி ஓவியம் வரைதல்.

அளகம்:

உவமைகள்: கார்மேகம், கருவண்டு, வில்.
அணிகள்: பூமாலை, பாரம்.
செயல்பாடுகள்: பூந்தாதுக்களைப் பூசுதல், மைபூசுதல்.

ஆகம்:

உவமைகள்: பூமொக்குகள்.
அணிகள்: இல்லை.
செயல்பாடுகள்: பூந்தாதுக்களைப் பூசுதல், பசத்தல், மைபூசுதல், சந்தனத்தால் வரைதல், நீர் ஊறுதல்.

இறை:

உவமைகள்: இல்லை.
அணிகள்: வளை, தொடி.
செயல்பாடுகள்: வளைநெகிழ்தல், இமைத்தல், மைபூசுதல், தீப்பிறத்தல்.

எயிறு:

உவமைகள்: முத்து, முல்லை, முருக்கம் மலர்மொட்டுக்கள்.
அணிகள்: இல்லை.
செயல்பாடுகள்: நீர் ஊறுதல், மைபூசுதல், தீப்பிறத்தல்.

ஐம்பால்:

உவமைகள்: கார்மேகம், அறல், நீலமணி, கருவண்டு.
அணிகள்: பூமாலை.
செயல்பாடுகள்: மைபூசுதல்.

ஓதி:

உவமைகள்: வாழைப்பூ, மின்னல்.
அணிகள்: பூமாலை.
செயல்பாடுகள்: பூந்தாதுக்களைப் பூசுதல், மைபூசுதல், ஒளிர்தல்.

கதுப்பு:

உவமைகள்: வேல், மயில்தோகை, கார்மேகம், பூவிதழ்.
அணிகள்: பூமாலை.
செயல்பாடுகள்: நறுமணப் பொருட்களைப் பூசுதல்.

குறங்கு:

உவமைகள்: வாழைப்பூ, யானைத்துதிக்கை.
அணிகள்: பூமாலை.
செயல்பாடுகள்: தித்தி, திதலை வரைதல்.

கூந்தல்:

உவமைகள்: கார்மேகம், யானைத்துதிக்கை, அறல், மரல் இலை, மயில்தோகை, செவ்வானம்.
அணிகள்: பூமாலை.
செயல்பாடுகள்: நறுமணப் பொருட்களைப் பூசுதல்.

கூழை:

உவமைகள்: நீலமணி.
அணிகள்: பூமாலை.
செயல்பாடுகள்: நறுமணப்பொருட்களைப் பூசுதல்.

கொங்கை:

உவமைகள்: நிலா, குங்குமச்சிமிழ், இளநீர்க்காய், பொற்கலசம்.
அணிகள்: பாரம்.
செயல்பாடுகள்: சந்தன குங்குமம் பூசுதல், பசத்தல், நீர் ஊறுதல், தீப்பிறத்தல்.

சிறுபுறம்:

உவமைகள்: யானைத்துதிக்கை, அறல்.
அணிகள்: பூமாலை.
செயல்பாடுகள்: மைபூசுதல்.

தோள்:

உவமைகள்: தெப்பம், மூங்கில் காய்.
அணிகள்: வளை, தொடி.
செயல்பாடுகள்: பூந்தாதுக்களைப் பூசுதல், பசத்தல், வளைநெகிழ்தல், மைபூசுதல்.

நுசுப்பு:

உவமைகள்: மின்னல், தாவரக்கொடி, நூலிழை.
அணிகள்: பூமாலை.
செயல்பாடுகள்: பூந்தாதுக்களைப் பூசுதல், மைபூசுதல், ஒளிர்தல்.

நுதல்:

உவமைகள்: நிலா, விண்மீன், வில்.
அணிகள்: பூமாலை.
செயல்பாடுகள்: பசத்தல், ஒளிர்தல், மைபூசுதல்.

மருங்குல்:

உவமைகள்: மின்னல், தாவரக்கொடி, நூலிழை.
அணிகள்: பூமாலை.
செயல்பாடுகள்: மைபூசுதல், ஒளிர்தல்.

முகம்:

உவமைகள்: நிலா, பளிங்கு, அனிச்சமலர்.
அணிகள்: இல்லை.
செயல்பாடுகள்: பசத்தல், ஒளிர்தல்.

முச்சி:

உவமைகள்: இல்லை.
அணிகள்: பூமாலை.
செயல்பாடுகள்: நறுமணப் பொருட்களைப் பூசுதல்.

முறுவல்:

உவமைகள்: முத்து, முல்லை மலர்மொக்கு, மூங்கில் காய், நிலா, மணி.
அணிகள்: இல்லை.
செயல்பாடுகள்: ஒளிர்தல்.

முலை:

உவமைகள்: மலர்மொக்குகள், பனைநுங்கு, முத்து, நீர்க்குமிழி, குங்குமச்சிமிழ்.
அணிகள்: பூமாலை, பாரம், துகில்.
செயல்பாடுகள்: பூந்தாதுக்களைப் பூசுதல், பசத்தல், மைபூசுதல், குங்கும சந்தனத்தால் எழுதுதல், தீப்பிறத்தல், நீர் ஊறுதல்.

மேனி:

உவமைகள்: மா இலை, மணி, பூவிதழ், மின்னல், செவ்வானம்.
அணிகள்: இல்லை.
செயல்பாடுகள்: பசத்தல், பூந்தாதுக்களைப் பூசுதல், ஒளிர்தல்.

வயிறு:

உவமைகள்: யாழ்ப்பத்தல், ஆல இலை.
அணிகள்: இல்லை.
செயல்பாடுகள்: திதலை, தித்தி வரைதல், கசக்குதல்.

2. தொகுத்தல்:

தொகுத்தல் என்பது தொடர்புடைய ஊர்/பகுதிகளை ஒரு குடையின் கீழ் கொண்டுவந்து ஆள்வதைப் போல, ஒரு பிரிவின் கீழ் தொடர்புடைய உறுப்புக்களைக் கொண்டுவருதல் ஆகும். அவ்வகையில் இங்கே, பெண்களின் உடல் உறுப்புக்கள் தொடர்பான சொற்களை, உவமைகள் என்னும் பிரிவின் கீழ், இயற்கைசார் பொருட்கள், தாவரம்சார் பொருட்கள், விலங்குசார் பொருட்கள் மற்றும் செயற்கைசார் பொருட்கள் என்று நான்கு வகைகளாகத் தொகுத்தும், செயல்பாடுகள் என்னும் பிரிவின் கீழ் இயற்கை வினையுறுதல் மற்றும் செயற்கை வினையுறுதல் என்று இரண்டு வகைகளாகத் தொகுத்தும், அணிகள் என்னும் பிரிவின் கீழ் தனியாகத் தொகுத்தும் காணலாம்.

(1) உவமைகள்:

அ. இயற்கைசார் பொருட்கள்:

1. செவ்வானம் - கூந்தல், மேனி.
2. கார்மேகம் - அளகம், ஐம்பால், கதுப்பு, கூந்தல்.
3. மின்னல் - ஓதி, நுசுப்பு, மருங்குல், மேனி.
4. நிலா - கொங்கை, நுதல், முகம், முறுவல்.
5. விண்மீன் - நுதல்.
6. கடல் அலை - அல்குல்
7. மழைநீர்க் குமிழி - முலை.

ஆ. தாவரம்சார் பொருட்கள்:

8. மா இலை - மேனி.
9. ஆல இலை - வயிறு.
10. மரல் இலை - கூந்தல்.
11. பூமொக்கு - ஆகம், எயிறு, முறுவல், முலை.
12. பூவிதழ் - கதுப்பு, மேனி.
13. அனிச்சமலர் - முகம்.
14. வாழைப்பூ - ஓதி, குறங்கு.
15. நுங்கு / இளநீர்க்காய் - கொங்கை, முலை.
16. மூங்கில் காய் - தோள், முறுவல்.
17. தாவரக்கொடி - நுசுப்பு, மருங்குல்.

இ. விலங்குசார் பொருட்கள்:

18. நல்லபாம்பின் படப்பொறி - அல்குல்.
19. கருவண்டு - அளகம், ஐம்பால்.
20. முத்து - எயிறு, முறுவல், முலை.
21. அறல் - ஐம்பால், கூந்தல், சிறுபுறம்.
22. பளிங்கு / மணி - ஐம்பால், கூழை, முகம், முறுவல், மேனி.
23. மயில்தோகை - கதுப்பு, கூந்தல்.
24. யானைத்துதிக்கை - குறங்கு, கூந்தல், சிறுபுறம்.

ஈ. செயற்கைசார் பொருட்கள்:

25. தேர்த்தட்டு - அல்குல்
26. பொன் ஆலவட்டம் - அல்குல்
27. பூக்கூடை - அல்குல்
28. வில் - அளகம், நுதல்.
29. வேல் - கதுப்பு.
30. குங்குமச்சிமிழ் - கொங்கை, முலை.
31. பொற்கலசம் - கொங்கை.
32. தெப்பம் / புணை - தோள்
33. யாழ்ப்பத்தல் - வயிறு.

(2) செயல்பாடுகள்:

அ. இயற்கை வினையுறுதல்:

1. பசத்தல் - அல்குல், ஆகம், கொங்கை, தோள், நுதல், முகம், முலை, மேனி.
2. தீப்பிறத்தல் - இறை, எயிறு, கொங்கை, முலை.
3. நீர் ஊறுதல் - எயிறு, கொங்கை, முலை, ஆகம்.
4. இமைத்தல் - இறை.
5. கசக்குதல் - வயிறு.
6. வளைநெகிழ்தல் - இறை, தோள்.

ஆ. செயற்கை வினையுறுதல்:

7. திதலை / தித்தி வரைதல் - அல்குல், குறங்கு, வயிறு.
8. பூந்தாதுக்களைப் பூசுதல் - அளகம், ஆகம், ஓதி, தோள், நுசுப்பு, முலை, மேனி.
9. மைகொண்டு பூசுதல் / வரைதல் - அல்குல், அளகம், ஆகம், இறை, எயிறு, ஐம்பால், ஓதி, சிறுபுறம், தோள், நுசுப்பு, நுதல், மருங்குல், முலை.
10. சந்தன / குங்குமம் பூசுதல் - ஆகம், கொங்கை, முலை.
11. நறுமணப் பொருட்களைப் பூசுதல் - கதுப்பு, கூந்தல், கூழை, முச்சி.
12. ஒளிர்தல் - ஓதி, நுசுப்பு, நுதல், மருங்குல், முகம், முறுவல், மேனி.

(3) அணிகள்:

பூமாலை: அல்குல், அளகம், ஐம்பால், ஓதி, கதுப்பு, குறங்கு, கூந்தல், கூழை, சிறுபுறம், நுசுப்பு, நுதல், மருங்குல், முச்சி, முலை.
மேகலை - அல்குல்.
துகில் - அல்குல், முலை.
பாரம் - அளகம், கொங்கை, முலை.
தொடி / வளை - இறை, தோள்.

3. மிகுத்தல்:

மிகுத்தல் என்பது இங்கே மேம்படச்செய்தல் என்னும் பொருளில் வந்துள்ளது. அதாவது, பகுத்தும் தொகுத்தும் மேலே கண்டவற்றை ஆய்வுசெய்து கருத்துக்களை மேம்படச்செய்தல். அவ்வகையில் இங்கே சிலவற்றை மட்டும் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டு முடிபுகளைக் காணலாம்.

1. உவமைகளின் கீழ்வரும் விலங்குசார் பொருட்களில் யானைத்துதிக்கையும் ஒன்றாகும். இதனைக் குறங்கு, கூந்தல், சிறுபுறம் ஆகிய மூன்று வகையான உறுப்புக்களுடன் உவமைப்படுத்தி இலக்கியங்கள் கூறியுள்ளன. இந்நிலையில், இந்த மூன்று பொருட்களுமே யானைத்துதிக்கையுடன் ஏதேனும் ஒருவகையில் ஒப்புமை கொண்டிருக்க வேண்டும் என்பது விதியாகும்!. இப்போது யானையின் துதிக்கையினை எடுத்துக்கொண்டால், அதன் சிறப்புக்கள் என்னென்ன?. (1) வரிகளை உடையது, (2) துளை உடையது. கருப்பு நிறத்தினைத் துதிக்கையின் சிறப்புப் பண்பாகக் கொள்ளமுடியாது. காரணம், யானையின் துதிக்கை மட்டுமல்ல, கால், உடல், வால், காது, முதுகு என்று அனைத்துமே கருப்பு நிறம் தான். இந்நிலையில்,

>கூந்தல் என்பதைத் தலைமயிராகக் கொண்டால், அதற்கும் துதிக்கைக்கும் ஒத்த பண்புள்ளதா?. ஒன்றுமில்லை.
>குறங்கு என்பதைத் தொடையாகக் கொண்டால், அதற்கும் துதிக்கைக்கும் ஒத்த பண்புள்ளதா?. ஒன்றுமில்லை.
>சிறுபுறம் என்பதை பிடர்/முதுகாகக் கொண்டால், அதற்கும் துதிக்கைக்கும் ஒத்த பண்புள்ளதா?. ஒன்றுமில்லை.
    
ஆய்வுசெய்ததில், இந்த மூன்று சொற்களுமே அதாவது கூந்தல், குறங்கு, சிறுபுறம் ஆகிய மூன்றுமே ஒரே பொருளைத் தான் குறித்து வந்துள்ளன. அப்பொருளானது யானையின் துதிக்கையினைப் போல பல வரிகளையோ துளையினையோ இவ் இரண்டையுமோ கொண்டிருக்க வேண்டும். யானையின் துதிக்கையினைப் போல துளையினை உடையதான நீண்ட உறுப்பு எதுவும் பெண்களுக்கு இல்லை என்பது அனைவரும் அறிந்த ஒன்றேயாகும். அதேசமயம், பெண்களின் கண்ணிமைகளின்மேல் பல வரிகள் இயற்கையாகவே அமைந்திருப்பதனைக் கண்டிருக்கிறோம். இந்த வரிகளைத் தான் யானையின் துதிக்கையில் இருக்கும் வரிகளுடன் ஒப்பிட்டுப் புலவர்கள் பாடியிருக்க வேண்டும். இதிலிருந்து, கூந்தல், குறங்கு, சிறுபுறம் ஆகிய சொற்களுக்குக் கண்ணிமை என்ற புதிய பொருளும் இருந்திருக்கவேண்டும் என்பது தெரியவருகிறது.

2. உவமைகளின் கீழ்வரும் இயற்கைசார் பொருட்களில் நிலாவும் ஒன்றாகும். இதனைக் கொங்கை, நுதல், முகம், முறுவல் ஆகிய நான்கு வகையான உறுப்புக்களுடன் உவமைப்படுத்தி இலக்கியங்கள் கூறியுள்ளன. இந்நிலையில், இந்த நான்கு பொருட்களுமே நிலவுடன் ஏதேனும் ஒருவகையில் ஒப்புமை கொண்டிருக்க வேண்டும் என்பது விதியாகும்!. இப்போது நிலவினை எடுத்துக்கொண்டால், அதன் சிறப்புக்கள் என்னென்ன?. (1) வெண்ணிற ஒளி வீசுவது. வட்டவடிவத்தினை நிலவின் சிறப்பாகக் கொள்ளமுடியாது. காரணம், கதிரவனும் கூட வட்டவடிவமாகவே அறியப்படுகிறான். இந்நிலையில்,

>கொங்கை என்பதை மார்பகங்களாகக் கொண்டால், அது வெண்ணிற ஒளி வீசுமா?. வீசாது.
>நுதல் என்பதை நெற்றியாகக் கொண்டால், அது வெண்ணிற ஒளி வீசுமா?. வீசாது.
>முகம் என்பதைத் தலையின் முன்பகுதியாகக் கொண்டால், அது வெண்ணிற ஒளி வீசுமா?. வீசாது.
>முறுவல் என்பதைப் பல்லாகக் கொண்டால், அது வெண்ணிற ஒளி வீசுமா?. வீசாது.
    
ஆய்வுசெய்ததில், இந்த நான்கு சொற்களுமே அதாவது கொங்கை, நுதல், முகம், முறுவல் ஆகிய நான்குமே ஒரே பொருளைத் தான் குறித்து வந்துள்ளன. அப்பொருளானது நிலவினைப் போல வெண்ணிற ஒளி வீசும் தன்மை கொண்டிருக்க வேண்டும். பெண்களின் பல்வேறு உடல் உறுப்புக்களில் அவரது கண்விழிகள் மட்டுமே இயற்கையாகவே வெண்ணிற ஒளிவீசுவதனைக் கண்டிருக்கிறோம். நிலவொளியைக் கண்டு அதனழகில் மதிமயங்குவதைப் போல பெண்களின் விழியொளியைக் கண்டு மயங்காத ஆடவருண்டோ?. அதுமட்டுமின்றி, நிலவில் களங்கம் இருப்பதைப் போல பெண்களின் விழிகளிலும் கருநிறக் கண்மணி உண்டு. எனவே, இக் கண்களைத் தான் வெள்ளொளி வீசும் நிலவுடன் ஒப்பிட்டுப் புலவர்கள் பாடியிருக்க வேண்டும். இதிலிருந்து, கொங்கை, நுதல், முகம், முறுவல் ஆகிய சொற்களுக்குக் கண்விழி என்ற புதிய பொருளும் இருந்திருக்கவேண்டும் என்பது தெரியவருகிறது

3. செயல்பாடுகளின் கீழ்வரும் இயற்கை வினையுறுதலில் தீப்பிறத்தல் என்ற வினையும் வருகிறது. இவ் வினையினை இறை, எயிறு, கொங்கை, முலை ஆகிய உறுப்புக்களுடன் தொடர்புறுத்தி இலக்கியங்கள் கூறியுள்ளன. இந்நிலையில், இந்த நான்கு உறுப்புக்களுமே தீ அல்லது வெப்பத்தினை ஏதேனும் ஒருவகையில் தோற்றுவிப்பனவாக இருக்க வேண்டும் என்பது விதியாகும்!. உடல் உறுப்புக்களில் தீயோ வெப்பமோ மிக்குத் தோன்றியிருப்பதை அதனில் காணப்படும் செம்மை நிறமே காட்டிவிடும். இந்நிலையில்,

>இறை என்பதை முன்கையாகக் கொண்டால், இதில் தீ / வெப்பத்தினால் செந்நிறம் தோன்றுமா?. தோன்றாது.
>எயிறு என்பதைப் பல்லாகக் கொண்டால், இதில் தீ / வெப்பத்தினால் செந்நிறம் தோன்றுமா?. தோன்றாது.
>கொங்கை என்பதை மார்பகங்களாகக் கொண்டால், இதில் தீ / வெப்பத்தினால் செந்நிறம் தோன்றுமா?. தோன்றாது.
>முலை என்பதை மார்பகங்களாகக் கொண்டால், இதில் தீ / வெப்பத்தினால் செந்நிறம் தோன்றுமா?. தோன்றாது.
    
ஆய்வுசெய்ததில், இந்த நான்கு சொற்களுமே அதாவது இறை, எயிறு, கொங்கை, முலை ஆகிய நான்குமே ஒரே உறுப்பினைத் தான் குறித்து வந்துள்ளன. அவ் உறுப்பானது தீ / வெப்பத்தினால் பாதிக்கப்பட்டுச் செந்நிறம் கொள்வதாய் இருக்க வேண்டும். பெண்களின் பல்வேறு உடல் உறுப்புக்களில் அவரது கண்விழிகள் மட்டுமே தீ  / வெப்பத்தினால் பாதிக்கப்பட்டுச் சிவந்து போவதனைக் கண்டிருக்கிறோம். அளவிறந்த துன்பம், அழுகை, சினம், நீராடல் போன்றவற்றாலும் புற வெப்பத்தினாலும் ஏனை உறுப்புக்களைக் காட்டிலும் கண்விழிகளே மிகவும் எளிதில் பாதிப்படைந்து சிவந்து விடுகின்றன. எனவே, இக் கண்களைத் தான் தீப்பிறத்தல் வினையுடன் தொடர்புறுத்திப் புலவர்கள் பாடியிருக்க வேண்டும். இதிலிருந்து, இறை, எயிறு, கொங்கை, முலை ஆகிய சொற்களுக்குக் கண்விழி என்ற புதிய பொருளும் இருந்திருக்கவேண்டும் என்பது தெரியவருகிறது.

4. செயல்பாடுகளின் கீழ்வரும் செயற்கை வினையுறுதலில் பூந்தாதுக்களைப் பூசுதல் என்ற வினையும் வருகிறது. இவ் வினையினை அளகம், ஆகம், ஓதி, தோள், நுசுப்பு, முலை, மேனி ஆகிய உறுப்புக்களுடன் தொடர்புறுத்தி இலக்கியங்கள் கூறியுள்ளன. பெண்கள் சுணங்கு எனப்படும் பூந்தாதுக்களை ஏன் தங்களது உறுப்புக்களின்மேல் பூசிக்கொள்ள வேண்டும்?. இரண்டு காரணங்கள் இருக்கலாம். (1). பூந்தாதுக்களின் நறுமணம் (2) பூந்தாதுக்களின் வண்ணம். அழகிய வண்ணமும் நறுமணமும் மிக்க பூந்தாதுக்களைத் தங்களது உறுப்புக்களின்மேல் பூசி அழகுசெய்து கொள்வது பெண்களின் பழக்கம். ஆனால், இதில் ஒரு சிக்கல் இருக்கிறது. பூந்தாதுக்களில் உள்ள தேனைக் குடிக்க விரும்பி வண்டுகள் அவற்றை மொய்த்தவாறு சுற்றிச்சுற்றி வரும். அதிகமான தாதுக்கள் என்றால் அதிகமான வண்டுகள் மொய்த்துத் தொல்லை கொடுக்குமல்லவா?. எனவே, வண்டுகளின் தொல்லையினைக் குறைத்துக்கொள்ள, பூந்தாதுக்களை மிகப் பெரிய பரப்பில் பூசிக்கொள்ளாமல் மிகச்சிறிய அளவிலான பரப்பிலேயே பூசி அழகுசெய்வர். ஆக, பூந்தாதுக்களைப் பூசி அழகுசெய்கின்ற உறுப்புக்கள் சிறியதாக இருக்கவேண்டும் என்பது எழுதப்படாத விதியாகும்!. இந்நிலையில்,

அளகமும் ஓதியும் தலைமயிரைக் குறிப்பதாகக் கொண்டால், இவை மிகப்பெரிய பரப்புடையவை ஆதலால் அவற்றில் பூந்தாதுக்களைப் பூசமாட்டார்கள்.
ஆகமும் முலையும் மார்பகங்களைக் குறிப்பதாகக் கொண்டால், இவற்றில் வண்டுகள் மொய்த்துத் தொல்லை கொடுப்பதனை விரும்ப மாட்டார்கள்.
தோள் என்பதை புஜமாகக் கொண்டால், இவையும் பெரிய பரப்புடையவை என்பதால் இவற்றில் பூந்தாதுக்களைப் பூசமாட்டார்கள்.
நுசுப்பு என்பதை இடுப்பாகக் கொண்டால், இதுவும் மிகப் பெரிய பரப்புடையது என்பதால் இதில் பூந்தாதுக்களைப் பூசமாட்டார்கள்.
மேனி என்பதை உடலாகக் கொண்டால், இதுவே மிகப் பெரிய பரப்புடையது என்பதால் இதில் பூந்தாதுக்களைப் பூசமாட்டார்கள்.
    
ஆய்வுசெய்ததில், இச் சொற்கள் அனைத்துமே அதாவது அளகம், ஆகம், ஓதி, தோள், நுசுப்பு, முலை, மேனி ஆகிய யாவுமே ஒரே உறுப்பினைத் தான் குறித்து வந்துள்ளன. அவ் உறுப்பானது மிகச்சிறிய பரப்பினைக் கொண்டதாக இருக்க வேண்டும். அப்படிப் பார்த்தால், அவ் உறுப்பானது மூக்காகவோ காதாகவோ கண்ணிமையாகவோ இருக்க வாய்ப்புண்டு. ஆனால், அவ் உறுப்பு துளையில்லாததாகவும் இருக்கவேண்டும். ஏனென்றால், துளையிருந்தால் வண்டுகள் மொய்க்கும்போது துளைக்குள் சென்றுவிடும் ஆபத்து இருக்கிறது. இதனடிப்படையில், மிச்சிறிய உறுப்பானதும் துளையற்றதுமாகிய கண்ணிமைகளே பூந்தாதுக்களைப் பூசி அழகு செய்வதற்கு ஏற்ற இடமாகப் பெண்களால் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. புலவர்களும் இக் கண்ணிமைகளைத் தான் பூந்தாதுக்களைப் பூசும் வினையுடன் தொடர்புறுத்திப் பாடியிருக்க வேண்டும். இதிலிருந்து, அளகம், ஆகம், ஓதி, தோள், நுசுப்பு, முலை, மேனி ஆகிய சொற்களுக்குக் கண்ணிமை என்ற புதிய பொருளும் இருந்திருக்கவேண்டும் என்பது தெரியவருகிறது.

முடிவுரை:

பதொமி என்ற இப் புதிய ஆய்வு அணுகுமுறையினால் பல பழந்தமிழ்ச் சொற்களுக்கு இன்றைய தமிழ் அகராதிகள் கூறியிருக்கும் பொருட்கள் பொருந்தாமல் போவதையும் அச் சொற்களுக்கான பொருந்தக்கூடிய புதிய பொருட்கள் எவை என்பதை அறிந்துகொள்ளவும் முடிவதை மேலே கண்டோம். இம் முறையினைப் பயன்படுத்தி இதேபோல ஏனைச் சொற்களுக்கும் புதிய பொருட்களைக் கண்டறியலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்களைத் தமிழில் தட்டச்சு செய்யும் வழி:
வலப்பக்கத்தில் உள்ள பகுதியில் தமிழ் ஒலிகளை ஆங்கில எழுத்துக்களில் அசசடித்து நகல் செய்து இங்கே ஒட்டலாம்.