வியாழன், 18 ஜனவரி, 2018

சங்க இலக்கியத்தில் விலங்கியல் - 5 - கரடி



முன்னுரை:

கரடி - என்றவுடன் உடலெல்லாம் கருகரு முடியுடன் பெரிய கால்களுடன் மிக மெதுவாக அசைந்து அசைந்து வரும் அந்த கருநிறக் கரடி தான் நமது நினைவுக்கு வரும். கரடி ஒரு காட்டுவிலங்கு என்பதால் பொதுவாக அதை ஊர்களில் பார்க்கமுடியாது. ஆனால் பல ஆண்டுகளுக்கு முன்னால்வரை, தெருக்களில் கரடியை நடனமாடச் செய்தும் பயந்த கோளாறு மற்றும் நோய்தீர வேண்டி தாயத்தை மந்திரிக்கச் செய்து கொடுத்தும் கரடிகளைக் கொண்டு முகத்தில் காற்றினை ஊதச்செய்தும் காசு பார்த்தனர். கரடிகளில் கருப்பு, பழுப்பு, வெள்ளை என்று பலவகைகள் உண்டு என்ற நிலையில், சங்க இலக்கியத்தில் எவ்வகைக் கரடிகள் பற்றிப் பேசப்பட்டுள்ளது என்பதை இக்கட்டுரையில் விரிவாகக் காணலாம்.

சங்க இலக்கியத்தில் கரடி:

சங்ககாலத் தமிழகத்தில் வாழ்ந்த கரடியானது ஆங்கிலத்தில் Sloth Bear என்று அழைக்கப்படும் தேன்கரடி வகையைச் சார்ந்ததாகும். இதனுடைய விலங்கியல் பெயர் மெலர்ஸஸ் உர்சினஸ் ( Melursus Ursinus ) ஆகும். இந்தியக் காடுகள் மற்றும் மலைகளில் அதிகம் காணப்படும் இவ்வகைக் கரடிகளைப் பற்றி சங்க இலக்கியங்கள் ஏராளமான செய்திகளைப் பதிவுசெய்து வைத்துள்ளன. கரடியின் உடலின் நடுவில் கூன் இருக்கும் என்றும் அதன் மயிரானது கருநிறத்தில் இருந்ததால் அதனைக் கார்மேகம், இருள் துண்டம், கருப்பு ஆடு ஆகியவற்றுடன் ஒப்பிட்டும் கூறுகிறது. கரடியின் தலைமயிரானது பனைமரத்தின் நாரினைப் போலப் பருத்துக் காணப்பட்டதாகக் கூறுகிறது. கரடியின் தலையானது கவிழ்த்து வைத்ததைப் போன்று இருந்தது என்றும் அதன் முகம் ஊமணாமூஞ்சி போல அழகற்று இருந்ததாகவும் அதன் பிளந்த வாயானது தீப்பிழம்பு போலச் சிவந்து இருந்ததாகவும் கூறுகிறது. கரடி தனது முன்னங்கால்களைக் கைகளாகப் பயன்படுத்தும் என்றும் கை மற்றும் கால்களில் ஏராளமான முடி நிறைந்திருக்கும் என்றும் கூறுகிறது. பாதங்கள் சற்றே மேடுதட்டியநிலையில் வளைந்து காணப்படும் என்றும் கால்களில் இருக்கும் நகங்கள் உளிபோல நீளமாகக் கூர்மையுடன் இருக்கும் என்றும் அறியப்படுகிறது. தேன்கரடிகள் விரும்பி உண்ணும் உணவாகக் கறையான், இலுப்பைப்பூ, இலுப்பைக்கனி, கொன்றைப்பழம் ஆகியவற்றைக் கூறுகிறது. தேன்கரடிகள் பெரும்பாலும் இரவில் தான் இரைதேடிச் செல்லும் சென்ற செய்தியும் இவை மரத்தின்மேல் ஏறுவதில் வல்லவை என்ற செய்தியும் சங்க இலக்கியத்தில் காணப்படுகிறது. தேன்கரடிகள் கறையான் புற்றுக்களைத் தாக்கி அழித்து எவ்வாறு கறையான்களைப் பிடித்துண்ணும் என்ற செய்தியை இரும்பு செய்யும் கொல்லனின் செய்கையுடன்  ஒப்பிட்டு விரிவாகச் சொல்கிறது.

கரடி - பெயர்களும் காரணங்களும்:

உடம்பெல்லாம் கருகருவென்று முடியுடைய இந்த விலங்கினை நாம் கரடி என்ற பெயரால் தான் குறிப்பிடுகிறோம். ஆனால், சங்க இலக்கியத்தில் ஒரு பாடலில் கூட கரடி என்ற பெயர் காணப்படவில்லை என்பது வியப்பைத் தரும் செய்தியாகும். சங்க இலக்கியத்தில் மட்டுமின்றி, சங்கமருவிய காலத்து நூல்களான பதினெண் கீழ்க் கணக்கு நூல்களிலும் கரடி என்ற பெயர் காணப்படவில்லை. எனவே, கரடி என்ற பெயர் பிற்காலத்தில் தான் ஏற்பட்டிருக்க வேண்டும் என்று தெரிகிறது.

ஆய்வுசெய்ததில், கரடி என்னும் விலங்கினைக் குறிக்கும் பெயர்களாக எண்கு, உளியம், பெருங்கை ஆகியவற்றைத் தான் சங்க இலக்கியங்கள் பதிவு செய்துள்ளன. இவற்றுள்,

எண்கு என்பது கருநிற மயிரை உடையது என்ற பொருளில் ஏற்பட்டதாகும்.
உளியம் என்பது உளிபோல நீண்ட கூரிய நகங்களை உடையதால் ஏற்பட்ட பெயராகும்.
பெருங்கை என்பது பெரிய வலிய கைகளை அதாவது முன்னங்கால்களை உடையது என்ற பொருளில் எழுந்தது.

கரடி என்னும் பெயர், சங்க இலக்கியங்களில் காணப்படவில்லை என்றாலும், கருமை + அடி அதாவது கரிய கால்களை உடையது என்பதின் அடிப்படையில் கரடி என்ற பெயர் இவ் விலங்கிற்கு ஏற்பட்டிருக்கலாம்.

கரடியின் உடலும் மயிரும்:

தமிழகக் காடுகளில் வாழ்ந்த தேன்கரடியின் உடலைப் பற்றிக் கூறும்போது, அவை நடுமுதுகில் கூன் விழுந்ததைப் போல மேல்நோக்கிய வளைவுடன் இருந்ததாகக் கீழ்க்காணும் சங்கப்பாடல் கூறுகிறது.

கூனல் எண்கின் குறுநடைத் தொழுதி - அகம். 112

கரடியின் உடலெங்கும் மயிர் மிக்கிருந்ததைப் பற்றிக் கீழ்க்காணும் பாடல் கூறுகிறது.

எண்கின் பரூஉ மயிர் ஏற்றை - நற். 325

கரடியின் உடலெங்கும் நிறைந்திருந்த மயிரின் நிறம் பற்றிக் கூறுமிடத்து, அவை கருநிறம் கொண்டவை என்று நேரடியாகக் கூறாமல் சில உவமைகளின் மூலம் உய்த்துணர வைத்துள்ளனர் சங்ககாலப் புலவர்கள். கார்மேகம் போன்றும் இருளின் துண்டம் போன்றும் ஆடு போன்றும் தோன்றியதாகக் கூறும் பாடல்களில் இருந்து அதனை உறுதிசெய்து கொள்ளலாம்.

மாரி எண்கின் மலைச்சுர நீள் இடை   - நற். 192

கரடியினை மாரியுடன் அதாவது கார்மேகத்துடன் ஒப்பிடுகிறது மேற்பாடல் வரி. இதைப்போலவே, கீழ்க்காணும் பாடலும் கரடிகளைக் கார்மேகங்களுடன் ஒப்பிடுகிறது.

அரவின் ஈர் அளை புற்றம் கார் என முற்றி
இரை தேர் எண்கு இனம் அகழும் - நற்.336

பொதுவாக, பாம்புக்கும் கார்மேகத்திற்கும் ஆகாது. அதாவது, பாம்புகள் எங்கிருந்தாலும் அவற்றைத் தேடிப்பிடித்துக் கொல்வதைப்போல கார்மேகங்கள் எழுப்பும் இடியோசையினைக் கேட்ட நாகங்கள் துடிதுடித்து இறந்துபடும். இதைப்பற்றிக் கூறும் சங்கப் பாடல்கள் ஏராளமாக உள்ளன. அவற்றை விரிவாகப் பாம்பு என்னும் புதிய கட்டுரையில் காணலாம். எப்படி கார்மேகங்கள் பாம்புகளைத் தேடி முற்றுகை இடுமோ அதைப்போலக் கரடிகள் பாம்புகள் வாழும் புற்றினைச் சூழ்ந்து தாக்கியதாக மேற்பாடல் வரிகள் கூறுகின்றன.

பெரும் கை எண்கின் பேழ் வாய் ஏற்றை
இருள் துணிந்து அன்ன குவவு மயிர் குருளை - அகம். 201

இருளின் துண்டம் போல கரடி தோன்றியதாக மேற்பாடல் வரிகள் கூறுகின்றன.

ஆடு பரந்து அன்ன ஈனல் எண்கின் - அகம். 331

கரடிகள் நடந்துசெல்லும்போது பின்புறமாக இருந்து அவற்றைப் பார்ப்பதற்கு, உடலெங்கும் அடர்த்தியாகக் கருமயிரை உடைய கருப்பு ஆடுகள் ஊர்வதைப் போலத் தோன்றியதாக மேற்பாடல் வரி கூறுகின்றது. தமிழக மலைகளில் வாழ்ந்துவந்த இந்த ஆட்டினம் தற்போது முற்றிலும் அழிந்துவிட்டதாகத் தெரிகின்றது.

இரும் பனை வெளிற்றின் புன் சாய் அன்ன
குரூஉ மயிர் யாக்கை குடா அடி உளியம்     - திரு. 313

கரடியின் உடலில் இருந்த மயிரானது, பனைமரத்தின் செறும்பு அதாவது நார்போலத் தோன்றியதாக மேற்பாடல் வரிகள் கூறுகின்றன.

கரடியின் தலை:

கரடியின் தலை பற்றிக் கூறும்போது, கவித்தலை என்று குறிப்பிடுகிறது சங்க இலக்கியம்.

கவித்தலை எண்கின் பரூஉ மயிர் ஏற்றை - நற். 325

கரடியின் தலையானது கவிழ்த்து வைத்ததைப் போல இருந்ததாக மேற்பாடல் வரி ஏன் கூறுகிறது என்று பார்க்கலாம். பொதுவாக, ஒரு வாளியைக் கவிழ்த்து வைத்தால் எப்படித் தோன்றும்?. கீழ்ப்புறத்தில் அகன்றும் மேலே செல்லச்செல்ல சிறுத்துக் குறுகியும் தோன்றும் அல்லவா?. அதைப்போல, கரடியின் தலையானது துவக்கத்தில் பெரிதாகவும் முன்னால் செல்லச்செல்ல சிறுத்துக் குறுகியும் இருப்பதால், அதனைக் கவித்தலை என்று இலக்கியம் குறிப்பிடுகிறது.

கரடியின் முகம் பற்றிக் கூறுகையில், உம்மென்று சுருங்கியதாய் ஒரு ஊமணாமூஞ்சி போலப் பொலிவற்று அதாவது அழகற்று இருந்ததாகக் கீழ்க்காணும் பாடல் குறிப்பிடுகிறது.

ஊமை எண்கின் குடாஅடிக் குருளை - மலை. 501

இப்பாடலில் வரும் ஊமை என்பது வாய்பேசாத் தன்மையைக் குறித்து வராமல் உம்/ஊம் என்று குவிந்து இருக்கும் பொலிவற்ற முகத்தைக் குறித்து வந்துள்ளது. அடுத்ததாகக் கரடியின் வாயினைப் பற்றிக் கூறுமிடத்து, பகுவாய் என்றும் பேழ்வாய் என்றும் அழல்வாய் என்றும் சங்க இலக்கியம் குறிப்பிடுகிறது.

இரை தேர் எண்கின் பகு வாய் ஏற்றை - நற். 125
பெரும் கை எண்கின் பேழ் வாய் ஏற்றை - அகம். 201
இரும் கிளை எண்கின் அழல் வாய் ஏற்றை - அகம். 247

பகுவாய் என்பதும் பேழ்வாய் என்பதும் பிளந்த வாயினையுடையது என்று பொருள்படும். பிளந்த நிலையில் காணப்பட்ட அதன் வாயின் உட்பகுதியானது தீயினைப் போலச் செந்நிறத்தில் காணப்பட்டதால் அழல்வாய் என்று இலக்கியம் கூறுகிறது. அருகில் உள்ள படம் கரடியின் தலை மற்றும் வாயின் அமைப்பினைக் காட்டும்.

கரடியின் கால்/கை:

கரடியானது தனது முன்னங்கால்களைத் தனது கைகளாகப் பயன்படுத்தும். இவை பின்னங்கால்களைக் காட்டிலும் அளவில் பெரியவை மட்டுமின்றி வலிமை மிக்கவையும் கூட. இதனால்தான் இதற்குப் பெருங்கை என்ற பெயரும் உண்டானது. இதைப்பற்றிக் கூறும் சில பாடல்கள் சான்றாகக் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

பெரும்கை எண்கின் இரும் கிளை கவரும் - அகம். 149
பெரும்கை எண்கின் சுரன் இறந்தோரே - அகம். 171
பெரும்கை எண்கின் பேழ் வாய் ஏற்றை - அகம். 201

கரடியின் கைகள் வலிமை மிக்கவை என்று கீழ்க்காணும் அகப்பாடலும் கூறுகிறது.

வன்கை எண்கின் வய நிரை பரக்கும் - அகம். 15

கரடியின் உடல் மட்டுமின்றி, கால்கள் முழுவதிலும் கருநிற மயிர் அடர்ந்திருக்கும் என்ற செய்தியைக் கீழ்க்காணும் சங்கப்பாடல் பதிவு செய்துள்ளது.

மயிர்க்கால் எண்கின் ஈர் இனம் கவர -அகம். 267

கரடியின் முன்னங்கால்கள் வலிமையானவை மட்டுமின்றி, அதன் விரல்கள் சற்று உள்நோக்கி வளைந்தும் காணப்படும். இதனால் தான் கரடியானது எளிதில் மண்ணைத் தோண்ட முடிகிறது. கரடியின் முன்னங்கால் விரல்களைக் கொடுவிரல் என்று சங்க இலக்கியம் கூறுகிறது.

கொடுவிரல் உளியம் கெண்டும் - அகம். 88

கரடியின் கால்பாதங்களைப் பற்றிக் கூறுமிடத்து, குடா அடி என்ற சொல்லால் சங்க இலக்கியம் குறிப்பிடுகிறது. காரணம், தேன்கரடியின் முன்னங்கால் பாதமானது சமதளமாக இல்லாமல் சற்று மேடுதட்டிய நிலையில் வளைந்து காணப்படும். இதைப்பற்றிய சில பாடல்வரிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

ஊமை எண்கின் குடாஅடிக் குருளை - மலை. 501
குரூஉ மயிர் யாக்கை குடாஅடி உளியம்      - திரு. 313

கரடியின் முன்னங்கால் பாதங்களில் கூர்மையுடன் கூடிய நீண்ட நகங்கள் காணப்படும். இவை பார்ப்பதற்குக் கூரிய நீண்ட உளியைப் போல இருப்பதால் கரடிக்கு உளியம் என்ற பெயர் ஏற்பட்டது. கரடியின் பின்னங்கால்களைக் காட்டிலும் கைகளில் அதாவது முன்னங்கால்களில் காணப்படும் நகங்கள் மிக நீளமானவை. பாம்புப் புற்றைத் தோண்டுவதற்கும் அதில் வாழும் பாம்புகளைக் குத்திக் கொல்வதற்கும் எதிரிகளைத் தாக்கவும் பெரிதும் உதவுவது இந்த முன்னங்கால் நகங்களே ஆகும். இந்த நகங்களைப் பற்றிக் கூறும் சில சங்க இலக்கியப் பாடல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

வள் உகிர் இடப்ப வாங்கும் - நற். 325
வள் உகிர் கதுவலின் - அகம். 8

கரடியின் உணவு:

தமிழகக் காடுகளில் வாழ்ந்த தேன்கரடிகளின் முதன்மை உணவு கறையான் ஆகும். ஒரு புற்றுக்குள் வாழுகின்ற சிறியதும் பெரியதுமான கறையான்களின் தொகுதியினைக் குரும்பி என்ற சொல்லால் சங்க இலக்கியம் குறிப்பிடுகிறது. சான்றாகச் சில பாடல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

பெரும்கை எண்குஇனம் குரும்பி தேரும் - அகம். 307
குரும்பி வல்சி பெரும் கை ஏற்றை - அகம். 8
குரும்பி கெண்டும் பெரும் கை ஏற்றை - அகம். 72

இந்தக் குரும்பி என்பது எப்படித் தோன்றும் என்றால், தென்னையின் முற்றாத இளநீர்க் காயினுள் வெள்ளைநிறத்தில் கொழகொழவென காணப்படுகின்ற தேங்காயின் வழுக்கையினைப் போலத் தோன்றும். இதனால் தான் தென்னையின் முற்றாத இளநீர்க் காயினையும் குரும்பி / குரும்பை என்ற சொல்லால் தமிழ் அகராதிகள் கூறுகின்றன. மேலும் இந்தக் கறையான்கள் வாழும் புற்றின் அடியில் இருக்கும் மண் எப்போதும் அதிக ஈரத்துடன் இருப்பதால், ஈரம்மிக்க மண்குழியில் ஒன்றின்மேல் ஒன்றாக இருக்கும் வெண்ணிறக் கறையான்களின் கூட்டத்தினைப் பார்க்கும்போது அது ஒரு அகன்ற பாத்திரத்தில் ஊற்றி ஆறவைத்த வெண்ணிற அரிசிக் கஞ்சியினைப் போலத் தோன்றியதாகக் கீழ்க்காணும் பெரும்பாணாற்றுப்படைப் பாடல்வரிகள் கூறுகின்றன.

அவையா அரிசி அம்களி துழவை
மலர் வாய் பிழாவில் புலர ஆற்றி
பாம்பு உறை புற்றின் குரும்பி ஏய்க்கும்
பூம்புற நல்அடை அளைஇ - பெரும். 275

கறையான்களுக்கு அடுத்தபடியாக தேன்கரடிகளுக்கு மிகப்பிடித்தமான உணவு இலுப்பை என்று நாம் தற்போது அழைப்பதான இருப்பை மரத்தின் பூக்கள் ஆகும். இலுப்பை மரத்தின் பூக்கள் இனிப்புத் தன்மை மிக்கவை ஆகும். 'ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப்பூச் சக்கரை' என்ற பழமொழிக்கேற்ப, இலுப்பை மரத்தின் பூக்களைச் சக்கரையாகப் பழங்காலம் தொட்டே மக்கள் பயன்படுத்தி வந்துள்ளனர். தேன்கரடிகளும் இலுப்பை மரத்தின் இனிப்பான வெண்ணிறப் பூக்களை விரும்பி உண்ட செய்திகளைக் கீழ்க்காணும் பாடல்கள் பறைசாற்றுகின்றன.

புல் அரை இருப்பை தொள்ளை வான் பூ
பெரும்கை எண்கின் இரும் கிளை கவரும் - அகம். 149

இலுப்பை மரத்தின் பூக்களை மட்டுமின்றி அவற்றின் இனிப்பான பழங்களையும் தேன்கரடிகள் விரும்பி உண்ட செய்தியினைக் கீழ்க்காணும் பாடல் கூறுகிறது.

பழம்போல் சேற்ற தீம்புழல் உணீஇய
கருங்கோட்டு இருப்பை ஊரும் பெரும்கை எண்கின் - அகம். 171

இலுப்பை மட்டுமின்றி, கொன்றை மரத்தின் குழல் போன்ற பழங்களையும் தேன்கரடிகள் விரும்பி உண்ட செய்தியினைக் கீழ்க்காணும் பாடல்வரிகள் கூறுகின்றன.

கொன்றை அம் சினை குழல் பழம் கொழுதி       
வன்கை எண்கின் வய நிரை பரக்கும் - அகம். 15

கரடியின் செயல்பாடுகள்:

தமிழகக் காடுகளில் வாழ்ந்த தேன்கரடியின் செயல்பாடுகளைப் பற்றிச் சங்க இலக்கியங்கள் பதிவுசெய்துள்ள செய்திகளைக் கீழ்க்காணும் தலைப்புக்களின் கீழ் காணலாம்.

1. இரவில் உணவு தேடுதல்
2. மரம் ஏறுதல்
3. புற்றுக்களை அழித்தல்.

1. இரவில் உணவு தேடுதல்:

தேன்கரடிகள் இரவில் இரைதேடும் தன்மை கொண்டவை. இதனால் இவற்றை இரவாடி என்று விக்கிபீடியா குறிப்பிடுகிறது. இவற்றின் உடலும் கருமைநிறத்தில் இருப்பதால், முழுநிலா வெளிச்சத்தில் அன்றி ஏனைய இரவுகளில் இவற்றைக் காண்பது கடினம். முழுநிலா ஒளிவீசும் இரவுகளில் காடுகளின் வழியாகப் பயணம் செய்வோர் இவற்றால் தாக்கப்படுவதுண்டு. இரவுநேரத்தில் தலைவியைச் சந்திக்க வரும் தலைவனிடம், வழியில் திடும் என்று எதிர்ப்படும் கரடிகளால் ஏற்படும் துன்பத்தை எடுத்துச்சொல்லி இரவில் சந்திக்க வரவேண்டாம் என்று கூறுவதைப் போல பல பாடல்கள் இயற்றப்பட்டுள்ளன. அவற்றில் ஒருசில பாடல்களை மட்டும் இங்கே காணலாம்.

இரை தேர் எண்கின் பகு வாய் ஏற்றை ......
.......... நடுநாள் வருதல் அஞ்சுதும் யாம் என - நற். 125

கூனல் எண்கின் குறு நடை தொழுதி .........
..........இரை நசைஇ பரிக்கும் அரைநாள் கங்குல்- அகம். 112

மேற்காணும் பாடல்களில் வரும் நடுநாள், அரைநாள் என்பவை நள்ளிரவு நேரங்களைக் குறிப்பவை. நள்ளிரவுப் பொழுதிலும் இரை இருக்கும் இடத்தினைச் சரியாகக் கண்டறிந்து கூட்டமாகவும் சென்று உண்ணும். பெரும்பாலும் இரவில் இரைதேடும் தன்மை கொண்டவை என்றாலும் சிலசமயங்களில் அரிதாகப் பகலிலும் இரைதேடிச் செல்வதுண்டு. அதுபற்றியதொரு பாடல்கீழே:

நாள் உலா எழுந்த கோள் வல் உளியம் - அகம். 81

2. மரம் ஏறுதல்:

கரடிக்குப் பிடித்தமான உணவுகளில் இலுப்பைமரத்தின் பூக்களும் கனிகளும் கொன்றை மரத்தின் குழல் போன்ற பழங்களும் உண்டு என்று மேலே கண்டோம். இந்த மரங்களின் கீழே தானே உதிர்ந்துகிடக்கின்றவற்றை உண்டதுபோக, மரத்தில் இருப்பதையும் உண்ண விரும்பும் கரடிகள் தாமே மரத்தில் ஏறிச்சென்று உண்ணும். இக் கரடிகள் மரத்தில் ஏறிச்செல்வதற்கு ஏதுவாக இவற்றின் பாதங்களின் அமைப்பும் நீண்ட நகங்களும் உதவியாய் இருக்கின்றன. தேன் கரடிகள் மரம் ஏறுதலைப் பற்றிய செய்தியினைக் கீழ்க்காணும் சங்கப் பாடல் பதிவுசெய்துள்ளது.

கீழ்ப்படு தாரம் உண்ணா மேல் சினை
பழம் போல் சேற்ற தீம் புழல் உணீஇய
கரும் கோட்டு இருப்பை ஊரும்
பெரும் கை எண்கின் சுரன் இறந்தோரே - அகம். 171

கீழே கிடந்த உணவுப்பொருளை உண்ணாமல், உயரமான கிளைகளில் இருந்த இனிப்பான சேற்றினை உடைய கனிகளை உண்ண விரும்பிய கரடிகள் இருப்பை மரத்தின் மேல் ஏறியதைப் பற்றி மேற்பாடல் வரிகள் கூறுகின்றன.

3. புற்றுக்களை அழித்தல்:

தேன்கரடிகளுக்கு மிகப் பிடித்தமான முதன்மை உணவு கறையான் பூச்சிகள் என்று மேலே கண்டோம். இந்தக் கறையான்கள் பார்ப்பதற்கு அளவில் மிகச்சிறியவையாக இருந்தாலும் மிக உயரமான புற்றுக்களைக் கட்டும் திறன் கொண்டவை. மரங்களின் அடிப்பகுதிகளிலும் சுவர்களின் அடியிலும் புற்றை அமைத்து அதனுள் கூட்டம் கூட்டமாக வாழ்கின்ற இவற்றை உண்ண விரும்பும் கரடிகள் புற்றின் அடிப்பகுதியில் மறைந்து இருக்கும் கறையான்களை எவ்வாறு பிடித்துண்ணும் என்பதைப் பற்றிச் சங்க இலக்கியங்கள் கூறும் செய்திகளை இங்கே காணலாம்.

தேன்கரடியானது முதலில் புற்றின் அடிப்பகுதியினைத் தனது கைகளில் உள்ள கூரிய நகங்களைக் கொண்டு தோண்டும். பின்னர் கையை உள்ளேவிட்டு பாம்பு ஏதேனும் இருந்தால் அதனைத் தனது கூரிய நகங்களைக் கொண்டு குத்திக்கொன்று வெளியே எடுத்து வீசிவிடும். பின்னர் தனது வாயினால் காற்றை ஊதிப் புற்றுக்குள் இருக்கும் புழுதிபோன்ற மண்ணை வெளியேற்றும். அதன்பின், மறுபடியும் தனது வாயினைப் புற்றுக்குள் நுழைத்து தனது உதடுகளை நீட்டிக் குவித்துக் கறையான்களை அப்படியே உறிஞ்சி உண்ணும். இச்செய்திகளைப் பதிவுசெய்து வைத்துள்ள சங்கப் பாடல்கள் சில மட்டும் சான்றாகக் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

அரவாழ் புற்றம் ஒழிய ஒய்யென
முரவு வாய் வள் உகிர் இடப்ப வாங்கும்      - நற். 325

தேன்கரடிகள் கறையான்புற்று அழியுமாறு தனது கைநகங்களால் தோண்டிய செய்தியினை மேற்பாடல் வரி விளக்குகிறது.

புற்றத்து அல்குஇரை நசைஇ வெள்அரா மிளிர வாங்கும்
பிள்ளை எண்கின் மலை வயினானே - அகம். 257

புற்றுக்குள் இருக்கும் கறையான்களை உண்ண விரும்பிய குட்டிக்கரடியானது புற்றுக்குள் இருந்த வெள்ளைநிறப் பாம்பினைக் கொன்று கையில் எடுத்த செய்தியினை மேற்பாடல் கூறுகிறது.

கொல்லன் ஊது உலை குருகின் உள் உயிர்த்து அகழும் - நற். 125

தேன்கரடியானது, கொல்லனின் ஊதுலையில் ஊதப்படும் துருத்தியைப் போலப் புற்றுக்குள் தனது வாயை நுழைத்துக் காற்றை ஊதி மண்ணை நீக்கிய செய்தியினை மேற்பாடல் வரி விளக்குகிறது.

அது ஒரு நள்ளிரவு நேரம். இருளைக் கிழிப்பதைப் போல வானம் மின்னிப் பெருமழை பொழிந்ததால் எங்கும் குளிர்ச்சி மிக்கிருந்தது. அந்தப் பெரிய கறையான் புற்றினைச் சுற்றிலும் மின்மினிப் பூச்சிகள் ஒளிர்ந்தபடி பறந்து கொண்டிருந்தன. அப்போது அங்கு வந்த ஒரு தேன்கரடியானது, தனது கையினால் புற்றைத் தோண்டி வாயை உள்ளே நுழைத்து காற்றினை ஊத, அங்கிருந்து தெறித்துப் பறந்த மின்மினிப் பூச்சிகளானவை பார்ப்பதற்கு, இரும்பு செய்யும் கொல்லன் ஒருவன் தனது ஊதுலையில் துருத்தியால் காற்றினை ஊத, அப்போது அந்த உலையில் இருந்து தெறித்துப் பறக்கும் தீப்பொறிகளைப் போலத் தோன்றியதாகக் கூறும் கீழ்க்காணும் அகப்பாடல் அப்படியே அக்காட்சியினை நம் மனக்கண்ணில் கொண்டுவந்து விடுகிறது.

இருள் கிழிப்பது போல் மின்னி வானம்
துளி தலைக்கொண்ட நளி பெயல் நடுநாள்
மின்மினி மொய்த்த முரவு வாய் புற்றம்
பொன் எறி பிதிரின் சுடர வாங்கி
குரும்பி கெண்டும் பெரும் கை ஏற்றை
இரும்பு செய் கொல் என தோன்றும் ஆங்கண் - அகம். 72

முடிவுரை:

சங்ககாலத் தமிழகக் காடுகளில் வாழ்ந்துவந்த தேன்கரடிகளைப் பற்றிச் சங்க இலக்கியங்கள் கூறும் பல்வேறு செய்திகளைப் பற்றி மேலே கண்டோம். கரடியானது, இந்திய மொழிகளில் பல்வேறு பெயர்களில் குறிக்கப்படும் நிலையில், தெலுங்கில் கூறப்படும் எலுகு என்னும் பெயர், தமிழ்ப் பெயராகிய எண்கு என்பதுடன் நெருக்கமாக இருப்பது குறிப்பிடத்தக்கது. இறுதியாக, சிவபூசையில் கரடி என்று மக்கள் சொலவடையாகக் கூறுவதற்கும் இக்கட்டுரையில் வரும் கரடி என்னும் விலங்கிற்கும் எவ்விதத் தொடர்புமில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்களைத் தமிழில் தட்டச்சு செய்யும் வழி:
வலப்பக்கத்தில் உள்ள பகுதியில் தமிழ் ஒலிகளை ஆங்கில எழுத்துக்களில் அசசடித்து நகல் செய்து இங்கே ஒட்டலாம்.