திங்கள், 13 நவம்பர், 2017

திருக்குறள் காட்டும் அடியளந்தான் யார்?



முன்னுரை:

மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்
தாஅயது எல்லாம் ஒருங்கு. - 610.

திருக்குறளில் மடியின்மை என்னும் அதிகாரத்தில் வருவது மேற்காணும் குறள். ஒரு வேலையைச் செய்யும்போது சோம்பல் இல்லாமல் தொடர்ந்து செய்தால், என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதனைப் பற்றி விளக்கமாகக் கூறும் அதிகாரத்தில் ஒரு மன்னனுக்கான அறிவுரையாக மேற்காணும் குறள் அமைகின்றது. இக்குறளுக்கு விளக்கம் கூறும்போது, அடியளந்தான் என்னும் சொல்லானது 'திருமால்' என்னும் தெய்வத்தைக் குறிப்பதாகப் பொருள்கொண்டுள்ளனர். உண்மையில், இக்குறளில் வரும் அடியளந்தான் என்னும் சொல் திருமாலைத்தான் குறிக்கிறதா என்றும் இக்குறளின் உண்மையான பொருள் எதுவென்பதனையும் இக்கட்டுரையில் விரிவாகக் காணலாம்.

தற்போதைய விளக்க உரைகள்:

கலைஞர் மு.கருணாநிதி உரை: சோம்பல் இல்லாதவர் அடையும் பயன், சோர்வில்லாத ஒரு மன்னன், அவன் சென்ற இடமனைத்தையும் தனது காலடி எல்லைக்குள் கொண்டு வந்ததைப் போன்றதாகும்.

மு.வரதராசனார் உரை: அடியால் உலகத்தை அளந்த கடவுள் தாவிய பரப்பு எல்லாவற்றையும் சோம்பல் இல்லாத அரசன் ஒரு சேர அடைவான்.

சாலமன் பாப்பையா உரை: தன் அடியால் எல்லா உலகையும் அளந்தவன் கடந்த உலகம் முழுவதையும், சோம்பல் இல்லாத அரசு முழுமையாக அடையும்.

பரிமேலழகர் உரை: அடி அளந்தான் தாஅயது எல்லாம் - தன் அடியளவானே எல்லா உலகையும் அளந்த இறைவன் கடந்த பரப்பு முழுதையும்; மடி இலா மன்னவன் ஒருங்கு எய்தும் - மடியிலாத அரசன் முறையானன்றி ஒருங்கே எய்தும். ('அடியளந்தான்' என்றது வாளா பெயராய் நின்றது. 'தாவியது' என்பது இடைக் குறைந்து நின்றது. எப்பொழுதும் வினையின் கண்ணே முயறலின், இடையீடின்றி எய்தும் என்பதாம். இவை இரண்டு பாட்டானும் மடியிலாதான் எய்தும் பயன் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை: மடியில்லாத மன்னவன் எய்துவன், அடியினால் அளந்தானால் கடக்கப்பட்ட வுலகமெல்லாம் ஒருங்கே. இது மடியின்மையால் வரும் பயன் கூறிற்று.

அடியளந்தான் என்பது திருமால் தெய்வமா?:

மேற்காணும் குறளில் வரும் அடியளந்தான் என்னும் சொல் திருமால் தெய்வத்தைக் குறிக்குமா என்றால் ஒருபோதும் குறிக்காது. இதற்கான காரணங்களைக் கீழே காணலாம்.

1. திருவள்ளுவர் 1330 குறள்களில் எந்தவொரு குறளிலும் எந்தவொரு குறிப்பிட்ட தெய்வத்தையும் சுட்டிக்காட்டிச் சொல்லவில்லை. கடவுள்வாழ்த்தில்கூட ஆதிபகவன், அந்தணன், இறைவன் என்று பொதுவான பெயர்களால்தான் கடவுளைக் குறிப்பிடுகிறாரே ஒழிய சிவன், திருமால், விநாயகர், ரிஷபநாதர், இயேசு என்பதைப்போல எந்தவொரு பெயரையும் குறிப்பால்கூட உணர்த்தவில்லை.

2. அடியளந்தான் என்ற சொல்லினால் மூன்று அடிகளால் உலகம் முழுவதையும் அளந்த தெய்வமாகப் போற்றப்படுகின்ற திருமாலைக் குறிப்பிட வள்ளுவர் உண்மையிலேயே விரும்பியிருந்தால் திருமால் அடியளந்த நிகழ்வினைப்பற்றிக் கண்டிப்பாக வேறு ஒருகுறளில் சிறிய குறிப்பின் மூலமாவது குறிப்பிட்டிருப்பார். ஏனென்றால், அப்படிக் குறிப்பிட்டால்தான் அக்குறளைச் சரியாகப் புரிந்துகொள்ள முடியும். இல்லையேல் அடியளந்தான் என்னும் சொல்லினால் மன்னனைத்தவிர வேறுயாரை வள்ளுவர் அக்குறளில் குறிப்பிடுகிறார் என்று மக்களால் புரிந்துகொள்ள முடியாது. இதனை மதிநுட்பம் கொண்ட நம் ஐயன் நன்கு அறிவார். ஆனால் அவரோ வேறு எந்தக்குறளிலும் திருமால் அடியளந்த நிகழ்வினைப் பற்றியோ திருமாலைப் பற்றியோ குறிப்பிடவில்லை.

3. ஏன், 1103 ஆம் குறளில் வரும் தாமரைக்கண்ணான் என்ற சொல்லினால் வள்ளுவர் திருமால் தெய்வத்தைக் குறித்திருக்கிறாரே என்று சிலர் கேட்கலாம். இது தவறான கருத்தாகும். உண்மையில் தாமரைக்கண்ணான் என்பது தாமரைக்கு அண்ணான் என்று விரிந்து தாமரைக்குப் பகைவன் என்ற பொருளில் சந்திரனைக் குறிப்பதாகும். சந்திரனைக் குறிக்கத் திங்கள் என்ற சொல்லை அவர் அக்குறளில் பயன்படுத்தாத காரணம், எதுகைமோனை (தாம்வீழ்வார் - தாமரைக்கண்ணான்) அணிநயம் கருதியே ஆகும். 1103 ஆம் குறளின் கருத்துபற்றி முழுமையாகத் தெரிந்துகொள்ள தாமரைக்கண்ணான் உலகு என்ற ஆய்வுக்கட்டுரையினை இந்த இணையதளத்திலேயே படிக்கலாம்.

மேற்காணும் கருத்துக்களின் அடிப்படையில், இக்குறளில் வரும் அடியளந்தான் என்னும் சொல் திருமால் தெய்வத்தைக் குறித்து வந்திருக்க வாய்ப்பில்லை என்பது உறுதிசெய்யப்படுகிறது.

தாஅயது என்றால் தாவிய / கடந்த பரப்பு ஆகுமா?

' தாஅயது எல்லாம் ஒருங்கு ' என்பதற்குத் ' தாவிய / கடந்த பரப்பு அனைத்தையும் பெறமுடியும் ' என்று உரையாசிரியர்கள் அனைவரும் பொருள் உரைக்கின்றனர். ஒருமன்னன் சோம்பலின்றி எவ்வளவுதான் முயன்றாலும் உலகம் அனைத்தையும் தனது காலடியின்கீழ் கொண்டுவருதல் என்பது சாத்தியம் தானா?. இத்துணை ஆண்டுகளில் அப்படி யாரேனும் ஒரு மன்னன் செய்திருக்கிறானா?. என்றெல்லாம் எண்ணிப் பார்க்கவில்லை உரையாசிரியர்கள். வள்ளுவர் ஒருவேளை உயர்வுநவிற்சியாக இதனைக் கூறியிருக்கலாம் என்று நினைத்திருப்பார்கள். ஆனால், வள்ளுவரின் உளப்பாங்கோ வேறுவிதமானது. ஒருமன்னன் தனது பகைவர்களை அழிக்கவேண்டி தனது நாட்டினைக் கடந்துசென்று போரின்மூலமாகவோ பிறவழிகளிலோ அவர்களை அழித்துவிட வேண்டும் என்றுதான் பல குறள்களின் வாயிலாகக் கூறியிருக்கிறார். அதில் சில குறள்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்
சேராது இயல்வது நாடு. - 734.

உயிர்ப்ப உளரல்லர் மன்ற செயிர்ப்பவர்
செம்மல் சிதைக்கலா தார். - 880

ஒருமன்னன் தனது பகைவர்களை அழிப்பதற்காகப் போர்தொடுப்பதை ஆதரிக்கும் வள்ளுவர் தனது ஆட்சிப்பரப்பினை விரிவுபடுத்தவேண்டி ஒரு மன்னன் போர்தொடுக்கலாம் என்று எங்கேயும் ஆதரித்துக் கூறவில்லை. இதைப் பற்றி விரிவாகக் கீழே காணலாம்.

போர்செய்து நாடுபிடித்தலை வள்ளுவர் ஆதரித்தாரா?.

அடியளந்தான் என்னும் சொல் திருமால் தெய்வத்தைக் குறிக்காது என்று மேலே கண்டோம். என்றால், அச்சொல் வேறு யாரைக் குறிக்கும்?. ஐயமின்றி அது மன்னனைத்தான் குறிக்கும். கலைஞர் கருணாநிதியும் கூட தனது விளக்கவுரையில், அடியளந்தான் என்ற சொல்லுக்கு மன்னனைத்தான் பொருள்கொள்ளுகிறார். ஆனால், அடியளந்தான் என்பதற்குத் தனது அடிகளால் நடந்தவன் என்ற வகையில் அது மன்னனைக் குறிப்பதாகப் பொருள்கொள்கிறார். இது தவறாகும். அதுமட்டுமின்றி, கலைஞர் கருணாநிதி உட்பட உரையாசிரியர்கள் அனைவரும் ' ஒரு மன்னன் தனது சோம்பலற்ற முயற்சியினால் இந்த உலகம் முழுவதையும் தனது காலடியின்கீழ்க் கொண்டுவந்து விடலாம். ' என்ற ஒருமித்த கருத்தினையே இக்குறளுக்குக் கூறுகின்றனர். இக்கருத்து வள்ளுவரின் உளப்பாங்குடன் பொருத்தமானதா என்று பார்க்கலாம்.

கலைஞர் கருணாநிதி சொல்வதைப்போல ஒரு மன்னன் தனது காலடிகளால் நடந்துவிட்டால் போதும் அந்த இடமனைத்தையும் அவனது காலடிக்கீழ்க் கொண்டுவந்து விடமுடியுமா?. போர்செய்து வெற்றிபெற வேண்டாமா?. உரையாசிரியர்கள் அனைவரும் கூறுவதைப்போல, உலகம் முழுவதையும் ஒருமன்னன் தனது காலடியின் கீழ்க் கொண்டுவருவது என்றால், எத்தனை போர்களை அம்மன்னன் மேற்கொள்ளவேண்டும்?. இப்போர்களால் எவ்வளவு இயற்கைவளங்கள் அழியும்?. எத்தனை எத்தனை உயிர்கள் பலியாகும்?. ' நீ சோம்பலின்றி முயன்றால் உலகம் அனைத்தையும் உனது காலடியின்கீழ்க் கொண்டுவரலாம் ' என்று ஒரு மன்னனை நோக்கிக் கூறுவது அப்பட்டமாக அவனைப் பலபோர்களைச் செய்யத் தூண்டுவதே ஆகுமன்றோ?. போரின் பின்விளைவுகளை எல்லாம் அறிந்தவரான கருணைக்கடல் ஆகிய திருவள்ளுவர், இப்படிப்பட்ட பொருளில் ஒரு அறிவுரையினை மன்னனுக்குச் சொல்வாரா?. ஒருபோதும் அப்படிச் சொல்லியிருக்க மாட்டார். மாறாக, போரின் பின்விளைவுகளால் பாதிக்கப்பட்ட பிறநாட்டு மக்களையும் தன்நாட்டு மக்களைப் போல அரவணைத்துச் செல்லவேண்டும் என்றே கூறுவார். இதனைக் கீழ்க்காணும் குறளின்மூலம் அவரே உறுதிப்படுத்துவதைப் பாருங்கள்.

பொறையொருங்கு மேல்வருங்கால் தாங்கி இறைவற்கு
இறையொருங்கு நேர்வது நாடு. - 733.

கடும்வறட்சி, கொடுங்கோன்மை, பகையரசு கைப்பற்றல் போன்ற காரணங்களால் வேற்றுநாட்டில் இருந்து குடிப்பெயர்ந்துவரும் மக்கள் மற்றும் அவர்தம் விலங்குகள் ஆகிய பெரும்பாரத்தைத் தாங்கியும், அவ்வாறு புதிதாக வந்தவர்களும் தமது இறைவனாகிய மன்னனுக்கு வேண்டிய இறைப்பொருள் அனைத்தையும் அளிக்கும்வகையில் வளம்மிக்கதுவும் ஆகியதே நாடு என்று மேற்காணும் குறளில் கூறுகிறார் வள்ளுவர். நாடு என்று இடப்பெயரால் குறித்தாலும் அது அரசனின் ஆணைக்குட்பட்ட காரணத்தினால் மறைமுகமாக அந்நாட்டு அரசனைக் குறிப்பதாகவேக் கொள்ளவேண்டும். அதாவது, வேற்றுநாட்டில் இருந்து தன்நாட்டிற்குத் தஞ்சம் என்றுவந்த மக்களையும் ஏற்றுக்கொண்டு அவர்களையும் தன்நாட்டு மக்களைப் போலவே கருதி தன்நாட்டு வளங்களைப் பயன்படுத்தி மகிழ்ச்சியுடன் வாழவே ஒரு மன்னன் வகைசெய்ய வேண்டும் என்பதே இக்குறளில் வள்ளுவரின் உட்கிடையாக இருப்பதை அறியலாம்.

இதிலிருந்து, போர்செய்து நாடுபிடித்தலை வள்ளுவர் ஆதரிக்கவில்லை என்பதும் இக்குறளுக்கு உரையாசிரியர்கள் கூறியுள்ள கருத்துக்கள் அனைத்தும் வள்ளுவரின் உளப்பாங்குடன் பொருந்தாதவை என்பதும் உறுதிசெய்யப்படுகிறது.

திருந்திய பொருள் விளக்கம்:

இக்குறளுக்கான திருந்திய விளக்கத்தினைக் காணும்முன்னர், இக்குறளில் வரும் சில சொற்களுக்கான புதிய பொருட்களை அறிந்துகொள்ளவேண்டும். இக்குறளில் வரும்,

அடி என்ற சொல் செல்வத்தினையும்
அளத்தல் என்ற சொல் கொடையாகக் கொடுத்தலையும்
தாயது என்ற சொல் உரிமையானது என்ற பொருளையும் குறிக்கும்.

மேற்காணும் புதிய பொருட்கள் அனைத்தும் தமிழ் அகராதிகள் கீழே கண்டபடி கூறுவதுதான்.

அடி³ aṭi , n. < அடு¹-. [T. aḍugu, K. Tu. aḍi, M. aṭi.] 1. Foot; பாதம். (பிங்.) 2. Measure of a foot = 12"; அடியளவு. 3. Footprint; காற் றடம். (சம். அக.) 4. Metrical line, of which there are five kinds, viz., குறளடி, சிந்தடி, அளவடி or நேரடி, நெடிலடி, கழிநெடிலடி. அடுத்து நடத்தலி னடியே (இலக். வி. 711). 5. Base, bottom; கீழ். 6. Stand, support, foundation; அடிப்பீடம். புஷ்கரபத்திமடல் அடியோடுமொன்று (S.I.I. ii, 15). 7. Beginning; ஆதி. நடுவின் முடிவினி லடியி னன் றான பொருள் (ஞானவா. சனகரா. 22). 8. Source, root of words or plants, origin of lineage, ancestry, or family; மூலம். (தாயு. தேசோ. 10.) 9. Antiquity; பழைமை. 10. Place; இடம். (பிங்.) 11. Racecourse; வையாளிவீதி. (சூடா.) 12. A conventional term in gambling; சூதாடுவோர் குழூஉக்குறியுளெரன்று. அடியிது பொட்டையீ தென்பர் (கந்தபு. கயமுகனு. 168). 13. Indulgence in intoxicating drinks; மதுபானம். Parav. 14. Riches, wealth; ஐசுவரியம். அடியுடையார்க்கெல் லாம் சாதித்துக்கொள்ளலாமே (ஈடு, 4, 2, 9). 15. Nearness, proximity; சமீபம். கிணற்றடியில் நிற் காதே. Colloq. 16. Plan of action; உபாயம். நல்ல அடி எடுத்தாய். Colloq.

அள-த்தல் aḷa- , [K. M. aḷa.] 12 v. tr. 1. To measure, fathom; அளவிடுதல். அடி யளந்தான் (குறள், 610). 2. To extend to, reach; எட்டுதல். மெளலியண்ட முகட்டினை யளப்ப (கூர்மபு. தக்கன்வேள். 16). 3. To test by the logical modes of proof; பிரமாணங்கொண்டறிதல். (சி. சி. அளவை. 4, சிவஞா.) 4. To consider; கருதுதல். ஊற ளந் தவர்வயின் (கலித். 17). 5. To gossip; வீண்பேச் சுப்பேசுதல். வாயில் வந்தபடியெல்லாம் அளக்கிறான் 6. To limit, define, determine the bounds of; வரையறுத்தல். அவையளந் தறியினு மளத்தற் கரியை (புறநா. 20, 5). 7. To give, render, offer; கொடுத்தல். (பு. வெ 8, 29.)--v. intr. 1. To talk together, hold converse; அளவளாவுதல். (கல்லா. 18, 36.) 2. To mingle, blend; கலத்தல்.

தாயம் tāyam (p. 200) {*}, s. a portion, an inheritance, உரிமை; 2. dice to play with, a kind of backgammon board, கவறு; 3. a relation by the fathers's side; 4. affliction, distress, தவதாயம்; 5. good opportunity, juncture, சமயம்; 6. a play with tamarind stones; 7. a stop, delay, தாக்காட்டு. தாயக்கட்டை, dice, a cubical piece in the play of dice. தாயங்கிடைக்க, to get a good opportunity. தாயதி, தாயத்தனம், kinship. தாயத்தார், paternal kinsman or heirs. தாயபாகம், a division of an estate. தாயமாட, to play dice, to gamble; 2. to be tardy, தாமதஞ் செய்ய. தாயம் போட, to cast dice. தாயம் விழுதல், the lucky falling of dice. தாயவிதைப்பு, seasonable sowing.

தாயம் = உரிமை என்பதிலிருந்தே, தாயது = உரிமையானது என்பதும் பெறப்படுகிறது. தாயாதிகள் என்பது உரிமைக்குரியவர்கள் என்னும் பொருளில் பங்காளிகளைக் குறிப்பதற்கும் இதுவே அடிப்படையாகும். இனி, இப்புதிய பொருட்களின் அடிப்படையில், இக்குறளுக்கான திருந்திய விளக்கம் இதுதான்:

தனக்கு உரிமையான அனைத்துச் செல்வங்களையும் கொடையாகக் கொடுத்தவனாகிய ஒரு அரசன் தனது சோம்பலற்ற முயற்சியினால் அவையனைத்தையும் மீண்டும் பெற்றுவிடமுடியும்.


நிறுவுதல்:

இக்குறளுக்கான புதிய விளக்கம் எப்படிப் பொருந்தும் என்பதனைப் பல விளக்கங்களுடனும் ஆதாரங்களுடனும் விரிவாகக் காணலாம். இதற்கு முதலில் ஒரு அரசனுக்குரிய பல்வேறு பண்புகள் எவையென்று வள்ளுவர் பட்டியலிடுவதைப் பற்றிக் காணவேண்டியது அவசியமாகிறது. இறைமாட்சி என்னும் அதிகாரத்தில் ஒரு மன்னனுக்குரிய பண்புகளைப் பற்றிக் கூறுமிடத்து, கொடை அளித்தலும் ஒரு மன்னனுக்குரிய பண்புகளில் ஒன்றே என்று சில குறள்களின் மூலம் வலியுறுத்துகிறார்.

அஞ்சாமை ஈகை அறிவுஊக்கம் இந்நான்கும்
எஞ்சாமை வேந்தர்க்கு இயல்பு. - 382.

துணிவு, கொடை, அறிவு, ஊக்கம் ஆகிய நான்கும் ஒரு மன்னனுக்கு நீங்காமல் இருக்கவேண்டிய பண்புகள் என்று இக்குறளில் கூறுகிறார். ஒருநாட்டை ஆளும் மன்னனே ஆனாலும், இல்லை என்று தன்னிடம் வந்தவர்க்குக் கொடையளிக்கும்போது இன்சொற்களைக் கூறியே கொடையளிக்க வேண்டும். அவ்வாறு செய்தால், குடிமக்கள் யாவரும் தன்சொல்லைப் பேணுபவராய் தான்காண விரும்பியவாறே ஒழுகுவர் என்று கீழ்க்காணும் குறளில் கூறுகிறார்.

இன்சொலால் ஈத்தளிக்க வல்லார்க்குத் தன்சொலால்
தான்கண் டனைத்திவ் வுலகு. - 387.

அதுமட்டுமின்றி, கொடை, அருள், செங்கோன்மை, குடிமக்களைக் காத்தல் ஆகிய நான்கினையும் உடைய அரசனே ஏனை அரசர்களுக்கெல்லாம் ஒளியாக விளங்கி வழிகாட்டுபவன் ஆவான் என்று கீழ்க்காணும் குறளில் கூறுகிறார்.

கொடை அளி செங்கோல் குடியோம்பல் நான்கும்
உடையானாம் வேந்தர்க்கு ஒளி. - 390.

இப்படி மேற்காணும் மூன்று குறள்களாலும் ஒரு அரசனுக்குரிய கொடைப்பண்பினைப் போற்றுகின்ற வள்ளுவர், கொடையினால் ஒரு மன்னன் தனது செல்வங்கள் அனைத்தையும் இழந்துவிட்ட போதிலும் தனது சோம்பலற்ற முயற்சியினால் அனைத்தையும் மீண்டும் பெற்றுவிடமுடியும் என்று நமது தலைப்புக் குறளில் இவ்வாறு கூறுகிறார்.

தாஅயது எல்லாம் அடியளந்தான் மடியிலா மன்னவன் ஒருங்கு எய்தும்.

இழந்ததை எப்படி மீண்டும் பெறுவது என்பதனையும் கீழ்க்காணும் குறளின் மூலம் அரசனுக்கு விளக்குகிறார் வள்ளுவர்.

இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்லது அரசு. - 385.

பொருள்வரும்வழி உட்பட பல்வேறு சட்டதிட்டங்களை முறைப்படி இயற்றுவதும் அவற்றின் வழியாகப் பொருட்களை ஈட்டுவதும் ஈட்டிய பொருட்களைப் பாதுகாப்பதும் பாதுகாத்து வைத்தவற்றை முறையாக வகுத்துக் கொடை போன்றவற்றுக்குச் செலவுசெய்வதும் ஒரு அரசன் சோம்பலின்றித் திறம்படச் செய்யவேண்டிய பணிகளாகும் என்று மேற்காணும் குறளில் விளக்குகிறார். இப்படி ஒருநாட்டு மன்னன், தனது உலகமாகிய மக்களுக்கான சட்டதிட்டங்களை இயற்றி வழிநடத்திச் செல்வதால் அவனை 'உலகியற்றியான்' என்று கீழ்க்காணும் குறளில் கூறுவார் வள்ளுவர்.

இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகியற்றி யான். - 1062.

இந்த உலகியற்றியான் ஆகிய மன்னன், சட்டதிட்டங்களைத் தவறாக வகுத்து மக்களிடம் இருந்து அறமற்ற வழிகளில் பொருள் ஈட்டுவானாகில், புரப்பவரின்றி மக்கள் பிச்சையெடுத்துண்ணும் இழிநிலைக்கே தள்ளப்படுவர் அன்றோ?. அப்படி யாரேனும் ஒருநாட்டில் உழைத்துவாழ வழியின்றிப் பிச்சையெடுத்துண்டு வாழ்வரேல், அதற்குக் காரணமான அந்நாட்டு மன்னனும் ஒருநாள் அதைப்போலவே அலைந்துதிரிந்து பிச்சையெடுத்து அழிவதாக என்று மேற்காணும் குறளில் மன்னனுக்குச் சாபம்விடுகிறார் வள்ளுவர். இக்குறளைப் பற்றி மேலதிக தகவல்களை அறிந்துகொள்ள 'உலகியற்றியான் யார்?' என்ற ஆய்வுக் கட்டுரையினைப் படிக்கலாம்.

முடிவுரை:

இதுவரை கண்டதிலிருந்து, ஒரு மன்னன் தனது சோம்பலில்லாத முயற்சியினால் மீண்டும் பெறத்தக்கவையாக வள்ளுவர் இக்குறளில் கூறியிருப்பது பொருட்செல்வங்களேயன்றி நாடு முதலான இடங்களை அன்று என்று தெளிவாகப் புரிந்து கொள்ளலாம். அப்படித் திரும்பப் பெறுமிடத்து, அம்மன்னன் அறமற்ற வழிகளைக் கையாண்டால் அந்நாட்டில் பிச்சைக்காரர்களே மிக்கிருப்பர் என்றும் ஒருநாள் அம்மன்னனும் பிச்சைக்காரனைப் போல அலைந்துதிரிந்து கெடுவான் என்றும் வள்ளுவர் சாபம் விடுத்திருப்பதைத் தற்போது நம் நாட்டை ஆள்பவர்கள் கவனித்துச் சிந்தித்துச் செயல்படுவார்களாக !!!

******** வாழ்க தமிழ் ! வளர்க வள்ளுவம் !! *************

1 கருத்து:

  1. அடிஅளந்தான்
    engineer - architect - surveyor

    நீளம் - அகலம் - weight -hight எல்லாவற்ற்றையும் சரியாக அளவிட்டு / கணக்கிட்டு / திட்டமிட்டு / measure செய்து அதன்பிறகுதான் ஒரு பொருளை / building / house / machine / ஐய் perfect ஆகா balance ஆகா உருவாக்க முடியும்

    அடிஅளந்தான்

    in English - The Creator
    Sanskrit -பிரம்மா
    தமிழ் - அடிஅளந்தான்

    in Arabic அல்லாஹ்வுக்கு முஸவ்விர் (வடிவமைப்பவன்) என்ற பெயர் - 59:24

    அல்லாஹ்வுக்கு ஃகாலிக் (படைத்தவன்) என்ற பெயர் - 6:102, 13:16, 35:3, 39:62, 40:62, 59:24

    அல்லாஹ்வுக்கு பதீவு (முன்மாதிரி இன்றி படைத்தவன்) என்ற பெயர் - 2:117, 6:101

    அல்லாஹ்வுக்கு பாரீ (உருவாக்குபவன்) என்ற பெயர் - 59:24

    54:49 Pickthall translation
    Lo! We have created every thing by measure.

    Sahih International
    Indeed, all things We created with predestination.

    Yusuf Ali translation
    Verily, all things have We created in proportion and measure

    Jan Trust Foundation
    நாம் ஒவ்வொரு பொருளையும் நிச்சயமாக (குறிப்பான) அளவின்படியே படைத்திருக்கின்றோம்.

    pj translation
    54:49ஒவ்வொரு பொருளையும் கணக்கிட்டு நாம் படைத்துள்ளோம்.

    மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்
    தாஅய தெல்லாம் ஒருங்கு.

    அடியால் உலகத்தை அளந்த கடவுள் தாவியப் பரப்பு எல்லாவற்றையும் சோம்பல் இல்லாத அரசன் ஒரு சேர அடைவான்.

    தன் அடியால் எல்லா உலகையும் அளந்தவன் கடந்த உலகம் முழுவதையும், சோம்பல் இல்லாத அரசு முழுமையாக அடையும்.

    சோம்பல் அற்ற மன்னவன் அடையும் நற்பயன்கள் போலவே ஒப்ப முயற்சியுடைவருக்கும் கிடைக்கும்.

    சோம்பல் இல்லாத அடிஅளந்தான்

    46:33. வானங்களையும், பூமியையும் படைத்து அவற்றைப் படைப்பதில் சோர்வு ஏதும் அடையாத அல்லாஹ்,

    50:38 வானங்களையும் பூமியையும், அவற்றுக்கு இடைப்பட்டதையும் ஆறு நாட்களில் படைத்தோம். நமக்கு எந்தக் களைப்பும் ஏற்படவில்லை

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களைத் தமிழில் தட்டச்சு செய்யும் வழி:
வலப்பக்கத்தில் உள்ள பகுதியில் தமிழ் ஒலிகளை ஆங்கில எழுத்துக்களில் அசசடித்து நகல் செய்து இங்கே ஒட்டலாம்.